வியாழன், 19 செப்டம்பர், 2019

நானறிதல் நானாவேன்....

தன்னை அறிய முயலாத மனிதர்கள் எவருண்டு?  நான் யார்? நான் யாரென்று அலையுந் தேடலில்லாவர் எவர்?  இந்தக் கலித்தாழிசையை 2010இல் எழுதினேன்.
======================================
=====================================
நானறிதல் நானாவேன்..
====================================
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் னுள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

நாடியவர் நாளும் நலுங்காமற் றேடுகையில்,
மூடியதைத் தான்திறந்து முற்று முணர்கையிலே,
தேடுபவ ரீதென்று தேடாத தன்மையிது;
கூடியவர் தேடுங் குவலயத்தி னுண்மையிது!
..........குன்றாப் புகழார் குவலயத்தி னுண்மையிது!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே,
சுண்ணாம்பாய் வெண்சங்குச் சூளையிலே சுட்டதுபோல்,
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்,
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!

தளிர்க்குமோ ருண்மை தரணியிலே சொல்வேன்;
துளிர்ப்பினடி வேரென்னுந் சோதியிலே தோய்ந்து,
களிப்பவர்கள் கண்டு களிக்கின்ற வெள்ளம்,
தெளிந்தநறு மன்பினையே தேடிமனந் துள்ளும்;
..........தெவிட்டாதத் தீஞ்சுவையைத் தேடிமனந் துள்ளும்!
==========================================
இராச. தியாகராசன்

வளந்தரும் எந்தமிழே.............

இந்தப் பாடலின் பத்திகளை ஒவ்வொன்றாக பல பாவரங்கங்களில், தமிழ் வாழ்த்தாகப் பாடியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்று சேர்ந்து தமிழுக்கு வாழ்த்தென செய்ய வேண்டும் என்று பல நாட்கள் எண்ணியதன் விளைவு, இந்தக் கட்டளைக் கலித்துறைப் பாடல்.  இவை அனைத்தையும் இசைப்பாடலாகப் பாடியே அளித்திருக்கிறேன்.  (தத்தகாரம்:  தன்ன தனனன தன்னத் தனனன தன்னனனா).
========================================================




==================================================
விண்ணி லுலவிடும் வெள்ளி யுருவெனும் வெண்ணிலவாய்,
கண்ணைச் சுழற்றியே கன்னஞ் சிவந்திடுங் கன்னிகையாய்,
மண்ணில் பொழிந்திடும் கொண்ட லனையநல் வண்ணமதாய்,
எண்ண(ம்) உறைந்தெனை என்றும் வளர்த்திடும் எந்தமிழே!

அன்பைப் பொழிந்திடு(ம்) அன்னை யுருவெனு மற்புதமாய்,
கன்னல் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்,
பொன்னின் நிறத்துடன் நித்த(ம்) எழுந்திடும் பொற்கதிராய்,
என்னில் நிறைந்தெனை யென்று(ம்) அணைத்திடும் எந்தமிழே!

சின்னக் குழல்தருந் தண்மை யிசையெனுஞ் சித்திரமாய்,
மின்னல் வடிவென உள்ளம் புகுந்திடும் வித்தகமாய்,
தன்னைத் தருமுயர் தாய்மை யெனும்பெருந் தத்துவமாய்,
என்னை உயர்த்திட யென்றும் வளந்தரும் எந்தமிழே!
   
துள்ளி யெழுந்திரை கத்துங் கடலது சூழ்வதுபோல்,
அள்ளுந் தனித்தமிழ் ஆற்றல் வளர்ந்திட ஆர்ப்பரித்தே,
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே,
எள்ளல் அறவெனை யென்றும் உயர்த்திடும் எந்தமிழே!

உள்ளந் தனைத்தமிழ்ச் சொல்ல துவால்சிறு ஊசியெனக்
கிள்ளி விடும்மொரு கோல மதாய்மனக் கீறலிடும்
கள்ள மிலாதொளிர் செந்த மிழாம்நறுங் கன்னிகையாய்,
எள்ள லிலாச்சுவை அள்ளி வழங்கிடும் எந்தமிழே! 

தண்கரம் நீட்டியே என்னைத் தழுவிடும் தண்ணிலவின் 
வெண்பனி போலவே சில்லிக்க மேவிடும் மென்கதிராய்,
கண்கள் கிறங்கவே கன்னற் சுவைதருங் காரிகையாய்,
எண்ணம் நிறைந்தெனை என்றுங் கவர்ந்திடும் எந்தமிழே!
=======================================================

இராச. தியாகராசன்.

கரிமுகனே அருள்வாய்....

2019ஆம் ஆண்டு கணேசப் பண்டிகை நாளில், கரிமுகனை நினைத்து நானெழுதிய கட்டளைக் கலித்துறை வரிகளிவை!
==================================


==============================
கரிமுகனே அருள்வாய்.....
(கட்டளைக் கலித்துறை....)
==============================
புத்தி யெனுமெழில் தேவி யணைத்திடும் புத்தமுதே;
சித்தி யெனு(ம்)அகம் தேடி வணங்கிடுஞ் சித்திரமே;
வித்தை களைநிதங் கோடி கொடுத்திடும் மெத்தறிவே;
நித்த மெனதுளம் பாட விரும்பிடும் நித்திலமே!
அல்ல லனைத்தும் நொடியி(ல்) அகற்றிடு(ம்) அற்புதமே;
கல்வி யதன்வழி செல்ல வரந்தருங் கற்பகமே;
சொல்லி லடங்கிட ஏலா நலந்தருஞ் சொற்றிறமே;
பொல்லல் நுவணை யிலையடை ஏற்றிடும் பொற்பதமே!
முல்லை மலரை முனைந்தே யணிந்திடும் முத்தமிழே;
மெல்லும் பெருதுயர் துன்பந் தொலைத்திடு வித்தகமே;
எல்லை யெதுவும் வரையா(து) அருளு(ம்) எழிலுருவே;
கல்லின் சிலையாய்க் கவிதை தருகுங் கரிமுகனே!
================================================
இராச. தியாகராசன்
==========================
நித்திலம் = ஆணி முத்து.
பொல்லல், நுவணை, இலையடை இவையாவும், இன்னும் கொலை, பிட்டு, அப்பம், கொழுக்கட்டை என்பன கூட, தமிழர்கள் செய்து படைத்துண்ட பணியாரங்கள்.

மேலிருக்கும் படம், புதுவையின் அருள்மிகு மணக்குள விநாயகர்.

மதமென்னும் மாயை....

டிசம்பர் 2010 முகநூலில் பதிந்து, மதமென்னும் மாயையென 2017இல் பகிர்ந்த வரிகளிவை. இற்றைக்கும் அதே நிலையில் நாம். உள்ளம் அழுகிறது.


============================================






========================================



முத்தனைய சத்தான முழுமுதலாம் இறைவனையே,
நித்தமும்நாம் நெஞ்சினிலே நெகிழ்ந்துருகி நினைத்திடவே,
தத்துவமாய்த் தாரணியில் தலைமேலே தாங்கிடவே,
எத்தனையே சமயங்கள் எடுத்துரைக்கும் நல்வழிகள்.

நீயுயர்வா நானுயர்வா நியமந்தா னுயர்வாவென்(று)
ஐயமறத் தெளிந்துணர அறியாமை யகன்றுணர
ஆயுதத்தா லாகாதென்(று) அறியாம லலைகின்ற
வையகமே, வண்டமிழர் வாழ்வியலை ஆய்ந்துணர்ந்தால்!

செம்மையுற மாந்தரினம் சீர்த்திகளைப் பெற்றிடவே,
எம்மதமாய் இருந்தாலும் எவ்வினமாய் பிறந்தாலும்
தம்மவராய் நினைந்துருகும் தமிழர்த மன்பினையே
சம்மதமாய் தருகின்ற தன்மையினை வாழ்ந்துணர்ந்தால்

இயற்கையினை இன்பமிகு இல்லறத்தை நல்லறமாம்
பயிர்தொழிலை பழகுதமிழ்ப் பாட்டியலை களவியலின்
நயங்களையும் கற்பியலின் நலங்களையும் நாட்டாரின்
உயர்பண்பை எடுத்துரைக்கும் ஒண்டமிழிற் றோய்ந்துணர்ந்தால்

தனிமதமென்(று) ஒன்றில்லாத் தமிழ்ச்சமயத் தத்துவத்தை
மனிதமன நேயமெனும் மகத்தான அற்புதத்தை
இனியிங்கே இயல்பழகாய் ஏற்றுணர்ந்தால் மண்ணுலகம்
கனிவளங்கள் செறிந்தப்பூங் காவெனவே  மாறுமன்றோ!
================================================

இராச. தியாகராசன்

அந்திமகளின் சிலிர்ப்பு....

ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையொன்று எழுத நினைத்தேன். சற்றே நினைவு சறுக்குகிறது துயிலால். எனவே முதலில் ஏழு அப்புறமாக மீதி மூன்று வெண்பாக்கள்! அடிவானப் பேரழகைக் கண்டேன், அதனால் எழுந்த நினைவுகளின் தாக்கம் இவை:
======================================





==============================================

கண்மலரும் பூத்திருக்கக் கண்டேனே வைகறையாம்
வெண்பனிப்பூ தூவுகின்ற வேளையிலே - விண்மகளும்
தண்கரத்தால் ஆதவனைத் தானெழுப்பிக் கூடுகின்ற
வண்ணமயக் காட்சியதை யே!
ஏகமனப் பெண்ணை அணைத்துக் கதிரவன்தேன்
பாகெனவே முத்தம் பதிக்கையிலே - மோகம்
கவிந்த அடிவானம் கண்கள் கிறங்கிச்
சிவந்தே சிலிர்க்கும் சிரிப்பு!
சிரிக்கு மெழில்வானச் சித்திரமென் உள்ளத்தில்
விரிக்கின்ற எண்ணங்கள் விந்தை! - சுரிதகமும்
அம்போ தரங்கமும் ஆர்க்கும் வரிகளிலே
எம்பாட் டெழுதுவனோ இன்று?
இன்றென் னுளம்பற்றி எந்தமிழில் சொல்லெடுக்க
அன்றென் கவிவடிவாய் ஆனவளே! - உன்றனெழில்
விண்டகணம் மின்னல் விரிந்தொளிரும் நெஞ்சகத்தில்
தெண்டிரையாய்ப் பொங்குதே சிந்து.
சிந்தும் சிறுதீச் சிவப்பின் துகிலெனவே
அந்திமகள் கட்டும் அடிவானம்! - சிந்தைகவர்
வானகமே செஞ்சாந்து வண்ணமென ஆனதையே
தானிங்கு பாவடித்தேன் சற்று.
சற்றும் தளராத சாத்தானாம் பேருருவைப்
பற்றிய விக்கிரமன் பாடனெவே - முற்றும்
மயக்கும் தொடுவான வஞ்சியெழில் கண்டு
முயலுமென் பாட்டின் மொழி.
மொழியும் தமிழில் முனையும் வரியில்
பொழிலின் கவிதை புனைந்தேன்! - எழிலார்
இயற்கை விரிக்கின்ற இன்பஞ்சேர் காட்சி
நயமொன்றில் நானும் நனைந்து.
நனைத்திடும் தேறலாய் நாவில் இனிக்கும்
கனவெழிற் கற்பனை காட்சி! - மனிதர்
எவரும் எழுதா எழிலுரு என்றன்
கவியில் முளைத்த கரு.
கருக்கலும் அந்தியும் காதற் கனவாய்
வரமெனப் பாட்டில் வழியும்! - அரக்காய்ச்
சுவைப்பவர் நெஞ்சிலே தீட்டும் அமுதக்
குவையாய் அழகின் குளிர்
குளிர்வளி காலையில் கூரெனத் தைக்க;
பளிக்கென ஆதவன் பாரை - அளக்குமிம்
மாணப் பெருநில வாரிதிக் காட்சியைக்
காணக் கிடைத்ததே கண்.
======================================
வேறு:
======
துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

=====================================
இராச. தியாகராசன்

வேதம் புதிதாய் விதை....

இற்றைக்கு நாட்டின் நிலையெண்ணி, என்றோ மறந்து போன தூரிகையையைத் தொட்டு, இன்றைய காரிகைக்காக நேற்றெழுதிய வரிகள்......

===================================



===================================
வேதம் புதிதாய் விதை....
=======================
மனத்தில் நிறைந்தவன் மாண்பிலா னாகிக்
கணத்தில் மறைகிறான் காண்பாய்! - உனக்கினி
பாதந் தொடுவழி பாதையா யாகிட
வேதம் புதிதாய் விதை.

மங்கையுன் கற்பினை மாய்த்திட நாளுமே
இங்கவன் வேடமே ஏற்கிறான்! - சங்குக்
கழுத்தைப் பிடித்த சுருக்குக் கயிற்றைச்
சுழற்றியே வீசிச் சொடுக்கு.
=========================
இராச. தியாகராசன்

வருவாரே நம் பாரதியாரு.....


பாரதியாரு... பாரதியாரு.... இன்றிருக்கும் கயமைகளைக் களைய பாரதி நிச்சயம் வர வேண்டும் என்பது என்னுடைய அவா. (பாரதியாரின் ஓவியம் மைந்தன் வைகறைச்செல்வனின் கைவண்ணம்..)

====================================================




=================================================

மின்னுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - கால
வெள்ளம்போல வருவாரே பாரதியாரு!
தென்னங்கவி பாடிகிட்டே பாரதியாரு - பால
சிங்கம்போல வருவாரே பாரதியாரு!

துள்ளுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - களி
சோதியாட்டம் வருவாரே பாரதியாரு!
அள்ளுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - ஒளி
ஆர்த்தெரிக்க வருவாரே பாரதியாரு!
நல்லகவி பாடிகிட்டே பாரதியாரு - நம்ம
நாட்டுக்காக வருவாரே பாரதியாரு!
வெல்லகவி பாடிகிட்டே பாரதியாரு - செம்ம
வேந்தனாக வருவாரே பாரதியாரு!
முழங்குகவி பாடிகிட்டே பாரதியாரு - சாதி
மோகமழிக்க வருவாரே பாரதியாரு!
எழுகுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - மோதி
ஈனமழிக்க வருவாரே பாரதியாரு!
தெம்மாங்கு பாடிகிட்டே பாரதியாரு - வீசுந்
தென்றல்போல வருவாரே பாரதியாரு!
கும்மாளம் பாடிகிட்டே பாரதியாரு - நாசக்
கூட்டமழிக்க வருவாரே பாரதியாரு!
சுழலுங்கவி பாடிகிட்டே பாரதியாரு - ஆடி
சுத்திசுத்தி வருவாரே பாரதியாரு!
குழந்தகவி பாடிகிட்டே பாரதியாரு - கூடி
கும்மிபோட வருவாரே பாரதியாரு!
பாசகவி பாடிகிட்டே பாரதியாரு - நாட்ட
பாதுகாக்க வருவாரே பாரதியாரு!
நேசகவி பாடிகிட்டே பாரதியாரு - கோட்டு
நெஞ்சொசத்தி வருவாரே பாரதியாரு!
கழனிகவி பாடிகிட்டே பாரதியாரு - பசுங்
காடதிர வருவாரே பாரதியாரு!
முழவுகவி பாடிகிட்டே பாரதியாரு - கசம்
மூடமழிக்க வருவாரே பாரதியாரு!
சிந்துகவி பாடிகிட்டே பாரதியாரு - கருந்
தீதழிக்க வருவாரே பாரதியாரு!
கந்தகவி பாடிகிட்டே பாரதியாரு - வருங்
காலமுயர வருவாரே பாரதியாரு!
======================================
அன்பன்
இராச. தியாகராசன்

அமுக்கராக் கிழங்கோ நீ......

தமிழ்த்தாயின் சிலையொடு என்றன் உணர்வுகளைச் சொல்கின்றேன்....

==================================================




==================================================

அமுக்கராக் கிழங்கா நீ......
========================
என்கருத்தை எதிர்க்கையிலே இயன்றவரை எடுத்தியம்பி,
அன்னவரை அணுகியன்பாய் அக்கருத்தை அளிக்கின்றேன்;
என்னுருவை எள்ளியெனை ஏகடியம் செய்கையிலே
அன்பிலியர் என்றறிந்தே அவர்வழியைத் தவிர்க்கின்றேன்!
சிந்தனையை ஏசுகையில் சிந்தைமறந் தெளிதாகப்
புந்தியிலை இவர்க்கென்று புறந்தள்ளிப் போகின்றேன்;
சொந்தமதை தூற்றுகையில் துருபிடித்த அவரெண்ணம்
மந்தமென மனதார மன்னித்தே நகர்கின்றேன்!
உன்மத்தம் பிடித்தலையும் உணர்வில்லாக் கோழையரும்
என்னியல்பை என்வழியை என்பேச்சை என்பொறுப்பை
என்வழக்கை நான்பிறந்த என்சாதி மதப்பெயரால்
வன்மமொடு வைதாலும் வாழ்வியல்பைத் தொடர்கின்றேன்!
எந்தமிழை மிதிக்கையிலே எப்படியோ சினம்மீறி
முந்திவந் தவர்களிடம் முனைந்தெழுந்தே சீறுகின்றேன்:
இந்தநிலை எதற்காக என்றென்றுந் தோன்றியென்னில்
சிந்திக்கும் எந்திறனை சிடுக்காக்கி வைக்கிறதோ?
எவரென்ன சொன்னாலும் எவருன்னைக் குட்டைமதிற்
சுவரென்று வைதாலும் துங்கமணி போலொளிரும்
புவியகத்தின் முதன்மொழியே; பொற்றமிழே; பூம்பாவாய்;
அவித்தழிக்க நீயென்ன அமுக்கராக் கிழங்கோசொல்?
==============================================
இராச. தியாகராசன்

மாயவலை வாழ்வறுமோ?.......

மயக்கங்கள் யாவுமே விலகிவிடும்; வித்தகியின் விதிவழியே உயிராடும் கயிற்றாட்டம் முடிந்துவிடும்.  மாயவலை வாழ்விதும் அறுந்துபடும்.  
================================












================================
மாயவலை வாழ்வறுமே...
================================
விழலதற்கே நீரிறைக்கும் விடியாத வேதனைகள்;
சுழன்றலையும் தூசுகளாய்ச் சுற்றுகின்ற சோகங்கள்!
நிழலெனவே நிதமலையும் நஞ்சடர்ந்த நெஞ்சகத்தில்
அழலெனவே எரிக்கின்ற ஆசையெனும் பூசைகள்!

எங்கெங்கும் அருவமென ஈடணையும், ஏக்கழுத்தச் 
சங்கெனவே முழங்குகின்ற தரங்கமனை வாழ்வியலில், 
சங்கிலியாய்ப் பின்னலிட்டச் சிக்கெடுக்கா நூற்கண்டும், 
அங்கதனைக் கையிலேந்தி அடிநுனியின் தேடல்கள்!

அறுந்தநூல் கையிலெனும் அவலநிலை வாழ்க்கையிலே, 
வெறுங்கனவு மீட்டுகின்ற வேடிக்கை வீதியுலா;
நீறாகப் போகுமிந்த நெடுமரத்து மெய்ந்நாடும், 
பேறான பதவிகள்; பெருஞ்சிறப்பு விருதுகள்;

அத்தனையும் அழுக்காழி அலைவீசி அவித்தெடுக்கும்,
சொத்தையுளத் தாடுகின்ற சூக்குமத்தின் வித்தகங்கள்!
சித்தமதில் சலிப்பில்லாச் சிந்தனயைச் சிலுப்புகின்ற
மத்தென்னும் மாயவலை வாழ்வியலின் தத்துவங்கள்!

புரிதலில்லா பொய்யிதற்கே புதுமையென, பூவுலகின்
அருமையென விருதளித்த அறிஞரும் எவரிங்கே? 
இருந்திறக்கும் வேதனையாம் ஏதிலியின் வாழ்விதற்குக் 
கருமமெனப் பெயரளித்தக் கவிஞரும் எவரிங்கே?

கட்டியவள் தனியன்புங் கருவுயிர்த்தக் கண்மணியின் 
மட்டில்லாப் பற்றுநிறை மயக்கமும் நித்தியமோ? 
வெட்டவெளி வெயிலாய் வெக்கைதரு மனவெளியில், 
தொட்டுறுத்தும் துயர்வலையில் சொடுக்கினிலே சிக்கவைத்தே, 

எழிலுருவும் ஏக்கழுத்த இறுமாப்பும் இற்றுவிழ, 
வழியறியாப் பாலைநிகர் மணல்வீசும் பெருவெளியில், 
அழலெனவே அலைகின்ற அனாதை ஆன்மாவும், 
அழிந்தொருநாள் அருவமென அனைத்துவிட் டேகிடுமே!

கட்டகன்ற நினைவுகளில் கருத்தில்லாக் கனவுகளில், 
சுட்டெரிக்கும் பாலையிலே சுழல்கின்ற வெறுங்காற்றாய்,
எட்டியெனைப் பந்தாடி ஏய்த்துநிதம் சிரிக்கின்றக் 
கட்டில்லாக் கடவுளையே காலமெலாம் கனிந்துணர்வேன்!

எட்டினில் எழுதாத, இடிந்துவிழும் மணல்வீடாய், 
விட்டலின் விதிவழியே உயிராடும் கயிற்றாட்டில், 
விட்டிலென மயங்கொளியை விட்டகலா உயிரிதற்கு, 
மட்டில்லா அவனருளால் மாயவலை வாழ்வறுமே;
===========================================
இராச. தியாகராசன்

புதன், 18 செப்டம்பர், 2019

எங்கே போகிறேன்.....






மண்ணோடு மண்ணாய் ஆனாலும், எரிக்கின்ற அழலிலே நீறாகப் போனாலும், மணக்கும் கவியாய் மலர்வேன்; வாழ்வேன்.
=============================

===============================
மணக்கும் கவியாய் மலர்வேன்...
===============================
மலர்ந்துமணம் வீசுகின்ற மல்லிகைக்(கு) ஆரும்
மலர்வதைக் கற்றிடச்சொல் வாரோ? - புலர்ந்தநல்
வைகறைப் போதென மாந்தரின் ஆசெனும்
மையிருள் மாய்ப்பதென் மாண்பு. (1)

மாண்டவர் மீள்வரோ வாழ்விலே என்றெண்ணா
தாண்டவன் பேரிலே ஏய்க்கிறார்! - வேண்டும்
மனிதமாம் தாரக மந்திரம் என்னும்
கனிவுறு மெய்யின் கரு. (2)

கருவாய்க் கனிவாய்க்  கருத்திற் கனலாய்
விரிவாய் அறிவாய் விளைந்தே - தரிசாய்
வெடிக்குமென் சிந்தனை மேவிய பாட்டைப்
படிப்பதென் பைந்தமிழ்ப் பற்று. (3)

பற்றிடும் பாதைகள் பாம்பெனச் சீறினும்
பெற்றநற் பாடமாய்ப் பீடுக - ளுற்றிடக்
கண்டதைக் கற்பதும் கற்றதைக் கொண்டுளம்
பண்படச் சொல்வதென் பாட்டு. (4)

பாட்டொலி பூட்டிய பைந்தமிழ்த் தேரிலே 
பூட்டெவர் போட்டார் புகல்வீர்? - வேட்டதன்
பேரொலி போலவே புன்மையைச் சாய்த்திடும்
பாரதி பாட்டையென் பாடு. (5)

பாடுகள் பட்டுநம் பாரத மாந்தரும்
கூடியே ஒற்றுமைக் கோதுடன் - நாடுகள்
ஏத்திட என்று மிடையறா தாற்றிடச்
சாத்தியம் தேடலென் சால்பு. (6)

சாலெனும் நேர்வழி தன்னை மறந்தவர்
சூலெனும் மேன்மையைச் சூடிய - வாலெழில்
நங்கையின் கற்பு நசித்தல் தடுப்பதே
இங்கீக மன்னன் எழுத்து. (7)

எழுத்தின் விழிப்பாய் எழுகும் முழவாய்
அழலின் குழியாம் அழுகல் - அழிய
பழன விழுவை, பழகு தமிழை
முழங்க விழைவேன் முனைந்து. (8)

முனைவர் படிப்போ முதன்மை விருதோ
வனையும் வரியோ மனிதர் - புனையும்
முகமெனும் மூடியை முற்றும் திறந்தே
அகமதைத் தேடுமென் ஆவு. (9)

ஆவலும் ஆர்த்திடும் ஆட்டமும் பாட்டமும்
மேவிய வாழ்விதும் வீழுமே - சாவெனும்
கணக்கைக் கடந்தே கயமை களைவேன்
மணக்கும் கவியாய் மலர்ந்து (10)
===============================================
வேறு: 
============================
கணந்தனில் கருக்கிடும் கருமையின் கருத்தினை 
உணர்ந்திடும் உண்மையை வெறுமையின் வலியுடன்
பிணந்தனை நிகர்த்தவர் பெண்மையின் பெருமையை
வணங்கிடா தழித்திடும் மருவினை உரைக்கிறேன்
==============================================
இராச. தியாகராசன்.

பிகு:
அருளரசன் = தியாகராசன், ஈகமன்னன் = தியாகராசன்
பாவானந்தம் = பாப்பிழை, ஆசு = குற்றம், பீடுகள் = சீர்த்திகள்
கோது = சூழ்தல், உளக்களிப்பு, சால்பு = தன்மை, திறன்
சால் = நேர்வழி (வயலில் குறுக்குச்சால் கூடாதென்பது சொலவடை)
வாலெழில் = தூய்மையெழில், பழனம் = வயல், விழு = சிறப்பு, 
ஆவு = தனித்து/தனிமை, பசு

பாவலர் தங்கமணி

சிவனருட் சிரோன்மணி, காலஞ்சென்ற பாவலர் திருமதி தங்கமணி அம்மையார் அவர்கள் என்னுடன் சேர்ந்து எழுதிய ஒரு பஃது வெண்பா மாலையில் அவரின் பங்கான வெண்பாக்கள். தற்போது, அவரெழுதிய வெண்பாக்களுக்கு பதிலாக நான் வனைந்தவற்றை சேர்த்திருப்பதால், அவரின் மேலான வரிகளைத் தனியாகவே பகிர்கிறேன்:
=====================================================




====================================================
நம்பீசன் நமைக் காப்பான் (பாவலர் தங்கமணி)
====================================================

நமக்கு மறைநாதன் நற்றாள்  துணையாம்
சுமக்கும்  வினையிடர் தூளாம்!-- இமைக்குள்
விழியின் ஒளியாய் விளங்கும் விடையோன்
எழிலார் திருக்கோலம் இன்பு. (5)

இன்னருளில் வைத்திடுவான் ஈசன் மறைநாதன்
புன்னகைக்கே ஈடாமோ பொன்னகைகள்?-- மன்னனவன்
காணும் உயிர்களைக் காத்திடுவான் அன்பினைப்
பூணும் அணியாய்ப் பொலிந்து. (6)

சிறப்போடு சீர்தரும் செங்கழலார் தாளால்
பிறப்பாகும் துன்பப் பிணிபோம்-- திறப்பாக
ஞான வழிகாட்டும் நம்பனை போற்றிடுவாய்
மோன குருபேர் மொழிந்து. (8)

மொழிக்கு வசமாவான் முந்துதமிழ் அன்பன்
கொழிக்கும் அருளைக் கொடுப்பான் -- பழிக்கும்
வினைக்கஞ்சி முப்போதும் வெண்ணீற்றன் அப்பன்
புனைகழல் வேண்டிப் புகல். (9)

புகலென் றுனதிரு பொற்றாள் பணிவார்
அகமன் றிலுனருளாம் ஆடல்! -- முகிலனும்
வேதனும் போற்றும் விமலா! எளியரைக்
காதலுறும் கண்மலரால் கா. (10)
====================================================
பாவலர் தங்கமணி அம்மையார்
====================================================

புதன், 5 நவம்பர், 2014

பெருந்தலைவர்....

என்னுடைய முகநூல் நண்பர் திரு இரவி சாரங்கனின் நிலைச்சேதியை கண்டதும் நானெழுதிய வரிகள் இவை! இமைகள் கனக்கின்றன.  நெஞ்சகம் விம்முகிறது.  இவரைப் போன்றதோர் நல்லவர் வந்து தமிழரைக் காக்க மாட்டாரா என்று.
======================================================













======================================================
பெருந்தலைவர் (கொச்சகக் கலிப்பா)
======================================================

நேர்மையினை எளிமையினை நீதியென உரைத்திடுமுன்
கூர்ந்தாய்ந்தே தம்வாழ்வில் கொள்கையெனக் கொண்டதனால்
ஆர்த்தெழுந்தே அன்றிளையோர் அப்பெருந் தீரரையே
பார்முழங்கத் தம்தலையாய்ப் பாங்குடனே ஏற்றனரே!


கொள்ளியென எரிக்குமந்த கொடும்பசி யடங்குமெனில்
வெள்ளியாய் ஒளிர்கின்ற வியன்கல்வி விளங்குமென்று
பள்ளியிலே பாலகர்க்குப் பகலுணவு தந்தவரின்
உள்ளன்பை எவரிங்கே உண்மையாக உணர்ந்திடுவார்?


உன்னருகில் அன்றொருநாள் உணவருந்தி நின்றதையே
என்னிதயம் எண்ணியிங்கே எந்நாளும் விம்முவதை,
அன்பிழிய நீயன்றே அளித்திட்ட அரவணைப்பை,
இன்றிளையோர் உணர்ந்திடவே எடுத்தியம்ப இயலவில்லை!


கல்வியிலாக் கர்மவீரன்; கருணைமிகு தர்மசீலன்;
தில்லிவாழ் அரசியலுந் தேடிவந்தே வேண்டிநின்ற
நல்லவரே நீரிங்கே நலமுடனே இருந்திருந்தால்
புல்லருமித் தமிழினத்தைப் பொசுக்கிவிட ஏலுமோ?
======================================================

பாவேந்தர் பாட்டைப் படி....

08.08.2012 அன்று நிகழ்ந்தேறிய, புதுவை தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவிற்கான பாவரங்கில் பங்கு பற்றி, நான் வாசித்த பாடலிது:

பாவேந்தர் பாட்டைப் படி (நேரிசை வெண்பாக்கள்)
========================================















========================================

திருக்கோயிற் றேரனைய தீந்தமிழா லன்று
விருந்தெனவே பாட்டிசைத்த வேந்தர்! -  வரும்நாளில்
தீவாழும் தீமைகளின் தீங்ககல நீயின்று
பாவேந்தர் பாட்டைப் படி.

தூயதமிழ்ச் சொல்லைச் சொடுக்கிச் செழுந்தமிழில்
ஓயாமல் கொக்கரித்த ஓங்கலவர்!  -  தீயவழி
மேவாம லெந்நாளும் வென்றிடவே இந்நாள்நீ
பாவேந்தர் பாட்டைப் படி.

அய்ய னுரைத்த அழகுதமி ழோங்கிடவே
மெய்யா யுழைத்தபெரும் விந்தையிவர்! - நைவின்றி
மாவான் தமிழ்துலங்க வையகமே இன்றிங்கு
பாவேந்தர் பாட்டைப் படி.

சென்ற வழியெலாம் செந்தமிழே சீலமுற
வென்ற பெரும்புரட்சி வீரரிவர்! - இன்றிங்கே
நாவார என்றும் நறுந்தமிழே தான்முழங்கப்
பாவேந்தர் பாட்டைப் படி.

போர்க்களத்தில் நின்றுதமிழ்ப் புன்மைகளைத் தீய்ப்பதற்கே
கூர்வாளை ஏந்திநின்ற கோட்டையிவர்! - சீர்மலிந்த
நாவேந்தும் நற்றமிழை நாளும்நீ காத்திடத்தான்
பாவேந்தர் பாட்டைப் படி.

வெல்லத் தமிழ்வெல்ல வேட்டைப் புலியெனவே
தொல்தமிழில் பாட்டெடுத்தச் சொல்மறவர்! - பல்கலையாம்
பாவாணர்த் தோன்றல்நீ பைந்தமிழைத் தாங்கிடவே
பாவேந்தர் பாட்டைப் படி.   

திங்கள், 3 நவம்பர், 2014

வீரத்தாயின் வித்துகளே.....

16.05.2012 அன்று இரவு உள்ளத்தில் பொங்கிய எண்ணவலைகளை எழுத்தில் கொணர முயன்றிருக்கிறேன். முழுவதும் இயலவில்லை என்றே உணர்கிறேன்.

=========================================
வீரத்தாயின் வித்துகளே (கொச்சகக் கலிப்பா)
=========================================











=========================================

இன்றெதிரே காணுகின்ற ஈனத்தைக் கருக்கிவிட
என்னினமே எழுச்சியுடன் எந்நாளும் இருக்கட்டும்;
துன்பத்தைத் துயரத்தைச் சோர்வின்றித் துடிப்புடனே
முன்னின்று முடிப்பதற்கு முனைப்புடனே முழங்கட்டும்!
 
அழிக்கின்றார்; அறுக்கின்றார்; அடியோடு அருந்தமிழைக்
குழிபறித்துக் கொல்கின்றார் கொடியவரின் கூட்டத்தார்!
செழிப்புடனே செந்தமிழும் செகத்தினிலே சிறந்திருக்க
விழிப்புடனே வெல்லுங்கள் வீரத்தாய் வித்துகளே!
 
மரிக்கின்ற எம்மினத்தின் மகத்தான பிடிசாம்பல்
இருக்கின்ற எந்தமிழை எருவாகித் தாங்கட்டும்;
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிக்கின்ற எரிதழலை எம்மிளையர் ஏந்தட்டும்!
 
வாளெடுக்கும் மன்னனில்லை; வேலெடுக்கும் வேந்தனில்லை;
தாளெடுத்துத் தீந்தாவால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு,
நாளுனக்கு குறிக்கின்ற நரிக்கூட்டம் தானோட,
தோளெடுத்துத் துடிப்புடனே துவளாமல் எழுகவென்றே!

=========================================

தீந்தா = எழுதுமசி

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

எந்தமிழே....

எந்தமிழே! (கொச்சகக் கலிப்பா)
================================================


















================================================
அன்றலர்ந்த ஆம்பலதன் அவிழழகாய் முறுவலிக்கும்
தென்றலிழைச் செழுங்காவின் திருமகளே! தேனமுதே!
கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கனியமுதே!
மின்னொளியாய் மிளிர்ந்துநிதம் விளங்குகின்ற நந்தமிழே!

கழறுகின்ற கிள்ளையென, களிக்கின்ற காட்சியென,
எழுகின்ற செங்கதிராய், இழைகின்ற நல்லிசையாய்,
அழகொளிரும் வரிகளினால் அற்புதமாய் உளந்திருடும்
எழிலார்ந்த இலக்கியங்கள் ஏந்திநிற்கும் எந்தமிழே!

கள்ளதனின் போதையெனக் கருத்தேறி கணப்போதில்
வெள்ளமெனக் கரைபுரளும் வியன்கவிதை நான்புனையத்
துள்ளிவரும் குற்றாலத் தூயமலை அருவியென
அள்ளிமனம் கொள்ளையிடும் அமிழ்தனைய அருந்தமிழே!

செறிவான இலக்கியங்கள் சீர்த்திமிகு இலக்கணங்கள்
நறுந்தேனாய்ப் பாக்களுடன் நாவினிக்கும் பாட்டியல்கள்
அறத்துடனே பொருளின்பம் அத்தனையும் தன்னுள்ளில்
சிறப்புடனே எந்நாளும் சீரொளிக்கும் செந்தமிழே!

சுடும் விழிகள்.....

காதலிப்பது பெரும் குற்றமல்ல. காதலும் பெரும் குற்றமல்ல. ஆனால் இன்றைய கால கட்டத்தில், உணர்வு மேலிட்டு காதலிப்பதாக நினைத்துக் கொண்டு, ஒருதலையாக விருப்பங்களை வளர்த்துக் கொண்டு, நங்கையரின் உள்ளங்களை, இளைஞர்கள் காயப்படுத்துவதும், இளைஞர்களின் இதயங்களை மங்கையர்கள் நோகடிப்பதும் தேவைதானா?

இந்த வாலன்டைன் நாள் என்பதே, முதன் முதலாக வாலண்டைன் என்கிற பாதிரியார், பொதுவான பாசத்திற்கும், பரிவுக்கும், பற்றிற்கும், காதலுக்கும், நேசத்திற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும்,  ஒர் அடையாளமாக முன்னிறுத்தியதே.   காதலை, நேசத்தை, மதித்துக் கொண்டாடுகின்ற மனிதர்களில், கறுப்பு மனங்கள் சில, மனிதநேயத்தை மிதிப்பது மட்டும் நிற்கவே இல்லை! (இப்போது நிறையவே முன்னேறி விட்டார்கள் உள்ளங்களைக் காயப் படுத்துவது போய், உடல்களைக் காயப்படுத்தி, உயிரைக்கூட குடிக்கமளவுக்கு வந்துவிட்டார்கள்).  கீழ்வரும் பாடல் முன்னரே எழுதியதென்றாலும், இன்னும் சில பத்திகளைச் சேர்த்திருக்கிறேன்.
=========================================================
சுடும் விழிகள்
(கலிவிருத்தம்)

=========================================================
















=========================================================
மந்தார வான்மகளின் வடிவானச் சீலையொளிர்
சிந்தூர ஓவியமென் சிந்தையிலோர் கவியெனவே
வந்தூற நானதனை வஞ்சியுனக்(கு) அளிக்கவந்தேன்;
செந்தேறல் சொட்டுகின்ற தீவிழியாற் சுடுவதென்ன?

அள்ளிமனம் கொள்ளையிடும் அந்நிலவைக் கண்டதனால்
வெள்ளமெனப் பொங்கியெழும் மையற்பாட்(டு) உரைக்கவந்தேன்;
துள்ளிவரும் மான்விழிநீ தோகையெனத் தோன்றியெனை
கள்ளெனவே போதைதரும் கருவிழியாற் சுடுவதென்ன?

சில்லென்றே வீசுகின்ற தென்றலது தொடுவதுபோல்
சொல்லத்தான் எண்ணியே தோன்றிவிட்ட என்கவிதை
மெல்லத்தான் நாவேற்றி மெதுவாகத் தரவந்தேன்;
நில்லென்றே நீயுன்றன் நீள்விழியாற் சுடுவதென்ன?

தாவிமனம் நாடுகின்ற தண்டமிழில் வெள்ளன்னத்
தூவியென நெஞ்சத்தைத் தொட்டிசைக்கும் பாட்டெழுதி
நாவினிக்கும் நாயகியே நானுனக்கு சொல்கையிலே
தேவிமுகம் பாராதுன் சேல்விழியாற் சுடுவதென்ன?

கன்னதலன் சாற்றுடனே கற்கண்டைத் தான்சேர்த்து
என்னுள்ளே நான்கலந்து என்காதல் தேனமுதை
பொன்னணங்குன் கைகளிலே பூங்கவியாய்த் தரவந்தேன்
புன்சிரித்தே பாராதுன் பூவிழியாற் சுடுவதென்ன?

அறப்பாட்டு அரற்றியதோ....

தமிழை மொழியாக மட்டுமன்றி, பண்ணார் தமிழணங்காக மட்டுமன்றி, பாட்டியல்கள் ஆர்க்கின்ற பண்ணார் தமிழன்னையாகவே, உண்ணும் போதும், உறங்கும் போதும், எண்ணும் போதும், இயங்கும் போதும் எண்ணுவதால், சிலநேரம் உளம்நையும் துன்பநிலை கூட எனக்கேற்படுவதுண்டு.

அறப்பாட்டு அரற்றியதோ உள்ளம்?
(கலிவெண்பா)
=========================================

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=========================================
கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க
வியன்கவி அத்தனை விண்டேனே! ஆனால்;
துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,
புயல்வீசும் என்னுள்ளம்! பொங்குந் துயரம்!

மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தேச்
செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்,
விதியென்(று) இதையே உரைத்தாலு(ம்) என்றன்
கொதிக்கு(ம்) உளமெனைக் கொல்கிறதே! உண்மை!

நெறித்தே பிழையென நீதியும் கேட்க
வெறுக்கும் நினைவுகள்; வேதனை கொண்டு;
பிறக்கு(ம்) உயிரே புவியில் நிலையா(து)
அறுக்கு(ம்) அறப்பாட்(டு) அரற்றியதோ உள்ளம்?

கரிக்கும் விழிநீர் கனலாய்க் கருக்கி,
அரிக்கும் துயரத்திற்(கு) ஆளான நெஞ்சின்
எரிக்கும் நினைவி(ன்) இயல்பற, எண்ணம்
வரிந்த தமிழே மருந்து!

வாழ்வாங்கு வாழுங்கள்.....

வாழ்வாங்கு வாழுங்கள்......
(கலிவிருத்தம்)
=================================================


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
=================================================

வாழ்கின்ற நாள்வரையில் மற்றவர்க்காய் வாழுங்கள்:
சூழ்கின்றத் துன்பத்தைச் சுட்டெரித்தே வாழுங்கள்;
ஊழ்த்துவரும் சூரியன்போல் உத்தமனாய் வாழுங்கள்;
வீழ்வதொன்றே வந்தவர்க்கு விதியென்று வாழுங்கள்!

சீர்த்தியுடன் சிந்தனையே செல்வமென வாழுங்கள்;
கூர்ந்தாய்ந்து காண்பதையே கொள்வமென வாழுங்கள்;
பார்ப்பதெலாம் மெய்யில்லாப் பாதையென வாழுங்கள்;...
ஆர்க்கின்றத் தாய்மொழிக்காய் அன்றாடம் வாழுங்கள்!

சேர்ந்திடுநல் இல்லாள்உம் சீர்மையென வாழுங்கள்;
சார்ந்திடுநல் இல்லறமே சாட்சியென வாழுங்கள்;
வேர்த்துடலால் பாடுபட்டு மேன்மையுடன் வாழுங்கள்;
தேர்ந்தெடுத்த கல்வியொடுச் செந்தமிழ்க்காய் வாழுங்கள்!

சார்தலின்றி அல்லலுறும் தாழ்ந்தவர்க்காய் வாழுங்கள்;
சேர்முகிலும் தருந்துளியைச் சேமித்தே வாழுங்கள்;
மூர்க்கரையும் முறிக்கின்ற மோகமற வாழுங்கள்;
கூர்நகத்தால் பெண்ணழிக்கும் குணமறவே வாழுங்கள்!

தேவிநீ எமைத் தேடிவா......



தேவிநீ எமைத் தேடிவா......
===========================================

  












============================================
ஆதியே எமை ஆளவா:
காளியே எமக் காகவா;
தேவியே எமைத் தேடிவா;
தாவிநீ சுமை தாங்கவா!
.....தாவிநீ சுமை தாங்கவா!
                                                           (ஆதியே)

வானில் ஏறி மறையும் போதும்
தேனில் ஊறித் திகழும் போதும்
ஊனும் நாறி உழலும் போதும்
நானும் மாறி நழுவும் போதும்
..... நானும் மாறி நழுவும் போதும்
                                                           (ஆதியே)

தேடித் தேடி தேய்ந்த போதும்
ஆடி யோடி அலைந்த போதும்
பாடிப் பாடி பறந்த போதும்
ஓடி யாடி ஓய்ந்த போதும்
.....ஓடி யாடி ஓய்ந்த போதும்!
                                                           (ஆதியே)

நாடு விட்டே நலிந்த போதும்
கூடு விட்டே குலைந்த போதும்
பாடு பட்டே படுத்த போதும்
சூடு பட்டே சுருண்ட போதும்
.....சூடு பட்டே சுருண்ட போதும்!
                                                            (ஆதியே)

நித்தம் சாடும் நிகழ்வின் போதும்
சித்தம் தேடும் சிதைவின் போதும்
முத்தம் நாடும் முனைவின் போதும்
அத்தம் கூடும் அழலின் போதும்
.....அத்தம் கூடும் அழலின் போதும்!

                                                            (ஆதியே)

நெகிழ்வான நேரமிதோ.........

இயற்கையை எழுதாத கவிஞர் எவர்? காரிகையைப் பாடாத பாவலர் எவர்?

நெகிழ்வான நேரமிதோ... (கொச்சகக் கலிப்பா)
===========================================















===========================================

மஞ்சொளிரும் அந்தியவள் மாலையிடக் கதிரவனும்
மஞ்சளெனும் சீலையிலே வனைகின்ற சாரமிதோ?
செஞ்சாந்தின் துகள்பூசிச் சிரித்திவளே வாகொதுக்க,
நெஞ்சகமே நெக்குவிடும் நெகிழ்வான நேரமிதோ?

தந்தநிறத் தளிர்க்கரத்தால் சரிந்திடுமோர் காரொதுக்கிச்
சிந்திவிடும் வான்துளியைத் தேடுகின்ற ஓவியமோ?
செந்தேறல் சொட்டுகின்றத் தீஞ்கனியைத் தான்சுவைக்க
வந்தூறி இனிக்கின்ற மனஞ்சொல்லும் காவியமோ?

பறந்தழகாய்ப் புள்ளினமும் பாய்ந்திங்கே பார்ப்பதற்குச்
சிறகடித்தே தானெழும்பச் சிலிர்க்கின்ற தேநிலவோ?
நறுமணமும் நல்லெழிலும் நன்னயமாய்ப் பொலிகின்றச்
சிறந்தவொரு சிறுபொழிலின் சிற்றாம்பல் பூமுகையோ?

நீர்முகந்தே நெடுந்தூரம் நீணிலத்தை நனைக்கின்ற,
கார்காலக் கருமுகிலாய்க் கவிபொழியும் சீற்றமிதோ?
சோர்வகலச் சொல்லடுக்கிச் சொரிகின்றச் சொடுக்கலென
ஆர்த்தெழுந்தே அள்ளியிடும் அருந்தமிழின் ஆற்றலிதோ?

============================================
மஞ்சு = முகில்
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பூமுகை = மலர்மொக்கு