2012இல் எழுதிப் பகிர்ந்த கலிவெண்பா இந்தப் பாடல். எனக்குள் என்னை நானே தேடிய போதில், கலைவாணி தந்த வரம். இரண்டு பத்திகள் சேர்ந்திருக்கிறேன். (இன்னமும் தேடுகிறேன் என்பது வேறு!!)
===================================
===================================
வாணியவள் தந்தாள் வரம்...
===========================
இளமையே அள்ளும் எழிலார் தமிழால்,
வளமையே துள்ளும் மணக்கும் வரியால்,
உளமே கவர்ந்த உரிமைக் கவிகாள்;
தளராத சொல்லின் தழல்நிகர்ப் பாவலன்நான்!
செந்தமிழின் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கி,
நந்தமிழில் நாளெல்லாம் நற்றமிழ்ப் பாவெனவே
சிந்துகவி செய்கின்ற தீந்தமிழின் ஆர்வலரே;
சந்ததமாய் சிந்துமெழிற் றண்டமிழின் பாவலன்நான்!
உள்ளமே பொங்கும் உணர்வின் வழியிலே,
வெள்ளமாய் மின்னும் வெளிச்சப் பொறியெனத்
துள்ளிடுஞ் சொல்லைச் சொடுக்குங் கவிகளே;
பொள்ளிடும் பாட்டாற் பொசுக்கிடும் பாவலன்நான்!
பாணனில்லை பல்கருவிப் பண்ணிசைக்க; மீனவனாய்த்
தோணியுடந் துள்ளுமீன் தூண்டிலிடும் ஆளுமில்லை;
தூணதுவே தூளாகத் தோன்றிவிட்டச் சிங்கனில்லை;
காணுவதில் ஆழ்ந்தே கவிபாடும் பாவலன்நான்!
உள்ளத்தில் தோன்றுவதை ஊதுவுலைத் தீயிலிட்டுக்
கள்ளமெனுங் குற்றங் கருங்கசடு தான்பொசுங்க
அள்ளும் அழகாரும் ஆசுகவி நெய்திடவே
துள்ளித் துடிக்கின்ற தூயமனப் பாவலன்நான்!
வெற்றிகளைத் தேடியிங்கு வேட்டையிடும் மன்னனில்லை;
உற்றதெனச் செல்வத்தை; ஊர்மயங்கும் பேரழகைப்;
பெற்றுவிட ஆர்வமில்லை; பேர்புகழில் நாட்டமில்லை;
கற்றதமிழ் ஓங்கிடத்தான் காத்துநிற்கும் பாவலன்நான்!
ஆணிப்பொன் நட்பென்னும் அன்பருவிச் சாரலிலே,
மாணிக்கச் செந்தமிழில் மாலையென நான்தொடுத்தே,
நீணிலத்தோர் தான்மயங்க நீள்கவிதை நான்வனைய,
வாணியவள் தந்தாள் வரம்.
========================================
இராச. தியாகராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக