ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கவிதை செதுக்குகிறேன்..

கீழிருக்கும் படம் தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்களின் கைவண்ணம் (இசையமைப்பாளர் அல்லர்)

காதலின் இயல்பே கலையாக உருவெடுக்கிறது; 
கல்லாக இருந்தது சிலையாக உருவெடுக்கிறது!
சொல்லாக நின்றது சுவையாக உருவெடுக்கிறது.
=====================================
=====================================
கவிதைச் செதுக்கிறேன்...
=====================================
என்னி(ல்) உணர்ந்த எழிலாம் திருவெனவே,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
முன்னு(ம்) உணர்வில் முகிழ்ந்த உறவெனவே,
என்னில் கவிதை எழுதிட வைப்பவளே!

கனவில் உனதுருவே காண்பது போலவிங்கு
நினைவில் நெருஞ்சியாய் நின்றே உறுத்தல்போல்
மனத்தில் வஞ்சியுன் வடிவான தீயெழிலில்
தினந்தினம் தீராத தீக்குளியல் செய்கின்றேன்

அல்லியின் செவ்வாய் அமிழ்தச் சொல்லழகோ
புல்லிதழ் மீதானப் பூம்பனியாய்ப் போனதால்,
கல்லிலும் காட்சியாய்க் கன்னியுன் தோற்றமே
சில்லித்த வாளியாய் சிந்தையிலே குத்துதடி!

பொன்னி(ன்) ஒளியாய் பொலிந்த கருவெனவே,
எண்ண முழுதும் எழுகுமுன் நினைவினிலே,
மின்னு(ம்) அழகாய் விரிந்த ஒளியெனவே,
சின்னக் கவிதை செதுக்கி யுரைக்கின்றேன்.
=========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
திரு = செல்வம், 

தோற்பேனோ காதலிலே......

நீர்க்குமிழி போன்ற கவிஞனை நீர் வெல்லலாகுமோ?

=================================================



=================================================

அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேச(ம்)உறை நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றும்,
சிலையழகே! செம்புலத்துச் செந்நீராய் என்றிணைவோம்?

வானகத்தி(ல்) உலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனைகள் பலதந்து,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்கின்றாய்!

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகாதே!
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன் நான்; தோற்பேனோ காதலிலே?
=================================================
இராச. தியாகராசன்

சனி, 21 செப்டம்பர், 2019

வேண்டுதல்கள்.....

என்னுளத்தின் வேண்டுதல்கள்.....
==========================
==========================
ஆவி விட வேண்டுமடி...
==========================
இற்றைக்கு ஒருகனவாய்,  இனம்புரியா உணர்வாய், 
முற்றுபெற நெஞ்சகத்தில் முளைத்தெழுகும் நினைவு; 
சுற்றமும் இங்கில்லை; குற்றமும் இங்கில்லை;
உற்றவர் எவருமில்லை? கற்றவரும் எவருமில்லை!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தென்றன்
இயல்பினையே பறித்தழிக்கும் எண்ணமதை எரித்தழிக்க
வியனுலகைக் காக்குமந்த வித்தகியைத் தானிறைஞ்சி
நயந்தொழுகும் நறுங்கவிதை நவில்கின்றேன் நானிங்கு!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள் 
கோலத்தைக் கண்டுமனக் கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானத்தை வேண்டுகிறேன்!

அத்தனவன் பின்னலெனும் அகன்றபெரு மாழியிலே, 
நித்தமும்நான் விழுந்தே நீந்திடும் வேளையிலே, 
சித்தமதைச் சிலந்தியெனச் செரித்தே அரிக்கின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறதனை வேண்டுகிறேன்!

கண்களிலே வைத்தென்றும் காக்கின்ற இறையுணர்வும்,
எண்ணமதை என்றென்றும் இயக்குகின்ற எந்தமிழும்,
உண்மையொளிர் உயிர்நட்பாம் உன்னதமும்;  ஆழ்துயிலில்
விண்ணகரப் பேரின்ப விடுதலையும் வேண்டுகிறேன்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்கையிலே,
நாவினிக்கும் பாரதியாய் நற்றமிழில் பாவெழுதி,
தேவியவள் சேவடியைச் சீந்துகின்ற நினைவுடனே
பூவிதழ்கள் அவிழ்வதுபோல் ஆவிவிட வேண்டுகிறேன்!
===============================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புந்தி - புத்தி, நவிலுதல் - உரைத்தல், சூக்குமம் - சூட்சுமம், அத்தன் - ஆதியோகி, 
ஆழி - கடல், விண்ணகரம் - வீடுபேறு, சேவடி - சேவிக்கும் திருவடி, 
சீந்தும் - போற்றும்,  

என்னைக் கவர்ந்த தமிழேறு...

பாவேந்தரின் புதல்வர், தமிழ்மாமணி, திரு மன்னர்மன்னன் அவர்கட்காக, அவருடைய 75 ஆண்டு கால தமிழ்த் தொண்டைப் போற்றி,  நான் வனைந்த பாடலிது.

=======================================





=======================================

மென்மைச் சிரிப்பினில் வென்றிடு மன்னவ!
கன்னற் றமிழில் கவிமொழி - மின்னிடும்

மன்னு(ம்) உரைகளால் வண்டமிழ்ச் சொற்களால்
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

பாவேந்த(ர்) உள்ளமே பாட்டுப் பறவையாய்,

மூவேந்தர் முத்தமிழ் முன்னெடுத்தாய்! - நாவேந்து(ம்)
அன்னைத் தமிழில் அரசர்க்(கு) அரசநீ
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

நெஞ்சக் கதவில், நிமிரும் நினைவுகள்;
கொஞ்சு தமிழிற் கொடுத்தவான் - மஞ்சு!

பனியா(ய்) இலக்கியப் பாங்கின் படைப்பா(ல்),
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

கறுப்புக் குயிலின் குரலாம் நெருப்பைச்

சிறக்கச் செதுக்கிய சிற்பி! - தெறிக்குந்
தனித்தமிழ்க் கொண்டலுன் சங்கத் தமிழால்
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

இயற்கையைப் பாடி, இயற்றமிழ்ப் பாடி,

நயத்தகு பெண்கல்வி நாடி - உயர்ந்தாய்!
வனையும் வரியால், வளர்தமிழ் பொங்க,
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

முரசாய் ஒலிக்கும் முதுபெரு(ம்) அறிஞ,

தரிசாய் விரிந்த சழக்கே - எரிய
முனைந்தே எழுப்பிய முத்தமிழ்ச் சுவர்கள்*
உனைநிதம் போற்றுமே ஓர்ந்து.
=======================================
இராச. தியாகராசன்
=======================================
கீழ் வரும் சொல்லாட்சிகள் பெரியவரின் படைப்புகளில் சில.

கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்

நெஞ்சக் கதவுகள்
நிமிரும் நினைவுகள்
பாவேந்தர் உள்ளம்
பாட்டுப் பறவைகள்
பாவேந்தர் இலக்கியப் பாங்கு.
*இவர் தலைவராய் இருக்கும் போதில், புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் கட்டடம் எழுந்தது.

மைந்தனுக்கொரு வாழ்த்து...

மைந்தன் வைகறைச்செல்வனின் 15ஆம் பிறந்தநாளில் அவனுக்களித்த வாழ்த்துரை.......
=====================================



=====================================

ஆர்ப்பரிக்கும் அலைகடலின் முழக்கம் போல,
....அடுக்கடுக்காய்த் தரைமோதும் முயற்சி போல,
சீர்பரப்பும் செந்தமிழின் செழுமை போல,
....தேர்ந்திலங்கு சந்தனத்தின் மணத்தைப் போல,
கூர்ந்தறியும் குறைவில்லா அறிவும் பெற்று,
....கொடுஞ்செயலை வேரறுக்கும் உணர்வு முற்று,
சார்தலில்லாத் தனித்துவமாய் செல்வா நீயும்,
....சழக்குகளும் தான்விலக வாழ்வாய் நன்றே!

=====================================

இராச.தியாகராசன்.

எழுவின் மழவரே! எழுமின் எழுமின்...

ஒரு ழகரக் கவிதை வாழ்த்து....

=============================



=============================

அழுகுங் கழிவின் குழியைத் தொழுது,
நழுவி யுழல விழுந்து, பழியைத்
தழுவ விழையும் எழுவின் மழவரே!
அழிவின் சுழலில் நுழைந்து பழகி,
அழலி(ல்) ஒழுகி யழிந்து விழுமுன்
வழமை மொழியும் செழித்து தழைக்க,
உழவுத் தொழிலு(ம்) எழுந்து கொழிக்க,
மழலை கழறும் குழலின் பிழிவாய்,
அழகு(ம்) இழியும் பொழிலின் நிழலாய்,
விழிகள் தழுவ விழையு(ம்) எழிலாய்,
செழிவு வழிய வழங்கு பொழிவாய்,
பழைய சழக்கு முழுது(ம்) அழிய,
மழுவைத் தொழுகு(ம்) உழவுஞ் செழிக்க,
உழவின் மொழியா(ய்) எழுகும் மழையாய்,
பழியும் கழிய எழுமி(ன்) எழுமி(ன்)
பழன விழுவின் முழவும் முழங்கவே!

==============================
இராச. தியாகராசன்
==============================
பிகு:
கழறுதல் = கிள்ளை மொழி
சழக்கு = கயமை
மழு = கலப்பையின் கொழு
எழுவின் மழவர் = தூணொத்த இளையோர்
அழலில் ஒழுகி = நெருப்பொடு இணைந்து
பழன விழு = வயலின் சிறப்பு
முழவு = முரசம்.

அருந்தமிழே வாழி நீயே......

தமிழை வாழ்த்துவதில் என்ன சிக்கனம்.   தினம் ஒரு பாட்டெழுதிப் பதிந்தாலும் போதாதுதான்....

தமிழே வாழி...
========================================



========================================

மனந்தனிலே மலர்கின்ற கவிதை போல,
....வானுலவுங் குளிர்நிலவின் ஒளியைப் போல,
பனிபடர்ந்த வயல்வெளியின் பசுமை போல,
....பல்லுயிரை வளர்க்கின்ற கதிரைப் போல,
வனமடர்ந்த வழிநிறையும் தனிமை போல,
....வசந்தமன நினைவென்னும் இனிமை போல,
எனதுயிரில் கலந்துறையும் "இசை"யைப் போல,
....எனையாளும் எந்தமிழே வாழி நீயே!

தென்னையதன் ஆடுகின்ற கீற்றைப் போல,
....தேன்கசியுஞ் செங்கனியின் சாற்றைப் போல,
தென்முகத்துத் தென்றலெனுங் காற்றைப் போல,
....தேர்ந்தநறுஞ் செங்கழனி நாற்றைப் போல,
பொன்வண்ணச் செங்கதிரின் ஆற்றல் போல,
....புத்தமிழ்தப் பைந்தமிழின் மாற்றம் போல,
அன்னையெனும் அன்புருவின் தோற்றம் போல,
....அன்றலர்ந்த அருந்தமிழே வாழி நீயே!

============================================
இராச. தியாகராசன் 

விடியலே வாராதோ?.....

சில நேரங்களில் சந்தோஷம், சில நேரங்களில் சிந்தனை, சில நேரங்களில் உன்மத்தம், இன்னும் சில நேரங்களிலோ அறமென்னும் சீற்றம்;  வெறுங்கனவே வாழ்வாமோ;  விடியல்களே வாராதோ?
============================================
============================================
விடியலே வாராதோ...
============================================
ஆர்ப்பரிக்கும் ஆசையென அடித்தளத்தின் ஓசைகள்;
சேர்க்கின்ற சிக்கலெனச் சீற்றமுணர் சிந்தனையால்,
பார்க்கின்ற காட்சியெனும் பாலைவன வெக்கையிலே
நீர்க்கின்ற நியாயங்கள்; நிலையில்லா நினைவுகள்;

கேட்கின்ற கேள்விகளால் கிளர்ந்தெழுகும் கோணலதை,
ஆட்கொள்ளும் அவலநிலை; ஆரிங்கே நீதிசொல்வார்?
சிறகுகளும் சிதைந்தபின்னே சிகரங்களைத் தொடுவேனா?
செவியழிந்து போனபின்னே சங்கீதம் படிப்பேனோ?

கால்மடங்கி உடைந்தபின்னே கனசோராய் நடப்பேனா?
சால்பழிந்த சாய்க்கடையில் சான்றின்றி மறைவேனா?
கண்களின்றி கலைகளையே கருக்காக வளர்ப்பேனா?
விண்ணரகப் பேரின்ப விடுதலையைப் பெறுவேனா?

இத்தனைப் பேரிருந்தும் வழிநிறையுந் தனிமையிலே
சத்தில்லாச் சருகெனவே செரித்துவிழும் நினைவலைகள்;
சுழன்றாடும் இதயத்தில் சூழிருளாம் கருக்கலிலே
கழன்றோடும் காலங்கள்; கானல்நீர்க் கோலங்கள்!

நிழலெனவே நிதமலையும் நெஞ்சகமும் நினைவின்றி
கழன்றொருநாள் ககனத்தில் காற்றாகக் கலந்துவிடும்;
பழகுசுகம் படித்திடவே பறக்கின்ற பாழ்மனமும்,
உழலுகின்ற உலகமிதை உதறிவிடும் நாள்வருகும்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில்
மனத்துள்ளே மங்கையவள் மாயங்கள் மருகிநிதம்,
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காரிருளில்
கனவுகளே கார்காலக் கவிதையென கருவுறுமோ?

தினந்தினமும் தீக்குளியல்; தீராத மூச்சடைப்பு;
இனம்புரியா நெஞ்செரிச்சல்;  ஏனிந்த விளையாட்டு?
அறுந்தநூல் கையிலெனும் முடிவுகளே வாழ்வாமோ?
வெறுங்கனவாய் வாழ்விருக்க, விடியல்களே வாராதோ?
===========================================
இராச. தியாகராசன்.

எனக்கான ஆசைகள்...

ஆசையிலா மாந்தரெவர்?  ஆசையின்றி வாடுதலில்லை; வாடுதலின்றித் தேடுதலில்லை; தேடுதலின்றி நாடுதலில்லை; நாடுதலின்றிக் கூடுதலில்லை; கூடுதலின்றிக் குவலயமே இல்லை!
===================================


==================================
எனக்கான ஆசைகள்....
===================================
எந்நாளும் எழிற்கவிதை நானும் யாத்தே
....எத்திக்கும் எந்தமிழை வளர்க்க வேண்டும்;
கந்தமெனக் கமழும்பா வெழுதி நாளும்
....கயமைகளைக் கவித்தீயில் பொசுக்க வேண்டும்;
நொந்தலையும் நாதியிலாப் பேர்க ளிங்கே,
....நோதலற வாழப்பாப் புனைய வேண்டும்;
புந்தியிலே புகுந்தென்னைக் காக்கும் வாணி
....புகழ்நானும் பைந்தமிழில் வனைய வேண்டும்!

எழிலாரும் இயற்கவிதை பாட வேண்டும்;
....இனிமைதரு(ம்) ஏழிசையும் கூட வேண்டும்;
அழகாரும் அருங்கவிதை பாட வேண்டும்;
....அன்பென்னும் அற்புதத்தைத் தேட வேண்டும்;
பழகுதமிழ் சொல்லெடுத்தே பாட வேண்டும்;
....பன்னூறாய்ப் பண்ணலங்கல் சூட வேண்டும்;
விழைகின்ற காதலையும் பாட வேண்டும்;
....மேதினியோர் என்கவிதை நாட வேண்டும்!
=========================================
இராச. தியாகராசன்.

வைகறை...

வைகறை போதென்னும் மங்கையவள் என்னெஞ்சில் ஏற்றி வைத்த நினைவுகள் என்றென்றும் மாறுவதில்லை....

=============================================


=============================================
வைகறை...
===========
முழுநிலவும் விண்ணில் தூங்க,
....முத்தனைய மீன்கள் ஏங்க,
எழிலரும்பும் பூக்கள் மேவி,
....இன்பமெனும் வாசம் தூவ,
வழிந்தலையு(ம்) ஆற்றி லோடி,
....மாருதமாம் மங்கை யாட,
எழுந்திழையும் வண்டும் பாட,
....என்னுளமும் கொள்ளை யாக;

தேனடையின் தித்திப் பாகச்,
....செந்தமிழில் பாட்டுங் கேட்க,
வானிடையே மேகங் கண்டு,
....மாமயிலு(ம்) ஆட்டம் போட,
தானணிந்த காரின் வண்ணச்
....சட்டைகழன் றோடிப் போக,
வானகமே செம்மை யாக,
....வந்தனளே வைக றைதான்!
===============================
இராச. தியாகராசன்.

சூழ்பகையும் தூள்....

நங்கையர் நாளுக்காய் நானெழுதிய வரிகளிவை...
================================================
================================================
சூழ்பகையும் தூள்....
================================================
வெங்கரத்தால் செம்பரிதி வெள்ளிமலை பற்றுதல்போல்,
செங்கமலக் கன்னியரே சீறுகின்றச் - சிங்கமென,
ஞாலத்தின் நீதிக்கிஞ் ஞாட்பென்றே கூவிநின்றால்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

ஆலறுகாய் வாழ்ந்திங்கே ஆற்றலுடன் ஆட்சிசெய்து,
காலனென நம்மினத்தைக் காத்துநின்றே  - வேல்கொண்ட
வேலம்மை நாச்சியென வேல்விழியர் வீறுகொண்டால்,
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

செம்புலத்தின் சீர்மையெனத் தீச்சுடரா(ய்) ஆர்க்கின்ற
எம்மினத்து நங்கையெனும் இன்முகமே! - அம்பலத்தில்
வாலெழிலார் மங்கைநீ வாளெடுத்தால் காமுகத்தின்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.
=================================================
இராச. தியாகராசன்.

பிகு:  ஞாட்பு = போர்க்களம்

இன்பங் கொள்ளல் ஏனடா?.....

வாழ்க்கையே ஒரு நிழற்படமோ?....
==================================
==================================
இன்பங் கொள்ளல் ஏனடா...
==================================
முட்டி மோது(ம்) உள்ளமே
....மோக(ம்) என்ன போதையா?
வெட்டிப் பேச்சுக் கள்ளமே
....வெற்று மோசப் பாதையா?
கட்டித் தங்கம் காட்டிலே
....காய்ப்ப துண்டோ பாரடா?
எட்டிக் காயி(ல்) என்றுமே
....இன்பங் கொள்ள(ல்) ஏனடா?

விட்டுச் சென்ற நாளையே
....வேண்டி வேண்டித் தேடியும்,
துட்டு மட்டும் வாழ்வெனச்
....சொக்கி யிங்கே ஆடியும்,
அட்டி யின்றித் தீமையை,
....ஆசை யோடு கூடியும்,
முட்டி மோதும் வாழ்விலே
....மோகங் கொள்ள(ல்) ஏனடா?
==============================
இராச. தியாகராசன்

பிகு: அட்டியின்றி - தடங்கலின்றி

வியாழன், 19 செப்டம்பர், 2019

மழலையெனும் மலர்....

ஆம்... வடிவெழில் வாகை மலர், மடியில் முகிழ்ந்த ரோசா, இன்னமிழ்த ஊற்று, பொக்கையிதழ்க் கவிதை,  நம் கவலைகளையெல்லாம் எரிக்கும் மருந்து.
===================================
======================
மழலையெனும் மலர்....
======================
அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற நன்மழலைக்
கொஞ்சுமொழிக் கோலம்! கொடுமை யறியாத
பிஞ்சுமலர் பொக்கையிதழ் புன்சிரிப்பா லென்நெஞ்சில்
வஞ்சமிலா இன்னமிழ்தா(ம்) ஊற்று!

கொடியிற் சிரித்திடும் கொன்றையின் பூவாய்,
மடியில் முகிழ்ந்த மலரின் மணமாய்,
நொடியில் நமையே நுகர்ந்திட வைக்கும்
வடிவெழில் வாகை மலர்.

அன்னையர் தீட்டும் அழகொளிர் ஓவியமாய்க் 
கன்னற் சுவைசேர் கனிமொழிக் காவியமாய், 
விண்முகிற் கூட்டுநல் வேய்குழற் பாவெனக் 
கண்ணையே கட்டுங் கனவு.
==========================================
இராச. தியாகராசன்

பிகு:  வேய்குழல் = மூங்கிற் புல்லாங்குழல்

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே!...

முகநூலில் முதன்முதலாக நான் பகிர்ந்த பாடலிது. ஒருபஃது வெண்பா அந்தாதி மாலை....
=======================================


=======================================

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே... =====================================
இனிக்கின்ற பாட்டா மிழிகின்ற தேனாம்,
தனிந்தநறு முக்கனியின் சாறாம்! - பனித்துகளைப்
பெய்திடுமுன் பால்நிலவுப் பேச்சினிலே அன்றாடம்
பைங்கிளியே நான்பட்டேன் பாடு! (1)

பாடுகின்ற பாட்டினிலும் பச்சைமரக் காட்டினிலும்
தேடுகின்ற என்மனமுந் தேய்கிறதே! - ஆடும்
மயிலழகே! கூவுகின்ற மாங்குயிலே! சொல்வீர்
துயிலின்றி தேடுந் துடிப்பு! (2)

துடிக்கின்ற உள்ளத்தில் தோகையுனை யெண்ணி
அடிவானத் தீக்கனலா யாசை! - வடிக்கின்ற
கண்ணீர்த் துயரமெனுங் காட்டி லெனைப்புதைக்கும்
வெண்மணலாம் காதல் வெளி! (3)

வெளிர்நீல வான்முகிலும் வெந்தெரியப் பற்றும்
ஒளிரந்திப் போதே உரைப்பாய்! - கிளியவளின்
நேச மெனுந்தீயால் நீறாகிப் போனவென்
ஆசை மனத்தேடு தல்! (4)

அல்லியுன்றன் செவ்வாயின் அற்புதமாம் சொல்லமிழ்தோ
புல்லினிதழ்ப் பூம்பனியாய்ப் போனதடி! - சொல்வேன்நான்
காணுகின்ற காட்சிகளில் காலமெல்லாம் நீயென்னை
வாணுதலால் வாட்டும் வனப்பு! (5)

வனப்பென்னும் வாளால்நான் மாய்ந்த கதையை
வனைந்தேனே பாட்டின் வடிவில்! - மனமே
இரும்பாய் இருந்தாலே இன்பம் இசைவாய்
வருமோ இயம்பிடு வாய்? (6)

வாயா லொருசொல் வழங்கிடு வாயெனக்
காயாக் கனிக்கென காத்திருந்தேன்! - தீயால்
எனையே எரித்திட ஏனோ துடிக்கும்
உனையே விரும்பு முளம்! (7)

உளமயக்கப் பூச்சூடு மொண்டொடியே! என்னைத்
துளைக்கின்ற மோனமெனுஞ் சொல்லே! - பளிக்குச்
சிலையுனது கண்கள் சிலிர்த்தநொடி யுண்டேன்
நிலைவாழ்வுத் தேனமுத நீர்! (8)

நீரெல்லைத் தோற்றமாம் நீரந்திப் போன்றொளிரும்
வார்குழ லோவிய மங்கையே! - பேரெழில்
கொஞ்சிடும் கோதையுன் கோலமிவ் வேழையின்
நெஞ்சிலே பற்றும் நெருப்பு! (9)

நெருப்பிலே நெய்திட்ட நேரிழையுன் சொல்லில்
விருப்புடனே தீய்ந்தேனே விட்டில்! - சிரித்தெனையே
கொன்றுகுளிர் காய்ந்திடுங் கோதிழையே! என்வாழ்க்கை
இன்பமிலாத் தீயோ இனி? (10)
================================================== வேறு:
===== வளங்கள் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே!
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடுந் தெண்டிரையே!
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே!
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!
இராச தியாகராசன்.


நானறிதல் நானாவேன்....

தன்னை அறிய முயலாத மனிதர்கள் எவருண்டு?  நான் யார்? நான் யாரென்று அலையுந் தேடலில்லாவர் எவர்?  இந்தக் கலித்தாழிசையை 2010இல் எழுதினேன்.
======================================
=====================================
நானறிதல் நானாவேன்..
====================================
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் னுள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

நாடியவர் நாளும் நலுங்காமற் றேடுகையில்,
மூடியதைத் தான்திறந்து முற்று முணர்கையிலே,
தேடுபவ ரீதென்று தேடாத தன்மையிது;
கூடியவர் தேடுங் குவலயத்தி னுண்மையிது!
..........குன்றாப் புகழார் குவலயத்தி னுண்மையிது!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே,
சுண்ணாம்பாய் வெண்சங்குச் சூளையிலே சுட்டதுபோல்,
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்,
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!

தளிர்க்குமோ ருண்மை தரணியிலே சொல்வேன்;
துளிர்ப்பினடி வேரென்னுந் சோதியிலே தோய்ந்து,
களிப்பவர்கள் கண்டு களிக்கின்ற வெள்ளம்,
தெளிந்தநறு மன்பினையே தேடிமனந் துள்ளும்;
..........தெவிட்டாதத் தீஞ்சுவையைத் தேடிமனந் துள்ளும்!
==========================================
இராச. தியாகராசன்

வளந்தரும் எந்தமிழே.............

இந்தப் பாடலின் பத்திகளை ஒவ்வொன்றாக பல பாவரங்கங்களில், தமிழ் வாழ்த்தாகப் பாடியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்று சேர்ந்து தமிழுக்கு வாழ்த்தென செய்ய வேண்டும் என்று பல நாட்கள் எண்ணியதன் விளைவு, இந்தக் கட்டளைக் கலித்துறைப் பாடல்.  இவை அனைத்தையும் இசைப்பாடலாகப் பாடியே அளித்திருக்கிறேன்.  (தத்தகாரம்:  தன்ன தனனன தன்னத் தனனன தன்னனனா).
========================================================




==================================================
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வெண்ணிலவாய்,
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்,
மண்ணில் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்,
எண்ண(ம்) உறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு மற்புதமாய்,
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்,
பொன்னின் நிறத்துடன் நித்த(ம்) எழுந்திடும் பொற்கதிராய்,
என்னில் நிறைந்தெனை யென்று(ம்) அணைத்திடும் எந்தமிழே!

சின்னக் குழல்தருந் தண்மை யிசையெனுஞ் சித்திரமாய்,
மின்னல் வடிவென உள்ளம் புகுந்திடும் வித்தகமாய்,
தன்னைத் தருமுயர் தாய்மை யெனும்பெருந் தத்துவமாய்,
என்னை உயர்த்திட யென்றும் வளந்தரும் எந்தமிழே!
   
துள்ளி யெழுந்திரை கத்துங் கடலது சூழ்வதுபோல்,
அள்ளுந் தனித்தமிழ் ஆற்றல் வளர்ந்திட ஆர்ப்பரித்தே,
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே,
எள்ளல் அறவெனை யென்றும் உயர்த்திடும் எந்தமிழே!

உள்ளந் தனைத்தமிழ்ச் சொல்ல துவால்சிறு ஊசியெனக்
கிள்ளி விடும்மொரு கோல மதாய்மனக் கீறலிடும்
கள்ள மிலாதொளிர் செந்த மிழாம்நறுங் கன்னிகையாய்,
எள்ள லிலாச்சுவை அள்ளி வழங்கிடும் எந்தமிழே! 

தண்கரம் நீட்டியே என்னைத் தழுவிடும் தண்ணிலவின் 
வெண்பனி போலவே சில்லிக்க மேவிடும் மென்கதிராய்,
கண்கள் கிறங்கவே கன்னற் சுவைதருங் காரிகையாய்,
எண்ணம் நிறைந்தெனை என்றுங் கவர்ந்திடும் எந்தமிழே!
=======================================================

இராச. தியாகராசன்.

கரிமுகனே அருள்வாய்....

2019ஆம் ஆண்டு கணேசப் பண்டிகை நாளில், கரிமுகனை நினைத்து நானெழுதிய கட்டளைக் கலித்துறை வரிகளிவை!
==================================


==============================
கரிமுகனே அருள்வாய்.....
(கட்டளைக் கலித்துறை....)
==============================
புத்தி யெனுமெழில் தேவி யணைத்திடும் புத்தமுதே;
சித்தி யெனு(ம்)அகம் தேடி வணங்கிடுஞ் சித்திரமே;
வித்தை களைநிதங் கோடி கொடுத்திடும் மெத்தறிவே;
நித்த மெனதுளம் பாட விரும்பிடும் நித்திலமே!
அல்ல லனைத்தும் நொடியி(ல்) அகற்றிடு(ம்) அற்புதமே;
கல்வி யதன்வழி செல்ல வரந்தருங் கற்பகமே;
சொல்லி லடங்கிட ஏலா நலந்தருஞ் சொற்றிறமே;
பொல்லல் நுவணை யிலையடை ஏற்றிடும் பொற்பதமே!
முல்லை மலரை முனைந்தே யணிந்திடும் முத்தமிழே;
மெல்லும் பெருதுயர் துன்பந் தொலைத்திடு வித்தகமே;
எல்லை யெதுவும் வரையா(து) அருளு(ம்) எழிலுருவே;
கல்லின் சிலையாய்க் கவிதை தருகுங் கரிமுகனே!
================================================
இராச. தியாகராசன்
==========================
நித்திலம் = ஆணி முத்து.
பொல்லல், நுவணை, இலையடை இவையாவும், இன்னும் கொலை, பிட்டு, அப்பம், கொழுக்கட்டை என்பன கூட, தமிழர்கள் செய்து படைத்துண்ட பணியாரங்கள்.

மேலிருக்கும் படம், புதுவையின் அருள்மிகு மணக்குள விநாயகர்.

மதமென்னும் மாயை....

டிசம்பர் 2010 முகநூலில் பதிந்து, மதமென்னும் மாயையென 2017இல் பகிர்ந்த வரிகளிவை. இற்றைக்கும் அதே நிலையில் நாம். உள்ளம் அழுகிறது.


============================================






========================================



முத்தனைய சத்தான முழுமுதலாம் இறைவனையே,
நித்தமும்நாம் நெஞ்சினிலே நெகிழ்ந்துருகி நினைத்திடவே,
தத்துவமாய்த் தாரணியில் தலைமேலே தாங்கிடவே,
எத்தனையே சமயங்கள் எடுத்துரைக்கும் நல்வழிகள்.

நீயுயர்வா நானுயர்வா நியமந்தா னுயர்வாவென்(று)
ஐயமறத் தெளிந்துணர அறியாமை யகன்றுணர
ஆயுதத்தா லாகாதென்(று) அறியாம லலைகின்ற
வையகமே, வண்டமிழர் வாழ்வியலை ஆய்ந்துணர்ந்தால்!

செம்மையுற மாந்தரினம் சீர்த்திகளைப் பெற்றிடவே,
எம்மதமாய் இருந்தாலும் எவ்வினமாய் பிறந்தாலும்
தம்மவராய் நினைந்துருகும் தமிழர்த மன்பினையே
சம்மதமாய் தருகின்ற தன்மையினை வாழ்ந்துணர்ந்தால்

இயற்கையினை இன்பமிகு இல்லறத்தை நல்லறமாம்
பயிர்தொழிலை பழகுதமிழ்ப் பாட்டியலை களவியலின்
நயங்களையும் கற்பியலின் நலங்களையும் நாட்டாரின்
உயர்பண்பை எடுத்துரைக்கும் ஒண்டமிழிற் றோய்ந்துணர்ந்தால்

தனிமதமென்(று) ஒன்றில்லாத் தமிழ்ச்சமயத் தத்துவத்தை
மனிதமன நேயமெனும் மகத்தான அற்புதத்தை
இனியிங்கே இயல்பழகாய் ஏற்றுணர்ந்தால் மண்ணுலகம்
கனிவளங்கள் செறிந்தப்பூங் காவெனவே  மாறுமன்றோ!
================================================

இராச. தியாகராசன்

அந்திமகளின் சிலிர்ப்பு....

ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையொன்று எழுத நினைத்தேன். சற்றே நினைவு சறுக்குகிறது துயிலால். எனவே முதலில் ஏழு அப்புறமாக மீதி மூன்று வெண்பாக்கள்! அடிவானப் பேரழகைக் கண்டேன், அதனால் எழுந்த நினைவுகளின் தாக்கம் இவை:
======================================





==============================================

கண்மலரும் பூத்திருக்கக் கண்டேனே வைகறையாம்
வெண்பனிப்பூ தூவுகின்ற வேளையிலே - விண்மகளும்
தண்கரத்தால் ஆதவனைத் தானெழுப்பிக் கூடுகின்ற
வண்ணமயக் காட்சியதை யே!
ஏகமனப் பெண்ணை அணைத்துக் கதிரவன்தேன்
பாகெனவே முத்தம் பதிக்கையிலே - மோகம்
கவிந்த அடிவானம் கண்கள் கிறங்கிச்
சிவந்தே சிலிர்க்கும் சிரிப்பு!
சிரிக்கு மெழில்வானச் சித்திரமென் உள்ளத்தில்
விரிக்கின்ற எண்ணங்கள் விந்தை! - சுரிதகமும்
அம்போ தரங்கமும் ஆர்க்கும் வரிகளிலே
எம்பாட் டெழுதுவனோ இன்று?
இன்றென் னுளம்பற்றி எந்தமிழில் சொல்லெடுக்க
அன்றென் கவிவடிவாய் ஆனவளே! - உன்றனெழில்
விண்டகணம் மின்னல் விரிந்தொளிரும் நெஞ்சகத்தில்
தெண்டிரையாய்ப் பொங்குதே சிந்து.
சிந்தும் சிறுதீச் சிவப்பின் துகிலெனவே
அந்திமகள் கட்டும் அடிவானம்! - சிந்தைகவர்
வானகமே செஞ்சாந்து வண்ணமென ஆனதையே
தானிங்கு பாவடித்தேன் சற்று.
சற்றும் தளராத சாத்தானாம் பேருருவைப்
பற்றிய விக்கிரமன் பாடனெவே - முற்றும்
மயக்கும் தொடுவான வஞ்சியெழில் கண்டு
முயலுமென் பாட்டின் மொழி.
மொழியும் தமிழில் முனையும் வரியில்
பொழிலின் கவிதை புனைந்தேன்! - எழிலார்
இயற்கை விரிக்கின்ற இன்பஞ்சேர் காட்சி
நயமொன்றில் நானும் நனைந்து.
நனைத்திடும் தேறலாய் நாவில் இனிக்கும்
கனவெழிற் கற்பனை காட்சி! - மனிதர்
எவரும் எழுதா எழிலுரு என்றன்
கவியில் முளைத்த கரு.
கருக்கலும் அந்தியும் காதற் கனவாய்
வரமெனப் பாட்டில் வழியும்! - அரக்காய்ச்
சுவைப்பவர் நெஞ்சிலே தீட்டும் அமுதக்
குவையாய் அழகின் குளிர்
குளிர்வளி காலையில் கூரெனத் தைக்க;
பளிக்கென ஆதவன் பாரை - அளக்குமிம்
மாணப் பெருநில வாரிதிக் காட்சியைக்
காணக் கிடைத்ததே கண்.
======================================
வேறு:
======
துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

=====================================
இராச. தியாகராசன்

வேதம் புதிதாய் விதை....

இற்றைக்கு நாட்டின் நிலையெண்ணி, என்றோ மறந்து போன தூரிகையையைத் தொட்டு, இன்றைய காரிகைக்காக நேற்றெழுதிய வரிகள்......

===================================



===================================
வேதம் புதிதாய் விதை....
=======================
மனத்தில் நிறைந்தவன் மாண்பிலா னாகிக்
கணத்தில் மறைகிறான் காண்பாய்! - உனக்கினி
பாதந் தொடுவழி பாதையா யாகிட
வேதம் புதிதாய் விதை.

மங்கையுன் கற்பினை மாய்த்திட நாளுமே
இங்கவன் வேடமே ஏற்கிறான்! - சங்குக்
கழுத்தைப் பிடித்த சுருக்குக் கயிற்றைச்
சுழற்றியே வீசிச் சொடுக்கு.
=========================
இராச. தியாகராசன்

வருவாரே நம் பாரதியாரு.....


பாரதியாரு... பாரதியாரு.... இன்றிருக்கும் கயமைகளைக் களைய பாரதி நிச்சயம் வர வேண்டும் என்பது என்னுடைய அவா. (பாரதியாரின் ஓவியம் மைந்தன் வைகறைச்செல்வனின் கைவண்ணம்..)

====================================================




=================================================

மின்னுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - கால
வெள்ளம்போல வருவாரே பாரதியாரு!
தென்னங்கவி பாடிகிட்டே பாரதியாரு - பால
சிங்கம்போல வருவாரே பாரதியாரு!

துள்ளுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - களி
சோதியாட்டம் வருவாரே பாரதியாரு!
அள்ளுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - ஒளி
ஆர்த்தெரிக்க வருவாரே பாரதியாரு!
நல்லகவி பாடிகிட்டே பாரதியாரு - நம்ம
நாட்டுக்காக வருவாரே பாரதியாரு!
வெல்லகவி பாடிகிட்டே பாரதியாரு - செம்ம
வேந்தனாக வருவாரே பாரதியாரு!
முழங்குகவி பாடிகிட்டே பாரதியாரு - சாதி
மோகமழிக்க வருவாரே பாரதியாரு!
எழுகுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - மோதி
ஈனமழிக்க வருவாரே பாரதியாரு!
தெம்மாங்கு பாடிகிட்டே பாரதியாரு - வீசுந்
தென்றல்போல வருவாரே பாரதியாரு!
கும்மாளம் பாடிகிட்டே பாரதியாரு - நாசக்
கூட்டமழிக்க வருவாரே பாரதியாரு!
சுழலுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - ஆடி
சுத்திசுத்தி வருவாரே பாரதியாரு!
குழந்தகவி பாடிகிட்டே பாரதியாரு - கூடி
கும்மிபோட வருவாரே பாரதியாரு!
பாசகவி பாடிகிட்டே பாரதியாரு - நாட்ட
பாதுகாக்க வருவாரே பாரதியாரு!
நேசகவி பாடிகிட்டே பாரதியாரு - கோட்டு
நெஞ்சொசத்தி வருவாரே பாரதியாரு!
கழனிகவி பாடிகிட்டே பாரதியாரு - பசுங்
காடதிர வருவாரே பாரதியாரு!
முழவுகவி பாடிகிட்டே பாரதியாரு - கசம்
மூடமழிக்க வருவாரே பாரதியாரு!
சிந்துகவி பாடிகிட்டே பாரதியாரு - கருந்
தீதழிக்க வருவாரே பாரதியாரு!
கந்தகவி பாடிகிட்டே பாரதியாரு - வருங்
காலமுயர வருவாரே பாரதியாரு!
======================================
அன்பன்
இராச. தியாகராசன்

அமுக்கராக் கிழங்கோ நீ......

தமிழ்த்தாயின் சிலையொடு என்றன் உணர்வுகளைச் சொல்கின்றேன்....

==================================================




==================================================

அமுக்கராக் கிழங்கா நீ......
========================
என்கருத்தை எதிர்க்கையிலே இயன்றவரை எடுத்தியம்பி,
அன்னவரை அணுகியன்பாய் அக்கருத்தை அளிக்கின்றேன்;
என்னுருவை எள்ளியெனை ஏகடியம் செய்கையிலே
அன்பிலியர் என்றறிந்தே அவர்வழியைத் தவிர்க்கின்றேன்!
சிந்தனையை ஏசுகையில் சிந்தைமறந் தெளிதாகப்
புந்தியிலை இவர்க்கென்று புறந்தள்ளிப் போகின்றேன்;
சொந்தமதை தூற்றுகையில் துருபிடித்த அவரெண்ணம்
மந்தமென மனதார மன்னித்தே நகர்கின்றேன்!
உன்மத்தம் பிடித்தலையும் உணர்வில்லாக் கோழையரும்
என்னியல்பை என்வழியை என்பேச்சை என்பொறுப்பை
என்வழக்கை நான்பிறந்த என்சாதி மதப்பெயரால்
வன்மமொடு வைதாலும் வாழ்வியல்பைத் தொடர்கின்றேன்!
எந்தமிழை மிதிக்கையிலே எப்படியோ சினம்மீறி
முந்திவந் தவர்களிடம் முனைந்தெழுந்தே சீறுகின்றேன்:
இந்தநிலை எதற்காக என்றென்றுந் தோன்றியென்னில்
சிந்திக்கும் எந்திறனை சிடுக்காக்கி வைக்கிறதோ?
எவரென்ன சொன்னாலும் எவருன்னைக் குட்டைமதிற்
சுவரென்று வைதாலும் துங்கமணி போலொளிரும்
புவியகத்தின் முதன்மொழியே; பொற்றமிழே; பூம்பாவாய்;
அவித்தழிக்க நீயென்ன அமுக்கராக் கிழங்கோசொல்?
==============================================
இராச. தியாகராசன்

மாயவலை வாழ்வறுமோ?.......

மயக்கங்கள் யாவுமே விலகிவிடும்; வித்தகியின் விதிவழியே உயிராடும் கயிற்றாட்டம் முடிந்துவிடும்.  மாயவலை வாழ்விதும் அறுந்துபடும்.  
================================












================================
மாயவலை வாழ்வறுமே...
================================
விழலதற்கே நீரிறைக்கும் விடியாத வேதனைகள்;
சுழன்றலையும் தூசுகளாய்ச் சுற்றுகின்ற சோகங்கள்!
நிழலெனவே நிதமலையும் நஞ்சடர்ந்த நெஞ்சகத்தில்
அழலெனவே எரிக்கின்ற ஆசையெனும் பூசைகள்!

எங்கெங்கும் அருவமென ஈடணையும், ஏக்கழுத்தச் 
சங்கெனவே முழங்குகின்ற தரங்கமனை வாழ்வியலில், 
சங்கிலியாய்ப் பின்னலிட்டச் சிக்கெடுக்கா நூற்கண்டும், 
அங்கதனைக் கையிலேந்தி அடிநுனியின் தேடல்கள்!

அறுந்தநூல் கையிலெனும் அவலநிலை வாழ்க்கையிலே, 
வெறுங்கனவு மீட்டுகின்ற வேடிக்கை வீதியுலா;
நீறாகப் போகுமிந்த நெடுமரத்து மெய்ந்நாடும், 
பேறான பதவிகள்; பெருஞ்சிறப்பு விருதுகள்;

அத்தனையும் அழுக்காழி அலைவீசி அவித்தெடுக்கும்,
சொத்தையுளத் தாடுகின்ற சூக்குமத்தின் வித்தகங்கள்!
சித்தமதில் சலிப்பில்லாச் சிந்தனயைச் சிலுப்புகின்ற
மத்தென்னும் மாயவலை வாழ்வியலின் தத்துவங்கள்!

புரிதலில்லா பொய்யிதற்கே புதுமையென, பூவுலகின்
அருமையென விருதளித்த அறிஞரும் எவரிங்கே? 
இருந்திறக்கும் வேதனையாம் ஏதிலியின் வாழ்விதற்குக் 
கருமமெனப் பெயரளித்தக் கவிஞரும் எவரிங்கே?

கட்டியவள் தனியன்புங் கருவுயிர்த்தக் கண்மணியின் 
மட்டில்லாப் பற்றுநிறை மயக்கமும் நித்தியமோ? 
வெட்டவெளி வெயிலாய் வெக்கைதரு மனவெளியில், 
தொட்டுறுத்தும் துயர்வலையில் சொடுக்கினிலே சிக்கவைத்தே, 

எழிலுருவும் ஏக்கழுத்த இறுமாப்பும் இற்றுவிழ, 
வழியறியாப் பாலைநிகர் மணல்வீசும் பெருவெளியில், 
அழலெனவே அலைகின்ற அனாதை ஆன்மாவும், 
அழிந்தொருநாள் அருவமென அனைத்துவிட் டேகிடுமே!

கட்டகன்ற நினைவுகளில் கருத்தில்லாக் கனவுகளில், 
சுட்டெரிக்கும் பாலையிலே சுழல்கின்ற வெறுங்காற்றாய்,
எட்டியெனைப் பந்தாடி ஏய்த்துநிதம் சிரிக்கின்றக் 
கட்டில்லாக் கடவுளையே காலமெலாம் கனிந்துணர்வேன்!

எட்டினில் எழுதாத, இடிந்துவிழும் மணல்வீடாய், 
விட்டலின் விதிவழியே உயிராடும் கயிற்றாட்டில், 
விட்டிலென மயங்கொளியை விட்டகலா உயிரிதற்கு, 
மட்டில்லா அவனருளால் மாயவலை வாழ்வறுமே;
===========================================
இராச. தியாகராசன்

புதன், 18 செப்டம்பர், 2019

எங்கே போகிறேன்.....






மண்ணோடு மண்ணாய் ஆனாலும், எரிக்கின்ற அழலிலே நீறாகப் போனாலும், மணக்கும் கவியாய் மலர்வேன்; வாழ்வேன்.
=============================

===============================
மணக்கும் கவியாய் மலர்வேன்...
===============================
மலர்ந்துமணம் வீசுகின்ற மல்லிகைக்(கு) ஆரும்
மலர்வதைக் கற்றிடச்சொல் வாரோ? - புலர்ந்தநல்
வைகறைப் போதென மாந்தரின் ஆசெனும்
மையிருள் மாய்ப்பதென் மாண்பு. (1)

மாண்டவர் மீள்வரோ வாழ்விலே என்றெண்ணா
தாண்டவன் பேரிலே ஏய்க்கிறார்! - வேண்டும்
மனிதமாம் தாரக மந்திரம் என்னும்
கனிவுறு மெய்யின் கரு. (2)

கருவாய்க் கனிவாய்க்  கருத்திற் கனலாய்
விரிவாய் அறிவாய் விளைந்தே - தரிசாய்
வெடிக்குமென் சிந்தனை மேவிய பாட்டைப்
படிப்பதென் பைந்தமிழ்ப் பற்று. (3)

பற்றிடும் பாதைகள் பாம்பெனச் சீறினும்
பெற்றநற் பாடமாய்ப் பீடுக - ளுற்றிடக்
கண்டதைக் கற்பதும் கற்றதைக் கொண்டுளம்
பண்படச் சொல்வதென் பாட்டு. (4)

பாட்டொலி பூட்டிய பைந்தமிழ்த் தேரிலே 
பூட்டெவர் போட்டார் புகல்வீர்? - வேட்டதன்
பேரொலி போலவே புன்மையைச் சாய்த்திடும்
பாரதி பாட்டையென் பாடு. (5)

பாடுகள் பட்டுநம் பாரத மாந்தரும்
கூடியே ஒற்றுமைக் கோதுடன் - நாடுகள்
ஏத்திட என்று மிடையறா தாற்றிடச்
சாத்தியம் தேடலென் சால்பு. (6)

சாலெனும் நேர்வழி தன்னை மறந்தவர்
சூலெனும் மேன்மையைச் சூடிய - வாலெழில்
நங்கையின் கற்பு நசித்தல் தடுப்பதே
இங்கீக மன்னன் எழுத்து. (7)

எழுத்தின் விழிப்பாய் எழுகும் முழவாய்
அழலின் குழியாம் அழுகல் - அழிய
பழன விழுவை, பழகு தமிழை
முழங்க விழைவேன் முனைந்து. (8)

முனைவர் படிப்போ முதன்மை விருதோ
வனையும் வரியோ மனிதர் - புனையும்
முகமெனும் மூடியை முற்றும் திறந்தே
அகமதைத் தேடுமென் ஆவு. (9)

ஆவலும் ஆர்த்திடும் ஆட்டமும் பாட்டமும்
மேவிய வாழ்விதும் வீழுமே - சாவெனும்
கணக்கைக் கடந்தே கயமை களைவேன்
மணக்கும் கவியாய் மலர்ந்து (10)
===============================================
வேறு: 
============================
கணந்தனில் கருக்கிடும் கருமையின் கருத்தினை 
உணர்ந்திடும் உண்மையை வெறுமையின் வலியுடன்
பிணந்தனை நிகர்த்தவர் பெண்மையின் பெருமையை
வணங்கிடா தழித்திடும் மருவினை உரைக்கிறேன்
==============================================
இராச. தியாகராசன்.

பிகு:
அருளரசன் = தியாகராசன், ஈகமன்னன் = தியாகராசன்
பாவானந்தம் = பாப்பிழை, ஆசு = குற்றம், பீடுகள் = சீர்த்திகள்
கோது = சூழ்தல், உளக்களிப்பு, சால்பு = தன்மை, திறன்
சால் = நேர்வழி (வயலில் குறுக்குச்சால் கூடாதென்பது சொலவடை)
வாலெழில் = தூய்மையெழில், பழனம் = வயல், விழு = சிறப்பு, 
ஆவு = தனித்து/தனிமை, பசு

பாவலர் தங்கமணி

சிவனருட் சிரோன்மணி, காலஞ்சென்ற பாவலர் திருமதி தங்கமணி அம்மையார் அவர்கள் என்னுடன் சேர்ந்து எழுதிய ஒரு பஃது வெண்பா மாலையில் அவரின் பங்கான வெண்பாக்கள். தற்போது, அவரெழுதிய வெண்பாக்களுக்கு பதிலாக நான் வனைந்தவற்றை சேர்த்திருப்பதால், அவரின் மேலான வரிகளைத் தனியாகவே பகிர்கிறேன்:
=====================================================




====================================================
நம்பீசன் நமைக் காப்பான் (பாவலர் தங்கமணி)
====================================================

நமக்கு மறைநாதன் நற்றாள்  துணையாம்
சுமக்கும்  வினையிடர் தூளாம்!-- இமைக்குள்
விழியின் ஒளியாய் விளங்கும் விடையோன்
எழிலார் திருக்கோலம் இன்பு. (5)

இன்னருளில் வைத்திடுவான் ஈசன் மறைநாதன்
புன்னகைக்கே ஈடாமோ பொன்னகைகள்?-- மன்னனவன்
காணும் உயிர்களைக் காத்திடுவான் அன்பினைப்
பூணும் அணியாய்ப் பொலிந்து. (6)

சிறப்போடு சீர்தரும் செங்கழலார் தாளால்
பிறப்பாகும் துன்பப் பிணிபோம்-- திறப்பாக
ஞான வழிகாட்டும் நம்பனை போற்றிடுவாய்
மோன குருபேர் மொழிந்து. (8)

மொழிக்கு வசமாவான் முந்துதமிழ் அன்பன்
கொழிக்கும் அருளைக் கொடுப்பான் -- பழிக்கும்
வினைக்கஞ்சி முப்போதும் வெண்ணீற்றன் அப்பன்
புனைகழல் வேண்டிப் புகல். (9)

புகலென் றுனதிரு பொற்றாள் பணிவார்
அகமன் றிலுனருளாம் ஆடல்! -- முகிலனும்
வேதனும் போற்றும் விமலா! எளியரைக்
காதலுறும் கண்மலரால் கா. (10)
====================================================
பாவலர் தங்கமணி அம்மையார்
====================================================