புதன், 8 ஆகஸ்ட், 2012

மாண்பெனவே கொள்வோமே!


இந்தக் கொச்சகக் கலிப்பாவின் ஆங்கில வடிவத்தினையும் நான் எழுதினேன்.  இரண்டின் ஒற்றுமை/ வேற்றுமைகளை சுவைஞர்கள் தாம் சொல்ல வேண்டும்!  ஆங்கில வடிவத்தின் இழை:
http://tyagas.blogspot.in/2012/08/safe-production-for-development.html
================================================
















================================================
வளர்ச்சிக்கான பாதுகாப்பும் உற்பத்தித் திறனும்..
(கொச்சகக் கலிப்பா)
================================================

எடுத்தபணி யதன்மீதே ஈடுபாடு கொண்டிலங்கி
முடிப்பவர்தாம் வாழ்க்கையிலே முன்னேறிச் சென்றிடுவார்;
அடுத்தவரைத் தான்நோக்கி அழுக்காறு கொள்பவரோ,
நடுகல்லை போலிங்கு நலமின்றி நின்றிடுவார்!

உடமுழைப்பு, பாதுகாப்பு, உற்பத்தி யிவைமூன்றும்
உடமையென தாமெண்ணி உலகிலுள்ள மாந்தர்கள்
கடமையினைச் செய்தாலே கண்ணிமைப்பில் வளர்ச்சிகளும்
நடக்குமென்ற மெய்யதனை நாமிங்கு உணர்ந்திடுவோம்!

தளர்வின்றி எந்நாளும் தவிக்கின்ற முனைப்புடனே,
களமீதில் ஆழ்தியங்கிக் காணும்வீண் கனவகற்றித்,
தெளிந்தஉடல் உழைப்பதுவே சீர்த்திமிகு தாய்நாட்டின்
வளர்ச்சிக்கு வாழ்வியலின் மாண்பெனவே கொள்வோமே!

SAFE PRODUCTION FOR DEVELOPMENT.


I have written this English poem based on my little closeness which I had in my college days with Iombic tri/tetra/penta meters, prosidy, sonnet etc.  I have also translated this in Tamil also (in kalippaa) but you readers have to comment about the translations's closeness!
===================================















===================================

We be hard working hand;
With a love for the same!
Thats sure a magic wand;
For the path of our fame!

Mind working as a knife
Will give a result known!
Envy other people life,
You will be an inert stone!

Working with the safety yields,
Make thy life full of sweets!
Other wise hollow deals,
Always end in empty tweets!

Without any stopping mind,
Our lovely working band,
Toil safely with a bind
Make a Strong Mother Land!

மாண்புடனே வாழியவே!.....


சில நேரங்களில்  உள்ளே உணர்வூறிய ஆற்றொணாத வேதனையை, கையால் ஆகாமல் கைகளைப் பிசையும் கேவலத்தை,  எண்ணி உளம் மாயும் துன்பத்தை என்னென்று சொல்வது?   கடமைகளால் கட்டுண்ட, இயலாமையின் உச்சத்தில் இருக்கும், எம்போன்றோர், என்னதான் செய்ய இயலும்?
==============================================









|

==============================================
மாண்புடனே வாழியவே  
(தரவு கொச்சகக் கலிப்பா)
========================

தீக்கனலே! செம்மொழியே! செந்தமிழே! என்றெல்லாம்
பாக்களினால் தமிழ்பேசி பாசாங்கு செய்தபடி
சாக்காட்டுச் சாதிமத சழக்கென்னும் கோண(ல்)அரை
வேக்காட்டு அரசியலின் வேர்கொண்ட தமிழினமே!

நந்தமிழை நாக்கூச நரகலெனும் வேதனையை,
செந்தமிழைச் செந்தணலிற் றீய்க்கின்ற தீமையினை,
சிந்தனையைத் தான்பொசுக்கிச் சீரழிக்கும் போதையினை,
எந்நாளும் எத்தர்களே ஏத்துகின்ற ஈனமதாம்

தன்னலப்பேய் வெருண்டோடத் தாரணியை வாழ்விக்கும்
அன்பென்னும் அற்புதமாம் ஆழ்கடலில் முக்குளித்து
நன்னலமாம் முத்துகளை நம்மிளையோர் பெற்றிலங்கி
மன்னவராய் ஓங்கலென மாண்புடனே வாழியவே!

தேடித் தேடி.....


சந்தவசந்தம் கூகுள் குழுவில் நடந்த பாவரங்கில் நான் வாசித்தளித்த கவிதை இது!  (சில இடங்களில் தொடையிலக்கணம் பிறழ்ந்திருக்கலாம் - ஆனால் தோன்றியதை அப்படியே எழுதிய பாட்டென்பதால், எதையும் திருத்தவில்லை!)
====================================================

====================================================
தேடித் தேடி (கொச்சகக் கலிப்பா)
===============================

ஆட்டங்கள் வேண்டுமென்றே ஆர்ப்பரிக்கத் தேடும்நீ;
ஆண்டவனை வேண்டியிங்கே அமைதியைத் தேடுவையோ?
அருகிருக்கு மழகறியா தரிதாரந் தேடும்நீ;
அன்பொன்றே மேலாம்மென் றாய்ந்தறிந்து தேடுவையோ?

இருக்கின்ற தைவிட்டே எங்கெங்கோ தேடும்நீ;
இருளன்ன இறப்பொன்றே இயல்பென்று தேடுவையோ?
உருவாகு முவர்கடலி லுல்லாசந் தேடும்நீ;
ஊரெங்கு முறையும்பே ருண்மைதான் தேடுவையோ?

வசந்தங்கள் வாழ்வென்று வலைவீசித் தேடும்நீ
நிம்மதியைத் தேடாது நிழல்களிலே வெல்வதென்ன?
செந்தழலைத் தளிரென்றும் செம்பனியைத் தீயென்றும்
தேய்ந்தாய்தே தேடும்நீ தேய்ந்தோய்ந்து செல்வதெங்கே?

தினந்தினமுந் தீக்குளியல்; தீராத நெஞ்செரிச்சல்;
இனம்புரியா மூச்சடைப்பு; ஏனிந்த விளையாட்டு?
வித்தகியின் விதிவழியே உயிராடுங் கயிராட்டம்
அத்தனையு ஆசைகளால், ஆவலெனும் பூசைகளால்!

வந்ததுவும் தவறில்லை வளர்ந்ததுவும் தவறில்லை
வெந்தரண வேல்வலியில் வெறுங்கூடாய் வாழ்வெதற்கு?
வீசுகின்ற காற்றலையில் உழல்கின்ற சருகான
பாசவலை வாழ்வொருநாள் பட்டெனவே விட்டுவிடும்!

சங்கிலியாய்ப் பின்னல்கள் சிக்கெடுக்கா நூற்கும்பல்;
அங்கதனைப் பிடித்தபடி அடியதனைத் தேடுகையில்;
அறுந்தநூல் கையில்வர வெறுங்கனவே வாழ்வென்னும்
முடிவுதனைக் காண்கின்றாய்; விடியும்வ ரையிதுவே!

இறங்கிவிட்ட நாள்முதலாய் இருக்கின்ற நாள்வரையில்
உறுத்தாத பேருண்மை; இருப்பிற்கோர் காவல்நாம்!
நெறிமுறையை விட்டுவிட்டு நீயுன்றன் வாழ்வினிலே
அறியாமல் தேடுவதேன்? ஆட்டங்கள் போடுவதேன்?

சிங்காரந் தேடுமுடல் சில்லென்று மாகுமடா!
தங்கத்தைத் நாடுமுடல் தழல்தின்னப் போகுமடா!
பாவங்கள் படிந்துவிட்ட பொய்யான மெய்ப்பைதான்
சீவனெனும் சிவலிங்கம் சிரிக்கின்ற கோவிலடா?

கள்ளக் கருநிலவு........


ஒரு இணைய நண்பரின் நிலவு பற்றிய நான்கு வரிப்புதுப்பாவின் தாக்கத்தால் நான் எழுதிய வெண்பாயிது. பல ஆண்டுகள் ஆனதால், அந்நண்பரை அறியேன் இப்போது.   இதே பாடலை சுவைத்த கவிஞர் கி.பெ. சீனுவாசன், தம்முடைய ”புதுவைப் பாமரன்” என்னும் சிற்றிதழில் வெளியிட்டார்.
===================================================

===================================================
கள்ளக் கருநிலவு (கலிவெண்பா)
======================================
கள்ளிருக்கும் பூச்செண்டாய்க் கன்னியவள் காத்திருக்க
முள்ளாம் முழுநிலவின் மோகக் கதிருயர்வோ?
துள்ளு மிளமானாய்ச் சுந்தரியே இங்கிருக்கக்
கள்ளக் கருநிலவின் கானல் கதிருயர்வோ?

தங்கக் கொலுசணிந்த தத்தைமொழி முத்திருக்க, 
அங்கந்தேய் அம்புலியின் ஆர்க்குங் கதிருயர்வோ?
நங்கை விரிக்கின்ற மாயக்கண் வீச்சிருக்க, 
மங்கிவளர் வாநிலவின் வஞ்சக் கதிருயர்வோ?

அள்ளு மழகிருக்க அன்றாடந் தேய்கின்றக்
கொள்ளிக் குளிர்நிலவின் கொட்டுங் கதிருயர்வோ?
முள்ளிச் சிரிப்பிருக்க மோன முகங்காட்டும்
வெள்ளி வெறுநிலவின் வேனற் கதிருயர்வோ?

விண்மதியா யென்மடியில் மெல்லியலாள் வீற்றிருக்கத் 
தண்டமிழில் என்னுளத்தே சந்தப்பாப் பொங்கியெழ, 
வெண்பனியாய்ச் சிந்தி விரலிடுக்கி லோடிவிடும் 
வண்ணச் சிறுநிலவின் மந்தக் கதிருயர்வோ?

மண்ணுலகில் என்னை வலைவீசிக் கட்டிவிடுங் 
கண்ணழகி காவதனில் காதலுடன் காத்திருக்க,
வெண்ணெய்யாய்த் தீயில் விரைந்தே உருகுமந்த 
விண்ணிலவின் தேய்கின்ற விந்தைக் கதிருயர்வோ?

கன்னலாய்த் தித்திக்குங் காவியம்போற் றுள்ளியே 
மன்னுதமிழ் பாவிசைக்கும் மங்கை அணைப்பிருக்கச் 
சென்னி மழுங்கடிக்குஞ் சின்னக் கதிருயர்வோ?
அன்புடனே சொல்வீர் அறிந்து.
===========================
இராச. தியாகராசன்

பிகு:
தத்தைமொழி - கிளிமொழி (இங்கு மங்கை பேச்சுக்கானது)
அம்புலி - நிலவு
முள்ளி - தாழை/ மருதோன்றி/கள்ளு (Frangrantscrew/Baleria/Toddy)
(நான் கள்ளு/ தேறல் என்ற பொருளில் எழுதினேன்)

நம் பெரியார்......


வலையுலாவும் நண்பர்களே!  நான் இறையென்று ஒன்றிருப்பதை நம்புகிறவன்.  அதுபோல இறை  மறுப்பு தவிர்த்து,  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் குறிக்கோள்கள் பலவற்றை பின்பற்றும் பாமரன்.  இஃது பலருக்கும் முரண்பாடாய்த் தோன்றலாம்.  என்ன செய்வது,  மனித மனம்,  எண்ணங்கள், வாழ்வியல் எல்லாமே முரண்பாடுகளைக் கொண்டவையே!
=======================================================

=======================================================
நம் பெரியார் (கலித்தாழிசை)
============================

சாத்திரங்கள் கூறுவதாய்ச் சாதியெனும் வேதனையைச்
சூத்திரமாய்ச் சொல்பவரை சுட்டெரிக்குஞ் சூரியனாம்;
ஆத்திகரா யில்லாமல் ஆறறிவால் வாழ்வமென,
நாத்திகரா யூர்போற்ற நம்பெரியார் வாழ்ந்தாரே!
..........நானிலத்தோர் போற்றிடவே நம்பெரியார் வாழ்ந்தாரே!

பெரும்பதவிப் பட்டங்கள் பெற்றிடவே வாழ்வில்
செருக்குடனே நாளும் திரிந்தலைந்து நாட்டின்
அரசியலை யாட்டுவிக்கும் அம்மிகளு மாட
கருஞ்சட்டைச் சூறையெனக் காவலனாய் வந்தாரே!
..........கைம்பெண்கள் வாழ்விற்குங் காவலனாய் வந்தாரே!

சொல்லிய சொல்லதனைச் செல்வமென தம்வாழ்வில்
துல்லியமாய்க் காலத்த்தைச் சொத்தெனவே தம்வாழ்வில்
வெல்லுந் தமிழினத்தின் வீரரெனத் தம்வாழ்வில்
நல்லாண்மை மிக்கவராய் நம்பெரியார் வாழ்ந்தாரே!
..........நங்கையரின் மேன்மைக்காய் நம்பெரியார் வாழ்ந்தாரே!

உதட்டிலொன்றும் ஆழ்மனத்தின் உள்ளொன்றும் வைத்தே
விதவிதமாய் சொல்லடுக்கி வெற்றழகைக் காட்டும்
பதங்களையேப் பகராத பண்பதனால் இங்கு
மதயானை போல்நிமிர்ந்து மன்னனென வாழ்ந்தாரே!
..........வாழ்நாளில் தாழ்ந்தோரின் மன்னனென வாழ்ந்தாரே!

செங்கண்ணருளாலே.......


அறு சீர் ஆசிரிய விருத்தமாக முக்கண்ணவனை பற்றி நானியற்றிய பாடல்கள் இவை. கட்டமைப்பு, பொதுவாக மா-மா-மா-மா-மா-காய்.  நான் வனைந்த முறை: மா-மா-மா-மா-தேமா-புளிமாங்காய். முழு பாடலிலும் 1-7-13-19 சீர்களின் எதுகைத் தொடை அமைந்தது.  அது போல மோனைத் தொடை, ஓவ்வோரடியிலும் 1-5 சீர்களில்  அமைந்தது.  கீழிருப்பது  அதிகை வீரட்டநாதர்.
============================================

============================================

எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா
..........லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து
..........பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும்
..........பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின்
..........செங்கண் ணருளாலே!

அடையா யெழுந்து மழையாய்ப் பொழியு
..........மாசை யகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கச் சொரியுந்
..........துன்பம் தொலைந்தேக
கடைய னெனையே கடைக்கண் வழியே
..........காக்க வருவாயோ;
விடையூர்ந் துவரு மதிகை சிவனுன்
..........விந்தை யருளாலே!
============================================
முதல் விருத்தம் பதம் பிரித்து:

எந்தை இன்று இங்கு அளிக்கும் தெளிவால் என்னில் உறைந்தாடும்
பந்தம் என்னும் வலையும் அறுந்து பக்தி எழுந்தோங்க
புந்தி ஆளும் பிழைகள் யாவும் பொள்ளிப் பொசுங்காதோ
சிந்தை மேவும் முக்கண்ணவனின் செங்கண்ணருளாலே.

இரண்டாம் விருத்தம் பதம் பிரித்து:

அடையாய் எழுந்து மழையாய்ப் பொழியும் ஆசை அகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கிச் சொரியும் துன்பம் தொலைந்தேக
கடையன் எனையே கடைக்கண் வழியே காக்க வருவாயோ
விடை ஊர்ந்து வரும் அதிகை சிவன் உன் விந்தை அருளாலே!

சில சொல்லாட்சிகளின் பொருள்:

புந்தி = மனம்/ எண்ணம்
அதிகை சிவன் = அதிகை வீரட்டநாதர்

நம்பீசன் நமைக் காப்பான்....


திருவாதிரைத் திருநாளுக்காய் (ஆருத்திரா தரிசனம்) அன்றுநான் ஆதீசனை நாயகனாய்க் கொண்டு, எழுதிய ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.  இணைத்துள்ள  படம் அருள்மிகு நஞ்சுண்டேச்சுவர சுவாமி. 

மாதொரு பாகனே, வாகீசக் கூத்தனே, வேதபுரிவாழ் வேதீசனே, சோமீச சுந்தரா, ஆம்பல் வனத்தோனே, ஆரண்ய வாசனே, பாம்பணியும் பசுபதியே, வண்டுதுறை ஈசனே, வாதவூர் நாயகா, இன்னலறு ஏகம்பா, நீனேரி நாதனே, நமச்சிவாயா, மாகாலா, ஆர்கழலாடும் கூத்தனே, புன்னைவனத்து  ஈசனே, சீர்காழி அத்தனே, சிறப்பின் சீர்கழலா, செங்கமலச் சித்தனே, பேரம்பலப் பித்தனே, சிவனருட்சோதியே, அம்பிகை காதலுறும் அழகனே.  உனையன்றி வேறார் துணையிங்கு?
============================

============================
நம்பீசன் நமைக் காப்பான்
============================
காதிருந்துங் கேளாமல் கண்ணிருந்துங் காணாமல்
மாதென்றுஞ் சூதென்றும் மாய்பவரே! - மேதினியில்
மாதோடு பாகனென்ற வாகீசக் கூத்தபிரான்
வேதீசன் தாள்சேர்க வே!  (1)

வேதபுரி ஈசன்நம் வேதனையை தானேற்றுக்
கோதென்று கொள்பாவக் கூத்தறுப்பான் - மோதுமுளச்
சோதனைகள் முற்றும் தொலைத்திடுமே சோமீசன்
ஆதரவுத் தாள்சேர்த லாம் (2)

ஆம்பல் வனத்தானே ஆரண்ய வாசனே
பாம்பணி கின்ற  பசுபதியே! - மாம்பழத்து
வண்டு சிறைவாச மாயவலை ஆசையற
வண்டு துறையீசா வா! (3)

வாதவூர் நாதனுன் வாஞ்சை துணையிருக்க
ஏதெமக்கு நேர்ந்துவிடும் ஏகம்பனே! - நோதலற
நீதியுடன் காப்பிங்கே, நீனேரி நாதன்தாள்
நாதியிலா தாடும் நமக்கு! (4)

நமக்கின்று நாளும் நலங்கள் தரு(ம்)அந்
நமச்சிவத்தை நம்பாமல் நஞ்சை - சுமந்திறும்
சாகாட்டச் சென்னும் சருகெங்கள் வாழ்விதனை
மாகாலா காத்திடவே வா! (5)

வானமும் வையமும் வாழ்க்கையும் ஆர்கழலன்
தானமென்றே காண்பதுதான் சத்தியம் - ஞானப்பேர்
கூத்துவல்யன் பேரருளால் கொள்வோமே எந்நாளும்
பூத்தொளிரும் உள்ளப் பொலிவு! (6)

பொலிவுடனே புன்சிரிக்கும் புன்னைவனத் தீசா!
நலிந்திடுமோ நம்புமிந் நாளே! - கலியகற்றச்
சீர்காழி அத்தன்தாள் தேனாய்த் துதிபாடிச்
சேர்வோரின் வாழ்வே சிறப்பு! (7)

சிறப்பிலங்கும் சீர்கழலா! செங்கமலச் சித்தா!
பிறப்பிலா(து) ஆடுகின்ற பித்தா! - புறத்துநமைத்
தேடிவந்தே  சுட்டெரிக்குந் தீவினையை நாமறுப்போம்
நாடியுன்றன் நாமம் நவின்று! ( 8 )

நவிலும் நமச்சிவ நாமத்தால் நாளும்
புவியில் நனியறம் பூக்கும்! - கவியும்
கவலையைச் சட்டெனப் போக்குமே ஆதி
சிவனருட் சோதியெனுந் தேன்! (9)

தேனென்றும்  பாகென்றும் தீஞ்சுவைச் சாறென்றும்
மானென்றும் மாடென்றும் மாயுமெம் - கூனுளத்தை
மாதவள் பாகனுன் மட்டிலா மெய்யென்னும்
காதலுறு கண்ணருளால் கா! (10)
===================================================
இராச. தியாகராசன்

வேறு:
=====
அடையா யெழுந்து மழையாய்ப் பொழியு
..........மாசை யகன்றோட
தொடரும் வினைகள் சொடுக்கச் சொரியுந்
..........துன்பம் தொலைந்தேக
கடைய னெனையே கடைக்கண் வழியே
..........காக்க வருவாயோ;
விடையூர்ந் துவரு மதிகை சிவனுன்
..........விந்தை யருளாலே!

மனிதர்களே மாறுங்கள்.......


சந்தவசந்தம் கூகுள் குழுவில் நடைபெற்ற முதல் படப் பாவரங்கில், எனக்களிக்கப்பட்ட படத்திற்காக நான் வனைந்தளித்த பாடலிது.  படம் கீழே!
==============================================

==============================================
தமிழுக்கென் வணக்கம் 
(கட்டளைக் கலித்துறை)
=======================

துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க  நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

தலைமைக்கும் அவைக்கும் வணக்கம் 
(கட்டளைக் கலித்துறை)
====================================

முடங்கா தொளிரும் ஒடுங்கா வலையாம் முகப்பினிலே;
நுடங்கா தெழுந்த படப்பா வியப்பாம் நுமதரங்கில்;
அடங்கா துயர்ந்தே தமிழ்த்தேன் குடிக்கும், அருங்கவிகள்,
தொடங்கித் தொடுக்கத் துடிப்பாய்க் கொடுக்கும் துரைக்கவியே!

இதுவா வாழ்க்கை? மாறுங்கள்! 
(கொச்சகக் கலிப்பா)
======================================================

தூண்டிலிலே தொக்கிநிற்கும் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாது,
காண்பதெல்லாம் கொள்வதுவும் கண்போக்கில் களிப்பதுவும்
மாண்பெனவே மயங்குகின்ற மானிடரே மாறுங்கள்!

தன்னெறியாய்த் தருக்கர்கள் தணிவின்றித் தாரணியில்
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமிலாக் கொடும்பாவ,
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் பாலியலின்
வன்முறையை வாளெடுத்து மாய்த்திடவே மாறுங்கள்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்கள் ஆழ்ந்தூன்ற
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுத்தவரைத் தான்நோக்கி அழுக்காற்றில் வீழ்ந்தழிய,
நெடுங்கல்லாய் நீணிலத்தில் நிற்பவரே மாறுங்கள்!

பணமென்றும் பகட்டென்றும் பழகுந்தீ வழக்கென்றும்
தணலேறி தகிக்கின்ற சழக்கென்றும் சலிப்பில்லா
துணவென்றும், உலுத்தர்கள் உறவென்றும், உழல்வோரே;
கணப்போதில் காலனுயிர் கரக்குமுன்னே மாறுங்கள்!

சங்கிலியாய்ப் பின்னலிடும் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சனைகள் வாதுகளில்
முங்குவதால், முன்னோர்கள் முனைந்தெடுத்த முயற்சிகளும்
மங்கிவிட, வாழ்கின்ற மனிதர்களே; மாறுங்கள்!

உள்ளத்தில் உருவாகும் உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
அள்ளியள்ளி அனுபவிக்கும் அன்பர்களே மாறுங்கள்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென முதலுதற்கே
ஓக்கமிலா தூழ்த்துவிட்ட ஊடகத்தால் உணர்வின்றி
மாக்களென வாழ்கின்ற மாந்தர்களே மாறுங்கள்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை
சுளுவாக  உன்கழுத்தில் தொடையல்கள் விழுவதில்லை
தெளிவாகச் சிந்தித்து திடமாகத் தேர்ந்தெடுத்து
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கு மாறுங்கள்!

உடலுழைப்பில் உருவாகும் உயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே
கடமைகளும் கருத்தேறிக் கண்ணிமைப்பில் வளர்ச்சிகளும்
நடக்குமென்ற நன்னெறிக்கு நலுங்காமல் மாறுங்கள்!

தளர்வின்றித் தயக்கமறச் சலிப்பில்லாத் தவிப்புடனே
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர் கனவகற்றித்
தெளிவாக உழைப்பதுதான் திறன்மிகுந்த தாய்நாட்டின்
வளமான வளர்ச்சிக்கோர் வழியென்றே மாறுங்கள்!
======================================================
பழந்தமிழ்ச் சொற்கள் நாளுக்கொன்றாய் கற்றுக் கொள்
என்று இலக்கணச்சுடர் இரா. திருமுருகனார் எனக்குச்
சொல்லித் தந்தவை நிறைய!

முடங்கர் = முடங்குதல், மெலிவு
ஏக்கழுத்தம் = இறுமாப்பு
ஈடணைகள் = பேராசைகள்
முடந்தை = வளைந்தது, தாழ்ந்தது, கீழானது
முதலுதல் = தலைமையாதல், முன்னிலையாதல், முன்னே நிற்பது
ஓக்கம் = உயர்வு, பெருமை
ஊழ்த்த = முளைத்த, உருவான
தொடையல் = மாலை

வாய்மூடி நின்ற மௌனங்கள்.......


காதலில் வீழ்ந்தவர்க்குத்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்?
==========================================

==========================================
மௌனங்கள் (கொச்சகக் கலிப்பா)
=================================

சொல்லத்தான் எண்ணித் துணிந்திட்ட சொற்களையே
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
காய்மூடி நின்றதொரு கரும்பச்சை இலைபோல
வாய்மூடி நின்றதோர் மௌனங்கள் எத்தனையோ?

வெள்ளமென உள்ளத்தில் உருவாகும் எண்ணத்தை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
தீமூடி நின்றதோர் செம்புகை போலவே
நாமூடி நின்றவொரு நேரங்கள் எத்தனையோ?

கள்ளமனம் கருவுற்ற காலமெலாம் காதலையே
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகச் சொல்கையிலே
பால்மூடிப் படர்ந்திருக்கும் பாலேட்டை போலவே
சேல்விழி இமைக்குள்ளே சிந்தனைகள் எத்தனையோ?

கணித்தமிழ் வளர்ப்போம்.......


கணித்தமிழ் வளர்ப்பதென்பது  இற்றைக்கு மிகவும் இன்றியமையாத பணி.  ஏனென்றால், இனி வரும்காலம் கணித்தமிழ் காலமென்பதால்.
=========================================

=========================================
(இன்னிசை வெண்பா)
======================

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தைக் கூட்டி
அடிவானம் தீட்டு மழகெழிலைச் சேர்த்துப்
படிக்கின்ற செம்மரபுப் பாட்டே! தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!

(நேரிசை வெண்பாக்கள்)
=======================

எம்மின் தமிழின மென்று முயர்த்திடும்
உம்ப ரமிழ்தனை ஓண்டமிழை — நம்மை
கலக்கிடு மின்பக் கணிப்பொறி தன்னில்
வலம்வரச் செய்யவே வா!

வாழ்வில் பலரும் வழமைத் தமிழையே
தாழ்வென் றொதுக்குஞ் சழக்கையே -வீழ்த்த
வலைவலம் போகின்ற வண்டமிழ் அன்பர்
மலையா யெழுவோம் வளர்ந்து!

என்னி லுறைந்தெனை யென்று முயர்த்திடும்
கன்னற் சுவையாங் கணித்தமிழை — இன்று
வலம்வரும் வண்ண வலைதனி லோங்கி
நலம்பெறச் செய்வமே நாம்!

நச்சரவை மாய்ப்பதெவர்?......


எங்கள் புதுவையில் இருந்து எங்கும் ஒளிவீசி, தமிழ் போற்றிய, இலக்கணச்சுடர், தீந்தமிழ்க் காவலர், இன்னிசை வித்தகர், சிந்துப்பாடலுக்கு முதன்முறையாக இலக்கணம் கண்ட மூத்தவர், முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் மறைவிற்கான  நினைவேந்தலில், உளம்நொந்து யாத்தளித்தப்  பாடலிது:
=================================================

=================================================
நச்சரவை மாய்ப்ப தெவர்? (நேரிசை வெண்பாக்கள்)
=================================================

செஞ்சாந்து வண்ணமெனத் தீந்தமிழில் சொல்லெடுத்து
அஞ்சாத போர்முரசாய் ஆர்த்தீரே! – நஞ்சுமிழ்ந்தே
நந்தமிழை சாய்க்கின்ற நச்சரவை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

விருதுகளைத் தேடும் வியனுகலில் ஊதிச்
சருகெனவே தள்ளிவிட்ட சான்றோய்! – திருமுருக;
செந்தமிழைச் சீரழிப்போர் சிந்தனையை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எருமையென்றே நந்தமிழர் ஈங்கிருப்பைக் கண்டே
வருந்தியதால் விட்டீரோ வாழ்வை! – திருந்தாது
சந்தப்பா வென்றே தமிழடுக்கும் வெறுமையினை
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எம்போன்றோர் கற்றிங்கு யாக்கின்ற சொல்லடுக்கை
செம்மையுற செய்துவிட்ட செவ்வேளே! – எம்பாட்டில்
முந்திவரும் பாப்பிழையை முன்னின்(று) உமைப்போலே
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எண்ணியுளம் தேம்பியதே!....


மறைந்த முனைவர் இரா.திருமுருகனார்க்காக நான் உளமேங்கி அளித்த நினைவேந்தற் பாட்டு.  தன் உடலைக்கூட மருத்துவ ஆய்விற்காக உவந்தளித்த சான்றோர் அவர். உடல் பொருள் ஆவி அத்தனையும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்மண்ணுக்கும் ஈந்த ஈகை வேந்தர் அவர். தமிழிசையையும், தமிழிலக்கணத்தையும் ஒரு சேர அறிந்திருந்தவர்கள்/ அறிந்திருப்பவர்கள் வெகுசிலரே. இவ்விரண்டிலும் ஆர்வமிருக்கும் எம்போன்றோர்க்கு அவர்தம் மறைவென்பது பேரிழப்பே!
===============================================
===============================================
திருமுருக!  எண்ணியுளம்  தேம்பியதே!
(நேரிசை வெண்பாக்கள்)
=====================================

தீச்சொரியுஞ் சொல்லே! தெளிதமிழே! கூர்வாளே!
கூச்செரியச் செந்தமிழின் கோதுரைத்த – சூச்சுமமே!
மண்ணுதித்த நம்மினத்தின் மாமறவ! நும்மறைவை
எண்ணியுளந் தேம்பி யது!

இயல்மொழியா மெந்தமிழை ஏற்கா திளையோர்
அயல்மொழிதான் வேண்டுமென் றாடுங் – கயமையினைக்
கண்டுளமே வெம்பியதால் காற்றேறிப் போனீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

சந்தயிசை காட்டுகின்ற தாளத்தைக் கற்றதனாற்
சிந்தென்னுஞ் சீர்மையினைத் தேர்ந்திசையாய்த் – தந்தவரே!
விண்ணகமே நுந்தமிழை வேண்டியதாற் சென்றீரோ?
எண்ணியுளந் தேம்பி யது!

பாவேந்தர் பாதைவழிப் பாசறையின் போர்வாளே!
மூவேந்தர் காத்துநின்ற முத்தமிழின் – மாவேந்தே!
பண்ணார் தமிழணங்கைப் பாருலகி லார்காப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!

பன்னீரின் பூமழையாய்ப் பாட்டோலைக் கம்பனுக்கும்
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்ப் – பண்ணெமக்கும்
ஒண்டமிழி லீங்கினிமேல் ஓன்றாக ஆர்தருவார்?
எண்ணியுளந் தேம்பி யது!

தண்டமிழிற் றூயகலித் தாழிசையும், வானூருங்
கொண்டலென மூவண்ணங் கொட்டியநற் – பண்ணேறே!
மண்மணக்கும் முத்தமிழ்நாம் மாந்திடவே ஆரிசைப்பார்?
எண்ணியுளந் தேம்பி யது!
=========================================
மூவண்ணம் = குறில் வண்ணம்/ நெடில் வண்ணம்/ சித்திரவண்ணம்
கொண்டல் = மழைமேகம்
பன்னீர் மழை, பாட்டோலை கம்பனுக்கு இவை 
இவரெழுதிய நூல்களின் பெயர்கள்

மெய் தீண்டும் மைவிழி!......

காதலைப் பாடாத கவிஞர் எவருண்டு? மைவிழியைக் நாடாத  ஆடவர் எவருண்டு?  (காதலர் நாளுக்காய் கொஞ்சம் முன்னாடியே போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்!!)   முகநூலின் கவிதை மன்றமொன்றில்,  மெய்  தீண்டும் மைவிழி  என்ற பொருளுக்காக,  நானியற்றிய வெண்பாக்கள் இவை:
================================================

================================================
மெய்தீண்டும் மைவிழி! (நேரிசை வெண்பாக்கள்)
================================================
காதலிலே கண்மயங்கிக் காய்கின்ற வேளையிலே
வேதனையை வேரறுக்க வேண்டுகிறேன்! - ஆதரித்தால் 
மையலெனும் என்நேசம் வாழ்ந்துயிர்த்துச் சேர்வேனே
மெய்தீண்டும் உன்"மை" விழி. 

முல்லையின் மொட்டனைய முத்துச் சிரிப்பழகால்,
இல்லையெனும் சின்ன இடையழகால், – கொல்லுகின்ற
தையலே! மின்னல்  சவுக்கெனவே சாய்க்குடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!

புல்லில் துயில்கின்ற பூம்பனியின் சில்லிப்பாய்,
வில்லின் இழுநாணே மீட்டவெழும் – துள்ளம்பாய்,
பைங்கிளியே! காதற்றேன் பாகினிலே தோய்க்குதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!

காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலைக் காற்றசைக்க,
மாதுன்றன் நீள்விரலால் வாகொதுக்கித் – தூதுவிடும்
வையகத்து வான்நிலவே மாளவெனைத் தேய்க்குதடி 
மெய்தீண்டும் உன்"மை" விழி.

அல்லிப்பூ ஆரணங்கே! ஆடகமாய் மின்னுகின்ற,
வில்லாம் புருவத்தால் வீழ்த்தியே – செல்லுகின்ற
கொய்யாக் கனியமுதே! கொஞ்சியெனை மாய்க்குதடி
மெய்தீண்டும் உன்”மை” விழி!

விண்ணில் விரையும் வெளிச்ச நிலவெனக் 
கண்ணில் புகுந்தநற் காரிகையே! -  எண்ணியுளம்
நைந்திடவே என்காதல் மண்ணாகச் சீய்க்குதடி
மெய்தீண்டும் உன்"மை" விழி!

கவிஞர்கள் கற்பனையில் காணாத விந்தை;
செவிகளினால் கேளாத சிந்து! – புவியேத்தும்
ஐம்பெருங் பாவியங்கள் அத்தனையும் காட்டுதடி 
மெய்தீண்டும் உன்”மை” விழி!

சுரும்பினைப் போலவே சுற்றிச் சுழன்றே,
கரும்பது தந்திடுங் கள்ளாய் - மருள்கொளச்
செய்தென்னில் நித்தமும் தீக்கதிராய் வாட்டுதடி 
மெய்தீண்டும் உன்"மை" விழி!
===============================================
இராச தியாகராசன்

பிகு:
====
ஆடகம் - பொன், பாவியம் - காவியம், சுரும்பு - வண்டு

தாய்மை.......

தாயவளின் நெஞ்சுக்கும் உண்டோ நிகர்.....
=========================================

=========================================
அன்பிற்கும் உண்டோ அணை?
(நேரிசை வெண்பாக்கள்)

===============================
உயிரதனைச் சேர்த்தே உதிரப்பா லூட்டி, 
துயிலதுவுந் தான்மறந்து துன்பம் – நயத்தன்பால் 
தன்மக்கள் மேன்மைத் தவமியற்றுந் தாயவளின் 
அன்பிற்கு முண்டோ அணை?

நன்னெறியை நாடுவைநீ! நானிலத்தில் என்னுயிரே 
புன்னெறியைச் சாடுவைநீ பூமலரே – இன்னுலகில் 
அஞ்சுதலை முற்றும் அறுத்திடுவாய் என்னுந்தாய் 
நெஞ்சுக்கு முண்டோ நிகர்?

எதிர்கொள்ளும் பேராசை, ஏக்கழுத்தம் மாய்ந்தே, 
சதிவலை வீசுவோருஞ் சாய - மதியால் 
முனைந்துநாம் சீர்த்தியுற முன்னுழைக்குந் தாயின் 
கனவுக்கு முண்டோ கரை?
 
வீரத்தைப் பாடலாய் வண்டமிழர்ப் பாவியமாய், 
ஆர்க்கின்ற தாலாட்டாய், அன்புமனச் – சீர்மையெனச் 
சேய்தன் இதயத்தில் சேர்க்கின்ற தாய்மையின் 
தூய்மைக்கோர் ஈடேது சொல்!
================================
இராச. தியாகராசன்

பிகு:
நயத்தன்பால் - மேவிட அன்பால், ஏக்கழுத்தம் = இறுமாப்பு/ ஈகோ, 
சீர்த்தி = கீர்த்தி/ பெருமை/புகழ்,  பாவியம் = காவியம். 

சந்தமவை வாழியவே.......

இணையத்தில் மரபியலைப்  போற்றும்  சந்தவசந்தம் மன்றத்திற்கு  வாழ்த்து!  மன்றத்தின் இழை:  சந்தவசந்தம்
==============================================

==============================================


இசைவொடு(ம்) இயல்பொடு(ம்) இன்றிளையர்
இனித்திடும் மரபெழிற் பாப்புனைய
தசையிலி எலும்பிலி யென்றிலங்க
தடம்பதித் திடுமுயர் செந்தமிழில்
அசையொடு தளையதை நன்குரைக்கும்
அருந்தமி(ழ்) இலக்கணச் சந்தமவை
விசையொடுந் திறத்தொடும் பன்முகமாய்
மிளிர்ந்திடப் பொலிந்திட வாழ்த்துகளே!

தளர்வறத்  தனித்துவம் கொண்டதனால்
வளங்களை வழங்கிடும் வள்ளலைப்போல்
வணங்கிடும் தமிழவள் வாழ்த்துடனே
இணையிலா இலக்கியம் ஓங்கிடத்தான்
அனுதினம்  இணையமே தாங்கிடத்தான்
வினைகளைப் புரிந்திடும்  சந்தமவை
பளிங்கெனப் பளிச்சொளி வீச்சுடனே
வளர்ந்திடப்  பொலிந்திட வாழ்த்துகளே!

காதற்பெண்ணே கானக்குயிலே!.....


இந்தப்பாடல் நான் ஒரு சந்தப் பாடலாக, புதுப்பாவாக 1979இல் எழுதியது. பின்னர் 80களில் அதனை நிலைமண்டில அகவற்பா வடிவில் மாற்றி அமைத்துச் சற்றே மெருகேற்றினேன்.
========================================

========================================
(நிலை மண்டில அகவற்பா)
=========================

காளை என்னைக் காலம் முழுதும்
காக்க வைக்கும் கன்னற் சுவையே!
நாளை என்றன் நாளாய் நானும்
நாளும் வேண்டும் நங்கை நிலவே!
காற்றி லாடும் மலரின் வடிவே!
கருத்தைக் கவரும் காந்தள் கொடியே!
நாற்று வயலின் நெல்லின் அசைவே!
நளினச் சிலையாய்ச் சிந்தும் எழிலே!
நித்தம் என்னை நினைவாம் நெருப்பில்
சித்தம் கலங்க சிரித்தே அழிக்கும்
காதற் பெண்ணே!  கானக் குயிலே!
தூது செல்லும் தோழி யெனவே
சேற்று வயலைச் சீண்டிப் பார்க்கும்
காற்று தேரில் கடுகிச் செல்லும்
வண்ணம் பூசிய மாலை முகிலை
எண்ணம் உதித்த என்றன் இச்சை
தன்னை உனக்கு சொல்ல நானும்
அன்பாய் நிதமும் அனுப்பி வைத்தேன்.
அதையும் நீயே அறிந்தி டாமல்
வதைக்கும் வனிதா மணியே! கேளாய்!
சிதையில் என்னைச் சிரித்தே எரித்த
கதையும் கவியாய்க் காலம் வெல்லும்!

என்..............?

தற்போது இணையத்தின் சிறந்த கூகுள் மரபியற் குழுவான சந்தவசந்தத்தின் பாவலர் சந்தரவர்  தலைமையில், 35ஆவது பாவரங்கில் “என்”   என்றவொரு நீள் பொருளடக்கிய தலைப்பினில் நான் வாசித்தளித்த, கவிதை இது:-  சந்தவசந்தம் குழுவின் இணைய இழை: http://www.groups.google.com/group/santhavasantham
=====================================

=====================================

என்றன் தமிழே! (கட்டளைக் கலித்துறை)

விண்ணி லுலவிடுந் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்
மண்ணிற் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்க்
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்
எண்ணம் நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனு மற்புதமாய்க்
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்ப்
பொன்னின் நிறத்துடன் நித்த மெழுந்திடும் பொற்கதிராய்
என்னி லுறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!
=====================================
என்றன் கோவே! (இன்னிசை வெண்பாக்கள்)

காதலும் காவியமும் காட்சிக் கனவுகளும்
மோதலும் மோசமும் மொய்க்குமிப் பூவுலகில்
வேதவித்து போலெண்ணி, விந்தைத் தலைப்பதற்கே
ஈதென் கவியுரை இன்று!

மாமணியாம் சந்தரவர் மாவரங்கில் செந்தமிழ்ப்
பாமணியாய் நாமணக்கப் பாவிசைப்போர் தம்மிடையில்
தாமதமாய் வந்துற்றேன்; தத்துநடைச் சின்னவனைச்
சேமமுறக் காத்திடுவீர் சேர்த்து!
======================================
என்றன் இறையே! (கலி வெண்பா)

எண்ணக் கடலது என்று மிரைந்திட
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்
கண்ணன் குழலினில் கன்னற் சுவையினில்
விண்ணும் கிறுக்கிடும் மின்னல் கொடியினில்
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்
பண்கள் புனைந்திடப் பாட்டும் இசைத்திட
மண்ணின் கவியென என்னைச் செதுக்கவே
என்னி லுறைந்தவ ளே!
======================================
என்றன் மன்றே! (வெண் கலிப்பா)

தெள்ளுதமி ழினழிப்போர் சிதறிவிட வெடித்தெழுந்து
அள்ளுகின்ற அழகுச்சீர் அடுக்கிவிட்ட அடியெடுத்துத்
துள்ளுஞ்சொல் தொடுத்தவரி சொடுக்கிவிடும் கவிஞரையே
உள்ளத்தால் வணங்குகிறே னோர்ந்து!
======================================
என்றன் திருவே! (இயற்றரவிணை கொச்சகக் கலிப்பா)

என்னைக் கவிதை இயற்ற உரைத்தவராம்,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
என்னி லுணர்ந்த எழிலாந் திருவினையே,
முன்னித் தமிழும் முகிழ்ந்த உருவினையே,
பொன்னி னொளியாய்ப் பொலிந்த கதையினையே,
எண்ணம் முழுதும் எழுந்து நிறைந்ததையே,
மின்னு மழகாய் விரிந்தே யொளிர்ந்ததையே,
சின்னக் கவியாய் செதுக்கி யுரைத்திடுவேன்!
======================================
(வேறு)
என்றன் எழிலே! (இன்னிசை வெண்பாக்கள்)

கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்
பின்னல்கள் சிக்கலெனப் பீடிக்கும் ஆசையற
இன்றிங்கே நானறிந்தேன்; என்றென்றும் எந்தமிழே
என்னை உயர்த்து மெழில்!

புன்மையெனுந் தீயதனில்  புத்தழகுப் பொய்யதனில்
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்துழல,
முன்னவரின் நற்செயலால் முத்தமிழே காவலென
என்னை உயர்த்து மெழில்!

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இப்பிறப்பாம் ஆழியிலே,
என்னுள்ளம் ஓயா தெரிகையிலே, நான்வணங்கும்
உன்னதமா யென்னுள்ளே உட்போந்த செந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே
அன்பதனை ஆற்றலினை அங்கெங்கோ தேடுகையில்
தன்னறிவாய் சத்தியத்தைத் தந்துவிட்ட தீந்தமிழே
என்னை உயர்த்து மெழில்.
====================================
(வேறு)
என்றன் தெளிவே! (வஞ்சிப்பா)

என்வாழ்விலே விளைந்திட்டநல் ஏற்றங்களும்
என்தாழ்விலே முளைத்திட்டசொற் றூற்றல்களும்
என்னாற்றலால் தான்வந்ததாய் அன்றெண்ணினேன்!
பைந்தமிழ்
அன்னையி னருளதால் தெளிகிறேன்,
கண்டதைத் தந்ததுங் கன்னலாந் தமிழே!
====================================
(வேறு)
என்றன் உயிரே! (அறுசீர் விருத்தம்)

என்வாழ்வும் என்வளமும் எனதுயிரும்,
.....என்மெய்யும் உன்னருளா லியங்குதடி!
என்னுள்ளில் நீயிருந்தே இயக்குகிறாய்;
.....எந்நாளுந் தேந்தமிழே இயங்குகிறேன்!
என்னெண்ணம் அத்தனையுந் தமிழதுவாய்,
.....இன்றிங்கே ஆனதுவும் உனதுயர்வால்!
என்வாழ்க்கை இன்றிருக்கும் இயல்பினுக்கே,
.....என்நன்றி சொல்லுவனோ தமிழணங்கே!
==================================

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வென்றிடுவோம் புத்துலகை.......

உலக அன்பிற்கான நாளின்று.  கவிஞன் என்றான பின்னே காதலைப் பற்றிக் கவிதை பதியாமல் இருப்பது எப்படி?  இன்றுதான் கணினி/ இணையம் என்பதால், மீள்பதிவாக, இற்றைக்கிருக்கும் நிலையை எண்ணி.....
 ========================================

========================================
வென்றிடுவோம் புத்துலகை. 
(கலிவெண்பா)
========================================
தேனமுதத் தெள்ளுதமிழ்த் தீஞ்சுவையைத் தோய்த்திங்கே
வானளக்கும் வார்த்தைகளால் வாய்ப்பந்தற் றோரணமாய்க்
கானலெனும் காட்சிகளைக் காஞ்சனமாய்ப் பாட்டெனவே
தானளந்து சொல்லடுக்கும் சந்தமிழை பாவலரே!

அன்றலர்ந்த ஆம்பலினை ஆசையுடன் பாடுகையில்;
வன்முறையே வாழ்வென்போர் வஞ்சகமும் சாடுங்கள்!
தென்றலிழைப் பூங்காவை செந்தமிழிற் பாடுகையில்;
புன்மையினைப் போற்றுகின்ற புல்லரையும் சாடுங்கள்!

விண்ணளக்கக் காதலதன் மேன்மையினைப் பாடுகையில்;
பெண்சிசுவைக் வேரறுக்கும் பேதமையும் சாடுங்கள்!
பண்ணழகை, பாவலரை, பாவையரைப் பாடுகையில்
மண்ணுலகின் போதையெனும் வாதையினைச் சாடுங்கள்!

நந்தமிழின் மண்ணழகும் நாமணக்கும் பண்ணழகும்
சிந்தனையைக் கீறுகின்ற சீரியதோர் சொல்லழகும்
புந்தியிலே வைத்திங்கு போர்க்களத்தில் வெல்வோமே
செந்தழலின் பாட்டெடுத்தே சென்று!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
காஞ்சனமாய் = தங்கமென
சந்தமிழை = சந்தம் இழைகின்ற
ஆம்பல் = ஆம்பல் மலர்
புந்தியிலே = அகத்தினிலே

தேவதை எங்கே?......

உங்களால் தேமா/ புளிமா/ இப்படித்தான்  செய்யுளாக எழுதமுடியும்.  திரைப்படப் பாடல்கள் போல எளிமையாக  எழுத இயலுமா என்று 30 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் சவால் விட்டார்.  அவருக்காக எழுதிய சந்தப்பாடலிது.   இன்னொன்றும் சொல்கிறேன்.  மரபுக் கடை மிகவும் பெரியது;  அதில் கடினமான, எழுத்தெண்ணி எழுதும் கட்டளைக் கலித்துறையும் உண்டு.  எளிமையான, ஓட்டமுள்ள குறள் வெண் செந்துறையும் உண்டு.
============================================================

============================================================
தேவதை எங்கே (சந்தப் பாடல்)
============================

எடுப்பு (பல்லவி)
===============
இனியவளே! என்னவளே! இன்பம் இறைப்பவளே! – என்றன்
கனியவளே! கருத்தில்  கலந்தவளே!

தொடுப்பு (அனுபல்லவி)
======================

தண்மை இறைக்கின்ற என்னருமைத் தென்றல் காற்றே!
என்னை எரித்திங்கு நாளும் சுடுவதென்ன?

முடிப்பு (சரணம்)
================

பாடு கின்ற பாடலிலும்
…..பாவை வரும் பாதையிலும்
தேடு கின்ற தேவிமுகம்
…..தோன் றியெனைக் கொல்கிறதே! – நிதம்
…..தோன் றியெனைக் கொல்கிறதே! (பாடுகின்ற)

கூவு கின்ற கருங்குயிலே,
…..கூத் தாடும் மயிலழகே!
தேவ தையைக் கண்டாலே
…..தேடு வதைச் சொல்வீரோ? – நான்
……தேடு வதைச் சொல்வீரோ? (பாடுகின்ற)

சூடு கின்ற மலர்சரமே,
…..சுழ லுகின்ற அலைக்கரமே
ஓடு கின்ற காலமிதை
…..உணர்ந் திடவே சொல்வீரோ? – அவள்
…..உணர்ந் திடவே சொல்வீரோ? (பாடுகின்ற)

அல்லி யவள் செவ்வாயின்
…..அமிழ் தனையச் சொல்லெல்லாம்
புல்லி னிதழ் மேலான
…..பனித் துளியாய்ப் போனதடி! – வெண்
…..பனித் துளியாய்ப் போனதடி! (பாடுகின்ற)

கனவி னிலும் அவளுருவே
…..காணு கின்ற காட்சியென,
நினைவி னிலே நிழலாடி
…..நெஞ் சமதே தொலைந்ததடி! -என்
…..நெஞ் சமதே தொலைந்ததடி! (பாடுகின்ற)