செவ்வாய், 7 நவம்பர், 2023

பொழிலுருவே வாழ்வியலோ...

உளமே மொழியாய், முழவே வழியாய், வளியே இசையாய், சிவமே அறிவாய், எழிலே இதமாய், கரையே மடுவாய், கலையே உறவாய், அழலே அழகாய், பொழிவே அமுதாய், பொழிலே உருவாய் அமைந்த வாழ்க்கை.
=============================













=============================
பொழிலுருவே வாழ்வியலோ...
=============================
ஓளியே விழியாய், விழியே உளமாய், 
உளமே மொழியாய், மொழியே தமிழாய், 
தமிழே உழவாய், உழவே முழவாய், 
முழவே வழியாய், வழியே வெளியாய், 

வெளியே உள்ளாய், உள்ளே வளியாய், 
வளியே இசையாய், இசையே புவியாய்ப் 
புவியே நிறமாய், நிறமே சிவமாய்ச் 
சிவமே அறிவாய், அறிவே தழலாய்த் 

தழலே உணர்வாய், உணர்வே எழிலாய், 
எழிலே இதமாய், இதமே கருவாய்க் 
கருவே கடலாய், கடலே கரையாய்க் 
கரையே மடுவாய், மடுவே மலையாய், 

மலையே உலகாய், உலகே கலையாய்க் 
கலையே உறவாய், உறவே நிழலாய், 
நிழலே நிசமாய் நிசமே அழலாய், 
அழலே அழகாய், அழகே செழிவாய்ச்  

செழிவே செறிவாய் செறிவே பொழிவாய்ப்  
பொழிவே அமுதாய் அமுதே மழையாய், 
மழையே உலகாய், உலகே பொழிலாய்ப் 
பொழிலே உருவாய், உருவே வாழ்வோ!
===================================
இராச. தியாகராசன்.

வியாழன், 2 நவம்பர், 2023

இறையென்னும் மெய்ம்மை...

எங்கும், எதிலும், ஏழையின் சிரிப்பிலும், சிந்தனைத் தெளிவிலும், தனிமையின் இனிப்பிலும் இருப்பவர் இறைவன்....
==============================










===============================
இறையென்னும் மெய்ம்மை....
==============================
இறைவன் என்பவர், 
பாடலில் பிறப்பார்; 
ஆடலில் தெறிப்பார் - அப்படிப் 
பாட்டிலே, கூத்திலே 
பளீரென்றுஞ் சிரிப்பார்!

இறைவன் என்பவர், 
துரும்பிலும் உறைவார்; 
தூணிலும் மறைவார் - இப்படித் 
தூணுக்குப் பின்னிருந்தே 
எட்டியும் பார்ப்பார்! 
=======================
இராச. தியாகராசன்.

கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி...

இயற்கையெழிலால் நாவினில் பண்ணும் துள்ளும்; நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளும்; காதலதை அள்ளியிட்டு என்னுளத்தை அள்ளும்; உள்ளமதும் எத்தனையோ உள்ளும்; அஞ்சுகமுன் நினைவோ உள்ளத்தை பொள்ளும்; பொழிந்திட்ட முத்தங்கள் முள்ளெனவே நுள்ளும்; தேவதையாள் தேன்குரலோ நாவினிக்கும் நாதத்தை விள்ளும்!
========================================












========================================
கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி.....
==================================
பாவினத்தைப் பாட்டியலைப் பாவையரைப் 
பூவினத்தைப் பூம்பொழிலைப் புள்ளினத்தை 
ஆவினத்தை, ஆதவனைக் காண்கையிலே, 
நாவினிலே பள்ளுந்தான் துள்ளுதடி! 

வித்தகியின் விளையாட்டு வித்தையென, 
முத்தமிழும் நிறைந்திட்ட சித்தமதில், 
சித்திரத்துக் கயல்போலே பளிச்சென்று 
நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளுதடி! 

புள்ளியிடத் தோன்றுமெழிற் கோலமதாய், 
வெள்ளிநிறப் பொன்நிலவோ பூமியிலே, 
கள்ளதனின் போதைநிகர் காதலதை 
அள்ளியிட்டே என்னினைவை அள்ளுதடி!  

சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல், 
பித்தன்புத் தூரிகையாய்த் தீட்டுகின்றப் 
புத்தமுதக் காரிகையே உன்னெழிலால், 
எத்தனையோ உள்ளமதும் உள்ளுதடி! 

கொஞ்சியவள் விஞ்சியதால் காதலது 
மிஞ்சியநான் கெஞ்சியதும் எண்ணமெலாம்,
தஞ்சமென அந்நினைவுத் துயரமதும், 
அஞ்சுகமே என்னுளத்தைப் பொள்ளுதடி! 

பித்தனென நான்மயங்கிக் காய்கையிலே, 
நித்தமுமென் நெஞ்சகமே நெக்குவிட, 
சித்தினிநீ அன்றுதந்த செவ்விதழின் 
முத்தமெனை முள்ளெனவே நுள்ளுதடி! 

பாவனமாய்ப் பூத்தொளிரும் பாவையெனுந் 
தேவதையாள் தேன்குரலில் பாட்டிசைத்தப் 
பூவிதழே என்னுளத்தில் நாள்முழுதும்
நாவினிக்கும் நாதமதை விள்ளுதடி!  
===================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் = பறவையினம் 
நித்திலம்= ஆணிமுத்து
நுள்ளுதல் = கிள்ளுதல்
உள்ளுதல் = என்றும் நினைந்துருகல்
அஞ்சுகம் = தத்தை
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பொள்ளுதல் = தழலாய்ப் பொசுக்குதல்

செவ்வாய், 31 அக்டோபர், 2023

என்னிடத்தே உண்டு...

இந்த தாடித் தாத்தனிடம் என்னவுண்டு?  நான் யார்?  இப்பெயர்  இவ்வுடலுக்கா அன்றி உயிருக்கா?  இப்புவியகத்தில் எதற்காக வந்தேன்?  என்னதான் செய்கிறேன்.  இந்தக்  கிழவனிடத்தே அப்படி என்னதான் உண்டு!
=================================









=================================
என்னிடத்தே உண்டு.....
======================
அள்ளி அரவணைத்தே அன்புதருந் துணையுண்டு;
துள்ளியே ஆடுகின்ற துடிப்புமிகு மைந்தனுண்டு;
உள்ளமதில் உரமுண்டு; உணர்வினிலே மெய்யுண்டு;
கள்ளமில்லாக் கருத்துண்டு; கறையில்லா நட்புண்டு!

புள்ளினத்தைப் பூவிதழைப் பொழிலூடு பொற்கதிரைக்
கொள்ளை கொள்ளுஞ் கொஞ்சுதமிழ் மொழியினிலே,
வெள்ளமெனச் சொல்லெடுத்து விருத்தமும் வெண்கலியும்,
வள்ளையுடன் வண்ணப்பா வடிக்கின்ற திறனுண்டு!

கள்ளதனை உண்டதுபோல் கண்டபடி உளறியிங்கு,
சுள்ளெனவே எந்நாளும் தூற்றிநிதம் ஏய்ப்பவரைப்
பள்ளிச் சிறுமியரைப் பாழ்படுத்தி மாய்ப்பவரைப்
பொள்ளிவிடும் பாவெழுதிப் பொசுக்கிவிடும் அறமுண்டு!

இயல்பின்றி இப்புவியி லெந்நாளும் அலைந்தலைந்தே,
மயங்கிக் கிடக்காமல் மாமலையாய் நிமிர்ந்திங்கே,
அயர்வின்றிக் கொண்டலது அமுதமழை பொழிவதுபோல்,
கயமையெனுங் கசடுகளைக் கருக்கிவிடக் கவியுண்டு!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் - குருகினம், பொழிலூடு - எழிற்காவின் ஊடாக, 
பொள்ளுதல் - சுடுதல், கசடு - கோது/ பிழை.


சனி, 28 அக்டோபர், 2023

அரவமில்லா இரவுப் பொழுது..

இப்போது நகரத்தில், அரவமில்லா இரவுப் பொழுது எங்கே இருக்கிறது?  நாள் முடிவதோ நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்கு.  மீளவும் அதிகாலை 3 அல்லது 3.30 மணிக்கு.  இருந்தாலும் கவிதையென்பது நகர நரகத்துக்கு மட்டுமல்லவே!
=======================================











=======================================
அரவமில்லா இரவுப் பொழுது...
=======================================
அரவமில்லா இரவினிலும், 
இருள்வெளியின் கனவுதிக்கக் 
கனவினிலே மூழ்கியவர்,
நினைவுகளில் மாய்கின்றார்!

இளவயதின் எண்ணத்தில்
துளித்துளியாய்த் தளிர்க்கின்ற,
துயரோடும் சிந்தனையில், 
அயர்ந்தாடிச் சாய்கின்றார்!

நிழலெனவே நிதமலையும் 
பழகுசுகப் பார்வையதால்,
காதலெனும் கற்பனையாம் 
வேதனையில் வேகின்றார்! 

கடலெனவே ஓங்கியழும்,
உடலுருவ வேதனையால்,
காலமதே அரித்தழிக்குங் 
கோலமெனச் சோர்கின்றார்!

உணவின்றி உறக்கமின்றி,
பணமின்றி பண்புமின்றி,
உலகாய உணர்வுமின்றி, 
சீலமிலா தாடுகின்றார்!

தலைச்சுமையைப் பாராமல்,
அலைந்தலைந் ததன்மேலே
மலைபோலச் சேர்ப்பதுடன்,
உலைநெருப்பில் வீழ்கின்றார்!

களிபொங்கச் சினத்தீயில்,
அளைகின்ற மாந்தரிவர்,
முனைப்பின்றி முகப்பின்றி,
தனைமறந்தே போகின்றார்!

தயவுதிரும் போதினிலே
சுயமழியும் நேரமதில்
செயலிழந்து போகையிலே
அயலவரும் வருவாரோ?
==========================
இராச. தியாகராசன்

புதன், 25 அக்டோபர், 2023

பாரதி நான்மணி மாலை

உள்ளம் செய்யென்று சொன்னதால், பாரதி நான்மணிமாலை ஒன்றைக் கோத்திருக்கிறேன்.
========================================













========================================
பாரதி நான்மணிமாலை.
=======================
காப்பு
======
நோக்கறிய வைத்துவிடும் பாரதியென் வாக்கென்னும்
ஊக்கம் வளர்க்கும் ஒளி.
(பாரதி = மாகவி;  பாரதி = கலைமகள்)
 
வெண்பா
========
ஆணிப்பொன் ஆடகமா யள்ளியெனை ஆட்டுவிக்கும்
மாணிக்கப் பாவலனே  வண்டமிழின் காவலனே!
கேணி,நிலங் காளியிடம் கேட்டவனின் பாவெனக்கு
வாணியவள் தந்த வரம்.
 
கட்டளைக் கலித்துறை
======================
தேச மது(ம்)உயர் வுற்றி டவேவழி தேடியவன்;
நாச மறுநிலை யற்றி டவேதமிழ் நாடியவன்;
பாச மிகு(ம்)உளம் பெற்ற தனால்கவி பாடியவன்;
ஆசு களுமெரிந்(து) இற்றி டவேநட மாடியவன்!
 
எண்சீர் விருத்தம்
==================
சுழல்கின்றச் சூறையெனுங் காற்றைப் போன்றே
....தொன்மத்தைத் தொல்தமிழால் மாற்றும் வீச்சே!
தழலென்னுந் தீக்கதிரின் தீண்டல் போன்றே
....சலிப்பின்றி என்பாட்டைத் தூண்டும் மூச்சே!
எழிற்றோப்பி(ல்) ஓர்ந்துருகுங் குயிலைப் போன்றே
....என்னுள்ளே என்புருக அணைக்குந் தீயே!
உழல்கின்ற ஆழியதன் சீற்றம் போன்றே 
.....உயிர்த்துளியின் பாட்டெடுத்து வாராய் நீயே!
 
அகவற்பா
===========
விண்ணுயர் தமிழிலே விஞ்சிடும் புகழ்செய்
தண்ணெழிற் பாட்டிலே தாரணி போற்றிடக்
கோணலைக் கேடினைக் கூனதைச் சாய்க்கவே
வாணியும் தந்தவெம் வாரிதிப் புனலே;
வேணுவி(ன்) இசையாய் விண்ணின் நிலவாய்
வாணுதல் நங்கையாய் மன்னவன் கண்ணனைக்
காதலி வடிவிலுங் காட்டிய
ஆதவ பாரதி ஆர்த்தெழு(ம்) ஊற்றே!

வெண்பா
==========
சொல்லுக்கு வேந்தன் சுப்ரமண்ய பாரதி
வில்லுக்கு வேந்தன் விசயனெனச் சொல்லெடுத்துக் 
கொள்ளித் கணையெனவே கும்பினியர் ஆட்சியற 
தெள்தமிழில் பாடியதோ தேன்.

கட்டளைக் கலித்துறை
======================
ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் சாற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவிப் பேச்சுரைத்தான்!

எண்சீர் விருத்தம்
==================
கணிப்பொறியும் மென்பொருளும் மேலை நாட்டுக்
     கருவிகளென் றிருப்பதனால் ஆங்கி லத்தில்
நனிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை
     நையபுடைக்கும் பாரதியின் கூற்று முண்டே!
பிணிபிடித்த கண்களிலே மருந்து மிட்டு
     பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டும் என்ற
     கோணலறி வாளரென்று தூற்று கின்றான்!

அகவற்பா
===========
சொல்லரசுத் தம்பன்;  துயிலிலும் பாட்டால் 
வல்லரசை ஆட்டிய வம்பன்! கவியால் 
நல்லவரை ஈர்த்த நற்றமிழ்க் கம்பன்;
கொல்பகை கண்டால் கொதித்த கொம்பன்!
தேர்ந்த செங்கனித் தேனாய் அமிழ்தாய்
நேர்த்திப் பாப்புனை நேர்கவி பாரதியின்
சீர்த்தமிழ் சேந்திய புதுவை
சேர்ந்த பாரதி செந்தமிழ்ச் சாரதியே!

வெண்பா
==========
தூணெனவே அன்னியரை சோர்விலா தெதிர்த்துநின்ற 
மாணமுத பாரதியின் மன்னுதமிழ்க் பாக்களிலே
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல். 

கட்டளைக் கலித்துறை
======================
ஏதி லியாயழும் ஏழை களுக்குணர் வேற்றிடவே, 
சூது களையனற் சூரி யனாய்நிதம் சுட்டெரிக்கப்
பூத லமும்புகழ்  பாடி  டவேபல போர்ப்பரணி 
பாதை யினைச்சொலும் பாக்க ளெனுங்கவிப் பாட்டெடுத்தான்!

எண்சீர் விருத்தம்
==================
துடிக்கின்ற தீக்கனலின் ஆற்றல் பேச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பூச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்தகனிச் சுவைமுதச் சாற்றின் உள்ளம்! 
நடிக்கின்ற கும்பினியர் செய்த கேட்டை 
.....நயபுடைத்த நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே!

அகவற்பா
===========
மற்றவர் மொழியை அழிக்கவே இங்கு, 
மயங்கப் பேசியே ஏய்த்து வாழும், 
குற்ற உணர்வு ஏது மில்லாக் 
கூவிடும் அரசியல் பொய்யும் மாய, 
முற்றிய பைத்திய முரண்டு பிடிக்கும்
மூளைச் சலவை முழங்கும் பேர்களால்
வற்றிய தமிழைக் காக்க
மறுபடி பாரதி வாராய் இன்றே!

புதன், 18 அக்டோபர், 2023

வாழ்க்கைக் கல்வி

இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம்.  கற்றலே மேன்மை.  நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே.  கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம்.   ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும்.  நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது.  காலத்தீ  புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."

====================================








====================================
வாழ்வியற் கல்வி: 
(கட்டளைக் கலித்துறை)
===================
பரந்த மரத்திலே நூலின்றிச் சிக்கிய பட்டமதைத் 
துரட்டி யுடனேறி தொற்றி யெடுக்கத்  துணிந்தவனை, 
வரிப்பூண் மினுக்கும் மிளாறால் விளாசிய மாமனது 
கரந்தடி கூடப் புவியில் தகவான கல்வியன்றோ?

கண்ண னவரின் கடைக்கு விரைந்துநீ காற்றெனவே
எண்ணெய் யுடன்வா வென்றுபணம் தூக்குடன் என்றெனையே
அன்னை அனுப்பியச் சொல்மீறிக் கைச்சூதாம் ஆட்டமெனும்
கண்கட்டில் விட்டதாற் கண்ட அடிகூடக் கல்வியன்றோ? 

கட்டு நுடங்கிடைக் கன்னியைக் கண்ணாலே கண்டதுமே 
சிட்டின் சிறகாய் சுழன்றா டுகின்றவென் சிந்தனையாங் 
கட்டிலா மாமன மத்தாப்பை இல்லாளுங் காதுபற்றிக் 
கட்டறக் குட்டிடக் கற்றதும் கற்பகக் கல்வியன்றோ? 

பள்ளிக் கழிவறைப் போந்தே திருடன்போல் பாதகமாங் 
கொள்ளி யிடும்புகைக் கோதாம் பழக்கத்தைக் கொன்றுவிடச் 
சுள்ளெனச் சொல்லியே ஆசான் அரும்பால சுந்தரவர், 
கள்ள மழிக்கக் கொடுத்த அடிகூடக் கல்வியன்றோ? 

நற்றாயும் தன்னிடைப் பாரம் இறக்கிய நாள்முதலாய், 
வெற்றுடற் றீயிலே வெந்தங்கு வெண்ணீறாய் வீழும்வரை, 
உற்றிடுந் துன்பமே ஆயிர மானாலு முண்மையிதே; 
கற்பிக்கும் யாவுமே கோடி யெனுமருங் கல்வியன்றோ?
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
துரட்டி = மரமேவிய காய்/ பொருளை சிக்கலின்றி எடுக்கும் கோல்.
மிளாறு = தண்டிக்கும் பிரம்பு/ மெல்லிய குச்சி. 
கரந்தடி = மறைந்து சடுதியில் அடித்தல்/ கொரில்லாப் போர்முறை.
நுடங்கிடை = சிற்றிடை/ நுட்பமான இடை.
கோது = குற்றம்/ பதர்.

பெண்டிரின் உண்மை உயர்வு...

எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்!  எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்?  வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்! 

காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும்  கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி;  இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை.  இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள்.  கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள்.  வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.

===========================================

===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென, 
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத் 
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக் 
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!

மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்; 
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும் 
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்

சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில், 
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும், 
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!

கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து; 
விற்பனைக் கல்லவ் விளைந்திடும் முத்து! 
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை 
மூழ்கித் தேடி முனையும் போதிலே,

சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில், 
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்! 
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில், 
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!

நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க் 
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப் 
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில், 
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்! 
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர் 
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!

பல்சுவை யுணவால், பல்வகை யணியால், 
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ? 
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும் 
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.

பிகு:
=====
நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல், முத்துக் குளித்தல் (பரதவர் மீனவர் எனில், நுளையர் முத்துக் குளிப்பவர்)

சனி, 1 ஏப்ரல், 2023

நூற்கடல் திரு தி.வே.கோபாலய்யர்...

காவிரிக்கரையில் திரு வேங்கட்டராமன், திருமதி இலக்குமியம்மாள் ஆகியோர்க்கு நல்மகனாய் பிறந்தவர், மாந்தக்கணினி, நூற்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட திரு தி.வே.கோபாலய்யர்.  அவர் வாழ்ந்த காலத்தில், அவருடன் அளவளாவி, என்றன் இலக்கண ஐயம் பலவற்றை அகற்றி, நான் தெளிவு பெற்றிருக்கிறேன்.  அவருடைய 26 ஆண்டுகால உழைப்பில் உருவான18 தொகுப்புகள் கொண்ட, "பேரிலக்கண அகராதி," தானெனக்கு இற்றைக்கும் என் இலக்கண ஐயங்களைக் களைய உதவுகிறது.

==================================

==================================
நூற்கடல் தி.வே.கோ.
====================
நல்வேங்க டத்தவனின்* நற்றிருவின்* நெஞ்சினிக்கச்
செல்வச்சீ ரென்றேதி வேகோபா லய்யரவர்,
பல்கலையின் நூற்கடலாய்ப் பன்னாடு மேத்திடவே
நெல்மணக்குங் காவிரியின் நீர்க்கரையிற் றான்பிறந்தார்!
 
** சீவகப்பெ ருங்கதையுஞ் சேனாவ ரைய்யமுடன்,
     தேவாரம், கம்பரசம் தேந்தமிழி லக்கணங்கள், 
     நாவார நாம்படிக்க நாலாயி ரத்தின்நற்
     பாவுரையும் பைந்தமிழில் பாங்காகத் தான்தந்தார்!

நேயப்பா வாணரவர் நீணிலத்திற் றந்துவிட்ட
தூயதமிழ்ப் பேரகரா திக்கிணையாய் நம்மவரும்
ஆய்ந்தறிந்தி லக்கணத்திற் கற்புதத்தொ குப்பதனை
தோய்ந்தறிந்து தந்ததமிழ்த் தொண்டு!
=======================================
இராச தியாகராசன்

பிகு: 
===
*வேங்கடத்தவன்:     தந்தை பெயர்: வேங்கட்டராமன்.
*நற்றிரு                   :     தாயின் பெயர்: இலக்குமி அம்மாள்.
**நூற்கடல் தி.வே. கோபாலய்யர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு    
    கொடுத்துள்ளேன் பாடலில்.

வியாழன், 30 மார்ச், 2023

உள்ளங்கவர் காதலி....

பலருக்கும் அன்பான காதலி இருக்கக் கூடும்.  அவருடனேயே திருமணமும் ஆகியிருக்கக் கூடும்; ஆகாமலும் போயிருக்கக் கூடும்.  ஆனால் காதலென்பது மெய்ம்மை.  என்னுடைய உள்ளங்கவர் காதலி யாரென்று கேட்கிறீர்களா?

================================

மகாகவி பாரதி













================================
யாரென்றன் உள்ளங்கவர் காதலி?
================================
காவதனிற் கதிர்பரப்புங் கதிரவனைக் காண்கையிலே, 
மேவுநிலா நெஞ்சகத்தில் நெருஞ்சியெனத் துளைக்கையிலே, 
பூவமர்ந்து வண்டொன்று பூந்தேனைச் சுவைக்கையிலே,  
நாவமர்ந்த நற்கவிதை நறுந்தேனாய் சுரக்கையிலே,
 
மழலைகள் மண்மேலே மலர்போலப் பறக்கையிலே, 
குழலூது மிசைகூட குளிர்வளியா யுறைக்கையிலே, 
எழிலாரு மோவியமு மினித்தென்னை யிழுக்கையிலே, 
விழிக்குமந்த வைகைறையும் வெண்பட்டா யொளிர்கையிலே, 

அன்பின்றி எதற்கிந்த அவலமென்றே அழுகையிலே, 
என்வாழ்வில் நான்தளர்ந்தே இடிந்தொருநாள்  விழுகையிலே, 
உன்மத்தம் பிடித்தவன்போ லோடித்தேய்ந்  தெரிகையிலே, 
பின்னல்க ளென்வாழ்வின் பேதமையாய்ச் சிரிக்கையிலே

எனைச்சேர்ந்த என்னவளும் என்னருகிற் றானிருந்தே, 
பனித்துகளின் சாறெனவே பற்றியெனைப் பரிவுடனே 
கனிச்சுவையா யினிக்கின்ற கற்கண்டுக் களிப்பூட்டி, 
மனச்சோர்வைக் கணப்போதில் மாயமென மாற்றிடுவாள்!

உள்ளமதி லின்பஞ்சே ருயர்வான தருணத்தில், 
கள்ளமற இயல்பெழிலாய்க் கைக்கோத்து வந்திடுவாள்;
வெள்ளமென இயற்கையவள் வெளிப்போந்த  நிலையழகை, 
உள்வாங்கும் வேளையிலு முடனிருந்தே சுவைத்திடுவாள்!

அகவையோ மீறியுனைக் காடணுகும் வேளையிலே, 
முகநூலில் பகர்கின்றாய்; அகச்சுவையின் காதலியை!
நகைப்புத்தான் வெட்கமில்லை; நானிலத்தோர் சிரிப்பாரே!
பகிர்விதுவோ பண்பென்று பார்முழுதும் கரிப்பாரே! 

சீரணங்காய்த் துணையிருக்கச் சீயமென மகனிருக்க, 
யாரவந்தக் கள்ளியென யாவருமே கேட்பீர்கள்; 
சாரதியாய்க் கவிச்சொடுக்கித் தமிழ்த்தேரி ழுத்திட்ட 
பாரதியின் கவிதையெனும் பைங்கிளிதா னக்கள்ளி!

காலமெலா மென்னுடனே காதலியாய்க் கற்பனையில், 
ஆலெனவே ஆழ்ந்தூன்றி அரவணைத்து நிற்பவளைச் 
சீலமொடு சீர்த்திகளைச் சேர்த்திருக்க வைப்பவளை, 
மேலிருந்து படியுங்கள்; மீண்டுந்தான் படியுங்கள்!
=========================================
இராச. தியாகராசன்.

சனி, 10 டிசம்பர், 2022

பாட்டன் மறுபடியும் வரவேண்டும்....

சிந்துவேந்தனுக்குப் பிறந்தநாள் (டிசம்பர், 11ஆம் நாள்).   மக்கள்கவி, மாந்தநேயன், நாட்டுப்பற்றாளன், விடுதலைப் போராட்ட வீரன், சமுதாயச் சீர்திருத்தவாதி,  என்றெல்லாம் ஊரெங்கும் போற்றப்பட்ட மகாகவியின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் வெறும் 14 பேர்கள் மட்டுமே!  இருக்கும் போது ஒருவரின் மதிப்பைப் போற்றாது விட்டுவிட்டு, இல்லாமல் போன பின்னர், நம்நாட்டு அரசியலார் செய்கின்ற மரியாதை என்ன; சூட்டுகின்ற கணக்கிலடங்கா மாலையென்ன; நடத்துகின்ற நாடகமென்ன?

கம்பன், புகழேந்தி, ஔவை, ஒட்டக்கூத்தர், காளமேகம், தாகூர், பாவேந்தர், கவியரசு, சேக்சுபியர், காஃப்கா, யீட்சு, கீட்சு, வேட்சுவர்த்து, நெருடா, எசுரா பவுண்டு, பைரன் இப்படிப் பலரின் (இன்னும் பல கவிஞர்கள்) பாடற்   படைப்புகளில் மூழ்கித் திளைத்தே அகங்குளிரச்  சுவைத்திருந்தாலும்,  நம்முடைய சிந்து வேந்தனின் கவிதைகளே என்றன் முதல் காதலி; அவனே என்றன் கவிதைகளின் தோணி.  இந்தப் பிறந்தநாளில் அவனுடைய மொழியாற்றலை, கவித்திறனை, நாட்டுப்பற்றை, சமத்துவ அறத்தை, குமுகாயச் சிந்தனையை எண்ணி நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.  

=========================================
தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்  
காணிநிலம் காளியிடம் கேட்டவனின் பாக்களிலே 
காணுங் குமுகாயக் கார்முகிலாஞ் சிந்தனையென்
தோணி யெனவாகுஞ் சொல்.
=============================













=============================
பாட்டன் வரவேண்டும் இன்று!
=============================
மொழியென்னும் தமிழ்புரவித் தேரைப் பூட்டி,
.....மோடுமுட்டிச் சழக்ககலப் பாட்டுந் தீட்டி,
வழக்கென்றும் மன்றென்றும் அலைந்தே சோர்ந்த, 
.....மாகவிக்கின் றூரெல்லாம் முழங்கும் வாழ்த்து!
செழுமையுடன் சுற்றமதோ வாழ்த்த வில்லை;
.....செருக்கர்கள் நீபிழைக்க விடவு மில்லை;
இழுத்திழுத்தே ஊரெங்கும் ஓட விட்டே,
.....இளைப்பார இடமுமின்றி மாய்ந்தா யன்றே!

துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை பூச்சு; 
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீற்றப் பேச்சு! 
வெடிக்கின்ற வெந்நீரின் ஊற்று வெள்ளம்; 
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்! 
நடிக்கின்ற அரசியலார் செய்யும் கேட்டை 
.....நயபுடைக்கும் நெருப்புநிகர் கவிதைச் சாட்டை! 
மடிந்தழியும் எம்மொழியைக் காக்க வென்றே 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

மற்றவரின் தாய்மொழியை அழித்தே இங்கு, 
....மயக்குமொழி பேசிநிதம் ஏய்த்தே வாழும், 
குற்றமன உணர்வுநிலை ஏது மில்லாக் 
.....கொக்கரிக்கும் மேட்டிமையின் திட்டம் மாய, 
முற்றிவிட்ட பைத்தியஞ்செய் சட்டஞ் சாய, 
.....முத்தமிழால் சொல்லடுக்கும் பாட்டுத் தீயால், 
வற்றிவிட்ட வண்டமிழை காக்க வென்றே, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 

கரிமிதித்தோ காலனவன் கவர்ந்தா னும்மை? 
.....கால்வருடிக் கயவருனைக் காட்டித் தந்தே, 
சிரித்தபடி சிலுவையிலே அறைந்தாற் போலச் 
.....தீயுளத்தோர் வஞ்சகமாய்ச் சாய்த்து விட்டார்; 
எரித்தழிக்க முடியாத காற்றின் வீச்சாய், 
.....எத்தரையே பொசுக்கிவிடும் கவிதை மூச்சாய், 
மரிக்கொழுந்தின் மயக்குமந்த மணத்தை போல, 
.....மறுபடியும் பிறப்பெடுத்து வாரா யின்றே! 
==================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 29 நவம்பர், 2022

கயல்விழியும் கூருகிரோ.....

காதலெனும் கடல்............

இரைகின்ற பெருந்நாகமோ இல்லை பின்னலெனும் வெறுங்கூந்தலோ? சீறிவரும் கூருகிரோ இல்லை சீராரும் கயல்விழியோ?

=========================================








========================================= 
அவனுக்கோ...
===========
சேர்த்துக் கட்டி வரிந்தாலும், 
பார்த்தால் உளம்கொய்திட,
ஆர்ப்ப ரித்தே இரையுமொரு, 
பெருந்நாகம் என்றானால்:

அவளுக்கோ...
===========
நீள்விரலால் வாகொதுக்கத்
தோள்சரிந்தே காதோரங்
காற்றலைவிற் கதைபேசும், 
பின்னலெனும் வெறுங்கூந்தல்...

அவனுக்கோ...
===========
உளங்கிழிக்கச் சட்டென்றே, 
மின்னலதன் வடிவதுவாய், 
உயிர்குடிக்கச் சீறிவருங்  
கூருகிர்கள் என்றானால்;

அவளுக்கோ...
===========
அவனெழிலை அமிழ்தெனவே 
அன்பதனால் அன்றாடம்
தான்குடிக்க ஏங்குகின்ற, 
சீராருங் கயல்விழியோ?
====================
இராச. தியாகராசன்

பிகு:
கூருகிர் = கூரிய நகம்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாயக் குதிரை......

என்னுடைய மைந்தர் வைகறைச்செல்வன், 2015ஆம் ஆண்டென்னை ஒரு குதிரைப் பாட்டு எழுது என்று பணித்ததால், வந்த வரிகளிவை!  பாயுங்குதிரை,  மாயக்குதிரை, பாட்டுக் குதிரை, வேட்டுக் குதிரை, காட்டுக் குதிரை, நெருப்புக் குதிரை, நேசக்குதிரை, மந்திரக்குதிரை;  இஃதொரு தந்திரக் குதிரை.

==========================================













===========================================|
மாயக்குதிரை....
===================
சிட்டாப் பறக்குது சின்னக் குதிரை;
.....சீறிப் பறக்குது செல்லக் குதிரை;
பட்டாப் பறக்குது பஞ்சுக் குதிரை;
....பரிவாப் பறக்குது பருவக் குதிரை;

கருக்காப் பறக்குது காட்டுக் குதிரை;
....காத்தாப் பறக்குது கருப்புக் குதிரை;
செருக்காப் பறக்குது சீலக் குதிரை;
....தெறிக்கப் பறக்குது சீமைக் குதிரை;

காராப் பறக்குது கர்வக் குதிரை;
....கழுகாப் பறக்குது கனவுக் குதிரை;
சோராப் பறக்குது சூரக் குதிரை;
....சோக்காப் பறக்குது துப்புக் குதிரை;

பாடிப் பறக்குது பாசக் குதிரை;
....பழகிப் பறக்குது பாலக் குதிரை;
ஆடிப் பறக்குது ஆசைக் குதிரை;
....அழகாப் பறக்குது ஆக்கக் குதிரை

விண்ணில் பறக்குது மின்னல் குதிரை:
....விரைந்தே பறக்குது வெள்ளைக் குதிரை;
மண்ணில் பறக்குது மட்டக் குதிரை;
....மயக்கப் பறக்குது மாயக் குதிரை;

பாய்ந்தே பறக்குது பழுப்புக் குதிரை;
....பதுங்கிப் பறக்குது பருந்துக் குதிரை;
மாய்ந்தே பறக்குது மஞ்சுக் குதிரை;
....வசமாப் பறக்குது வண்ணக் குதிரை;

தழலாப் பறக்குது சந்தக் குதிரை;
....தணலாப் பறக்குது தங்கக் குதிரை;
அழலாப் பறக்குது அன்புக் குதிரை;
....அறிவாப் பறக்குது அருமைக் குதிரை;

செழிவாப் பறக்குது செவத்தக் குதிரை; 
....தீயாப் பறக்குது செருவக் குதிரை
நிழலாப் பறக்குது நேசக் குதிரை;
....நெருப்பாப் பறக்குது நெஞ்சக் குதிரை;

பொறியாப் பறக்குது பொள்ளுக் குதிரை;
....பூவாப் பறக்குத்து பொங்கு குதிரை;
அறமாப் பறக்குது ஆவல் குதிரை;
....அழிக்கப் பறக்குது ஆட்டக் குதிரை;

இடியா பறக்குது இரும்புக் குதிரை;
....எடுப்பாப் பறக்குது எரியுங் குதிரை;
முடுக்காப் பறக்குது மோக குதிரை;
....முறுக்காப் பறக்குது மோனக் குதிரை!

எழிலாப் பறக்குது இன்பக் குதிரை;
....எமனாப் பறக்குது எண்ணக் குதிரை;
பொழிவாப் பறக்குது போட்டிக் குதிரை;
....பொலிவாப் பறக்குது போத்துக் குதிரை!

பாட்டாப் பறக்குது பளிங்குக் குதிரை;
....பதமாப் பறக்குது பண்ணுக் குதிரை;
வேட்டாப் பறக்குது வெளிச்சக் குதிரை;
....விரசாப் பறக்குது விந்தைக் குதிரை!
==================================
இராச. தியாகராசன்

பிகு:
====
துப்பு = வலிய
செருவம் = போர்
மட்டக்குதிரை = உயர்ந்த இனக்குதிரை
மஞ்சு = முகில்
பொள்ளுதல் = தீச்சூடு
அழல் = நெருப்பு, தீச்சுவாலை
முடுக்கு = மிடுக்கு
போத்து = சிற்றகவை

புதன், 23 நவம்பர், 2022

இல்லத்தரசியின் கதை...

இயல்பு வாழ்வியலில் அன்பு செய்வதன்றி, துணைவர் துணைவியை அடிப்பதோ, துணைவி துணைவரை அடிப்பதோ என்றும் சரியில்லை;  எந்தக் கருத்து வேற்றுமையையும், ஆர, அமர்ந்தே, ஆழ்ந்து, விவாதித்துத் தீர்வு காண்பதுதான் முறையான வழி. 

இது நகைச்சுவை இழையோடுமொரு கவிதை அவ்வளவே!  படியுங்கள்;  சுவையுங்கள்;  சிரியுங்கள்! 

(நான்கைந்து தமிழ்ச் சொற்களையும் பெய்திருக்கிறேன்: பொருள்களின் பெயரை மாற்றுவது கொலைக் குற்றம் என்போர், தயைகூர்ந்து கடந்து போகவும்.  விவாதத்திற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை/ நேரமும் இல்லை!) 
============================================


============================================
ஒர் இல்லத்தரசியின் கதை....
==========================
நான்செய்யும் நாவூறும் நற்புழுக்குத் தட்டம் பிடிக்கவில்லை;
தேன்போன் றினிக்குமென் சுவையார் கடினி பிடிக்கவில்லை;
வான்வாழுந் தேவர் மயங்குமாச் சில்லும் பிடிக்கவில்லை;
கோன்மக்கள், குவலயம் கொண்டாடுங் குளம்பி பிடிக்கவில்லை;

தேன்சுவை ஊறவே நான்கலக்கித் தருகும் தேநீரும் பிடிக்கவில்லை;
ஊன்சுவை யார்க்குமென் மாட்டூன் வறுவல் பிடிக்கவில்லை;
நான்தோய்த் தடுக்கும் காலுறை, துணிகளும் பிடிக்கவில்லை;
என்றும்நான் செய்கின்ற இல்லப்பணி எதுவுமே பிடிக்கவில்லை;

என்தவறே தென்றுநான் இடிந்தமர்ந்து நினைத்தே நைந்தபோது,
என்னுளத்தில் பளிச்சென்ற மின்னலாய் வெட்டிய எண்ணமொன்று;
அன்றவனின் அன்னைபோல் கன்னத்தில் விட்டேன் ஓரறை;
இன்றவனுக்கு என்செயல் எல்லாமும் இயல்பாய்ப் பிடிக்கிறது!
======================================
இராச. தியாகராசன்.

பிகு:
======
புழுக்குத் தட்டம் = கேசரோல் (Casserole)
கடினி = கேக்கு (Cake) 
மாச்சில்லு = பிசுக்கோத்து (Biscuit) 
குளம்பி = காப்பி (Coffee)
தேநீர் = சாயா (Tea -  என்ன செய்ய, இதையும் சொல்ல  வேண்டிய காலம்!)
மாட்டூன் வறுவல் = மாட்டிறைச்சி வறுவல் (Beef Stew)
காலுறை = சாக்சு (Socks)

ஞாயிறு, 6 நவம்பர், 2022

கவியெனச் சாற்றினனே.....

தளிர்த்தே அழிந்த கனவுக் கவிதை, 
பொலிந்தே அழிந்த கவிதைக் கனவு......

==================================











==================================
கவியெனச் சாற்றினனே.
(கட்டளைக் கலித்துறை)
=======================
வளமும் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே; 
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடும் தெண்டிரையே; 
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே; 
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!

மலர்ந்து மணந்தே மனத்தை கவர்ந்திடும் மல்லிகையே;
சிலிர்த்து நிதமும் சிந்தையை அள்ளிடுமச் செம்மலரே;
மலிந்த பரிவால் என்னை அணைத்திடும் மதிமுகமே; 
பொலிந்தே அழிந்த கனவைக் கவியெனப் போற்றினனே!
======================================================
இராச. தியாகராசன்.

எயிட்சு இல்லா இனிய உலகம்....

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி,  புதுவையரசில் எனக்கொரு பரிசிலும் பெற்றுத் தந்த எண்சீர் அகவல் விருத்தமிது.  "மாந்தரினமே முன்னெடுப்பீர் (LET COMMUNITIES LEAD)."  பன்னாட்டு ஆட்கொல்லி ஆட்கொல்லி நோய்க்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும், போதை ஊசிப் பழக்கத்தை வேரறுப்பீர்; ஓரினச் சேர்க்கையை புறந்தள்ளுவீர்;  பிறன்மனை வேண்டாத பேராண்மையே பேரறம் என்று வாழ்வீர்; சமூகத்தில் ஆண்/பெண் என்று பேதமில்லாமல்  கலந்துறையும் பணிகளில் இருக்கும் பேர்களும், நீண்ட தூரம் சரக்குந்து ஓட்டுகின்ற பேர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்/பெண் இரு சாராரும், மனவுறுதியுடன் வேற்றாளிடம்  உடலுறவில்லாமல் இருக்க உறுதி கொள்வீர்;  (அப்படி உறவில்லாமல் இருக்க ஏலாதென்னும் குறைந்த விழுக்காடு பேர்கள் உடலுறவின் போதாவது உறையைப் பயன்படுத்துவீர்!).

புதுவையில் இற்றைக்கு 100க்கு 95 விழுக்காடு பேர்கள் மணமுடித்ததும் மணவினையை முறையாகப் பதிவு செய்கிறார்கள்.  ஆகவே திருமணத்தைப் பதிவு செய்கையில், மணமக்கள் இருவர்க்கும் ஆட்கொல்லி நோயில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கக் கட்டாயமாக்கப் படுத்தப்பட  வேண்டும் என்று நான் பேசுமிடமெல்லாம்  வலியுறுத்துகிறேன்.  இன்னும் வேளைதான் வரவில்லை.
=============================================








============================================
எயிட்ஸ் இல்லா இனிய உலகம் 
============================================
(இதனை ஆதாஹ சந்துமா அல்லது உலகிலுள்ள 
பெரியோரே என்ற மெட்டில் பாடலாம்)
============================================
திருநிலவாய்ப் பூத்துநிற்கும் அமுதாம் பெண்ணே!
.....தித்திக்கும் வாழ்க்கையெனுங் கடலில் உன்னை, 
அருமையுடன் அனுப்பிடவே உன்றன் பெற்றோர்
.....அலைந்தலைந்து மணமகனைத் தேர்வுஞ் செய்தார்!
விருந்தின்று போட்டதுபோல் காணே னென்றே, 
.....விருந்துண்டு திருமணத்தை ஊரார் போற்ற, 
கரும்பினியாள் கழுத்தினிலே தாலி யிட்டு, 
.....கனவுகளும் நனவாக மாலை யிட்டான்!         (திருநிலவாய்)

மணமுடித்து திங்களைந்து போக வில்லை;
.....மயக்கமென மருமகனும் நாளுஞ் சொல்லித்
தணலெரிவாய்த் பெண்ணவளின் அன்புந் தீய,
....தளர்ந்துடலும் குறுகிநிதம் என்புந் தேய,
மணமகனி னுடலினுள்ளே உயிரைக் கொல்லும்,
....மாவரக்கன் புதுந்துவிட்ட சேதி கேட்டுக் 
கணக்கின்றிச் சீர்களெல்லாம் சேர்த்த தந்தை,
.....கட்டிவைத்த கோட்டைகளுஞ் சரிய நின்றார்! (திருநிலவாய்)

கோனோடு பெண்ணவளும் உறவில் சேர்ந்தே,
....குறைவில்லா இல்லறத்தின் இன்பம் தேர்ந்தே,
வானோடு வாழ்ந்திருக்கும் நிலவைப் போல, 
.....வன்சுடராய் வீசுஞ்செங் கதிரைப் போல, 
தேனோடு வானமிழ்தம் கலந்தாற் போல,
.....தேர்ந்தொருவ ரொருத்தியென வாழும் வாழ்வில், 
ஊனோடு கலந்திருக்கும் உயிரைக் கெல்லி, 
.....உறவறுக்கு முயிர்கொல்லிக் கிடமு மேது?    (திருநிலவாய்)

திருமணத்தின் முன்பேயே வீணில் தீய்ந்தே, 
.....சிதைந்தழியும் வழிகளிலே நடந்தே வீழ்ந்த, 
பெருந்துயரே கரணியமா யறிந்த போதில்,
.....பேர்துலங்கச் செய்திட்ட செலவில் சேர்த்தே,\
ஒருசெலவாய் மருத்துவரின் குருதிச் சான்றை, 
.....ஓர்ந்திடாத அறிவின்மை; உறுதி கொள்வோம்!
மருத்துவரின் சான்றதனை மணத்தின் முன்பே, 
.....மணமக்கள் இருவர்க்கும் கேட்போ மென்றே! (திருநிலவாய்)
==================================
இராச. தியாகராசன்.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

அரைக காசும் உன்னுடன் வருமோ???

வாழ்வது சிலநாள், சிலரை விரும்புவதேன்?  சிலரை வெறுப்பதுமேன்?  அனைவரையும் நேசியுங்கள்;  தாழ்வுற்றவர்க்காய் உதவுங்கள்.  வரும்போது எதையும் கொண்டுவரவில்லை: போகும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை.  இறங்கி, இருந்து, இறக்கும் வரையில் இருப்பிற்கொரு காவல் நாம் என்றுணர்ந்து வாழுங்கள்;  அடுத்தவர்க்காய் வாழுங்கள்; அடுத்தவரின் அவலநிலையில் அடுப்பெரிக்காமல் வாழுங்கள்!  

என்காலம் முடியும் போது, 100 (அ) 200 பேர் இரங்கற் சேதி தெரிவித்துவிட்டு, ஓரிரு வாரம் கழித்து, அவரவர் பணியைப்  பார்க்கப்  போகிறார்கள்; நெருங்கிய சொந்தங்கள் இன்னும் கூடுதலாய் ஓராண்டோ/ ஈராண்டோ நினைந்துருகப் போகிறார்கள்;  இதுதான் வாழ்வியல் நீதி.  நானிங்கு சொன்னவற்றில் இருக்கும் அறமென்பது என்றும் மாறாதது.  அறத்தின்பாற்பட்டு வாழ்வோரின் வாழ்வும்;  அவர்கள் சுற்றத்தின் சுகமும்;  பிள்ளைகளின் நலமும் என்றென்றைக்கும் உயர்ந்தே தானிருக்கும்.
===============================================








===============================================
அரை காசும் உன்னுடன் வருமோ.....
===============================================
பெற்றவரை அன்பதனால் தாங்குகின்ற, 
பிள்ளைகளோ பெருமைகளைச் சேர்த்துவிடும்;
கற்றவரின் உள்ளத்திலே ஓங்குகின்ற,
கல்வியெனும் செல்வமதை வாங்கிவிடும்!

தன்னாட்டின் மக்களையே மாக்களெனத்
தானெண்ணித் தருக்குடனே ஆண்டவரின்,
முன்நிகழ்ந்த வரலாறு சொல்லுகின்ற,
முகவரியை அறியாமல் தினந்தோறும்,

கைந்நிறைய காசென்றும் மணிக்கணக்கிற் 
காத்திருந்து கூவுகின்ற மக்களென்றும்,
வையகத்தின் புகழ்போதை தலைக்கேற
வசதியொடு மன்னரென வாழ்வோரும், 

மொத்தசுகம் பெரிதென்றே அலைந்தாலும்,
முற்றியிங்கு சருகிலையாய் உதிர்கையிலே
அத்தனவன் கயிற்றாட்டம் நிற்கையிலே,
அரைகாசும் அவருடனே வருமாமோ?
================================
இராச. தியாகராசன்

காப்பதுன்றன் பாரமே....

கருப்பையா, கருப்பையா காப்பதுன்றன் பாரமே! அருள்மிகு ஐயப்பன் பஜனையில் நான் பாடும் பாட்டின் மெட்டு.  

===================================


===================================
கருப்பையா, கருப்பையா
==========================
கருப்பையா, கருப்பையா 
குலதெய்வக் கருப்பையா;
கருப்பையா, கருப்பையா, 
கருணைசெய்வாய் கருப்பையா                     (கருப்பையா)

காட்டின் நடுவில் கனசோராய்
கருப்பன் என்ற பேரினிலே,
தபசில் அமர்ந்தச் சாமியை,
தளபதி கருப்பா காக்கின்றாய்!      (தளபதி) (கருப்பையா)

அவல்பொரி கடலைவைத்து
அன்பாய்ப் பூசை செய்குவேன்;
கருப்பட்டிஎள் வைத்தேநான்
கருப்பனுன்னைப் பாடுவேன்!         (கருப்ப)   (கருப்பையா)

புனுகுதனை வாங்குவேன்;
புருவங்களில் சாத்துவேன்;
கண்மலரும் சாத்துவேன்
காப்பதுன்றன் பாரமே!                       (காப்ப)  (கருப்பையா)

பதினெட்டு படிகளிலே
வாழுமென்றன் கருப்பனே;
கதியின்றே அலையுமெனை
காப்பதுன்றன் பாரமே!                        (காப்ப)   (கருப்பையா)
=================================
இராச. தியாகராசன்.

பாப்புதுவை வாழியவே....

 நற்புதுவை வாழியவே; கவிப்புதுவை வாழியவே; பாப்புதுவை வாழியவே!

=====================================









=====================================
எம்புதுவை வாழியவே....
=======================
திரையொலிக் கடல்போற் றிகழ்ந்திடுந் தமிழிலே
வரைந்திடும் வண்ணமாய், வள்ளையாய்ச் சிந்துமாய்,
நரையறா இலக்கணஞ்சேர் நற்கவிதை நான்வனைய,
கரையிலா இலக்கியக் கவிப்புதுவை வாழியவே!

நிறைவான இலக்கியமும், நேர்த்திமிகு இலக்கணமும்,
நறுந்தேனாய்ப் பொலிகின்ற நாவினிக்கும் பாட்டியலும்,
அறம்பொருள் இன்பவியல் அத்தனையும் நானெழுதச் 
சிறப்புடனே மின்னுகின்றச் சீர்புதுவை வாழியவே!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழிற் சொல்லெடுக்கித் 
தூவானச் சாரலென தொல்தமிழில் பன்னூறாய்
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனைய
பாவானம் போலொளிரும் பாப்புதுவை வாழியவே! 
======================
இராச. தியாகராசன்

வருவானே நிச்சயம் வருவானே....

மழலையரோ, இளையவரோ, முதியவரோ, மகளிரோ, ஆடவரோ, கல்வி கற்றவரோ, கற்காதவரோ,பாவலரோ, படித்தவரோ, பண்பாளரோ, பற்றுள்ளவரோ, பற்றறுத்தவரோ, மந்தையுளம் கொண்டவரோ, அரசியலாரோ, ஆத்திகரோ, நாத்திகரோ எவராயினும் சரி அவன் வரும்போது எவரும்/ எதுவும் தடுக்க ஏலுமோ?
===================================









===================================
வருவானே நிச்சயமாய் வருவானே...
===================================

(எடுப்பு)
========
நாட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும்
வீட்டுக்குள்ளும், உறவுக்குள்ளும் 
காட்டுக்குள்ளும், கொட்டிமுழக்கி....                    (வருவானே)
வருவானே நிச்சயமாய் வருவானே!

(தொடுப்பு)
===========
அவனிங்கே உன்வாழ்வில் வருவானே;
தவறாமல் உனைத்தேடி வருவானே!    
அறுந்தாடும் வாலெனவே ஊழ்வினையால், 
இறுமாப்பில் நானென்றே அலைந்தாலும்,         (வருவானே)

(முடிப்பு)
=========
தடுத்தாலும் அரண்டிங்கே அழுதாலும், 
சொடுக்கினிலே தாள்பற்றி தொழுதாலும், 
வெடுக்கென்று மிரண்டிங்கே ஒளிந்தாலும்,
அடுக்கிச்சேர் செல்வத்தை அளித்தாலும்,           (வருவானே)

நடித்தாலும் தரைநோகத் துதித்தாலும், 
துடித்தாலும் சுள்ளென்றே மிதித்தாலும், 
கொடுத்தாலும் வேதனையில் கொதித்தாலும், 
வெடித்தாலும் கோடிதந்தே மதித்தாலும்,             (வருவானே)

கறும்பணத்தின் ஊழலிலே களிப்பவரின் 
அறமில்லா ஆட்டங்கள் சாய்த்துவிட,
திறனில்லா ஆட்சியரும் மீளாமல்  
உறங்கிவிழும் வேளையிலே உயிர்பறிக்க,          (வருவானே)

என்படத்தை என்பெயரை எழுதென்று,
மன்னரென ஆடுவோர்க்கும், தலைபொறித்தச்
சின்னத்தின் சிற்றெழுத்துக் கட்டளையால்,
மன்பதையில் உனைத்தேடி உயிரெடுக்க,          (வருவானே)

மழலைகளோ, முதியவரோ, கவிஞர்களோ, 
எழில்பூத்த நங்கையரோ, இளையவரோ,
பழந்தின்று கொட்டையிட்டத் தீயவரோ, 
கொழுப்பெடுத்தக் கொடுங்கோல ரானாலும்,  (வருவானே)

கருகருத்தக் கொம்புமிளிர் அணிநடை
எருமையதன் மீதேறி ஒருகரத்தில் 
திரிசூலம், மறுகரத்தில் உயிர்பறிக்கும்
பிரிபோன்ற பாசமதைச் சுழற்றியிங்கு                (வருவானே)
==============================================
இராச. தியாகராசன்

பிகு: 
அணிநடை எருமை = சங்கத்தமிழ் சொல்லாட்சி.
எமனின் பாசம் = உயிர்பறிக்கும் கயிறு.