பாவலர்க்கு ஒரு வேண்டுகோள்; பாச்சவுக்கை வீசுங்கள் பாவலரே! இணைத்திருக்கும் ஒளிப்படம், தமிழ் தேசியப் பாவலர், பாவலரேறு திருமிகு பெருஞ்சித்திரனார்.
================================================
================================================
பாச்சவுகை வீசுங்கள் பாவலரே.......
(கொச்சகக் கலிப்பா)
====================
சித்தத்தில் சிலிர்க்கின்ற சிந்தனையின் சீதளமாய்,
முத்தமிழை முகந்தெடுத்த முகநூலின் முகவரியாய்,
எத்திக்கும் புகழ்மணக்கும் எந்தமிழில் எழிற்கவிதை
தித்திக்க வனைகின்ற செந்தமிழின் பாவலரே!
கற்கண்டின் பாகுடனே கனிச்சாற்றை கலந்திங்கே,
சொற்றிறத்தால் நாமணக்கச் சொக்கவைக்கும் சொல்லடுக்கி,
வற்றலில்லா வளப்பமிகு வண்டமிழில் செழுங்கவிதை,
அற்புதமாய் நெய்கின்ற அருமைமிகு பாவலரே!
உன்னித்த எண்ணமதை ஊழ்த்தமன உணர்வுகளைப்
பின்னலாம் நல்லெதுகை பேர்புகழும் மோனையுடன்,
நன்னூலு முரைக்கின்ற நற்றமிழில் நறுங்கவிதை,
மின்னல் சவுக்கெனவே வீசுங்கள் பாவலரே!
===================================
இராச தியாகராசன்
பிகு:
====
சீதளம் = குளிர்ச்சி,
எந்தமிழ் = என்றன் தமிழ், செந்தமிழ் = செம்மைத் தமிழ்,
வண்டமிழ் = வளமைத் தமிழ், உன்னித்த = துளிர்த்திட்ட,
ஊழ்த்தமன = பிறந்தமன. எதுகை/மோனை = தளையோத்துகள்,
நற்றமிழ் = நல்ல தமிழ், செழுங்கவி = செழுமைக்கவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக