ஞாயிறு, 23 ஜூன், 2024

அகமும், புறமும்....

அகமும், புறமும், அகநானூறாய், புறநானூறாய்ப் பொலிகின்றன நந்தமிழ்ச் சங்க இலக்கியத்தில்.  தமிழர் நாம் அகம், புறம் இரண்டையுமே இணையாக கொண்டே வாழ்ந்திருந்தோம்.   இற்றைக்கிருக்கும் வேலன்டைன் நாளைக்கூடத் தமிழர்நாம் அகமென்று சொல்லி, காமன் பண்டிகையாய்ப் போற்றினோம்.
மற்போரை/ விலங்கு வேட்டையைப் புறமென்றே  மல்லாட்டமாய், பாரி வேட்டையாய்ச் சாற்றினோம்.
==========================================








========================================
அகமும் புறமும்....
(கொச்சகக் கலிப்பா)
=================
நெடும்புற மென்கின்ற நிலைதனையே வெளியென்றுந் 
தொடுமகம் என்கின்ற தோற்றத்தை உள்ளென்றும், 
நடப்பினிலே நந்தமிழர் நன்றாகக் கருத்தூன்றிப்
படிப்பதுவும் பாங்காமோ பகன்றிடுவீர் பாவலர்காள்!

புறம்தமிழர் வாழ்வினிலே போர்முழக்கம் வீரமெனில், 
செறிவான அகமங்கே சேர்ந்துறையுங் காதலன்றோ? 
நிறைவாக இவ்விரண்டை நெஞ்சிருத்தி ஒன்றெனவே
முறையாக வாழ்ந்திருந்த முத்தமிழர் நாமன்றோ?

வள்ளுவனோ மேலேபோய் வரைந்தானே தன்குறளை;
உள்ளபடி அறமென்றும், உயர்வான பொருளென்றும், 
எள்ளலிலா இன்பமென்று மெவருமிங்கே ஏற்பதற்கு 
வெள்ளமெனப் பொருள்தருகும் விந்தையாம் ஈரடியில்!

என்றென்று மினிக்கின்ற இலக்கிய இலக்கணமாய், 
அன்றிருந்த அகம்புறத்தை ஆழ்ந்தூன்றிப் பயிலாமல், 
அன்பென்று மாசையென்று மழியாதக் காதலென்றும்
இன்றிங்கே இணையத்தில் எளிதாகக் கதைக்கின்றார்!

புறந்தள்ள வேண்டியப் புன்மைகளைப் போற்றியதால், 
சிறுவர்களைச் சிறுமியரைச் சீரழிக்கும் இனக்கவர்ச்சி 
வெறுங்காதல் வளர்ந்திங்கு வீரத்தை வெட்டியதோ?
மறப்பண்பு மாறியதால் வடுக்காதல் ஓங்கியதோ?

வானத்தில் இல்லையடா வண்டமிழர் வாழ்வுயினி;
தீனக்குர லெழுப்பித் தேம்புவதை விட்டிங்கே, 
ஏனிந்த அவலநிலை இரும்புமனத் தமிழனுக்கென்(று)
ஆனவரை அவலங்கள் அழிக்கத்தான் முயல்வோமே!
=======================================
இராச தியாகராசன்

பிகு:
====
புறம் = வீரர் மரபு, அகம் = காதல் மரபு, 
மறப்பண்பு = வீரப்பண்பாடு, கதைத்தல் = கருத்தாடல், 
வடுக்காதல் = சிறுவர்/சிறுமியர்க் காதல்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக