ஞாயிறு, 23 ஜூன், 2024

அகமும், புறமும்....

அகமும், புறமும், அகநானூறாய், புறநானூறாய்ப் பொலிகின்றன நந்தமிழ்ச் சங்க இலக்கியத்தில்.  தமிழர் நாம் அகம், புறம் இரண்டையுமே இணையாக கொண்டே வாழ்ந்திருந்தோம்.   இற்றைக்கிருக்கும் வேலன்டைன் நாளைக்கூடத் தமிழர்நாம் அகமென்று சொல்லி, காமன் பண்டிகையாய்ப் போற்றினோம்.
மற்போரை/ விலங்கு வேட்டையைப் புறமென்றே  மல்லாட்டமாய், பாரி வேட்டையாய்ச் சாற்றினோம்.
==========================================








========================================
அகமும் புறமும்....
(கொச்சகக் கலிப்பா)
=================
நெடும்புற மென்கின்ற நிலைதனையே வெளியென்றுந் 
தொடுமகம் என்கின்ற தோற்றத்தை உள்ளென்றும், 
நடப்பினிலே நந்தமிழர் நன்றாகக் கருத்தூன்றிப்
படிப்பதுவும் பாங்காமோ பகன்றிடுவீர் பாவலர்காள்!

புறம்தமிழர் வாழ்வினிலே போர்முழக்கம் வீரமெனில், 
செறிவான அகமங்கே சேர்ந்துறையுங் காதலன்றோ? 
நிறைவாக இவ்விரண்டை நெஞ்சிருத்தி ஒன்றெனவே
முறையாக வாழ்ந்திருந்த முத்தமிழர் நாமன்றோ?

வள்ளுவனோ மேலேபோய் வரைந்தானே தன்குறளை;
உள்ளபடி அறமென்றும், உயர்வான பொருளென்றும், 
எள்ளலிலா இன்பமென்று மெவருமிங்கே ஏற்பதற்கு 
வெள்ளமெனப் பொருள்தருகும் விந்தையாம் ஈரடியில்!

என்றென்று மினிக்கின்ற இலக்கிய இலக்கணமாய், 
அன்றிருந்த அகம்புறத்தை ஆழ்ந்தூன்றிப் பயிலாமல், 
அன்பென்று மாசையென்று மழியாதக் காதலென்றும்
இன்றிங்கே இணையத்தில் எளிதாகக் கதைக்கின்றார்!

புறந்தள்ள வேண்டியப் புன்மைகளைப் போற்றியதால், 
சிறுவர்களைச் சிறுமியரைச் சீரழிக்கும் இனக்கவர்ச்சி 
வெறுங்காதல் வளர்ந்திங்கு வீரத்தை வெட்டியதோ?
மறப்பண்பு மாறியதால் வடுக்காதல் ஓங்கியதோ?

வானத்தில் இல்லையடா வண்டமிழர் வாழ்வுயினி;
தீனக்குர லெழுப்பித் தேம்புவதை விட்டிங்கே, 
ஏனிந்த அவலநிலை இரும்புமனத் தமிழனுக்கென்(று)
ஆனவரை அவலங்கள் அழிக்கத்தான் முயல்வோமே!
=======================================
இராச தியாகராசன்

பிகு:
====
புறம் = வீரர் மரபு, அகம் = காதல் மரபு, 
மறப்பண்பு = வீரப்பண்பாடு, கதைத்தல் = கருத்தாடல், 
வடுக்காதல் = சிறுவர்/சிறுமியர்க் காதல்,

வீசுங்கள் பாச்சவுக்கை....

பாவலர்க்கு ஒரு வேண்டுகோள்; பாச்சவுக்கை வீசுங்கள் பாவலரே!  இணைத்திருக்கும் ஒளிப்படம், தமிழ் தேசியப் பாவலர், பாவலரேறு திருமிகு பெருஞ்சித்திரனார்.
================================================
================================================
பாச்சவுகை வீசுங்கள் பாவலரே.......
(கொச்சகக் கலிப்பா)
====================
சித்தத்தில் சிலிர்க்கின்ற சிந்தனையின் சீதளமாய், 
முத்தமிழை முகந்தெடுத்த முகநூலின் முகவரியாய்,
எத்திக்கும் புகழ்மணக்கும் எந்தமிழில் எழிற்கவிதை 
தித்திக்க வனைகின்ற செந்தமிழின் பாவலரே!

கற்கண்டின் பாகுடனே கனிச்சாற்றை கலந்திங்கே, 
சொற்றிறத்தால் நாமணக்கச் சொக்கவைக்கும் சொல்லடுக்கி, 
வற்றலில்லா வளப்பமிகு வண்டமிழில் செழுங்கவிதை,
அற்புதமாய் நெய்கின்ற அருமைமிகு பாவலரே!

உன்னித்த எண்ணமதை ஊழ்த்தமன உணர்வுகளைப் 
பின்னலாம் நல்லெதுகை பேர்புகழும் மோனையுடன், 
நன்னூலு முரைக்கின்ற நற்றமிழில் நறுங்கவிதை, 
மின்னல் சவுக்கெனவே வீசுங்கள் பாவலரே!
===================================
இராச தியாகராசன்

பிகு:
====
சீதளம் = குளிர்ச்சி, 
எந்தமிழ் = என்றன் தமிழ், செந்தமிழ் = செம்மைத் தமிழ்,
வண்டமிழ் = வளமைத் தமிழ், உன்னித்த = துளிர்த்திட்ட,
ஊழ்த்தமன = பிறந்தமன. எதுகை/மோனை = தளையோத்துகள்,
நற்றமிழ் = நல்ல தமிழ், செழுங்கவி = செழுமைக்கவி.

புதன், 19 ஜூன், 2024

என்றன் பேராசை....

பிறந்தவர் யாவரும் ஒருநாள் வந்த இடத்துக்கே செல்ல வேண்டுமென்பது எல்லாம் வல்ல வித்தகி விதித்துவிட்ட நீதி! நானும் செய்ய வேண்டிய கடமைகளை இயன்றவரை செய்துவிட்டேன்; அந்தகனின் அழைப்புக்காய்க் காத்திருக்கிறேன்; ஆசையும், ஆவலுமில்லாத மனிதரெவர்? இற்றைக்கென்றன் ஒரே ஆசை எந்தை போலவே எவருக்கும் துன்பமில்லாத, எவர் கையையும் எதிர்பாராத, எவர் தயவையும் நாடாத, தன்னிறைவான இறப்பு மட்டுமே. நேற்றும், இன்றும் அவர், இன்றோ நாளையோ நான்!  என்றன் எந்தை திருமிகு இராஜகோபால சர்மா வாழும்போதில் கூட ஒரில்லறத் துறவியென வாழ்ந்து, 1987ஆம் ஆண்டு, அவருடைய 69ஆவது அகவையில் எவருக்கும் துன்பந் தராத வகையில், இறையடி நீழலில் இளைப்பாரச் சென்றார்.  அப்படியொரு முடிவை வேண்டுகின்ற இந்தச் சிறு பாவலனின் பேராசை, ஒரு கவிதையாய் உருவெடுத்தது.
=======================================













=======================================
என்றன் பேராசை....
(கொச்சகக் கலிப்பா)
====================
சின்னஞ்சிறு அகவையில்நான் சிந்தையும் சிலிர்த்திடவே
என்தந்தை கைக்கோத்து எங்குமே சென்றதில்லை;
கன்னத்தைக் கிள்ளுமந்தக் கட்டிமுத்தம் பெற்றதில்லை;
தன்கரத்தால் கட்டிலிட்டந் தாலாட்டும் உற்றதில்லை!

அவரென்னை அணைத்தென்றும் அறிவுறுத்தும் நூல்படித்து, 
நவரசமாய் நற்கதைகள் நாளெல்லாம் சொன்னதில்லை;
தவறிழைத்தால் தடிகொண்டு தண்டித்தும் பார்த்ததில்லை;
கவலையதால் கண்சிவந்து, கசப்பிழியச் சோர்ந்ததில்லை;

சிவன்மால், சக்தியென்றும், திருவிழாத் தேரென்றும்,
அருங்கவிதை, அண்டவெளி, ஆகாயம், ஆன்மிகம்,
வருங்காலம் என்றுநான், வானத்தை ஆளுமந்தக்
குருகெனவே பறக்கமனக் கோபுரங்கள் காட்டவில்லை;
 
கண்களிலே வைத்தென்றுங் காக்கின்ற அன்புணர்வால்,
எண்ணமதில் என்றென்று மிலங்குகின்ற நேர்மையதால், 
உண்மையுடன் ஓர்ந்துளமே உணர்கின்ற இறையுணர்வால்,
மண்ணகத்தில் தம்மைந்தன் வளம்வாழ நின்றுழைத்தார்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்ந்திங்கே, 
நாவினிக்கும் அறுசுவையை, நல்லதிரைப் படங்களையும்,
பூவுலகின் இன்பநிலைப் பொருள்களையும் புறந்தள்ளித் 
தேவியவள் சேவடியைச் சீந்தியவர் வாழ்ந்திருந்தார்!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள், 
கோலத்தைத் தான்வணங்கிக் காலமெலாம் நானிங்கே, 
ஞாலத்தில் மெய்மையெனும் ஞானத்தைப் பெற்றுவிட
சீலமுடன் சிந்தித்தே சிறப்புடனே எனைவளர்த்தார்!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தழிக்கும், 
இயல்பினையே எரிக்கின்ற எண்ணமதை வேரறுக்க, 
வியனுலகைக் காக்கின்ற வித்தகியைத் தான்வணங்கி, 
நயந்தொழுகும் நேர்வழியில் நாடோறும் நடந்திறந்தார்!

வருமிறுதி காலத்தில் மற்றவரின் துணையின்றி, 
கருக்காக மருத்துவக் களம்கண்டே சாய்ந்துவிட்ட, 
நெருப்புநிகர் உளவுறுதி நேசரவர்; அன்றாங்கே
மருத்துவரும் வியந்துவிட்ட மாவுறுதி மறவரிவர்!

ஒன்றுமட்டும் நானறிவேன் உண்மையென இப்புவியில்;
இன்றுவரை மெய்யதுவா யெண்ணுகிறேன் என்னுளத்தில்;
தன்னிருப்பைத் தன்பணியைத் தன்முடிவை என்னுளத்தில்
என்முடிவாய் ஏற்றிவிட என்றுமவர் நினைத்ததில்லை;

கையூட்டுக் காசுபணம் கறைபடியா வாழ்வினிலே, 
செய்தவற்றை என்வாழ்விற் றிருத்தமாய்ச் செய்துவைத்து, 
வையகத்தில் வாழ்கையிலே மலரிலைபோல் வாழ்தவென்றன், 
ஐயனைப்போ லென்முடிவும் அமைந்திடத்தான் பேராசை!
==========================================
இராச. தியாகராசன்.

சனி, 15 ஜூன், 2024

ஒளியில் சிரிக்கும் ஒயில்....

செயற்கை நுண்ணறிவு ஓவியமென தோழர் திரு அருள்குமரன் முகநூலில்  பகிர்ந்த சில ஓவியங்கள் என்னில் முகிழ்த்த வெண்பாக்கள்.
================================















=========================
ஒளியில் சிரிக்கும் ஒயில்
========================
களிப்புங் கனவுங் கவியெனப் பொங்க, 
நெளிவிலா தன்பின் நினைவாற் - றுளிர்த்து, 
வெளிப்படும் எண்ணமே விண்ணிலே தோன்று 
மொளியிற் சிரிக்கு மொயில்.

விண்ணில் முழுதும் விளைந்த உணர்வினைப் 
பண்ணெனப் பாடவைக்கும் பாவையே! - வெண்ணிலா
வண்ணமாய் மின்னிடும் மங்கையுன் கண்ணொளி
எண்ண முடியா வெழில்.
========================
இராச தியாகராசன்

வெள்ளி, 14 ஜூன், 2024

புரட்சிவீரன் சே குவாரா....

புரட்சியாளர் "எர்னசுட்டோ சே குவாராவின்" பிறந்தநாள்: சூன் 14ஆம் நாள் 1928. புரட்சி வீரனின் உடலை அழித்தவர் பெயரோ, ஊரோ, பெரும்பான்மை பேருக்குத் தெரியாது.  ஆனால் தாழ்ந்தவர்க்காய் இன்னுயிரை ஈந்தவனின் பெயர், புகழ், ஈகம்,  பட்டி தொட்டியெல்லாம் இற்றைக்கு முழங்குகிறது.  அதுதான் புரட்சியாளரின் ஈகத்தின் மேன்மை. அவர்கள் மலர வைக்கின்ற  புரட்சிப் பூவின் பெருமை.  

"எங்கெல்லாம் அடக்கியொடுக்கப்படுபவரின் இதயத்துடிப்புகள் கேட்கிறதோ, அங்கெல்லாம் என்னுடைய கால்கள் நிச்சயம் பயணம் செய்யும்!"

"வன்முறை என்பது வீரமன்று; விலங்கினத்தின் செயலது; வீரமென்பது உயிரைக் கொல்வதில் இல்லை; உயிர்களைக் காப்பதே வீரம்;  அதுவே புரட்சியாளனின் செயல்."

=== எர்னசுட்டோ சே குவாரா.

என்றவர் முழங்கியது போலவே, தமது சொந்த நாட்டில்/ வாழ்ந்த நாட்டில் இறக்காமல், பொலிவியா சென்று அடக்குமுறை செய்யப்பட்டவர்க்காக கரந்தடி புரட்சி (Guerrilla warfare) மேற்கொண்டார்.  அங்கேயே ஒரு விட்டோடியின் (deserter) உதவியுடன் அந்நாட்டு வல்லாட்சியரால் கொல்லப்பட்டார். அவர்தம் பிறந்தநாளில் என்றன் வீரவணக்கத்தைப் பதிவு செய்கிறேன்.

புரட்சிவீரன் எர்னஸ்ட் சே குவாராவின் புகழ் என்றென்றும் உலகில் நின்று நிலைத்திருக்கும்.  புரட்சியாளர்கள் மண்ணில் மறைந்து போனாலும், அவர்தம் வழியைப் பின்பற்றி, தொடர்ந்து நடைபோட, அறத்தை உயிரினும் மேலாய் எண்ணுபவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
=============================================

=============================================
புரட்சிப் பூவே......
=============================================
பேணுமன்பைப் புறந்தள்ளி, பதவி யாசை, 
.....புந்தியிலே புகழ்மயக்கந் தலைக்குள் மீற,    
நாணமின்றி வன்முறையில் மூழ்கி யன்று, 
.....நானிலத்தில் நல்லவரை நசுக்கி யாண்டு, 
கோணலுள மயக்கத்தால் தீய்ந்தே வீழ்ந்த, 
.....கொற்றவரின் முடிவென்னும் வரலாற் றைத்தான்
ஆணவத்தால் அறத்தினையே காலில் தேய்க்கும், 
.....அறிவற்ற ஆட்களெலாம் மறந்தே போனார்! 

நேர்மையினைப் பூட்டுகின்ற அடிமை வாழ்வை
……….நீதியினை வாட்டுகின்ற நாட்டின் தாழ்வை
பார்த்தகணம் வீறுகொண்டே கண்ணில் காணும்
……….பாதகத்தை வேரறுக்க முன்னே நின்றான்!
சீர்த்திகளை செல்வத்தைத் தேடு வோரில்
……….தீமைகளால் நாதியற்ற வர்கள் தேடும்
தீர்ப்பிற்கே அன்றெழுந்த சேகு வாரா;
……….செந்தீயாய் செலுத்துமென்றன் வணக்கம் ஈதே!

நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
……….நசுக்கப்பட் டவர்களுக்கே நீதி கேட்டு,
பூமலர்கள் புகழ்மொழிகள் எதுவும் இன்றி
……….புரட்சியொன்றே வாழ்க்கையென்று மண்ணில் வாழ்ந்தான்!
ஊமையென்றே வாய்களின்றி வாழ்ந்த மக்கள்
……….உயர்ந்திடவே அயர்வின்றி உழைத்த உன்னை
பாமலரால் ஏத்துகின்றேன் ஈகை மன்னன்;
……….பாரெங்கும் மணக்குமுன்றன் புரட்சிப் பூவே!
=================================================
இராச தியாகராசன்.

பிகு:
====
சீர்த்தி = கீர்த்தி, ஈகமன்னன் = தியாகராசன்

ஞாயிறு, 26 மே, 2024

திசை மாற்றிய திருப்பங்கள்...

என்னுடைய அருமை நண்பர், பொதுமையார்வலர், இனிய பாவலர், இன்சொல்லாளர், அமரர் திரு இரா. நாகசுந்தரத்தின் தலைமையில், அறிவியல் தொழில்நுட்பத் துறை-புதுதில்லி அறிவியல் இயக்கமும், புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து 09/04/2005இல் நடத்திய, 2004ஆம் ஆண்டுக்கான அறிவியல் விழிப்புணர்வுப் பாவரங்கில், நான் பங்கேற்று வாசித்தளித்தப் பாடலிது. பாடலுக்கான தலைப்பு, " உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்." தலைப்பைச் சற்றே மாற்றி, "திசை மாற்றிய திருப்பங்கள்," என்று இங்கே பதிகிறேன். இணைத்திருக்கும் படம், பாடலளித்தமைக்காக எனக்களிக்கப்பட்ட சான்றிதழ். ====================================

====================================
தமிழ் வணக்கம்
=============== பாரதியும் பகர்ந்த பறப்புமுணர் வண்டியொடு தூரவெளி இயக்கத் தொலைகலம் - பாரதமும் அண்டவெளி தாண்டி அனுப்புங் கனவுகண்ட வண்டமிழன் சொல்லுக்கே வாழ்த்து! அவை வணக்கம் ================ ஒளிர்ந்திடும் இலக்கியம் ஓங்கிடத்தான் .....ஒண்டமிழ் இலக்கணம் தாங்கிடத்தான் தளர்வறத் தனித்துவம் கொண்டிலங்கும், .....தகவிலாக் பாவரங்க மேடையில், பளிக்கெனப் பளிச்சொளி வீச்சுடனே .....பைந்தமிழ் அணங்கவள் வாழ்த்துடனே வளங்களை வழங்கிடும் வள்ளலைப்போல் .....வளர்ந்திடப் பொலிந்திட வாழ்த்துதுமே! தலைவர் வணக்கம் =================== நாவலர் நண்பராம் நாகசுந்த ரப்பாவல, பூவாசம் தூவிடும் பொன்தமிழ் மொழியிலே, தேவாரப் பாக்களாய் தித்திக்கக் கவிபேசி, ஆவேசம் பொங்கிடும் பொதுமை ஆர்வல, பாவூறும் பாவரங்கை பக்குவமாய் ஆள்வதுடன், நாவூறும் நற்றமிழை நாளெல்லாம் காப்பீரே! திசை மாற்றிய திருப்பங்கள்
(நிலைமண்டில அகவற்பா)
===========================
திசையதை மாற்றிய திருப்பம் எதுவென அசையுடன் சீரிழை அகவலின் வரிகளில் திருநிகர்க் கவிஞரின் தீந்தமிழ் மன்றிலே அருளதன் அரசனும் அன்புடன் தருகிறேன்! உலகில் அனைவரும் உய்த்தே உணரவே, பலப்பல மாந்தரும் பன்னரும் வழிகளில் விதவித மாகவே விந்தை அறிவியல் புதுப்புதுப் புனைவுகள் பாங்குறப் படைத்தார்! மாடியி லமர்ந்து மண்டை குலுக்கி தாடியைத் தடவித் தேடினேன் நினைவில்; உலகின் திசையை உடனே மாற்றிய கலக்கும் படைப்புக் கருவெது வென்றே! சட்டென நினைவிற் தட்டிய பொறிகளைப் பட்டெனப் பகர்வேன் பாங்காய் இங்கே! முன்னிலை வகித்தது மூண்டெழு நெருப்பு; பின்னர் வரிசையில் பற்பலக் கருவிகள்! கண்ணைக் கட்டும் காட்சிப் பெட்டியில், எண்ணங் கவரும் எழிலார் விழியங்கள்; சுண்ண வண்ணமாய்த் துவைக்கும் எந்திரம்; விண்ணைக் கிழிக்கும் விண்வெளி ஊர்தி; தண்ணீ ரிலோடும் தரமிகு நாவாய்; வண்ணத் தாளிலே வழுக்குமின் அச்சு; எண்ணும் போதிலே எழுதும் தூவல்; மண்ணைப் பிளக்கும் மாபெருந் துரப்பணம்; எண்ணெய்த் திரியே இல்லா விளக்கு; கண்ணி மைப்பில் காரியம் ஆற்றும் நுண்ணலைச் சமையல் மின்விசை அடுப்பு; எண்ணிம ஒளிபடம் எடுக்கும் பேசிகள்; அகமகிழ் தனைவரும் அகிலம் சுற்ற, புகையிலாப் புதுமைப் பொலியும் வண்டிகள்; முத்தமிழ்ச் சொல்லால் மொழிய இயலா அத்தனை அறிவியல் அற்புதப் படைப்புகள்! ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வகையில் இவ்வுல கின்திசை ஈதெனச் சொல்லிய உன்னதப் படைப்பு; உண்மை உண்மை! ஒன்று குறைவோ? இன்னொன் றுயர்வோ? பறக்கும் பறவையாய்ப் பாமரர் வானில் சிறகை விரித்துச் சிந்தனை சிலிர்க்க இருபதாம் நூற்றின் இன்றையத் திசையை விரைவாய் வென்ற மின்னணுத் திருப்பம்! எழுத்தும், படமும் இன்னிசைப் பாடலும், குழுவில் பேசிடும் கூட்டு மடலிலே எழிலுறக் காட்டும் இலக்கிய இலக்கணம், முழுதும் விரிக்கும் முடிவிலாத் திருப்பம்! பாரதி கனவாய்ப் பார்த்த வரிகளைத் தாரக மொழியாய்த் தரணியி லேற்றே சொற்களின் அடுக்குச் சுருக்கில் உலகைச் சுற்றிடும் விந்தையாம் சுந்தரத் திருப்பம்! நாட்டின் நடப்பும் நாமே நம்மின் வீட்டில் இருந்தே விரைவாய்க் காண, கவிதை வனைய; கதைகள் புனைய; சிவிகை ஏற்றியே செல்லும் திருப்பம்! அகர முதலியில் அனைத்தும் எளிதில், சகலரும் தேடிச் சட்டென கிடைக்கக் கற்பகத் தருவாய்க் கணத்தில் கொடுக்கும் சொற்பதப் படைப்பின் அற்புதத் திருப்பம்! உண்மை காணீர் உலகி லின்றே; திண்ணம் சொல்வேன்; திரும்பச் சொல்வேன்; இன்பந் தந்திடும் இணைய வலைதான் இன்றைய உலகின் இணையிலாத் திருப்பம் கூடெழிற் குழுமடல் கோதறு தமிழிலே; தேடலும் கூடச் செந்தமிழ் மொழியிலே! வலையின் பதிவுகள்; வண்ண இதழ்கள்; வலையக நூல்கள்; ஒருங்குறித் தளத்திலே! இணைய மென்னும் எழில்மிகுப் பின்னல் துணையது கொண்டு சொற்றமிழ் அறிஞர் மின்னியற் பாடமும் மேலும் கற்றே அன்னிய நாட்டிலும் அவர்க்கே சொல்கிறார்! நறுக்கி வெட்டி நல்லாணி யதனால் கிறுக்கிக் கட்டிக் கீறிய பனையை வெள்ளெறும் பரிக்க, மீதியும் தொலைத்த, வள்ளல் பாரியின் வாரிசும் நாம்தான்! பத்தொன் பதிலிரு குண்டல கேசி, செத்தொழிந் திட்ட சீர்வளை யாபதி, சிங்க தமிழன் சிறப்பை யுரைத்தவை; எங்கே போயின? எத்தனை இழப்பு! எங்கள் குமரி எந்தமிழ்க் கிழவி வங்கக் கடலில் வாரியே கொடுத்த தங்கத் தமிழின் தரமுயர் இலக்கியம் எங்கே கிடைக்கும்? எவர்தாம் தருவார்? இன்றி ருக்கும் இலக்கிய மீதியை, இன்றையக் கணினி இளையோர் முனைந்தே, மின்னிதழ் வடிவில் மின்தள மேற்றியே, பொன்னாய் நயம்படப் போற்றிடல் வேண்டுமே! ==================================== இராச தியாகராசன். பிகு: ==== பறப்புமுணர் வண்டி = ஆட்டோ பைலட்டு வண்டிகள், கனவுகண்ட வண்டமிழன் = அப்துல் கலாம், பளிக்கென = பளிங்குக் கல்லென, அருளதன் அரசன் = தியாகராசன், நாவாய் = கப்பல், காட்சிப் பெட்டி = தொலைகாட்சிப் பெட்டி, விண்வெளியூர்தி = விண்ணூர்தி, தூவல் = பேனா, துரப்பணம் = துளையிடுங் கருவி, எண்ணெய் இல்லா விளக்கு = மின்விளக்கு, நுண்ணலை மின்விசை அடுப்பு = மைக்ரோவேவ் அவன், எண்ணிம படப்பேசிகள் = டிஜிடல் கேமரா போன், புகையிலா வண்டி = மேக்னடிக் இருப்பூர்தி, கூட்டுமடல் = மடற்குழுமங்கள், இணையவலை/ இணையப் பின்னல் = இன்டர்நெட்டு, மின்னிதழ் = எலக்ட்ரானிக் மேகசின், மின்தளம் = வலைதளம்.

திங்கள், 22 ஏப்ரல், 2024

வாழ்வென வாழ்வமே!.......

============================================

=============================================
வாழ்வென வாழுவீர்! 
(நிலைமண்டில அகவற்பா)
============================
மலைதனில் தோன்றியே மடுவினிற் சேரவே,
அலைந்திடும் புனலென இளமையின் கணங்களும்,
நேற்றென, இன்றென நாட்களும் கரையுமவ்
வாற்றின் பாலமும் ஒருவழிப் பாதையே!

தவறெதும் செய்யாது தண்டனை தருவதும்,
அவதிக(ள்) அவனியில் அத்தனை யுறுவதும்,
தவிப்பினில் மூழ்கியே சலிப்பினைப் பெறுவதும்,
புவியினில் புழங்கிடும் புதுமையின் சாரமோ?

இருப்பினை இளமையை இன்பமாய்த் துய்த்திடும்
கருக்கிலேக் கடக்குமக் காலமாம் காட்சியை
விரும்பியே மனத்தினில் மீளவும் காணலாம்;
திரும்பவும் அடைவது செகத்தினின் நடக்குமோ?

நடந்திடும் இளமையும் நிழற்படக் காட்சியே!
கடந்திடும் காலமும் கானலின் நீர்மையே!
கடுகியே விரைந்திடும் கனவிலே தவழ்ந்திட,
முடிவினைக் கொண்டவர் முயல்வதும் முடியுமோ?

இயற்கையை மாற்றிட ஏந்தலாய்த் தோன்றியே,
வயதினை வென்றினி வாழ்வினில் நிலைப்பரோ?
அழைப்பிலா விருந்தென அந்தகன் பரிசென,
நுழைந்திடும் வாழ்விலே நிச்சயம் முதுமையே!

பயத்தினால் பதவியால் பார்புகழ வாழலாம்;
முயற்சியால் மூடரை முடங்கிவிழச் செய்யலாம்;
அறிவினால் அகந்தையால் அடக்கியே ஆளலாம்;
இறப்பினை எரித்தே ஏய்க்கவும் முடியுமோ?

மாய்ந்திடப் பிறந்திடும் மானிட தேகமும்,
தேய்ந்திடத் தேடிடும் செல்வமும் மெய்ம்மையோ?
சூழ்ந்திடும் ஏனையர் சுகமுடன் வாழ்ந்திட,
வாழ்ந்திடும் வாழ்வதே வாழ்வென வாழ்வமே!
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மடு = பள்ளம் (அ) ஆழ்கடல், புனல் = ஆறு,
அவனி = பூமி, செகம் = உலகம், 
ஏந்தல் = உயர்ந்தவர், அந்தகன் = நமன்.

திங்கள், 15 ஏப்ரல், 2024

வாக்களிப்பீர்......

வாக்களிப்பீர் மக்களே!
=============================













=============================
மறக்காமல் வாக்களிப்பீர்......
=============================
தூண்டிலிலே தொக்கிநிற்குஞ் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாமல்,
காண்பதெலாங் கொள்வதுவுங் கண்போக்கிற் களிப்பதுவும்,
மாண்பென்று மயங்காத மானிடர்க்கே வாக்களிப்பீர்!

தன்னெறியாய்த் தருக்கரவர் தயக்கமற தரணியிலே,
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமில்லாக் கொடும்பாவப் 
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் புழுதியிலே, 
என்றுமுழல் எத்தரிங்கு வீழ்ந்திடவே வாக்களிப்பீர்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்க ளாழ்ந்தூன்ற, 
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுக்கடுக்கா யழுக்கென்னு மாழியிலே வீழ்ந்துழலும்,
நெடுமரத்துக் கயமைகளும் நெக்குவிட வாக்களிப்பீர்!

பணமென்றும், பதவியென்றும், பழகுந்தீ வழக்கென்றும்,
தணலேறி தகிக்கின்றச் சழக்கென்றும், சலிப்பில்லா
துணவென்று மரசியலி லுழலுகின்ற உலுத்தர்கள் 
கணப்போதிற் கரைந்தோடக் கடுஞ்சினத்தில் வாக்களிப்பீர்!

சங்கிலியாய்ப் பின்னலிடுஞ் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சகரும் மயக்கத்தில் 
முங்குவதால், நல்லவர்கள் முன்னெடுக்கும் நல்லறமே 
இங்குநிதம் பொலிந்திடத்தா னெழுச்சியுடன் வாக்களிப்பீர்!

உள்ளத்தி லூழ்க்கின்ற உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
கொள்ளுகின்ற கொடுமைகளைக் கொளுத்திடவே வாக்களிப்பீர்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்,
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென எந்நாளும்
ஓக்கமிலா தாடுகின்ற ஊடகங்கள் அதிர்ந்துறைய,
சாக்கடை அரசியலும் சாய்ந்துவிழ வாக்களிப்பீர்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை;
சுளுவாக உன்கழுத்திற் றொடையலும் விழுவதில்லை; 
தெளிவாகச் சிந்தித்தே திடமாகத் தேர்ந்தெடுத்து,
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கே வாக்களிப்பீர்!

உடலுழைப்பி லுருவாகு முயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறி, களமீதில் வளர்ச்சிகளும்,
நடக்குமென்ற நன்னெறிக்காய் நல்லவர்க்கே வாக்களிப்பீர்!

தளர்வின்றித் தயக்கமற சலிப்பில்லாத் தவிப்புடனே,
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர்க் கனவகற்றுந் 
தெளிவான அரசியல்தான் திறன்மிகுந்தத் தாய்நாட்டின் 
வளர்ச்சிக்கு வழியென்றே வல்லவர்க்கே வாக்களிப்பீர்!

வல்லாட்சி அரசியலின் மமதையினால் நாடோறும் 
சொல்லொணா தழல்போன்ற துன்பத்தி லெரிந்துநிதம்
கல்வியின்றி, காசுமின்றி கண்போக்கில் வாழுமெங்கள் 
இல்லாத ஏழைகளின் எழுச்சிக்காய் வாக்களிப்பீர்!
=====================================================
இராச. தியாகராசன்
====================

பிகு:
====
புன்னெறி = தீயநெறி, முடங்கர் = மாற்றுத் திறனாளி, நெக்குவிட = விரிசல்விட,
உலுத்தர் = கயவர், முங்குதல்= மூழ்குதல், ஊழ்த்தல் = பிறப்பெடுத்தல், 
துய்த்தல் = சுவைத்தல், ஏக்கழுத்தம் = ஈகோ, ஈடணை = இறுமாப்பு, 
முடந்தை = ஊமை, தொடையல் = மலர்மாலை, வல்லாட்சி = சர்வாதிகாரம்.

புதன், 6 மார்ச், 2024

மங்காமல் வாழும் வழி...

இற்றைக்கு என்னுளத்தை பாதித்து, சிந்தனையைச் சிலுப்பிய சமுதாய நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.
நங்கையர் நாளுக்காய் ஒரு மீள்பதிவு செய்கிறேன்.  சமீப காலமாய்ப் புதுவை என்றில்லை, இந்தியத் துணைக்கண்டம் யாங்கணுமே பரவலாக சிற்றகவை, பேரகவைப் பெண்டிரை சீரழித்துக் கொல்லும் கேவலமான பண்பாடு ஏனிப்படி நச்சுக் கொடியாய் வளர்ந்தோங்கி கவிந்திருக்கிறது? இந்த நிலைமைக்கு முடிவு வரவே வராதாவென்று ஏங்குகிறது உள்ளம். அன்று நிர்பயா, அனிதா, ஆசீபா, கௌரி லங்கேஷ், த*ம*ரி, தூ*து*கு*,  @*ணி*ப்பூ*@, *ள்ளா*சி;  இன்று புதுவையின் ஆர்த்தி.  (முழுசாய் ஊர் பெயரைச் சுட்டினால், பதிவு எவரையும் அடையாதென்பதால், மறைபெயர்; அன்பர்  மன்னிக்கவும்)
============================================












============================================
மங்காமல் வாழும் வழி....
(ஒரு பஃது அந்தாதி வெண்பா மாலை)
====================================
தேனிருக்க நஞ்சினைச் சீரென்றே நாடுகின்ற
மானுடமே! சீர்த்திமிகு வாலிபமே! - கானினுறை 
மாக்களல்ல நாமென்றும் வஞ்சியரைப் போற்றுவதே 
ஊக்கமுறை ஓங்கலெனும் வாழ்வு. (01)

வாழ்விதுவே வாழ்வென வாழ்தலையே வாழ்த்தலின்றி 
வாழ்ந்துநிதம் வாழ்வறுந்த வாழ்வினமே! - சூழ்துயரந் 
தானகன்றே எம்மகளிர் தானவர்போல் வாழ்ந்திருக்கக் 
கூனகலக் கோடுதலே கோது. (02)

கோதின் வழியிருந்துங் குற்றமிலாச் சீரிருந்தும், 
மாதரவர் மாண்பினையே மாசாக்கும் - வேதனைகள் 
வேர்த்தழிய வேண்டுமென வீறுகொண்டே மாந்தரினம்
ஆர்த்தெழுந்தால் நீறாகும் ஆசு. (03)

ஆசுகளைக் கொள்ளியிட்டு ஆற்றலுடன் நம்மிளையோர்
பாசமுடன் பண்பாட்டைப் பார்ப்பதுதான் - நாசமற,
நங்கையரு மிப்புவியில் நன்னலமே பெற்றிலங்கி,
மங்காமல் வாழும் வழி. (04)

வழியில்லாப் பாதையிலே மானமின்றிச் சென்றே 
அழிப்பதுதான் ஆக்கமுறை அன்போ? - செழிப்புறவே
மாந்தரும் மங்கையரை வாடாமற் காத்துநித  
மேந்துவதே என்று மெழில். (05)

எழிலாரும் பெண்மையத னீகையெனும் பண்பே
வழுவில்லா வையகத்தின் வாசல்! - விழுப்புறவே
சால்பனைத்து மள்ளியிடுந் தன்னலமே இல்லாத
ஆல்நிகர்த்த அன்னையெனு மன்பு. (06)

அன்பொன்றால் தாயெனவே ஆதரித்துக் காத்துநின் 
றின்பந் தருபவளும் இன்மகளே! - இன்றுலகிற் 
றங்கையென அக்கையெனத் தாயுமெனத் தாரமென 
மங்கையரைப் போற்றுதலே மாண்பு! (07)

மாண்பென்ற சொல்லுக்கு மாறா இலக்கணமாய் 
ஆண்கள் அறவழியில் ஆர்த்தெழுவோம்! - பெண்ணுயர 
எல்லாருங் கைகோத்தே ஈனமெலாந் தீயிலிட் 
டில்லாமற் செய்வதுவே ஏற்பு. ( 08 )

ஏற்ப தனைத்தும் இயல்பென் றிருக்கவா 
நேற்றிங்(கு) உதித்தோமிந் நீணிலத்தில்? - தூற்றும்பேர்  
ஆளுமெம் பெண்டிரின் ஆற்றலை மாய்த்துவிடின் 
தாளுமோ தாயகந் தான். (09)

தானென்ற வாழ்வுஞ், சரிகின்ற எண்ணமுங் 
கானலின் நீராய்க் கருதியே - நானிலப்பெண் 
தாழ்வற் றிருக்கச் சலிக்கா துழைப்பவர்
வாழ்வே அமுதமயத் தேன். (10)
====================================== 
இராச. தியாகராசன்.

பி.கு:  
====
ஓங்கல் = குன்று,  கோது = நேராக (சீப்புக்கு இன்னொரு பெயர் கோதுகலம்), 
விழுப்பு = சிறப்பு. சால்பு= மேன்மை/நற்பண்பு, மாண்பு= மாட்சிமை/ பெருமை.

திங்கள், 12 பிப்ரவரி, 2024

கவிதையெனக் கோக்கின்றாய்...

என்றன் நெஞ்சகத்தின் தவிசமர்ந்து, காலமெலாம், கருவுதித்தச் சிந்தனையின் கனவுகளைச் சொல்லடுக்கிக்  கவிதையென எழுதியிறைக்கின்ற.....

மந்திரமாய் வித்தகியின் வினோதங்கள்; 
தந்திரமாய்ச் சித்திரத்துச் சாலக்குகள்;  
ஓவியமாய் உத்திரத்து நூல்வலைகள்; 
காவியமாய் கதலிச்சுவை கயல்விழிகள்;   எத்தனையெத்தனையோ.....
==============================
==============================
கவிதையெனக் கோக்கின்றாய்..
==============================
சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல் சிதையாமல்,
பித்தன்புத் தூரிகையாற் றீட்டுகின்ற ஓவியம்போல்,
புத்தமுதப் பொன்னணங்கே புதுமையெனப் புந்தியில்நீ,
எத்தனையோ கவிதைகளை எழுதிவைத்துப்  பார்க்கின்றாய்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறுகின்ற நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள், 
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் துளைக்கையிலே,
உதயமான உணர்வுகளை உருக்கிவரிச் சேர்க்கின்றாய்!

அள்ளிமனங் கொள்ளையிடும் அமுதமழை சாற்றைப்போல்,
வெள்ளிமலை மேல்விளைந்த விண்ணருவி  ஆற்றைப்போல், 
துள்ளுகின்ற பூச்சியென தோன்றியுள்ளே ஆடுகின்ற,
புள்ளியெழிற் கோலமனை பொங்கும்பா  வார்க்கின்றாய்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில் 
மனத்துள்ளே மானுடத்தின் மயக்கங்கள் மருகிநிதம்
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காருளத்தில் 
கனவுகளைக் கார்காலக் கவிதையெனக் கோக்கின்றாய்!
  
வையகமும் மானுடமும் வாழ்நாளில் உய்த்துமனம்
துய்த்துணர வேண்டியதைத் துல்லியமாய்த் தூய்மையெனும்
மெய்யான மெய்யதனை மிளிர்கின்றப் பாவடிவில்,
செய்யவைத்தே கவிஞனெனைச் சீர்த்தியுடன் காக்கின்றாய்!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
தவிசு = மணைப்பலகை, பொன்னணங்கு = தங்கம் போன்ற பெண், புந்தி = அறிவு, சீர்த்தி = கீர்த்தி/புகழ்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

காற்றிலே பறக்கலாம் வாராயோ...

காதலர் நாளுக்காய் இன்னொரு பாட்டு...
======================================













======================================
காற்றிலே பறக்கலாம் வா... தோழி.
======================================
நியதிகளும் நெக்குவிட ஆடுகின்றேன்;
நித்தமுன்றன் நன்னலமே நாடுகின்றேன்;
மயிலொத்த நங்கையுனைத் தேடுகின்றேன்;
மயக்குருவ மாயத்தால் வாடுகின்றேன்!

இன்றைக்குன் வண்ணமெனும் பூச்சால், 
என்றென்றும் உன்நினைவென் மூச்சு;
கன்னலனைக் கண்ணசைவின் வீச்சால், 
கவிதையெனப் பொங்கிவரும் பேச்சு! 

வாடையின் குளிரால் முகிழ்கனைவை,
கோடையில் கொளுத்தி டும்நினைவை,
ஊடலும்  பிரித்த நம்உறவைப் 
பாடலாய்ப் பதியவைத்த பாவையே!

காதலின்பக் காரிகையே இன்றுமுன்றன்
கயல்விழியாந் தூண்டிலிலே சிக்கவைக்கும்
நாதமுறை நாயகியே, என்றுமுன்றன்
நயனமொழி வலைவீச்சே என்கோலம்!  

நாட்டியம் சொல்கிறாய் ஆடலால், 
பாட்டியல் சொல்கிறாய்ப் பாடலால், 
காட்டுதல் செய்தெனை தினந்தினம் 
வாட்டுதல் செய்கிறாய் வனிதையே!

ஓடையில் சலசலக்குந் தென்றலாய், 
உன்னெழில் வருகையைக் காண்கையில், 
ஆடகப் பொன்னென மின்னுமுன்றன்
அயில்வேல் விழியெனைக் கொல்லுதே!

சின்னஞ் சிறிய காற்சரத்தில்,
சிதறிச் சிரிக்கும் சிறுவொலியில்,
என்னில் பதிந்த முழுநிலவுன் 
கன்னற் சுவைமொழி கேட்டதனால்,

காலையின் கதிரிலே காலமுழுதும்,
காட்சியாய்க் கவிந்திடுங் கனவினையே
வாலைக் குமரியுன் மதிமுகத்தை 
மறக்கவே முயல்கிறேன், முடியவில்லை!

காற்றிலாடு மலரின் ஒயிலதே 
காதற்பெண் ணுன்றன் சிற்றிடையா?
சேற்றுவயல் மேவிய நெல்லசைவே 
செப்புச் சிலையுன்றன் மெல்லியலா?

மலரில் தோன்றும் மங்கையுருவை, 
மனத்தில் நிறையும் நங்கையழகை, 
நிலவின் நிழலும், திரையலைவும்,
நீர்க்கவில்லை மறைக்கவில்லை!

கண்ணைத் திறவாப் பொற்சிலையா 
கண்ணே உன்றன் இன்னுருவம்?
வெண்மை யொளிரும் நித்திலமா  
விண்ணின் நிலவுப் பெண்ணுருவம்?

கண்களை மூடினால் கன்னியுன் 
காட்சியாய்க் காணுமென் நிலையை
எண்ணியே ஏங்குமென் கனவை
எடுத்தே இயம்பிட ஆருண்டு?

என்னிதயச் சிறகென்னும் சிந்தனையை
இன்பந்தரும் உன்சொல்லால் ஒடித்தாயே; 
அன்றுமுதல் அன்றாடம் அலைந்துதிரிந்து, 
அனைத்துமே மறந்துலகில் சடமெனக்கு  

உண்ணுகின்ற உணவும் சுவைக்காமல்,
உலகாய உணர்வதும் இனிக்காமல்,
கண்ணிமைகள் முத்தமிடும் என்துயிலும் 
காலமெலாம் காணாமற் போனதுவே!

காட்சிகளில் தோன்றும் வடிவெழிலைக் 
காணுகின்ற வஞ்சியுன் கோலமதை,
சாட்சியாய்ச் சொல்லும் தண்மதியும்  
சார்ந்தே உரைப்பதை அறிவாயா?

ஒவ்வொரு முறையும் காண்கையிலே
உள்ளத்தில் கத்தியால் குத்துவதேன்?
கவ்வியே பற்றிடும் கனலொளிர்க் 
கண்ணெனும் தீயினால் எரிப்பதுமேன்?

காதருகுக் குழலசைத்துக் கனிவுடனே 
காற்றலைத் தூதுவன் கதைபேசும்
நாதத்தை நித்தம்நீ கேட்கையிலே
நலம்கேட்கும் நானென்றே புரியாதா?
 
துன்பத்தைத் தொலைத்தே எறிந்திட, 
துயர்களும் சுருங்கியே மறைந்திட, 
கன்மங்கள் கரிந்தே கரைந்திட, 
கனசோராய் நித்தமும் தோழியே;

சிரமமின்றி சிந்தையில் ஒன்றிணைந்து,
தேடுதலை நாடுதலை தான்மறந்து
விரும்பியுளம் சேர்ந்தே கனிந்துருகி
வேண்டாத வற்றையே வெறுத்துவிட்டு,

வானம்பாடி போலவே நாமென்றும்
வலிகளைத் தான்மறந்தே இன்றிங்கு 
கானம்பாடிக் களிப்புடனே கவலைமறந்து 
காற்றிலே சிறகடிப்போம் வாராயோ? 
============================
இராச. தியாகராசன்

பிகு:
====
ஆடகம் = சிறந்த பொன்
அயில்வேல் = கூர்மையான வேல்

புதன், 24 ஜனவரி, 2024

எம்புதுவை வாருங்கள்...

நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள்.  1977இல் இருந்தெனையொரு  பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக),  குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட,  போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!

என்றுமே எம்புதுவை பாவானம் தான்.  எத்தனை மரபியற் கவிகள்;  எத்தனைப் புதுக்கவிகள்;  எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்;  எத்தனைக் கலைமாமணிகள்;  எத்தனைத் தமிழ்மாமணிகள்.

==============================













==============================
பா - வானம் எம்புதுவை
=======================
மன்னவரை, மாடதனை, மாண்பெனவே கொள்ளாமல்,
மன்பதைக்கே வாழ்ந்திட்ட மாகவியின் பாச்சுவையே
என்புரட்சிப் பாவலனின் ஏற்றமிகு பாச்சொடுக்கே
இன்பமெனக்(கு) என்றிருக்கும் இன்னூராம் என்புதுவை!

பாருலகைப் பாடியநம் பாரதியாம் நாவரசைப் 
பாரதியின் தாசனவன் பாசமிகு பாவரசை, 
வேருடனே தாங்கிநின்று மேதினியோர் ஏத்துபுகழ்ப் 
பேரதனை எந்நாளும் போற்றிநிற்கும் என்புதுவை!

தெண்டிரை ஆழிசூழ் செம்புலத்து மண்ணிலே, 
வண்டமிழ் வண்ணமும், வள்ளையும் சிந்துமாய்த் 
தண்ணிலவுச் சொல்லடுக்கிச் சந்தமணப் பாப்புனைய, 
விண்முட்டுச் சங்கொலியாய் வீற்றிருக்கும் என்புதுவை! 
  
பண்ணொடு பாங்கெழிற் பாட்டியலின் சாற்றுடனே, 
எண்ணமுகிழ் எந்தமிழின் இன்பத்தேன் ஊற்றெனவே, 
வண்ணஞ்சேர் பாவொளிரும் மன்னுதமிழ் நாற்றெனவே, 
எண்ணிலாப் பாவரங்கம் ஏந்திநிற்கும் எம்புதுவை!

கண்ணிமைப்பில் கன்னற்பா கட்டுகின்றார் பாரய்யா;
மண்ணகத்து மாந்தரெலாம் வாழ்த்துகின்ற சீரய்யா;
தண்டமிழைத் தாழாது தாங்கிநிற்கும் பேரய்யா;
ஒண்டமிழர் வேங்கையென ஓங்கிநிற்கும் ஊரய்யா!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழின் சொல்லெடுத்துத்
தூவானந் தூவுகின்ற தூறலெனப் பன்னூறாய்,
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனையும்
பாவானம் என்புதுவை பார்!
=======================================
இராச. தியாகராசன்

பிகு:
====
மாடதனை - செல்வத்தை, மன்பதை - மண்ணுலகு, இன்னூர் - இனிய ஊர், தெண்டிரை - தெள்ளிய அலை, ஆழிசூழ் - கடல்சூழ், வண்டமிழ் - வளமைத் தமிழ், தண்ணிலவு - குளிர்நிலவு, தண்டமிழ் - தண்மை+தமிழ், கன்னற்பா - கரும்பனைய பாட்டு,  ஒண்டமிழர் - ஒளிர்கின்ற தமிழர், பா-வானம் - பாக்கள் நிறைந்த வானம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

வேய்குழல் மாயவா...

"என்னையா ஒரே சிவன் பாட்டாப் பாடியறுக்கிறாயே, உனக்கு இராமனையும்/ விஷ்ணுவையும் பாடவே தெரியாதா," என்று வலதுசாரி அன்பரொருவர் "அன்பாகவும் அறிவாகவும்" எனைப்பாடி வறுத்ததால், "அரியும், இராமனும் ஒன்று; அரனும், அனுமனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலென்றும் மண்ணு," என்று சொல்லி, இப்பாட்டை எழுதினேன். இனி வரும்நாளில், அந்தப் பாலாழி ஶ்ரீபத்மநாபனே நம்மையும், நம்மக்களையும், நம்நாட்டையும் காத்திடவே வேண்டுகிறேன்.
=========================================












=========================================
பாலாழி பத்மநாபா...
====================
சூதனும் பொற்கதிர்த் தூரிகை ஏந்தியே சோதியாய்க் காட்டிடுஞ் சுந்தர நந்தனே; நாதமாய் வேணுவும் நளினமாய் ஒலித்திடக் கோதுளம் காக்குமெம் குழலிசை விந்தனே! கமலினி பற்றிடும் கனிந்தகார் வண்ணனே; எமதுளம் உற்றிடும் எழிமிகு கண்ணனே; திமிரிலே உழல்நிலை தீய்க்குநர சிம்மனே; சமரிலே வென்றயெம் கோகுல மன்னனே! யாதவர் ஏத்திடும் இன்முகத் தூயனே; பூதலம் போற்றிடும் பூமகள் நேயனே; சீதளத் திருமகள் சீந்திடும் மாலனே; மேதினி காக்குமெம் வேய்குழற் கோலனே!
===============================
இராச தியாகராசன்

பிகு:
====
சூதன் - சூரியன், கோதுளம் - வெற்றுப்பதரான உளம், கார்வண்னன் - நீல மேக சியாமளன், சீந்திடும் - போற்றிடும்/ ஏற்றிடும், வேய்குழல் - மூங்கிற் புல்லாங்குழல்.  

திங்கள், 22 ஜனவரி, 2024

மகத்தான மானிடரே பாருங்கள்...

 தோன்றியதை எழுதுகின்ற இறைவனை நம்புகின்ற  பாவலன் நான்.  கள்ளங் கசடறவே, ஊதுவுலைத் தீயிலிட்டு, கவிநெய்யும் தூயமனப் பாவலன் நான். நட்பிலிருக்க வேண்டுமென்போர் இருந்து சுவையுங்கள்;  தேவையில்லை என்போர் போய்க்கொண்டே இருங்கள்!  என்னுடைய உடலில் உயிரிருக்கும் வரை, எவரென்னைத் ஏற்றினாலும், தூற்றினாலும் நிற்காதென் கவிமுரசம்;  என்றென்றும் அறத்தையும், மனித நேயத்தையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னுடைய சுற்றத்தவரே எனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; என்கவிதைகளைப் படிப்பதுமில்லை. என்றென்றும் அந்தச் சீர்காசியத்தன் ஒருவனின் அருளெனக்கு போதும்.
======================================
======================================
மகத்தான மானிடரே பாருங்கள்...
================================
செழிப்புடனே நம்மக்கள் சிறந்துலகில் எழுச்சியுற,
அழலெடுக்கும் கொடியோரின் அறமழிக்கும் ஆணவத்தை, 
குழிபறிக்கும் கோணலையே கூத்துவல்யன் சீரருளால், 
விழிப்புடனே வீரபத்ரன் மிதிதொறுப்பான் பாருங்கள்!

எம்மகளிர் எரிநெருப்பில் எக்கலிக்கும் எத்தரவர், 
வெம்பிவிழ வெறுங்கனவில் விம்முகின்ற ஏதிலியோர்
செம்மையுறச் செங்கோலும் சிறந்தோங்க சீறிச்சினந்தே
அம்பலத்தில் ஆடரசன் அனலெடுப்பான் பாருங்கள்!

மரித்துவிட்ட மாதரவர் மகத்தான பிடிசாம்பல், 
இருக்கின்ற மங்கையரை எருவாகித் தாங்கிடவே,
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிதழலை ஈசான்யன் ஏந்திடுவான் பாருங்கள்!

வாளெடுத்தே வீசுகின்ற மன்னவனோ நானில்லை;
தாளெடுத்துத் தூவலினால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு;
ஊளையிடும் நரிக்கூட்டம் ஒடுங்கிவிழ வேயுறு 
தோளிபங்கன் சூலத்தால் துளைத்தெடுப்பான் பாருங்கள்!

தங்கமலர்த் தங்கையரை சதிசெய்தே அழித்தோரை,
மங்கையரின் மானத்தை மாய்தெரித்தே சிரித்தோரை, 
நங்கையரை துய்த்தழித்தே நாசமும் செய்தோரை, 
சங்கரியின் சிவநேசன் சங்கறுப்பான் பாருங்கள்!
=====================================
இராச தியாகராசன்.

பிகு:
====
கூத்துவல்யன் - கூத்தன், எக்கலித்தல் - கெக்கலித்தல், 
ஈசானியன் - ஈசான மூலையின் தலைவன்(ஈசன்), தூவல் - மசி பேனா, 
வேயுறு தோளிபங்கன் - மூங்கிலொத்த தோளுடை மாதொரு பாகன்.
சங்கறுப்பான் - அழித்தொழிப்பான்.

திங்கள், 15 ஜனவரி, 2024

விளைகின்ற மாறா வினை....

நெருங்கிய ஒருவரின் ஈருந்து விபத்தினைப் பற்றி அறிந்த தாக்கத்தால் வனைந்த வரிகளிவை.  எவ்வளவு சொன்னால் என்ன? எவ்வளவு செய்தால் என்ன? மீண்டும் மீண்டும், தலைக்காப்பணிய இளையோர் தவறுகின்றனரே! 
======================================











======================================
விளைகின்ற மாறா வினை...
(கலிவெண்பா)
======================================
வாழ்வென்ப தார்வமொடு வாகாகத் தானமர்ந்தே
சூழ்நிலையைச் சுற்றமதைச் சோர்வகலத் தான்மறந்தே
மூழ்கியெழத் தித்திக்கும் மோகவலை காட்சியன்று: 
வாழ்ந்திருக்க வந்தவொரு மாண்புமிகு வாய்ப்பன்றோ?

சென்றதையே நீரெண்ணிச் சிந்தித்தே மீள்பதிவாய்
இன்றுளத்தில் கண்டிடலாம்! எந்நாளும் உண்மையிது!
அன்றங்கே சென்றிடவே ஆராலும் ஆகாதே
என்றவொரு மெய்யதனை எல்லீரும் தானுணர்வீர்!

மன்பதையில் வந்துவிட்ட மாந்தர்கள் வாழ்வினிலே
சென்றதெலாம் மீளாமல் சீக்கிரமே சென்றதுவே!
தன்கணினி மீட்டிரும்பத் தட்டுவிசை என்றிங்கே,
உன்வாழ்வில் ஏதுமிங்கே உண்டோமோ சொல்வீர்!

களிப்புடனே இன்றுதலைக் காப்பின்றிச் செல்லும் 
இளையோரே; எல்லா மெனக்கென்னு மிந்த  
வளையாத ஆணவத்தால் மாயந்தழித லென்றும்
விளைகின்ற மாறா வினை.
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மோகவலைக் காட்சி =  இனிய இணையக் காட்சி
எல்லீரும் = எல்லாரும்
மீட்டிரும்பு விசை = மீள்திரும்பு விசை (back space)

வாழ்த்து தரும் நாளிதுவே...

அனைவர்க்கும் இனிய உழவர்த் திருநாள், தமிழர்த் திருநாள், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் வாழ்த்துரைக்கிறேன்.  வாழிய வளத்துடன் பல்லாண்டு.
=========================================













=========================================
வாழ்த்துதரும் நாளிதுவே....
==================================================
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
கள்ளமிலா தன்புமிளிர் கனித்தமிழின் நாளிதுவே; 
பள்ளுடனே பாடிமகிழ் பைந்தமிழின் நாளிதுவே; 
தெள்ளுறுதித் தூயமனத் தென்தமிழின் நாளிதுவே! 

கண்மயங்கக் காதலரும் களிக்கின்ற நாளிதுவே; 
வெண்ணிலவு நங்கையரும் விழைகின்ற நாளிதுவே; 
பண்ணிலங்கக் காளையரும் பாடுகின்ற நாளிதுவே; 
எண்ணமுறை தீந்தமிழில் இசைக்கின்ற நாளிதுவே! 

மண்ணுலகின் மருவில்லா வண்டமிழின் நாளிதுவே; 
தண்ணிலவாய் ஒளிவீசும் தண்டமிழின் நாளிதுவே; 
நண்ணுகின்ற நல்லறத்து நற்றமிழின் நாளிதுவே; 
உண்மையொளிர் ஆற்றலுறை ஒண்டமிழின் நாளிதுவே! 

துள்ளிவருங் காளையுடந் தூதுவிடும் நாளிதுவே: 
அள்ளிவளர் அன்னைமகிழ் ஆர்தமிழின் நாளிதுவே; 
புள்ளியிடுங் கோலமெழிற் பொங்கலிடும் நாளிதுவே; 
வள்ளையொடு கும்மியுடன் வாழ்த்துதரும் நாளிதுவே! 
====================================================
இராச. தியாகராசன்

பிகு:
====
பள்ளு - ஆனந்தப் பாட்டு, பைந்தமிழ் - பசுமை+தமிழ், வண்டமிழ் - வளமை+தமிழ், தண்டமிழ் - தண்மை+தமிழ், நற்றமிழ் - நல்ல+தமிழ், 
ஒண்டமிழ் - ஓண்மை+தமிழ், தெள்ளுறுதி - தெளிந்த உறுதி, நண்ணுகின்ற - பொருந்துகின்ற, (வள்ளை/பள்ளு/கும்மி/தெம்மாங்கு - சிந்துப்பா வகையின).

செவ்வாய், 26 டிசம்பர், 2023

ஆழியே கேளாய்...

ஆழியின் சீற்றம் வந்தநாள் காலையில், ஒரு பாவரங்கில் இருந்தோம்.  புதுச்சேரி ஆழிநீர் உள்வாங்கியதைக் கேள்வியுற்றதும், உடனே கடற்கரைக்கு ஓடிச் சென்று, ஆழியது நீள உள்வாங்கி இருந்ததையும், சேற்று மண்ணில் சேல்கள் துடிப்பதையும் கண்டோம்.  இறங்கி நடக்கலாம் என்று தோழர்கள் சொன்னதை நானேற்கவில்லை.  ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக என்னுளம் பதறியது.  உள்வாங்கிய நீர் மீண்டும் திரும்பும் என்று கூட தோன்றியது.  அன்று மாலையில் நான் நினைத்தது மெய்யானது.  ஆனால் அதைவிடப் பேரிடர் சேதியாக இந்தோனேசியா, தாய்லாந்து,  இலங்கை நாடுகளில் ஏற்பட்ட பேரழிவும், நாகையின் சின்னாபின்னமும் வந்து உலுக்கியது.  அன்று நானெழுதிய பாடலிது.
===================================












===================================
ஆழியே கேளாய்....
==================
வங்கக் கடற்கரை வாழும் எம்மின;
மங்காப் புகழ்சேர் மறவர் தமிழினச்
சங்காய் முழக்கிய தமிழர் மாநகர்!
எங்கு மோடிய நாவாய் நிறைந்தே 
அலைகட லோரம் அழகின் உருவென
கலைகளும் புதுக்கியக் காவிரிப் பட்டினம்!
எத்தனை முறைதான் எழுந்தே பொங்கி,
முத்தாம் தமிழின் மேன்மை ஏடுகளுன்,
பானை வயிறே புடைக்க எடுத்தே,
ஆனைப் பசியற அள்ளித் தின்றாய்?

முன்னம் முடியா இலக்கியந் தேடியா,
இன்ப வாழ்விலுங் குளிர்ந்த சாவிலும்,
விரிகடல் நோக்கி விழியினைப் பதிக்கும்,
பரதவ மக்களும் புதைந்து போகவே,
சுடர்விழி மழலைகள் சிதைந்து போகவே,
விடியலில் மீண்டும் வெடித்தே எழுந்தாய்?
தாழாத் தமிழின் மேன்மை மறந்த,
சூழும் இருளாய்ச் சிந்தனை நிறைந்த,
கட்டும் அறுந்த கட்டு மரமென,
கெட்டே அழியும் குணமில் தமிழர்

வாழக் கண்டோ வெகுண்டே எழுந்தாய்?
கோழைக் கடலே தவறு செய்தாய்;
நெடித்தே எழுந்துன் நெடுந்தி ரையாலே
கடிதில் கொன்றது குற்ற மற்ற
பிஞ்சுகள்; பெண்டிர்; உன்றன் மக்கள்!
கெஞ்சி உனையே வேண்டு கின்றேன்!
தெண்டிரை சூழ்ந்த புவிய கத்தையே,
வண்டமிழ் வாழும் தென்ன கத்தையே,
வென்றே அழிக்க எழுந்தே சீறிநீ 
என்றுமே தொடாதே! என்றுமே தொடாதே!
=================================
இராச தியாகராசன்

பிகு:
====
நாவாய் - கப்பல், புதுக்கிய - புதுப் புனைவாக்கிய
மன்பதை - உலகு, குணமில் - பண்பில்லா,
நெடுந்திரை - நெடிய அலை, கடிதில் - விரைவில், 
தெண்டிரை - தெள்ளிய அலை.

நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...

இன்றைக்கு, ஏழைகளின் ஏந்தல், பொதுமையார்வலர், அன்பின் திரு இரா. நல்லக்கண்ணு புவியில் உதித்த நாள்.  சொத்து/ பதவி/ பட்டம்/ எதற்கும் மயங்காமல், காந்தியண்ணலைப் போலவே எளிமையுடன் வாழ்த்திருக்கும் அந்நல்லவரின் பிறந்தநாளில், இந்தச் சிறிய  பாவலன் வாழ்த்துரைக்கிறேன்.
=====================================












=====================================
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...
=====================================
குன்றிலிட்ட விளக்கெனவே கொள்கைக்காய் எந்நாளும்,
இன்றுலகில் வாழுமெங்கள் ஏந்தலே! - என்றும்உம்
பண்பதுவால் நீவிரிங்கு பாரதத்தை ஆள்கவென, 
ஒண்மைமிகு வண்ணஞ்சேர் ஒண்டமிழில் வாழ்த்துகிறேன்.

பற்றில்லா(து) இன்றேழை பாழைகட்காய் முன்நிற்கும்
பொற்பின் பொதுவுடமைப் போர்வேந்தே! - வற்றா
வளங்களுடன் என்று முயர்கவென இற்றைக்(கு)
இளமையொடு நின்றிலங்கும் எந்தமிழில் வாழ்த்துகிறேன்.

செந்தமிழிற் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கிச் 
சிந்துகவி நான்செய்தல் சீரெனினும் - நொந்தவர்க்காய்ச் 
சுற்றிச் சுழன்றிங்கே தொண்டாற்றுந் தூயவரே;
குற்றமிலா நும்பொதுமைக் கொள்கைக்காய் வாழ்த்துகிறேன்.

பீடுறையும் கொள்கையின் பேரிலங்கும் ஆர்வலரே;
பாடுறும் ஏழைகட்காய் பங்கெடுத்தோய்! - நீடுபுகழ்
யாவையுமே உம்மிடத்தில் ஈண்டுலகில் சேர்ந்திடத்தான்  
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்.
===========================================
இராச தியாகராசன்

பிகு:
===
ஏந்தல் - புகழுக்குரியோர், ஒண்மை - ஒளிர்வு, 
ஏழைபாழை - ஏழ்மையிலுழலும் தாழ்வுற்றோர்,
பொற்பு - சிறப்பு, இலங்குதல் - தனிப்பட நிற்றல்,
பீடு - புகழ், பாடுறும் - துன்பமுறும். 


செவ்வாய், 19 டிசம்பர், 2023

தேடுங்கள் மானிடரே தேடுங்கள்..

சாதிமதச் சழக்குகளைப் புறந்தள்ளி, பேர்புகழைப் பாராமல், புகழ்/பதவியொன்றே குறிக்கோளாய் வாழாமல், அறவழியே மேன்மையெனக் கொண்டு, மாசுகளில் உழலாமல், மமதையிலே வீழாமல், வித்தகியின் திருவடியைத் தேடுங்கள் உலகீரே!
====================================













====================================
தேடுங்கள் மானிடரே தேடுங்கள்.....
====================================
அறிவென்னு மற்புதத்தை ஆழ்ந்துணர வகையின்றி,
வெறுப்புவளர் சாதிமத  வேற்றுமையே மெய்யென்று,
முறிக்கின்ற மோகத்தில் மூங்கையென உழன்றுநிதம்,
அறமென்னு(ம்) ஆடகத்தை அழிப்பாரே தேடுங்கள்!

சேரிடமு மறியாமல், தேர்ந்தெடுக்கத் தெரியாமல்,
ஆரென்ன சொன்னாலு(ம்) அகமயக்கந் தலைக்கேறப்
பாரினிலே விருதுகளைப் பதவியினை வேட்டையிட்டு,
பேரன்பை மிதிக்கின்ற பேதைகளே தேடுங்கள்!

வரிக்கின்ற நட்புமெது; வாய்த்திருக்குஞ் சுற்றமெது?
எரிக்கின்ற ஏக்கழுத்த இறுமாப்பின் விளையாட்டால்,
அரிக்கின்ற வினையறவே, அழிவில்லா மோனத்தில்
சிரிக்கின்ற சீரணங்கின் திருவெழிலைத் தேடுங்கள்!

கூட்டமாய்க் கூடியே குற்றத்தில் முக்குளித்து,
வாட்டியே வேரறுக்கும் மமதையின் விளையாட்டால், 
மூட்டிவிட்டச் செந்தழலாம் முடிவென்னும் பாசத்தால்
ஆட்டுகின்ற காளியவள் அருளமுதைத் தேடுங்கள்!

பாதையதை மறந்திங்கு பாழ்வெளியாம் மயக்கமெனும்
போதையிலே குளியலிடும் பூவுலகின் மானிடரே;
சாதலெனும் மெய்யென்றே சத்திய மென்றுணர்ந்தே
ஆதியவள் நேரன்பை அன்றாடந் தேடுங்கள்!

குத்துக் காலிட்டக் குழலெழிலைத் தேடுங்கள்;
அத்தன் மயங்குகின்ற அன்புருவைத் தேடுங்கள்:
நத்தும் புல்லாக்கு(ம்) ஒளிரெழிலைத் தேடுங்கள்;
சித்துகள் புரிகின்ற சீருருவைத் தேடுங்கள்!

வித்தைகள் காட்டுகின்ற வித்தகியைத் தேடுங்கள்;
சித்தம் சிலிர்க்கின்றச் சித்தினியைத் தேடுங்கள்;
தத்தை தோள்சேர்ந்தச் சங்கினியைத் தேடுங்கள்;
நித்தம் நிறைவுதரும் நேரிழையைத் தேடுங்கள்!

பித்தம் அறுக்கின்ற பேரெழிலைத் தேடுங்கள்:
கத்தும் கடல்நோக்கும் கன்னிகையைத் தேடுங்கள்;
நித்தில மாலையணி நிரந்தரியைத் தேடுங்கள்:
புத்தம் புரியிலுறை பூவிழியைத் தேடுங்கள்! 

செறிவான வாழ்வுதருந் தேனம்மை தேடுங்கள்;
அறம்வளர் அன்புருவ அழகம்மை தேடுங்கள்;
கறையில்லாக் காலனுறை கண்ணம்மை தேடுங்கள்;
மறைவடிவி லாள்கின்ற மங்கம்மை தேடுங்கள்;

கோதில்லாச் சீரிலங்குங் கொற்றவையைத் தேடுங்கள்;
காதலொடு மாகாலன் காப்பவளைத் தேடுங்கள்;
மாதொரு பாகனவன் மாதவளைத் தேடுங்கள்;
ஆதியெனும் ஆனந்த ஆரமுதைத் தேடுங்கள்!

ஈசனவன் இல்லாளை இடையறாது தேடுங்கள்; 
மாசில்லாச் சோமனுறை வஞ்சியினைத் தேடுங்கள்;
ஊசிமுனை தவம்செய்யு(ம்) உலகம்மை தேடுங்கள்;
சாசுவத தெய்வமாஞ் சக்தியைத் தேடுங்கள்!

சிரிக்கின்ற சங்கரியிஞ் செங்கழலைத் தேடுங்கள்;
கருணையுடன் காக்கின்ற கருமாரி தேடுங்கள்;
வரமருளும் மாரியெங்கள் வாரிதியைத் தேடுங்கள் 
திருவளர் செல்வியின் திருவடியைத் தேடுங்கள்!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
அத்தன் - சீர்காழி அத்தன்
நத்து/ புல்லாக்கு - பழந்தமிழ் மகளிரின் அணிகலன்.
தத்தை - கிளிப்பறவை
புத்தம்புரி இல் - புதுமையான வீடு
ஏக்கழுத்தம் - தானெனும் அகந்தை (ஈகோ)
இறுமாப்பு - தற்பெருமை
பேதை - அறிவிலி
ஆடகம் - பொன்
பாசத்தால் - பாசக் கயிற்றால்
மூங்கை - ஊமை
கோது - குற்றம்

செவ்வாய், 28 நவம்பர், 2023

வளஞ்சொரியும் பாப்புனைய வாரீர்...

நந்தமிழரே!  வளஞ்சொரிகின்ற பாப்புனைய வாரீர்.
=================================================




=====================================
வளஞ்சொரியும் பாப்புனைய வா!
============================================
துள்ளிவருங் குற்றாலத் தூயமலைச் சாரலதாய், 
வெள்ளியிழைப் போல்மின்னும் விண்முகிலின் தூரலதாய், 
வெள்ளைநிறத் தெண்டிரையின் மீனிலங்கு வாரிதியாய், 
அள்ளியிட்ட நித்திலத்துப் பொன்வண்ணத் தாரகையாய், 

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தை வார்த்தே, 
அடிவானஞ் சொட்டும் அடரழகைச் சேர்த்தே, 
விடிவெள்ளி போல்நித்தம் பொன்னெழிலும் பூக்க, 
முடிபுனைந்த மூவேந்தர் முத்தமிழைக் காத்ததுபோல்,

பொற்றமிழைக் காக்கவிங்கு பொற்பனைத்தும் பெற்றிலங்கி, 
வெற்றித் தமிழோங்க வேங்கையென முன்னெழுந்தே, 
வற்றாத சீரிளமை வாய்த்திருக்குந் தாய்மொழியாம், 
நற்றமிழை நந்தமிழர் நாளுமிங்கே போற்றி, 

நெளிவில்லா நேர்மையொடு நெஞ்சகத்தால் ஏந்தி,
தெளிவாகச் சிந்தித்தே செந்தமிழில் நீந்தி, 
அளிக்கின்ற அன்னையவள் அன்பினையே சீந்தி, 
வளஞ்சொரியும் பாப்புனைய வா.
============================================
இராச தியாகராசன்

பிகு:
=====
நித்திலம் - ஆணிமுத்து
தெண்டிரை - தெள்ளிந்த அலை
அடரழகு - நிறைந்த எழில்
பொற்றமிழ் - பொன்+தமிழ்
பொற்பு - சிறப்பு
சீந்தி - போற்றி.