திங்கள், 29 மார்ச், 2021

ஓங்கலும் உன் வசந்தான்....

அவரைப் போல் நானில்லை;  என்னைப் போல் அவரில்லை;  இவரைப்போல் அவரில்லை; அவரைப் போல் இவரில்லை; இஃதுயர்வு, அஃது தாழ்வு; இவர் கீழே, அவர் மேலே; என்றெல்லாம் கனசோராய் எத்தனை கருத்தாடல்கள்/ கருத்துரைகள்/ வாக்குவாதங்கள்/ வரம்பு மீறல்கள்/ உயர்வு மனப்பான்மைகள்/ தாழ்வு மனவோட்டங்கள்.  இவையனைத்துமே வேடிக்கை விளையாட்டென்னும் வீண் தேடல்களே!  இவ்வுலகில், வெண்மையெனும், மெய்ம்மை அன்பொன்றே நிலையானதாய் ஒளிர்கிறது. 
===============================================================


===============================================================
ஓங்கலும் உன்வசமே....
(கொச்சகக் கலிப்பா)

====================
பார்முழுதும் பட்டுபோல் பருத்தியில்லை; ஆனாலும்
வேர்க்கின்ற வேக்காட்டு வேனலுக்குச் சுகமதுவே!
ஆர்க்கின்ற காகமது அவனியிலே மயிலாமோ?
தேர்வாய்நீ தோகைக்காய் தொல்லைகள் மயிலுக்கே!

தங்கமும் தகரமும் சரிசமமாய் ஆவதில்லை;
அங்கத்தில் தங்கத்தை அன்புடனே அணிந்தாலும்
இங்கின்று தகரத்தின் எத்தனையோ பணிகளுக்கு
தங்கந்தான் ஆகுமோ? சரியாக அறிவாயே!

பொதிசுமக்கும் கழுதையும் போர்க்கலிமா ஆவதில்லை;
நதியருகில் சலவைக்கு நன்றாக உதவுகின்ற
எதிர்ப்பில்லா கழுதையது எந்நாளும் செய்வதையே
அதிவீரக் கலிமாவும் அன்றாடம் செய்வதில்லை!

இல்லமெங்கும் குடிக்கின்ற இன்னீர் யாங்ஙணுமே
துல்லியமாய்த்  தூய்மையுடன் சொரிந்தே வழிந்தாலும்
எல்லீரும் அடுக்களையில் இருக்கின்ற குழாயில்தான்
நல்லதென்று பிடித்திங்கு நாடோறும் குடிக்கின்றார்.

அதற்காக குளியலறை அமைந்திருக்கும் குழாய்களையே
மதியின்றி அகற்றிவிடும் வன்செயலைச் செய்யாமல்
இதந்தரும் அந்நீரை  இன்றுலகில்  தினந்தோறும்  
விதவிதமாய் பயன்படுத்த மேதினியோர் மறுப்பாரோ!

நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவர்க்கே
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் காண்பாய்நீ!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியுனை யடித்தாலும்
அவனியிலே உனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநீ
உவகையுடன் பணிசெய்தால் ஓங்கலும் உன்வசந்தான்!
===================================================
இராச தியாகராசன்

பிகு:
====
வேக்காட்டு வேனல் = வேர்க்கின்ற கோடை, போர்க்கலிமா = போர்க்குதிரை, ஓங்கல் = குன்று, கூற்றுவன் = அந்தகன், அவனி = உலகம், 
செம்மலர் = சிவந்த மலர் (இங்கு தாமரைக்கு ஆகி வந்தது),

சனி, 20 மார்ச், 2021

என்னுள்ளே ஏகன் எழில்....

ஏகம்பனின் உருவந்தான் என்னுள்ளே சுழன்றாட,  என்றென்றும் என்னுள்ளே ஏகன் எழில்......
=========================

========================
என்னுள்ளே ஏகன் எழில்...
========================
கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்,
பின்னல்களின் சிக்கலெனப் பீடிக்கும் ஆசைகள்
இன்றிங்கே தானடங்க என்றிங்கே  நானறிவேன்
என்னுள்ளே ஏகன் எழில்?

புன்மையெனுந் தீயதனில் புத்தழகுப் பொய்யதனில்,
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்தெரிய,
முன்னவரின் நற்செயலால், முன்வினைகள் பற்றறவோ 
என்னுள்ளே ஏகன் எழில்?

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இக்கடலில் நானுந்தான்
அன்றாடந் தீர்வின்றி ஆடுகிறேன் நாவாயாய்,
உன்மத்த வெறும்பிறப்பை உய்விக்க வந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே,
அன்னவனை ஆண்டவனை அங்கெங்கோ தேடுகையில்,
தன்னறிவாய் சாந்தமனச் சத்தியத்தைத் தந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?
=============================================
இராச. தியாகராசன் 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

நேதாஜி போலே நிமிர்ந்து....

நேதாஜி போலே நிமிர்ந்து.....
================================================















================================================
சிங்கத்தின் சீறலெனச் செந்தீயின் சாரலென
வங்கத்தில் வந்துதித்த மாமனிதர்! - மங்கிவிழும்
சாதாப் பிறப்பெனத் தாழாமல் நாமெழுவோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

தூய்மையின் பேருருவாய் சூட்டெரிக்கும் சூரியனாய்
ஓய்வின்றி கொக்கரித்த ஓங்கலிவர்! - தாய்மண்ணாம்
மாதாவை, மங்கையரின் மானத்தை நாம்காப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

பெரும்பொறியாய்ப் பற்றிப் பிழம்பெனவே நாமும்
கருக்கினிலே மாறவழி கண்டார்! - உருக்குலைத்தே
பாதாளம் வீழ்த்திவிடும் பாழதனை நாமெரிப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

பொய்யின்றி நாட்டின் புகழுக்கே எந்நாளும்
மெய்யாய் உழைத்தபெரும் வீரரிவர்! - நைவின்றி
சூதாட்டம், சோதனைகள் சூழ்ச்சிகளை வேரறுப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து

சென்றிடு நாடெல்லாம் சீர்த்தி சிறப்புகளை
வென்ற பெரும்புரட்சி விந்தையிவர்! - இன்றிங்கே 
சேதாரம் செய்கின்ற தீவினையோர் கோதறுபோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

போர்க்களத்தில் நெஞ்சுயர்த்திப் புன்மைகளைத் தீய்ப்பதற்கே
கூர்வாளை ஏந்திநின்ற கோட்டையிவர்! -தூர்த்தரையே
மோதா(து) அடங்கும் முடக்கத்தை நாமழிப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

கொல்லும் பகைமாய்க்கக் கூற்றுவனாய்த் தோளுயர்த்தி
வெல்லும் படைகொண்ட வேந்தரிவர்! - புல்லர்கள்
வாதாடும் நாவடக்க மாமலையாய் நாமுயர்வோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.
=================================================
 இராச. தியாகராசன்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

பொடியேதும் உண்டோ?

வாழ்வியல், உலகியல், நிகழ்வுகள் ஒரு படைப்பாளியின் நெஞ்சகத்தையோர் வாளியாய் உட்போந்து உறுத்துவதால், அவனின் எண்ணங்கள் கடையப்பட்டு, கவிதையென்றும், கதையென்றும் எதையோ வனைகிறான். கவிஞர்க்கு வேறு வேலையே இல்லை!  சாவுக்கும் எழுதுவார்;  வாழ்வுக்கும் எழுதுவார்; என்பார்க்கு என்னுடைய விடை.....  

பொடியேதும் உண்டோ.....
(கட்டளைக் கலித்துறை)
=========================










======================================================
கனவை விதைக்குங் குயில்களைத் தீய்க்கும் கயமைகளே!
சினத்தில் மனிதம் சிதைத்தே சிரிக்கும் சழக்குகளே!
மனத்தில் உறவும் உணர்வும் இலையோ மனிதருக்கு?
மனிதம் மறைந்தால் மதமும் உயர்ந்து வளர்ந்திடுமோ?

எளிதில் கிடைக்கும் பொருளே எவர்க்கு மினிப்பதில்லை;
சுளுவி லமையும் பெருமை யதுவே சுவைப்பதில்லை;
தெளிந்த வெளுப்பி னுடையா லுளமே தெரிவதில்லை;
நெளிந்த நினைவே உரைக்கும் நிழல்கள் நிலைப்பதில்லை;

கரிக்கும் கசடும், கருப்பும் கழுவக் கரைந்துவிடும்;
எரிக்கு மழலி னனலும் அவிந்தே அணைந்துவிடும்;
மரிக்கும் நிசத்தை மறந்தே அலையும் மனிதரிடை 
சிரித்தே மலரைச் சிதைக்கும் சழக்கர் திருந்தவிலை!

அணியு முடைகள் கருப்பென வாகி யழுக்கடைந்தால்;
துணிகள் வெளுக்கும் பொடியது கொண்டே துவைத்திடலாம்!
பிணியென நெஞ்சம் கறுப்பென வாகிப் பிழைநிறைந்தால்
புனிதப் படுத்தப் பொடியே துமுண்டோ புவியினிலே?
=========================================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

அறம்வளர்ந் தார்க்குமே அன்பு

திருவாதிரைத் திருநாளில், அச்சீர்காழி அத்தன் மீதில் நான் வனைந்த ஒரு பஃது வெண்பா அந்தாதி
============================== 

          











=============================
அறம்வளர்ந் தார்க்குமே அன்பு
=============================
வீணர்தம் வெற்றுச்சொல் வீச்சறவே வல்லவரும்
நீணிலத்தில் நாடோறும் நேர்மையினை! - தூணிற்
பிறந்தவெம் சீயமால் போன்றிங்கே காக்க,
அறம்வளர்ந் தார்க்குமே யன்பு.1

அன்பெனும் அற்புத ஆடகம் நாடாது
வன்மமும் தேடுதல் வாழ்வாமோ? - கன்னலாய்
வாக்குரைக்க வைக்குமென் வாதவூர் ஈசனே
ஆக்கும் அருளுருவில் ஆள்.2

ஆளும் சிலபேர்க் கடுத்தவரின் வாழ்வினையே 
மாளத் தீய்த்தல் மகிழ்வென்றால் -  நாளும்
தடுத்தவரை காக்குமெங்கள் சாம்பசிவா; தீயவரின்
இடிப்பொடியச் செய்வாய் இனி!3

இனிக்குஞ் சுவையிருக்க இல்லா இலவங்
கனியை விழைவதுவோ காதல்? - மனிதருக்
கிந்நாளில் ஆறறி வேய்க்கு மினக்கவர்ச்சி
எந்நாளும் வீணென் றியம்பு.4

இயம்புகிறார் இல்லையென்(று) எத்தனையோ ஏட்டில்:
மயங்குமுளம் நிச்சயமாய் மாறிச் -  சுயம்புவென
அன்னவனை காணும் அற்புதத்தைப் பெற்றவர்கள்  
புன்மைகளை மாய்ப்பார் பொருது.5

பொருதல் பிழைத்தல் பொறுத்தல் பெறுதல்
உரைத்தல் உறுத்தல் உறைதல் - உறங்கல்
பழித்தலிவை தாண்டி, பனிச்சிவமே நம்மை
எழுச்சியுறத் தூண்டும் இசை.6

இசையை, ஏழிலார் இயற்கை வனப்பை,
புசியும் அற்புதப் பொருளாய் - புசிக்கும்
உள்ளமே ஊத்தையை, ஊழ்க்கும் ஊழலை
விள்ளுதல் என்னே வியப்பு.7

வியக்கப் பழகி, விரும்பி வெறுத்து,
மயக்கம் தெளிந்த மனத்தில் - தயக்கம்
அகழ்ந்து தன்னை அறியும் உணர்வில்
மகிழ்தல் இறைநிலை மாண்பு.8

மாண்புகள் ஈதென மாந்தர்கள் நாளுமே
பூண்டவை நூறாம் புந்தியில் - ஆண்டவன்
உண்டென  உன்னில் உணர்தலே மெய்யெனும்
எண்ணக் கருத்தில் இரு. 9

இருந்திறக்கு முன்றன்  இலையுதிர் வாழ்வில்
மருந்தென மாந்தர்க்கு மகிழ்ச்சி - தருவதன்றி
கூடிப்போ தழிக்கவே கூட்டமாய்ச் சுற்றிடும்
வேடிக்கை யாவுமே வீண்.10
============================================
இராச. தியாகராசன்

வேறு:
======
எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா 
....லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து 
....பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும் 
....பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின் 
....செங்கண் ணருளாலே!

ஆரடிச்சா அஞ்சனமே.........

நாட்டுப்புறத் தாலாட்டின்பம்....









ஆரடிச்சா அஞ்சனமே? 

======================
ஆரடிச்சா அஞ்சனமே? 
அழலாமோ ஆரமுதே?
===================
அலரிப்பூ ராசாத்தி;
அரும்புன ரோசாப்பூ;
அப்பாவும் வருவாரு;
அச்சுப்பூப் பொட்டோட!                          (ஆரடிச்சா)

சங்குப்பூ ராசாத்தி;
தங்கரளிப் பூவாயி;  
தாத்தனும் வருவாரு;
தாமரைப்பூ மொட்டோட!                       (ஆரடிச்சா)

பவளமல்லி ராசாத்தி; 
பளபளங்கும் பவுனாயி; 
பாட்டியும் வந்திருவா;
பைநெறைய துட்டோட!                          (ஆரடிச்சா)

சரக்கொன்ன ராசாத்தி; 
சலிக்காத சந்தனமே; 
சின்னம்மா வந்திருவா; 
செங்கரும்புக் கட்டோட!                         (ஆரடிச்சா)

பிச்சிப்பூ ராசாத்தி; 
பேரழகுச் சீமாட்டி; 
பெரியம்மா வந்திருவா; 
பெருமேளக் கொட்டோட!                        (ஆரடிச்சா)

அடுக்குப்பூ ராசாத்தி; 
அரமண அஞ்சுகமே; 
அத்தையும் வந்திருவா; 
அதிரச வட்டோட!                                       (ஆரடிச்சா)

மருக்கொழுந்து ராசாத்தி; 
மருதாணிச் செம்பூவே; 
மாமியும் வந்திருவா; 
மரப்பாச்சிச் செட்டோட!                           (ஆரடிச்சா)

மஞ்சப்பூ ராசாத்தி; 
மருதமல மாமயிலே; 
மாமனும் வருவாரு; 
மலையாளப் புட்டோட!                             (ஆரடிச்சா)

செவ்வரத்த ராசாத்தி; 
சேலத்து மாம்பழமே; 
சின்னக்கா வந்திருவா; 
சீனிமுட்டாய் லட்டோட!                           (ஆரடிச்சா)

மல்லிகப்பூ ராசாத்தி; 
மாந்தோப்பு மைனாவே; 
மச்சானும் வருவாரு; 
வரிசப்பைத் தட்டோட!                             (ஆரடிச்சா)

செங்கமல ராசாத்தி; 
சிரிச்சாடுஞ் சிங்காரி; 
சின்னண்ணா வந்திருவான்; 
சிங்கப்பூர் பட்டோட!                                 (ஆரடிச்சா)
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
அஞ்சனம் - கண்-மை, அச்சுப்பூ பொட்டு - பொட்டச்சு, 
பைநிறைய துட்டு - சுருக்குப்பை துட்டு, வட்டு - தட்டு, 
மரப்பாச்சிச் செட்டு - மரப்பதுமை செட்டு,  

வியாழன், 15 அக்டோபர், 2020

நிலவுக்கும் கதிர்கள் உண்டு....

15 ஆண்டுகளுக்கு முன் என்று நினைவு.  கம்பன் கலையரங்கில், "புதுவை நண்பர்கள் தோட்டம்" அமைப்பினர் நடத்திய 25 ஆவது பாவரங்கில் சீர்மைக் கவிஞர் திருமிகு ஈரோடு தமிழன்பன் தலைமையில் நான் வாசித்தளித்த  கட்டளைக் கலித்துறை பாடலிது.  "நிலவுக்கும் கதிர்கள் உண்டு."  தமிழுக்கும் எண்ணிமை, மின்னியல் எல்லாமே உண்டு.  மின்வலைத் தமிழர் நாம் தான் சற்றே முனைய வேண்டும் என்பதென் உளக்கிடக்கை.  
==============================
===============================
நிலவுக்கும் கதிர்கள் உண்டு...
=============================
விந்தை துலங்க மிளிர்ந்தே எழுகுநல் வீங்கெழிலாய்ச்
செந்தமிழ்க் காவலர்; தீந்தமிழ்ப் பாவலர் சிந்தனையில்,
கந்தமாய் வீசிடும் கன்னித் தமிழின் கதிரதுவே,
புந்தியி லோங்கிப் புலர்ந்தே இனிமை பொழிந்திடுமே!

புனையுங் கவியில், புதுக்குந் தமிழில் பொழுதனைத்தும்
வனையுந் தமிழின் வளமை மறந்தே வாழுஞ்சிலரும்,
வினையாய்த் தமிழை விலக்கி அயல்மொழி மேன்மையுற,
முனைந்தே உழைக்க முயல்கிறார் செம்மைத் தமிழகத்தில்!

காலமும் மென்மை; கவினுறு காட்சிக் கவிதையென,
கோலம் புனைந்தே குவலயத் தோரும் குலைந்துநின்றால்,
சாலத் தமிழினி நாட்டிற் தழைந்தே தமிங்கிலமாய்
வாலலை பட்ட மணல்வீ டெனவே விழுந்தழியும்!

இன்புற் றருந்தமி ழேற்றமும் பெற்று தொடர்ந்திலங்க,
அன்புற் றவையிலென் அன்னைத் தமிழி லழைப்பிதுவே;
மின்னியல் கற்றநல் ஒண்டமிழ்க் காளை விரைந்திடுநீ;
இன்வலை ஏகிடும் என்றமிழ்ப் பாவை எழுந்திடுநீ!

எங்கு மெழுந்த இனிய வலையா மிணையமிதில்
செங்கதி ரன்னச் செழுந்தமிழ் பல்கிச் சிறந்திடவே
தங்கத் தமிழிற் றரவுகள், மெல்லியந் தந்திடுவீர்;
பொங்கு மிணையம் புதுக்கித் தமிழையும் போற்றிடுவீர்

எந்நாளு மெல்லோர்க்கு மேந்தி யிடந்தரு மெம்மினமே!
வந்தார் மொழியதும் வாழ விழைகின்ற வண்டமிழே!
சிந்தையை விற்றுநீ  சீர்த்தி இலக்கியஞ் சேர்ப்பதுவோ?
நந்தமிழ்க் கண்ணை நசுக்கிநீ ஓவியம் நாடுவதோ?

நலந்தருஞ் சாதனை நாளும் படைத்திடும் நந்தமிழர்;
சொலிக்கா திடிந்த சுவரென நிற்பதும் சோதனையோ?
வலம்வருந் தீந்தமிழ் மக்கள் கலையாய் வலையகத்தில்
சலிக்கா திணையந் தழைக்கவே செய்வோம் தருணமிதே!
======================================================
இராச. தியாகராசன்

பிகு: எனக்கென்னவோ மென்பொருள்/ வன்பொருள் சொல்லாட்சிகள்
செயற்கையாய்த் தோன்றியதால், மெல்லியம் = software, வல்லியம் = hardware இவற்றைப் பயன்படுத்துகிறேன்.

 

புதன், 8 ஜனவரி, 2020

நில்லாது அழியும் நிழல்....

ஆதிசிவன் நீறென்னும் அற்புதத்தால், நில்லாதழியும் நிழலாம் இப்பிறப்பில், அழலாடும் வேளையிலே, உடன் வருவதச் சோதிசிவன் நாமமெனுஞ் சொல்.  மாறாப் பிறப்பென்னும் செருபிணி சிக்கலை எரித்தழிக்கும் மாதொரு பாகனவன் தூய அருளென்னும் மருந்து. அந்த இறுதி அழலில் வேகும் போது, கூட வருவதும் சோதிசிவன் நாமமெனுந் துணையே! அந்தப் பெருந்துறை வல்லானே நமக்கென்றென்றுங் காப்பு!

ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையொன்று எழுதத் தொடங்கினேன்; முதலில் எட்டு மட்டுமே இயன்றது. பின்னர் மூன்றைச் சேர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.  இதுவரைத் தட்டியே போனது.  (அவன் சொல்லாமல் ஏதென்றன் செயல்?) அந்த வேதபுரி ஈசனருளாள் 10 பாக்களும் இன்று (22/1/2024) முடித்தேன்.
=====================================












=============================================
மாதொரு பாகனுன்றன் மருந்தே துணை...
=============================================
ஆதிசிவன் நீறென்னும் அற்புதமே இங்கிருக்க,
நாதியற்றோர்க்(கு) ஏதும் நலிவாமோ? - மீதிவரு
வேதனையை வேரறுக்கும் வீங்கெழில் மின்னிடை
மாதொரு பாகன் மருந்து. (1)

மருதீசன் கண்ணசைக்க, வாய்த்த பிறப்பாம்
செருபிணிச் சிக்கலுந் தேயும்! - பெருந்துறை
வல்லானப் பித்தனால் மையிருள் நீங்கவிங்கு
நில்லா தழியும் நிழல். (2)

நிழலோ நிஜமோ நிகழ்வோ நினைவோ
அழகோ அணங்கோ அறியேன்! - அழலாடும்
போதுதுணை ஏதோ புகல்வீர்! வருவதென்றும் 
சோதிசிவ நாமம் சுழன்று. (3)

சுழன்றே ஆடுபிறைச் சூடா; கயிலை
எழில்மலை அம்பலத்தி(ன்) ஈசா! - அழிவின் 
புறமழிக்கப் பொள்ளிடும் பொம்மலே! நீதான்
மறமெரித்தே காக்கும் மழு. (4)

மழுவும் அழலும் மானுடன் சூலம் 
வழுவிலா தேந்திடும் மன்னா! - அழுகும்
குழியைக் கடப்பேனே கூத்தா உன்றன்
பழுதிலாப் பாதம் பணிந்து. (5)

பணிந்துனைப் பற்றவே பாசக் கடலை
துணித்திட வைத்திடுஞ் சொக்கா! - மணியெனப்
பாம்பணி மாதொரு பாக னுனதருள்தான் 
ஆம்பல் வனத்தின் அமிழ்து. (6)

அமிழ்தமும் வேண்டா; அரசணை வேண்டா; 
பொழிந்திடு அத்தனருள் போதும்! - அழிக்கின்ற 
பித்தமெரி புன்மையெனும் பேதைமையாம்  எண்ணமற  
நத்துமெனை காப்பாய் நயந்து. (7)

நயத்தகு நாயகனாய் நனவிலுறை நாதா;
வியத்தகு வித்தகியின் வேதா! - செயமெலாம்
பெய்கின்ற வாதவூர் பெம்மானே! போலிமுகப்
பொய்யென்னும் பூசனைப் பொசுக்கு! ( 8 )

பொசுக்கிடு முக்கண்ண பூதா! நமனும் 
வசப்படா ஆரண்ய வாசா! - தசமுகன்
ஏத்திய நீலகண்ட ஏகா! இருளுழலும் 
கூத்தர் கோடகலக் கொளுத்து! (9)  

கொளுத்தித் திரிபுரக் கோட்டை யழித்தே
களிப்பை யளித்த காலா! - வளமளித்து
காக்கவினி யுன்றன் கருணை அருளவே 
ஆக்கமுடன் வந்திடுவா யா?
==============================================
இராச. தியாகராசன்

பிகு:
====
நீறு - சாம்பல், வீங்கெழில் மின்னிடை - மிக்கவெழில்  மின்னுமிடை, மாதொரு பாகன் - உமையொரு பங்கன், முழவு - பறை, மருதீசன் - மருதீச்சுவரன், பிறைசூடா - குறைமதி சூடியவன், புன்மையெனும் - கீழ்மையெனும்,  பேதைமை - அறிவின்மை, மறம் - பாவம்/ தீமை, மானும், மழுவும் - ஈசனின் கரத்தில் இருக்கும் சின்னங்கள், பொம்மலே - அழகே, துணித்திட - துண்டித்திட, ஆம்பல்வனத்தோன் - ஆம்பல்வனத்தின் அரனே, நத்துதல் - விரும்புதல். வித்தகியின் வேதன் - பார்வதி மணாளன், பொய்யெனும் பூசனை - பொய்யான பக்தி.


வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாரதியோர் அறிவியற் கவிஞன்...

கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் "பாரதியில் அறிவியல்" என்ற நூலில், அவர் மகாகவி பாரதியின் அற்புத அறிவியல் எண்ணங்கள் பற்றிய கருத்துகளை கூறி இருக்கிறார். அவ்வெண்ணங்களின் தாக்கத்தால் நானியற்றி, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில், பாவேந்தரின் மைந்தர் மன்னர் மன்னன் முன்னர் வாசித்தளித்த பாடலிது! (11.12.2012 பாரதியின் பிறந்த நாளுக்காக)

=======================================================


=======================================================
பாரதியோர் அறிவியற் கவிஞன் (எண்சீர் அகவல் விருத்தம்)
=======================================================


இருந்தொருநாள் மனையாட்டி யவளுங் கேட்டாள்;

.....இன்றிருக்கு(ம்) அறிவியலை யழகாய்ப் பாட்டில்,
கரும்பினிய தமிழ்மொழியில் வடித்தா ருண்டோ;
.....கவின்மொழியில் கவியாலே கழல்வீ ரென்றே!
அரியதொரு அண்டவெளி மண்ட லத்தை
.....அணுவணுவாய்ப் பிளந்துவரும் யோச னையே
பிரிந்தியங்கு(ம்) அண்டவெளித் தூர மென்னும்
.....பெருநினைவைப் பாரதியில் காண்பாய் என்றேன்!

சுறுசுறுப்பாய்ப் பலகோடி கோள்க(ள்) எங்கும்

.....சோர்வின்றிச் சுழலுவதை உரைத்த விந்தை;
அறைகின்ற ஆணிகளை இங்கே செய்யும்
.....அமைப்புகளைக் காட்டுகின்ற தொழிலின் மேன்மை;
பறப்புமுணர் வண்டிகளும் பறந்த வானை;
.....படர்ந்தொளிரும் அண்டமிதில் கோடி யென்று,
முறைப்படியே இயங்குகின்ற விண்மீன் காட்டை,
.....முகிழ்த்திட்ட பாரதிப்பா உணர்வாய் என்றேன்!

மேலிருக்குங் காசிநகர் புலவோர்ப் பேச்சை,

....வீரமிகு நந்தமிழில் உடனே கேட்க,
சீலமொழி பெயர்த்திடுமோர் கருவி தன்னை,
.....சித்திரப்பா வடிவினிலே உரைத்த நேர்த்தி;
நீலவந்தி, விண்ணந்தி, கடலிற் றோன்றும்
.....நீரந்தி யத்தனையு(ம்) ஒன்றாய்க் கொண்ட,
கோலமதை சக்தியென உருவ கித்துக்,
.....கூறிடுமே பாரதிப்பா தெரிவாய் என்றேன்!

எண்ணறியா அளவினையே பரப்பாய்க் கொண்டு,

....எழுந்திடுமவ் வால்மீனின் வாலைக் கூட
நுண்ணியமாய்ப் படித்திருந்த தாலே பாட்டில்
.....நுவன்றிற்டா னதுவெற்றுக் காற்றே என்றே!
உண்மைகளை உரைத்திடுமவ் வானின் கல்வி,
.....ஓர்ந்துநம் மிளையோரும் கற்கச் சொன்னான்;
கண்ணெதிரில் அன்றிருந்து ஒளிரும் பொய்யைக்
.....கானலெனும் பாரதிப்பா புரிவாய் என்றேன்!

அயல்மொழியின் நல்லறிவு நூல்கள் எல்லாம்,

.....பெயர்த்திடுவோம் தீந்தமிழில் என்றே கூறி, 
பயமின்றி எண்டிசையும் பயணப் பட்டே,
.....பலகலையின் செல்வமெலாம் சேர்க்கச் சொன்னான்;
வியந்துனக்குச் சொல்கின்றேன்; கடலில் காணும்
.....வெந்நீரி(ன்) ஓட்டமதை, நிலவுந் தண்மை,

நயங்களையும் பாட்டினிலே செறிவாய்ச் சொல்லி,
.....நறுங்கவிதை நாட்டினுக்கே புனைந்தான் என்றேன்!

தெருக்களுள்ள நகரமைப்பின் முறைமைக் கல்வி,

.....செம்மையுறச் சாத்திரமாய்ப் பழகு என்றான்;
திரவுபதிச் சபதமெனும் அழகுப் பாட்டில்,
.....தடம்புரண்டு பயனின்றிக் கடலில் பாயும்
திருமகளாம் கங்கையவள்  கதையைச் சொல்லிச்
.....சிந்தையதே உருகிமனங் கனிந்த தாலே,
இருக்கின்ற நதிகளையே இணைத்து நாளும் 
.....இலகுபயிர் செய்யப்பாட் டிசைத்தா(ன்) என்றேன்!

வாணுதலின் நங்கையரும் இந்நா(டு) ஓங்க,

.....மனங்குவிந்து கடல்கடந்தே உழைக்கச் சொன்னான்;
காணுமொன்றை வேறொன்றா(ய்) ஆக்கும் வித்தை;
.....கல்லதனை மணியெனவே மாற்றும் சித்தை;
வீணானக் கற்பனையாய் நமக்குத் தோன்ற,
.....மிளிர்ந்திடுமோர் அழகுப்பா; ஆழ்ந்து பார்த்தால், 
நீணிலத்தில் இன்றைய அறிவி யல்தான்
.....நிகழ்த்திவிட்ட குளோனிங்காம்  அறிவாய் என்றேன்!


கணிப்பொறியும் மெல்லியமும் மேலை நாட்டுக்

.....கருவிகளென் றிருப்பதனால், ஆங்கி லத்தில்
பணிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை,
.....பாரதிரப் புடைக்குவன் கட்டு ரையில்;
பிணிபிடித்த கண்களிலே மருந்து(ம்) இட்டு,
.....பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்,
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டு மென்ற
.....கோணலறி வாளரெனத் தூற்று கின்றான்!

தேமதுரச் செழுந்தமிழில் கணினிச் சொற்கள்,

.....தேடுகின்ற நிலையறவே முயன்றி ளையோர், 
நாமினிமேல் புதுப்புனைவாய்ப் பலவும் சேர்த்து,
.....நந்தமிழைப் பள்ளிகளில் உயர்த்தச் செய்வோம்!
தாமதித்தால் தமிழ்மொழியை அறிந்தி டாத,
.....தமிழர்கள் வாழுகின்ற நாடீ தென்ற,
நாமமதை நாமடைந்தே நாடோர் தூற்ற,
.....நரம்பறுந்த வீணையென வாழ்வோ(ம்) அன்றோ!
====================================================== 
இராச. தியாகராசன்

திங்கள், 25 நவம்பர், 2019

ஏது......

ஏது, ஏது, ஏதென்று வெடிக்கும் வினாக்கள் ஆயிரமாய் எழுந்தென்னில் குளத்தின் மீதூரும் நீரலை வட்டங்களாய், சிறார் ஊதி மகிழ்கின்ற வழலைக் குமிழ்களாய் அலைபாயும் கணங்கள்....

உழலுகிறேன் ஏதிலியாய் உண்மை உணர்வில்;
விழலுக்காய் பெய்யும் மழையாய் - விழுந்தோடும் 
வீணான வேதனையால், மேவிடும் கோணலதால், 
தூணாய்முன் நிற்கும் துயர்.
=================================


=================================
ஏது.......  
=======
தூக்க மில்லாமல் கனவு மேது?
ஏக்க மில்லாமல் நினைவு மேது?
ஊக்க மில்லாமல் உயர்வு மேது?
வாக்கு மில்லாமல் வரியு மேது?
முகிலு மில்லாமல் விசும்பு மேது?
சிகர மில்லாமல் மலையு மேது?
பகலு மில்லாம லிரவு மேது?
நகுத லில்லாம மகிழ்வு மேது?
தென்ற லில்லாமல் காவு மேது?
அன்பு மில்லாமல் தாயு மேது?
உணர்வு மில்லாமல் கவிதை யேது?

உணவு மில்லாம லுலக மேது?
கூட லில்லாம லூட லேது?
ஊட லில்லாமல் காத லேது?
காத லில்லாமல் வளமு மேது?
மாத ரில்லாமல் வளர்ச்சி யேது?
தேட லில்லாமல் தேச மேது?
வாட லில்லாமல் வாச மேது?
தூசு மில்லாமல் மண்ணு மேது?
ஆசை யில்லாம லெண்ண மேது?
பண்ணு மில்லாமல் பாட்டு மேது?
வண்ண மில்லாமல் காட்சி யேது?

ஆவ லில்லாம லவனி யேது?
கூவ லில்லாமல் குயிலு மேது?
சாவு மில்லாமல் வாழ்வு மேது?
தூவ லில்லாமல் தூர லேது?
தறியு மில்லாமல் நெசவு மேது?
சிறகு மில்லாமல் குருகு மேது?
நறவு மில்லாமல் மலரு மேது?
உறவு மில்லாமல் பருவ மேது?
கர்வ மில்லாமல் கவியு மேது?
தர்ம மில்லாமல் புவியு மேது?
சர்வ மில்லாமல் சக்தி யேது?

மர்ம மில்லாமல் புத்தி யேது?
வேஷ மில்லாமல் ஆட்ட மேது?
கோஷ மில்லாமல் கூட்ட மேது?
பூச லில்லாமல் கோஷ்டி யேது?
ஆசு மில்லாமல் ஆட்சி யேது?
காசு இல்லாமல் கட்சி யேது?
நாச மில்லாமல் ஞாட்பு மேது?
கற்ற லில்லாமல் கல்வி யேது?
பற்று மில்லாமல் பாச மேது?
இறையு மில்லாம லறித லேது?
அறித லில்லாம லகில மேது?
===============================
இராச தியாகராசன்.

பிகு:
==== 
ஏதிலி = அநாதை, விழல் = களைச்செடி, குருகு=பறவை,
ஞாட்பு = போர்க்களம், ஆசு=குற்றம், நறவு = தேன்.

வியாழன், 21 நவம்பர், 2019

வேதனை போகும்... தெளிவாகும்...

20.11.2015 அன்று, புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறையில் கலைமாமணி, தமிழ்மாமணி, திரு கல்லாடனார், கலைமாமணி, தமிழ்மாமணி திரு இலக்கியனார் ஆகியோர் முன்பாகப் படிக்க வேண்டுமென நினைத்து வனைந்த காவடிச் சிந்து வரிகள் இவை. என்னவோ தெரியவில்லை; எனக்கு நிறைவில்லை என்பதால், வேறு ஒரு பாடலைப் படித்தேன் அன்றைக்கு.
=============================










================================
வேதனை போகும், தெளிவாகும்...
================================
உள்ள மெழுந்திடுஞ் சந்தம் - அறந்
துள்ளு மழல்வரி பந்தம் - உளம்
.....படர்ந்தேகவி புனைந்தேதர பொழிந்தேவரு தமிழ்மீதொரு
..........பாசம்
..........அதன்
..........நேசம்.

வெள்ளை யணிந்துரு கொள்ளுங் - கறுங்
கள்ளை யருந்துயிர் துள்ளும் - பிழை
.....யழிந்திக்கண மெழுந்தப்பழி விழுந்திப்புவி யமிழ்தச்சுவை
..........யாகும்
..........சினம்
..........போகும்.

துள்ளும் பெருங்கடல் மேவி - கரும்
புள்ளுந் தருந்துயர் தாவி - வருஞ்
.....சுழலென்னுளக் கருவில்முளைத் தெழுகுஞ்சுடர்ப் பெருகும்வெளித்
...........தோற்றம்
...........அவள்
...........சீற்றம்.

வண்ணத் தமிழ்தருஞ் சிந்தை - தின
மெண்ணப் பிறந்திடும் விந்தை - வள
.....மிழிந்தேயுளங் கவர்ந்தேவளர் நறவேநிகர் தமிழ்தானொரு
..........யின்னல்
..........தகர்
..........மின்னல்.

கொள்ளத் தருமொரு மோகம் - கர
மள்ளப் புகுமொரு தாகம் - துளி
.....திறந்தேவரு மறிவேயதி லறிந்தேயுரு கலதேகிடுஞ்
..........சித்தம்
..........பெரும்
..........பித்தம்.

குற்றங் குறையது தேய - நிதஞ்
சுற்றுங் கறையது சாய - பெரும்
.....புவிமீதினில் சுழலாயெனை யெழுவாதுயிர் தருவேதனை
..........போகும்
..........தெளி
...........வாகும்.
==============================================
இராச. தியாகராசன்.


வியாழன், 14 நவம்பர், 2019

ஜவகருன்னைப் போற்றுவனே.....

2019ஆம் ஆண்டு மழலையர் நாளுக்கென்றன் வரிகள்...

===========================================



===========================================

விந்தைமிகு தாய்நாட்டின் உயர்வே நாளும்
.....மேன்மையுறு உழவர்தம் வாழ்வே என்று,
சிந்தையிலே உணர்ந்ததனால் தானே அன்று
.....தெளிவான விதியதற்கே வகுத்து யர்ந்தாய்;
முந்தியிங்கு வேளாண்மை செய்வோர் வாழ்ந்தால்
.....முறைசார்ந்த தொழில்துறையும் உயரும் என்றாய்;
அந்திமத்துத் துயர்களையும் விரட்டு தற்கே
....அகவைசென்ற முதியோர்க்கும் சட்டந் தந்தாய்!

மாட்சிமையாய் வையகத்தில் வாழ்வ தற்கே
.....வாழ்வியலின் ஐந்தென்னும் அறத்தை யிங்கே
ஆட்சிமுறைத் தத்துவமாய் புவிக்க ளித்தே
.....ஆளுகின்ற போதவனி போற்ற வாழ்ந்தாய்;
கூட்டுறவும் கல்வியதும் கொள்கை யென்றே
.....குறைவில்லா ஐந்தாண்டுத் திட்டந் தீட்டி,
நாட்டுயர்வே உனதுளத்து நாத மென்னும்
.....நல்லறத்தால் நல்லவரின் உள்ளம் வென்றாய்!

உள்ளாரும் ஒண்டமிழில் உள்ளம் தோய்ந்தே,
.....உயர்தழகாய் மின்னுகின்ற உணர்வை ஆய்ந்தே,
துள்ளாட்டம் போடுகின்ற எண்ணம் மீட்டி,
.....சுகந்தமலர் சிந்துகின்ற வண்ணங் கூட்டி,
தெள்ளுதமிழ்க் கன்னலதன் வரிகள் பெய்து,
.....சித்திரம்போல் அலங்கலெனக் கவிதை நெய்து,
கள்ளாரும் செம்மலரை விரும்பி யேற்ற,
.....கனியுளத்து சவகருன்னைப் போற்று வேனே!
=========================================
இராச. தியாகராசன். 

புதன், 30 அக்டோபர், 2019

சங்கரியோ வாராயோ......

பாவலர், தமிழார்வலர் திரு மகுடேசுவரன் கோவிந்தராஜன் அவர்களின் காலம் பற்றிய முகநூல் நிலைச்சேதியில் பின்னூட்டமாக ஒரு பாடலும்,  கவிப்பெருஞ்சுடர் திரு ஹரிகிருஷ்ணனின் எந்நிரற் குழுவில் "வாவெழுந்து வாகண் மலர்ந்து"  என்கிற ஈற்றடிக்கு ஒரு வெண்பாவும் எழுதினேன். இரண்டுமே அந்த ஶ்ரீதேவி உமையாளை என்னுளமறிய எனக்குத் தோன்றியவை என்பதால், இன்னோரு பத்தி சேர்த்து, கலிவெண்பாட்டாக என்னுடைய வலைப்பூவில் பகிர்கிறேன் இப்போது.

==================================


==================================
சங்கரியே வாராயோ....
==================================
சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமுன்றன்
கோலத்தைக் கண்டிடவே கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானந்தான் வாய்த்திடுமோ?       (ஞாலத்தின்)

வித்தகியுன் பின்னலெனும் வல்லூழாம் ஆழியிலே
நித்தமுமே நான்விழுந்து நீந்திடும் வேளையிலே
சித்தமதை மத்தெனவே சீய்த்தே சிலுப்புகின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறெனக்கு வாய்த்திடுமோ?      (பித்தமதை)

நாவெழவே நாதியின்றி நாளெல்லாம் போகயிலே
சாவெழுதி வாழ்வெழுதும் சங்கரியிப் பூவுலகில்
பாவெழுதும் பாவலனென் பாமலரை ஏற்றிங்கே
வாவெழுந்து வாகண் மலர்ந்து.
===================================
இராச. தியாகராசன்.

சனி, 26 அக்டோபர், 2019

வெங்கதிராய் ஒளிவீசும்......

அனைவரையும் அருந்தமிழால் உயர்வு செய்வோம்; 
அன்புடனே அரவணைப்போம்.
================================


================================

தழலெனவே எரிந்துள்ளந் தளர்ந்துவிட்ட தோழியரின், 
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் தோழர்களின்,
விழலெனவே விளைந்திங்கு வீணான பித்தத்தால், 
சுழலெனவே சுற்றிநிதம் சுக்கான சுற்றங்கள்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறிவிட்ட நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்,
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் தான்துளைத்தே,
உதயமாகு முணர்வுகளை உருக்கிநித முறவாடும்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி,
அலைந்தலைந்தே அதன்மீதி லடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்,
உலைநெருப்பி லுழல்வதுபோல் உலகாய உணர்வுமின்றி,
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் வாழ்வாகும்!

துளித்துளியா(ய்) உள்ளத்தில் துயர்சேர்க்குஞ் சூதுகளைத்,
தளிர்க்கின்ற சழக்குகளைச் சடுதியிலே விலக்கிவிட்டுக்,
களிபொங்கக் கைப்பினையே கருக்கிவிடும் நெஞ்சகத்தில்,
வெளிச்சத்தின் வைகறையே வெங்கதிரா(ய்) ஒளிவீசும்!

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு
சந்தமணச் சொல்லுரைக்குஞ் சடங்கினிலோ இல்லையெனுஞ்
சிந்தனையின் வளஞ்செறிந்த தெளிவான மனங்களிலே
வந்துதுதிக்கும் பேரன்பே மகத்தான சிவமாகும்!

========================================================
இராச. தியாகராசன்.


திங்கள், 21 அக்டோபர், 2019

எது கவிதை........

எது கவிதையென்று எங்கெல்லாமோ தேடுகிறேன்;  எது கவிதையென்று எதையெல்லாமோ கிறுக்குகிறேன்...

=====================================



=====================================
கவிதை என்னும் அழகுப்பூ.....
============================
துள்ளிவரும் வண்ணத்துப் பூச்சி போலே
.....தோன்றியுள்ளே ஆடுமென்றன் எண்ணச் சீரோ?
வெள்ளிமலை மேல்விளைந்தே வீழு மந்த,
.....விண்ணருவிச் சாரல்தான் தமிழாம் தேரோ?
அள்ளிமனங் கொள்ளையிடப் பொழியும் இன்ப
.....அமுதமழை வெள்ளந்தான் பாட்டாம் ஆறோ?
புள்ளியிட வந்தொளிரும் கோலம் போலே
.....பொலிந்தாடும் ஓவியந்தான் கவிதைச் சாறோ?

காதலிதன் கடைக்கண்ணைக் காட்டும் போதில்,
.....கார்முகிலும் கனவெழிலை ஊட்டும் போதில்,
சோதனையாய்க் காதலதும் கருகும் போதில்,
.....துயர்நீங்க மீண்டுமது தளிர்க்கும் போதில்,
ஆதவனும் தூரிகையாம் கதிரைக் கொண்டு,
.....அடிவான சீலையிலே எழுதும் போதில்,
சீதளமாய்ச் சிதறிவிடும் சொல்ல டுக்குச்
.....சித்திரந்தான் கவிதையெனும் கனவுக் கூறோ!

வானகத்தி(ல்) இடியிடிக்க விரித்தே யாடும்,
.....வண்ணமயில் போலிங்கே எண்ண வானில்,
தானிடிக்கப் பூத்துவிடும் நறும்பூக் காடாய்,
.....தாரணியி(ல்) எத்தனைபே(ர்) இடித்திட் டாலும்,
நானிலத்தி(ல்) அயராமல் தினமு(ம்) என்றன்,
.....நன்னெஞ்சத் தறிநெய்யும் பட்டுச் சீலை;
கானகத்துக் கருங்குயிலின் கனவுக் கூவல்;
.....கவிதையெனு(ம்) அற்புதமா(ம்) அழகுப் பூவோ!
====================================
இராச. தியாகராசன்.

கொடுமைகளும் வந்ததேனோ?....

அறமில்லா அறிவிலிகள் நிறைந்த உலகமோயிது?  😩

===================================













===================================

கருத்தமனக் கொடியவர்கள் சின்னப் பூவைக்
.....கசக்கிநுகர் கயமைகளும் வளர்ந்த தேனோ?
குருத்துநிகர் மழலைதன்னைச் சிதைப்போர் கூட
....கொழுந்தினிலே அன்னைமடி யிருந்தோர் தாமே?
அரக்கரென அடுக்கடுக்காய்ப் பிழைகள் தம்மை
....அனுதினமும் அளவின்றிச் செய்வோர் கூட
சிரித்தபடி தாயவளும் அன்பாய் ஊட்டும்
....சிறப்பமுதை அருந்திநிதம் வளர்ந்தோர் தாமே?

ஊழ்த்துவரும் உயிர்கட்கே உலகின் தாய்மை
.....உதிரத்தால் வழங்குகின்ற சின்ன மிங்கே
ஆழ்ந்துருகித் தாயவளே வழங்கும் அன்பின்
.....அகண்டவெளித் தத்துவமாம் உண்மை யிங்கே
தாழ்த்தலிலா தாய்மையுள்ளம் மொழிகள் தாண்டி,
.....தனதுதிரம் கடைந்தருளும் அமுத மிங்கே,
வாழ்க்கையிலே தலைமுறையை வளர்த்தே என்றும்
.....மங்கைநலம் காத்திடவே வேண்டு மம்மே!
=====================================
இராச. தியாகராசன்.

 

சனி, 19 அக்டோபர், 2019

என்னையே தந்தேன்.....

ஒரு சந்தப் பாடல் மாறுதலுக்காய்....

(கீழிருக்கும் ஓவியம் ஓவியர் திரு இளையராஜா அவர்களின் அற்புதக் கைவண்ணம்.)

================================














================================
என்னையே தந்தேனடி.....
========================

எடுப்பு:
=======
கண்ணாலே உனைக்கண் ட துமே! - பெண்ணே
எண்ணாம லென்னையே தந்தேன்!

தொடுப்பு:
==========
கண்ணிலே கண்டேனக் கயலென்னும் குமுதம்;
நெஞ்சிலே உண்டேனவ் வெழிலென்னும் அமுதம்!

முடிப்பு:
=======
வானத்து மாமழை யாலே - தோகை
மயிலிங்கே ஆடுதல் போலே
கானத்தைத் தேன்குர லாலே - கூவிக்
களித்திடுங் கருங்குயில் போலே;  (கூவிக்) (கண்ணாலே)

பேசிடுங் கண்ணொ ளியாலே - என்றன்
சித்தமுங் கலங்கிட நாளும் 
ஆசையைத் தூண்டுகின் றாயே! - உன்றன்
அசைந்தா டுமிடை யதனாலே!   (உன்றன்) (கண்ணாலே)

நீரெல்லைத் தொடுவது போலே - கண
நேரத்தில் மறைவது மேனோ?
வேரிலா மரமது போலே - மனம்
வீழ்வதைப் புரியாத தேனோ?   (மனம்) (கண்ணாலே)

கார்பொழி பின்னலை நீயும் - சுற்றிக்
கடந்திடும் வேளையில் நானோ;
பார்வையின் வீச்சதா லேயே - வெற்றுப்
பதுமைபோல் ஆவது மேனோ?  (வெற்று) (கண்ணாலே)

விண்ணிலே லூர்ந்திடு நிலவாய் - நீயும்
மென்மையாய்ச் சிரித்திடு வேளை,
கண்ணெனும் வலையிலே மீனாய் - நானும்
கருக்கிலே ஆழ்வது மேனோ? (நானும்) (கண்ணாலே)
===================================
இராச. தியாகராசன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

மல்கோவா மாம்பழமே........

மல்கோவா மாம்பழமே, நீகொடுத்த உப்புமுத்த நெனப்புகூட நெருப்பள்ளிக் கொட்டுதடி.... 
(கீழிருப்பது ஓவிய இளையராஜா அவர்களைன் கைவண்ணம்.

==============================













==============================
மல்கோவா மாம்பழமே;
மருதம ருக்கொழுந்தே!
காதோரம் ஓஞ்சிமிக்கி,
காத்துலதான் கண்சிமிட்ட,
நீளசடைப் பின்னலிலே
நிலாமல்லிச் சரமாட
செஞ்சாந்துச் சந்தனமாய்த்
தெம்மாங்குத் தேவதயாய்ச் 
சீனத்துச் சிலுக்கெனவே
சிலுசிலுக்க நிக்கியேடி!

வெண்டக்காப் பிஞ்சுபோல,
மருதாணி வெச்சவெரல்
செந்தூரப் பொட்டெனவே,
செவப்பாத்தான் சொலிக்குதடி!
தங்கநெறத் தாவணியும், 
பளபளக்கும் பவுனோட
கண்ணாடி வளகூட, 
கலகலன்னு கதபேசச் 
சஞ்சலத்தால் எம்மனசும்
சருகாத்தான் எரியுதடி!

கட்டிவெச்ச மல்லிபோலப் 
பொங்கிவெச்சச் சோறுபோல,
வரிசயிலே பல்லுமின்னச் 
செதறவிட்ட சோழியாட்டம்,
ஜலுஜலுன்னு சிரிச்சுகிட்டே,
முன்னாடி வந்துநின்னு,
இறுக்கியென்ன ஒதட்டோட
நீகொடுத்த உப்புமுத்த
நெனப்புகூட நெஞ்சத்திலே,
நெருப்பள்ளிக் கொட்டுதடி!

கருப்பஞ்சா றினிப்பாட்டம்,
கண்ணே ஒங்கண்ணுகூட
கல்கண்டா யினிக்குதடி!
வாக்கெடுத்த ஒம்பின்னல்
பாம்பாத்தாங் கொத்துதடி!
தெனந்தெனமும் சீவன்நான்
செத்துத்தான் பொழக்கெறண்டி!
ஒருசொல்லு சொன்னாலே
ஓனக்காக ஓலகத்தை
ஓம்மடியில் வைக்கறண்டி!
===============================
இராச. தியாகராசன்.

வியாழன், 3 அக்டோபர், 2019

பாதகத்தைக் காணீரோ!!!

எத்தனையெத்தனையோ காணுகின்றோம் இப்புவியில்.  ஆனால் சில நியதி மாறாட்டங்கள் மாறவே மாறாதா என்றேங்குகிறது உள்ளம்....

=============================================



=============================================

மதமேற்றும் மதுவென்னும் மயக்கத்தைத் தருவோரும்,
நிதமிங்கே நிறைவான நிதியதனில் புரண்டிருக்கப்
புதிதெனவே பேசிகளைப் புதுப்புனைவாய்ச் செய்வோரும்,
சதமெனமே செல்வத்தில் தடையின்றி உருண்டிருக்க;

வெண்சுருட்டாம் வேதனையை விற்கின்ற பேர்களுமே
எண்ணரிய பணத்தினிலே எந்நாளும் இழைந்திருக்க,
வண்ணமயக் குளிர்ச்சாற்றை வழங்குகின்ற நிறுவனமும்,
கொண்டலெனக் கொட்டுகின்ற கோடியிலே உழன்றிருக்க;

அடுக்கிவிட்ட அருந்தமிழில் அம்புலியைப் பிடிப்பதுபோல்,
மிடுக்குடனே வெள்ளுடையில் மெருகாகப் பேசுவோரும்,
சொடுக்கினிலே ஏவலர்கள்; சொகுசான வண்டியென,
முடியணியாக் கொற்றவராய், முழுச்சுகத்தில் நுளைந்திருக்க;

அணிவதற்கே உடையின்றி அடுக்களையி நெருப்புமின்றி,
பிணிபிடித்தே நைந்தவர்போல் பெருந்துயரில் வாடுகின்ற,
உணவணிக்கும் உழவர்களோ ஒருவேளைச் சோற்றுக்காய்ப்
பணமின்றி பதைபதைக்கும் பாதகத்தைக் காணீரோ!

எண்ணுமுளக் கருத்தாக இயம்புகிறேன் இன்றிங்கே;
வெண்சுருட்டு, கைபேசி, வீரமொழி, குளிர்ச்சாறு,
தண்மதுவோ ஏதுமின்றி தரணியிலே வாழ்ந்திடலாம்;
உண்பதற்கு உணவின்றி உய்ந்திடத்தான் ஆவதுண்டோ?

======================================================
இராச. தியாகராசன்

நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல்.  பரதவர் என்பவர் மீனவரென்றால்,
நுளையர் = முத்துக் குளிப்பவர்.

திங்கள், 30 செப்டம்பர், 2019

எதை நீயிங்கே பார்க்கின்றாய்??

எங்கேயோ பார்வை,  எதையோ தேடுதல்
======================================


=====================================
எதனை நீயிங்கே பார்க்கின்றாய்?
=======================
எதனை நானிங்கே இவ்வாறாய் வியப்பினிலே
சதமாய்த் தானெண்ணி சத்தியமாய்ப் பார்க்கின்றேன்?
புதுமையெனப் புகழ்போதை புந்தியிலே புகுந்தாடச்
சிதைமேவும் பொய்யுடலை திண்ணமெனக் கொண்டிங்கு,

சுதைபூசு மாயவலை சுகந்தன்னில் அகம்மயங்கி,
நிதமாடும் நாடகத்து நடிப்பதனைத் கண்டுருகி,
மதியின்றி மதபோதை மண்டையிலே குடைவதனால், 
புதுமைதா னீதென்று பொய்யாகப் புரிந்தங்கே,

அதிசயம் போலுணர்ந்தா அப்படிநான் பார்க்கின்றேன்?
சதிராடும் பொய்முகத்துத் தருக்கழலைச் சேர்க்கின்றேன்?
இதிலிங்கே எண்ணமெது? இதயவெளி இன்பமெது?
பதியுமென்றன் தடங்காட்டும் பாதவலித் துன்பமெது?

நேற்றவர், இன்றிவர்; நிசமில்லா நாளையெவர்?
போற்றுகின்ற பதவிதரும் பொய்யான வாழ்வினிலே,
கூற்றுவன்தன் பாசத்தைச் சுழற்றிவிடும் வேளைவரை,
சோற்றுடலால் சேர்க்கின்ற செல்வத்தின் காவலன்நான்!

நான்நானென் றாடுகின்ற நாற்றமிழிச் சடலங்கள்;
தான்தானென் றோடுகின்ற சாய்க்கடை உடலங்கள்;
கோன்நானென் றகந்தையிலே கொக்கரிக்கும் மடமைகள்;
வான்முட்டும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகள்!

சாண்வயிற்றுப் பாட்டுக்காய் தவிக்கின்ற வாழ்வியலில்,
காண்கின்ற எழிலுமெது? கற்றுவைத்த கல்வியெது?
பூண்கின்ற அணியுமெது? புன்மையெனும் பொய்ம்மையெது?
மூண்டெரிக்கும் மயக்கவலை மோகமுள்ளி னுறுத்தலெது?
=========================
இராச தியாகராசன்

பிகு:
====
புந்தியிலே = உள்ளத்தில், தருக்கழலை = தருக்கு+அழல் (இறுமாப்பெனும் அழல்), பாசத்தை = பாசக் கயிற்றை, நாற்றாமிழி = நாற்றம் + இழி (கெட்ட மணம் வழிகின்ற), சாய்க்கடை = சாக்கடை, மூண்டெரிக்கும் = மூண்டு+எரிக்கும் (பற்றியெரிக்கின்ற), 
மோகமுள் = மோகம்+முள் (முள்ளாய் உறுத்தும் ஆசை)