செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

நேதாஜி போலே நிமிர்ந்து....

நேதாஜி போலே நிமிர்ந்து.....
================================================















================================================
சிங்கத்தின் சீறலெனச் செந்தீயின் சாரலென
வங்கத்தில் வந்துதித்த மாமனிதர்! - மங்கிவிழும்
சாதாப் பிறப்பெனத் தாழாமல் நாமெழுவோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

தூய்மையின் பேருருவாய் சூட்டெரிக்கும் சூரியனாய்
ஓய்வின்றி கொக்கரித்த ஓங்கலிவர்! - தாய்மண்ணாம்
மாதாவை, மங்கையரின் மானத்தை நாம்காப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

பெரும்பொறியாய்ப் பற்றிப் பிழம்பெனவே நாமும்
கருக்கினிலே மாறவழி கண்டார்! - உருக்குலைத்தே
பாதாளம் வீழ்த்திவிடும் பாழதனை நாமெரிப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

பொய்யின்றி நாட்டின் புகழுக்கே எந்நாளும்
மெய்யாய் உழைத்தபெரும் வீரரிவர்! - நைவின்றி
சூதாட்டம், சோதனைகள் சூழ்ச்சிகளை வேரறுப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து

சென்றிடு நாடெல்லாம் சீர்த்தி சிறப்புகளை
வென்ற பெரும்புரட்சி விந்தையிவர்! - இன்றிங்கே 
சேதாரம் செய்கின்ற தீவினையோர் கோதறுபோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

போர்க்களத்தில் நெஞ்சுயர்த்திப் புன்மைகளைத் தீய்ப்பதற்கே
கூர்வாளை ஏந்திநின்ற கோட்டையிவர்! -தூர்த்தரையே
மோதா(து) அடங்கும் முடக்கத்தை நாமழிப்போம்
நேதாஜி போலே நிமிர்ந்து.

கொல்லும் பகைமாய்க்கக் கூற்றுவனாய்த் தோளுயர்த்தி
வெல்லும் படைகொண்ட வேந்தரிவர்! - புல்லர்கள்
வாதாடும் நாவடக்க மாமலையாய் நாமுயர்வோம்
நேதாஜி போலே நிமிர்ந்து.
=================================================
 இராச. தியாகராசன்.