திங்கள், 22 ஏப்ரல், 2024

வாழ்வென வாழ்வமே!.......

============================================

=============================================
வாழ்வென வாழுவீர்! 
(நிலைமண்டில அகவற்பா)
============================
மலைதனில் தோன்றியே மடுவினிற் சேரவே,
அலைந்திடும் புனலென இளமையின் கணங்களும்,
நேற்றென, இன்றென நாட்களும் கரையுமவ்
வாற்றின் பாலமும் ஒருவழிப் பாதையே!

தவறெதும் செய்யாது தண்டனை தருவதும்,
அவதிக(ள்) அவனியில் அத்தனை யுறுவதும்,
தவிப்பினில் மூழ்கியே சலிப்பினைப் பெறுவதும்,
புவியினில் புழங்கிடும் புதுமையின் சாரமோ?

இருப்பினை இளமையை இன்பமாய்த் துய்த்திடும்
கருக்கிலேக் கடக்குமக் காலமாம் காட்சியை
விரும்பியே மனத்தினில் மீளவும் காணலாம்;
திரும்பவும் அடைவது செகத்தினின் நடக்குமோ?

நடந்திடும் இளமையும் நிழற்படக் காட்சியே!
கடந்திடும் காலமும் கானலின் நீர்மையே!
கடுகியே விரைந்திடும் கனவிலே தவழ்ந்திட,
முடிவினைக் கொண்டவர் முயல்வதும் முடியுமோ?

இயற்கையை மாற்றிட ஏந்தலாய்த் தோன்றியே,
வயதினை வென்றினி வாழ்வினில் நிலைப்பரோ?
அழைப்பிலா விருந்தென அந்தகன் பரிசென,
நுழைந்திடும் வாழ்விலே நிச்சயம் முதுமையே!

பயத்தினால் பதவியால் பார்புகழ வாழலாம்;
முயற்சியால் மூடரை முடங்கிவிழச் செய்யலாம்;
அறிவினால் அகந்தையால் அடக்கியே ஆளலாம்;
இறப்பினை எரித்தே ஏய்க்கவும் முடியுமோ?

மாய்ந்திடப் பிறந்திடும் மானிட தேகமும்,
தேய்ந்திடத் தேடிடும் செல்வமும் மெய்ம்மையோ?
சூழ்ந்திடும் ஏனையர் சுகமுடன் வாழ்ந்திட,
வாழ்ந்திடும் வாழ்வதே வாழ்வென வாழ்வமே!
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மடு = பள்ளம் (அ) ஆழ்கடல், புனல் = ஆறு,
அவனி = பூமி, செகம் = உலகம், 
ஏந்தல் = உயர்ந்தவர், அந்தகன் = நமன்.

திங்கள், 15 ஏப்ரல், 2024

வாக்களிப்பீர்......

வாக்களிப்பீர் மக்களே!
=============================













=============================
மறக்காமல் வாக்களிப்பீர்......
=============================
தூண்டிலிலே தொக்கிநிற்குஞ் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாமல்,
காண்பதெலாங் கொள்வதுவுங் கண்போக்கிற் களிப்பதுவும்,
மாண்பென்று மயங்காத மானிடர்க்கே வாக்களிப்பீர்!

தன்னெறியாய்த் தருக்கரவர் தயக்கமற தரணியிலே,
இன்னெறியாய் மயங்குமந்த ஏற்றமில்லாக் கொடும்பாவப் 
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் புழுதியிலே, 
என்றுமுழல் எத்தரிங்கு வீழ்ந்திடவே வாக்களிப்பீர்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்க ளாழ்ந்தூன்ற, 
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுக்கடுக்கா யழுக்கென்னு மாழியிலே வீழ்ந்துழலும்,
நெடுமரத்துக் கயமைகளும் நெக்குவிட வாக்களிப்பீர்!

பணமென்றும், பதவியென்றும், பழகுந்தீ வழக்கென்றும்,
தணலேறி தகிக்கின்றச் சழக்கென்றும், சலிப்பில்லா
துணவென்று மரசியலி லுழலுகின்ற உலுத்தர்கள் 
கணப்போதிற் கரைந்தோடக் கடுஞ்சினத்தில் வாக்களிப்பீர்!

சங்கிலியாய்ப் பின்னலிடுஞ் சருகனைய வாழ்வினிலே
மங்குலென நிலையின்றி வஞ்சகரும் மயக்கத்தில் 
முங்குவதால், நல்லவர்கள் முன்னெடுக்கும் நல்லறமே 
இங்குநிதம் பொலிந்திடத்தா னெழுச்சியுடன் வாக்களிப்பீர்!

உள்ளத்தி லூழ்க்கின்ற உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
கொள்ளுகின்ற கொடுமைகளைக் கொளுத்திடவே வாக்களிப்பீர்!

ஏக்கழுத்தம் ஈடணைகள் ஏறியதால் இலக்குவனால்,
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென எந்நாளும்
ஓக்கமிலா தாடுகின்ற ஊடகங்கள் அதிர்ந்துறைய,
சாக்கடை அரசியலும் சாய்ந்துவிழ வாக்களிப்பீர்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை;
சுளுவாக உன்கழுத்திற் றொடையலும் விழுவதில்லை; 
தெளிவாகச் சிந்தித்தே திடமாகத் தேர்ந்தெடுத்து,
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கே வாக்களிப்பீர்!

உடலுழைப்பி லுருவாகு முயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறி, களமீதில் வளர்ச்சிகளும்,
நடக்குமென்ற நன்னெறிக்காய் நல்லவர்க்கே வாக்களிப்பீர்!

தளர்வின்றித் தயக்கமற சலிப்பில்லாத் தவிப்புடனே,
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர்க் கனவகற்றுந் 
தெளிவான அரசியல்தான் திறன்மிகுந்தத் தாய்நாட்டின் 
வளர்ச்சிக்கு வழியென்றே வல்லவர்க்கே வாக்களிப்பீர்!

வல்லாட்சி அரசியலின் மமதையினால் நாடோறும் 
சொல்லொணா தழல்போன்ற துன்பத்தி லெரிந்துநிதம்
கல்வியின்றி, காசுமின்றி கண்போக்கில் வாழுமெங்கள் 
இல்லாத ஏழைகளின் எழுச்சிக்காய் வாக்களிப்பீர்!
=====================================================
இராச. தியாகராசன்
====================

பிகு:
====
புன்னெறி = தீயநெறி, முடங்கர் = மாற்றுத் திறனாளி, நெக்குவிட = விரிசல்விட,
உலுத்தர் = கயவர், முங்குதல்= மூழ்குதல், ஊழ்த்தல் = பிறப்பெடுத்தல், 
துய்த்தல் = சுவைத்தல், ஏக்கழுத்தம் = ஈகோ, ஈடணை = இறுமாப்பு, 
முடந்தை = ஊமை, தொடையல் = மலர்மாலை, வல்லாட்சி = சர்வாதிகாரம்.

புதன், 6 மார்ச், 2024

மங்காமல் வாழும் வழி...

இற்றைக்கு என்னுளத்தை பாதித்து, சிந்தனையைச் சிலுப்பிய சமுதாய நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையிது.
நங்கையர் நாளுக்காய் ஒரு மீள்பதிவு செய்கிறேன்.  சமீப காலமாய்ப் புதுவை என்றில்லை, இந்தியத் துணைக்கண்டம் யாங்கணுமே பரவலாக சிற்றகவை, பேரகவைப் பெண்டிரை சீரழித்துக் கொல்லும் கேவலமான பண்பாடு ஏனிப்படி நச்சுக் கொடியாய் வளர்ந்தோங்கி கவிந்திருக்கிறது? இந்த நிலைமைக்கு முடிவு வரவே வராதாவென்று ஏங்குகிறது உள்ளம். அன்று நிர்பயா, அனிதா, ஆசீபா, கௌரி லங்கேஷ், த*ம*ரி, தூ*து*கு*,  @*ணி*ப்பூ*@, *ள்ளா*சி;  இன்று புதுவையின் ஆர்த்தி.  (முழுசாய் ஊர் பெயரைச் சுட்டினால், பதிவு எவரையும் அடையாதென்பதால், மறைபெயர்; அன்பர்  மன்னிக்கவும்)
============================================












============================================
மங்காமல் வாழும் வழி....
(ஒரு பஃது அந்தாதி வெண்பா மாலை)
====================================
தேனிருக்க நஞ்சினைச் சீரென்றே நாடுகின்ற
மானுடமே! சீர்த்திமிகு வாலிபமே! - கானினுறை 
மாக்களல்ல நாமென்றும் வஞ்சியரைப் போற்றுவதே 
ஊக்கமுறை ஓங்கலெனும் வாழ்வு. (01)

வாழ்விதுவே வாழ்வென வாழ்தலையே வாழ்த்தலின்றி 
வாழ்ந்துநிதம் வாழ்வறுந்த வாழ்வினமே! - சூழ்துயரந் 
தானகன்றே எம்மகளிர் தானவர்போல் வாழ்ந்திருக்கக் 
கூனகலக் கோடுதலே கோது. (02)

கோதின் வழியிருந்துங் குற்றமிலாச் சீரிருந்தும், 
மாதரவர் மாண்பினையே மாசாக்கும் - வேதனைகள் 
வேர்த்தழிய வேண்டுமென வீறுகொண்டே மாந்தரினம்
ஆர்த்தெழுந்தால் நீறாகும் ஆசு. (03)

ஆசுகளைக் கொள்ளியிட்டு ஆற்றலுடன் நம்மிளையோர்
பாசமுடன் பண்பாட்டைப் பார்ப்பதுதான் - நாசமற,
நங்கையரு மிப்புவியில் நன்னலமே பெற்றிலங்கி,
மங்காமல் வாழும் வழி. (04)

வழியில்லாப் பாதையிலே மானமின்றிச் சென்றே 
அழிப்பதுதான் ஆக்கமுறை அன்போ? - செழிப்புறவே
மாந்தரும் மங்கையரை வாடாமற் காத்துநித  
மேந்துவதே என்று மெழில். (05)

எழிலாரும் பெண்மையத னீகையெனும் பண்பே
வழுவில்லா வையகத்தின் வாசல்! - விழுப்புறவே
சால்பனைத்து மள்ளியிடுந் தன்னலமே இல்லாத
ஆல்நிகர்த்த அன்னையெனு மன்பு. (06)

அன்பொன்றால் தாயெனவே ஆதரித்துக் காத்துநின் 
றின்பந் தருபவளும் இன்மகளே! - இன்றுலகிற் 
றங்கையென அக்கையெனத் தாயுமெனத் தாரமென 
மங்கையரைப் போற்றுதலே மாண்பு! (07)

மாண்பென்ற சொல்லுக்கு மாறா இலக்கணமாய் 
ஆண்கள் அறவழியில் ஆர்த்தெழுவோம்! - பெண்ணுயர 
எல்லாருங் கைகோத்தே ஈனமெலாந் தீயிலிட் 
டில்லாமற் செய்வதுவே ஏற்பு. ( 08 )

ஏற்ப தனைத்தும் இயல்பென் றிருக்கவா 
நேற்றிங்(கு) உதித்தோமிந் நீணிலத்தில்? - தூற்றும்பேர்  
ஆளுமெம் பெண்டிரின் ஆற்றலை மாய்த்துவிடின் 
தாளுமோ தாயகந் தான். (09)

தானென்ற வாழ்வுஞ், சரிகின்ற எண்ணமுங் 
கானலின் நீராய்க் கருதியே - நானிலப்பெண் 
தாழ்வற் றிருக்கச் சலிக்கா துழைப்பவர்
வாழ்வே அமுதமயத் தேன். (10)
====================================== 
இராச. தியாகராசன்.

பி.கு:  
====
ஓங்கல் = குன்று,  கோது = நேராக (சீப்புக்கு இன்னொரு பெயர் கோதுகலம்), 
விழுப்பு = சிறப்பு. சால்பு= மேன்மை/நற்பண்பு, மாண்பு= மாட்சிமை/ பெருமை.

திங்கள், 12 பிப்ரவரி, 2024

கவிதையெனக் கோக்கின்றாய்...

என்றன் நெஞ்சகத்தின் தவிசமர்ந்து, காலமெலாம், கருவுதித்தச் சிந்தனையின் கனவுகளைச் சொல்லடுக்கிக்  கவிதையென எழுதியிறைக்கின்ற.....

மந்திரமாய் வித்தகியின் வினோதங்கள்; 
தந்திரமாய்ச் சித்திரத்துச் சாலக்குகள்;  
ஓவியமாய் உத்திரத்து நூல்வலைகள்; 
காவியமாய் கதலிச்சுவை கயல்விழிகள்;   எத்தனையெத்தனையோ.....
==============================
==============================
கவிதையெனக் கோக்கின்றாய்..
==============================
சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல் சிதையாமல்,
பித்தன்புத் தூரிகையாற் றீட்டுகின்ற ஓவியம்போல்,
புத்தமுதப் பொன்னணங்கே புதுமையெனப் புந்தியில்நீ,
எத்தனையோ கவிதைகளை எழுதிவைத்துப்  பார்க்கின்றாய்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறுகின்ற நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள், 
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் துளைக்கையிலே,
உதயமான உணர்வுகளை உருக்கிவரிச் சேர்க்கின்றாய்!

அள்ளிமனங் கொள்ளையிடும் அமுதமழை சாற்றைப்போல்,
வெள்ளிமலை மேல்விளைந்த விண்ணருவி  ஆற்றைப்போல், 
துள்ளுகின்ற பூச்சியென தோன்றியுள்ளே ஆடுகின்ற,
புள்ளியெழிற் கோலமனை பொங்கும்பா  வார்க்கின்றாய்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில் 
மனத்துள்ளே மானுடத்தின் மயக்கங்கள் மருகிநிதம்
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காருளத்தில் 
கனவுகளைக் கார்காலக் கவிதையெனக் கோக்கின்றாய்!
  
வையகமும் மானுடமும் வாழ்நாளில் உய்த்துமனம்
துய்த்துணர வேண்டியதைத் துல்லியமாய்த் தூய்மையெனும்
மெய்யான மெய்யதனை மிளிர்கின்றப் பாவடிவில்,
செய்யவைத்தே கவிஞனெனைச் சீர்த்தியுடன் காக்கின்றாய்!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
தவிசு = மணைப்பலகை, பொன்னணங்கு = தங்கம் போன்ற பெண், புந்தி = அறிவு, சீர்த்தி = கீர்த்தி/புகழ்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

காற்றிலே பறக்கலாம் வாராயோ...

காதலர் நாளுக்காய் இன்னொரு பாட்டு...
======================================













======================================
காற்றிலே பறக்கலாம் வா... தோழி.
======================================
நியதிகளும் நெக்குவிட ஆடுகின்றேன்;
நித்தமுன்றன் நன்னலமே நாடுகின்றேன்;
மயிலொத்த நங்கையுனைத் தேடுகின்றேன்;
மயக்குருவ மாயத்தால் வாடுகின்றேன்!

இன்றைக்குன் வண்ணமெனும் பூச்சால், 
என்றென்றும் உன்நினைவென் மூச்சு;
கன்னலனைக் கண்ணசைவின் வீச்சால், 
கவிதையெனப் பொங்கிவரும் பேச்சு! 

வாடையின் குளிரால் முகிழ்கனைவை,
கோடையில் கொளுத்தி டும்நினைவை,
ஊடலும்  பிரித்த நம்உறவைப் 
பாடலாய்ப் பதியவைத்த பாவையே!

காதலின்பக் காரிகையே இன்றுமுன்றன்
கயல்விழியாந் தூண்டிலிலே சிக்கவைக்கும்
நாதமுறை நாயகியே, என்றுமுன்றன்
நயனமொழி வலைவீச்சே என்கோலம்!  

நாட்டியம் சொல்கிறாய் ஆடலால், 
பாட்டியல் சொல்கிறாய்ப் பாடலால், 
காட்டுதல் செய்தெனை தினந்தினம் 
வாட்டுதல் செய்கிறாய் வனிதையே!

ஓடையில் சலசலக்குந் தென்றலாய், 
உன்னெழில் வருகையைக் காண்கையில், 
ஆடகப் பொன்னென மின்னுமுன்றன்
அயில்வேல் விழியெனைக் கொல்லுதே!

சின்னஞ் சிறிய காற்சரத்தில்,
சிதறிச் சிரிக்கும் சிறுவொலியில்,
என்னில் பதிந்த முழுநிலவுன் 
கன்னற் சுவைமொழி கேட்டதனால்,

காலையின் கதிரிலே காலமுழுதும்,
காட்சியாய்க் கவிந்திடுங் கனவினையே
வாலைக் குமரியுன் மதிமுகத்தை 
மறக்கவே முயல்கிறேன், முடியவில்லை!

காற்றிலாடு மலரின் ஒயிலதே 
காதற்பெண் ணுன்றன் சிற்றிடையா?
சேற்றுவயல் மேவிய நெல்லசைவே 
செப்புச் சிலையுன்றன் மெல்லியலா?

மலரில் தோன்றும் மங்கையுருவை, 
மனத்தில் நிறையும் நங்கையழகை, 
நிலவின் நிழலும், திரையலைவும்,
நீர்க்கவில்லை மறைக்கவில்லை!

கண்ணைத் திறவாப் பொற்சிலையா 
கண்ணே உன்றன் இன்னுருவம்?
வெண்மை யொளிரும் நித்திலமா  
விண்ணின் நிலவுப் பெண்ணுருவம்?

கண்களை மூடினால் கன்னியுன் 
காட்சியாய்க் காணுமென் நிலையை
எண்ணியே ஏங்குமென் கனவை
எடுத்தே இயம்பிட ஆருண்டு?

என்னிதயச் சிறகென்னும் சிந்தனையை
இன்பந்தரும் உன்சொல்லால் ஒடித்தாயே; 
அன்றுமுதல் அன்றாடம் அலைந்துதிரிந்து, 
அனைத்துமே மறந்துலகில் சடமெனக்கு  

உண்ணுகின்ற உணவும் சுவைக்காமல்,
உலகாய உணர்வதும் இனிக்காமல்,
கண்ணிமைகள் முத்தமிடும் என்துயிலும் 
காலமெலாம் காணாமற் போனதுவே!

காட்சிகளில் தோன்றும் வடிவெழிலைக் 
காணுகின்ற வஞ்சியுன் கோலமதை,
சாட்சியாய்ச் சொல்லும் தண்மதியும்  
சார்ந்தே உரைப்பதை அறிவாயா?

ஒவ்வொரு முறையும் காண்கையிலே
உள்ளத்தில் கத்தியால் குத்துவதேன்?
கவ்வியே பற்றிடும் கனலொளிர்க் 
கண்ணெனும் தீயினால் எரிப்பதுமேன்?

காதருகுக் குழலசைத்துக் கனிவுடனே 
காற்றலைத் தூதுவன் கதைபேசும்
நாதத்தை நித்தம்நீ கேட்கையிலே
நலம்கேட்கும் நானென்றே புரியாதா?
 
துன்பத்தைத் தொலைத்தே எறிந்திட, 
துயர்களும் சுருங்கியே மறைந்திட, 
கன்மங்கள் கரிந்தே கரைந்திட, 
கனசோராய் நித்தமும் தோழியே;

சிரமமின்றி சிந்தையில் ஒன்றிணைந்து,
தேடுதலை நாடுதலை தான்மறந்து
விரும்பியுளம் சேர்ந்தே கனிந்துருகி
வேண்டாத வற்றையே வெறுத்துவிட்டு,

வானம்பாடி போலவே நாமென்றும்
வலிகளைத் தான்மறந்தே இன்றிங்கு 
கானம்பாடிக் களிப்புடனே கவலைமறந்து 
காற்றிலே சிறகடிப்போம் வாராயோ? 
============================
இராச. தியாகராசன்

பிகு:
====
ஆடகம் = சிறந்த பொன்
அயில்வேல் = கூர்மையான வேல்

புதன், 24 ஜனவரி, 2024

எம்புதுவை வாருங்கள்...

நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள்.  1977இல் இருந்தெனையொரு  பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக),  குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட,  போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!

என்றுமே எம்புதுவை பாவானம் தான்.  எத்தனை மரபியற் கவிகள்;  எத்தனைப் புதுக்கவிகள்;  எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்;  எத்தனைக் கலைமாமணிகள்;  எத்தனைத் தமிழ்மாமணிகள்.

==============================













==============================
பா - வானம் எம்புதுவை
=======================
மன்னவரை, மாடதனை, மாண்பெனவே கொள்ளாமல்,
மன்பதைக்கே வாழ்ந்திட்ட மாகவியின் பாச்சுவையே
என்புரட்சிப் பாவலனின் ஏற்றமிகு பாச்சொடுக்கே
இன்பமெனக்(கு) என்றிருக்கும் இன்னூராம் என்புதுவை!

பாருலகைப் பாடியநம் பாரதியாம் நாவரசைப் 
பாரதியின் தாசனவன் பாசமிகு பாவரசை, 
வேருடனே தாங்கிநின்று மேதினியோர் ஏத்துபுகழ்ப் 
பேரதனை எந்நாளும் போற்றிநிற்கும் என்புதுவை!

தெண்டிரை ஆழிசூழ் செம்புலத்து மண்ணிலே, 
வண்டமிழ் வண்ணமும், வள்ளையும் சிந்துமாய்த் 
தண்ணிலவுச் சொல்லடுக்கிச் சந்தமணப் பாப்புனைய, 
விண்முட்டுச் சங்கொலியாய் வீற்றிருக்கும் என்புதுவை! 
  
பண்ணொடு பாங்கெழிற் பாட்டியலின் சாற்றுடனே, 
எண்ணமுகிழ் எந்தமிழின் இன்பத்தேன் ஊற்றெனவே, 
வண்ணஞ்சேர் பாவொளிரும் மன்னுதமிழ் நாற்றெனவே, 
எண்ணிலாப் பாவரங்கம் ஏந்திநிற்கும் எம்புதுவை!

கண்ணிமைப்பில் கன்னற்பா கட்டுகின்றார் பாரய்யா;
மண்ணகத்து மாந்தரெலாம் வாழ்த்துகின்ற சீரய்யா;
தண்டமிழைத் தாழாது தாங்கிநிற்கும் பேரய்யா;
ஒண்டமிழர் வேங்கையென ஓங்கிநிற்கும் ஊரய்யா!

தீவானச் செந்தழலாய்த் தீந்தமிழின் சொல்லெடுத்துத்
தூவானந் தூவுகின்ற தூறலெனப் பன்னூறாய்,
நாவார நற்கவிதை நாடோறும் நான்புனையும்
பாவானம் என்புதுவை பார்!
=======================================
இராச. தியாகராசன்

பிகு:
====
மாடதனை - செல்வத்தை, மன்பதை - மண்ணுலகு, இன்னூர் - இனிய ஊர், தெண்டிரை - தெள்ளிய அலை, ஆழிசூழ் - கடல்சூழ், வண்டமிழ் - வளமைத் தமிழ், தண்ணிலவு - குளிர்நிலவு, தண்டமிழ் - தண்மை+தமிழ், கன்னற்பா - கரும்பனைய பாட்டு,  ஒண்டமிழர் - ஒளிர்கின்ற தமிழர், பா-வானம் - பாக்கள் நிறைந்த வானம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

வேய்குழல் மாயவா...

"என்னையா ஒரே சிவன் பாட்டாப் பாடியறுக்கிறாயே, உனக்கு இராமனையும்/ விஷ்ணுவையும் பாடவே தெரியாதா," என்று வலதுசாரி அன்பரொருவர் "அன்பாகவும் அறிவாகவும்" எனைப்பாடி வறுத்ததால், "அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு," என்று சொல்லி, இப்பாட்டை எழுதினேன். இனி வரும்நாளில், அந்தப் பாலாழி ஶ்ரீபத்மநாபனே நம்மையும், நம்மக்களையும், நம்நாட்டையும் காத்திடவே வேண்டுகிறேன்.
=========================================












=========================================
பாலாழி பத்மநாபா...
====================
சூதனும் பொற்கதிர்த் தூரிகை ஏந்தியே சோதியாய்க் காட்டிடுஞ் சுந்தர நந்தனே; நாதமாய் வேணுவும் நளினமாய் ஒலித்திடக் கோதுளம் காக்குமெம் குழலிசை விந்தனே! கமலினி பற்றிடும் கனிந்தகார் வண்ணனே; எமதுளம் உற்றிடும் எழிமிகு கண்ணனே; திமிரிலே உழல்நிலை தீய்க்குநர சிம்மனே; சமரிலே வென்றயெம் கோகுல மன்னனே! யாதவர் ஏத்திடும் இன்முகத் தூயனே; பூதலம் போற்றிடும் பூமகள் நேயனே; சீதளத் திருமகள் சீந்திடும் மாலனே; மேதினி காக்குமெம் வேய்குழற் கோலனே!
===============================
இராச தியாகராசன்

பிகு:
====
சூதன் - சூரியன், கோதுளம் - வெற்றுப்பதரான உளம், கார்வண்னன் - நீல மேக சியாமளன், சீந்திடும் - போற்றிடும்/ ஏற்றிடும், வேய்குழல் - மூங்கிற் புல்லாங்குழல்.  

திங்கள், 22 ஜனவரி, 2024

மகத்தான மானிடரே பாருங்கள்...

 தோன்றியதை எழுதுகின்ற இறைவனை நம்புகின்ற  பாவலன் நான்.  கள்ளங் கசடறவே, ஊதுவுலைத் தீயிலிட்டு, கவிநெய்யும் தூயமனப் பாவலன் நான். நட்பிலிருக்க வேண்டுமென்போர் இருந்து சுவையுங்கள்;  தேவையில்லை என்போர் போய்க்கொண்டே இருங்கள்!  என்னுடைய உடலில் உயிரிருக்கும் வரை, எவரென்னைத் ஏற்றினாலும், தூற்றினாலும் நிற்காதென் கவிமுரசம்;  என்றென்றும் அறத்தையும், மனித நேயத்தையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னுடைய சுற்றத்தவரே எனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; என்கவிதைகளைப் படிப்பதுமில்லை. என்றென்றும் அந்தச் சீர்காசியத்தன் ஒருவனின் அருளெனக்கு போதும்.
======================================
======================================
மகத்தான மானிடரே பாருங்கள்...
================================
செழிப்புடனே நம்மக்கள் சிறந்துலகில் எழுச்சியுற,
அழலெடுக்கும் கொடியோரின் அறமழிக்கும் ஆணவத்தை, 
குழிபறிக்கும் கோணலையே கூத்துவல்யன் சீரருளால், 
விழிப்புடனே வீரபத்ரன் மிதிதொறுப்பான் பாருங்கள்!

எம்மகளிர் எரிநெருப்பில் எக்கலிக்கும் எத்தரவர், 
வெம்பிவிழ வெறுங்கனவில் விம்முகின்ற ஏதிலியோர்
செம்மையுறச் செங்கோலும் சிறந்தோங்க சீறிச்சினந்தே
அம்பலத்தில் ஆடரசன் அனலெடுப்பான் பாருங்கள்!

மரித்துவிட்ட மாதரவர் மகத்தான பிடிசாம்பல், 
இருக்கின்ற மங்கையரை எருவாகித் தாங்கிடவே,
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிதழலை ஈசான்யன் ஏந்திடுவான் பாருங்கள்!

வாளெடுத்தே வீசுகின்ற மன்னவனோ நானில்லை;
தாளெடுத்துத் தூவலினால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு;
ஊளையிடும் நரிக்கூட்டம் ஒடுங்கிவிழ வேயுறு 
தோளிபங்கன் சூலத்தால் துளைத்தெடுப்பான் பாருங்கள்!

தங்கமலர்த் தங்கையரை சதிசெய்தே அழித்தோரை,
மங்கையரின் மானத்தை மாய்தெரித்தே சிரித்தோரை, 
நங்கையரை துய்த்தழித்தே நாசமும் செய்தோரை, 
சங்கரியின் சிவநேசன் சங்கறுப்பான் பாருங்கள்!
=====================================
இராச தியாகராசன்.

பிகு:
====
கூத்துவல்யன் - கூத்தன், எக்கலித்தல் - கெக்கலித்தல், 
ஈசானியன் - ஈசான மூலையின் தலைவன்(ஈசன்), தூவல் - மசி பேனா, 
வேயுறு தோளிபங்கன் - மூங்கிலொத்த தோளுடை மாதொரு பாகன்.
சங்கறுப்பான் - அழித்தொழிப்பான்.

திங்கள், 15 ஜனவரி, 2024

விளைகின்ற மாறா வினை....

நெருங்கிய ஒருவரின் ஈருந்து விபத்தினைப் பற்றி அறிந்த தாக்கத்தால் வனைந்த வரிகளிவை.  எவ்வளவு சொன்னால் என்ன? எவ்வளவு செய்தால் என்ன? மீண்டும் மீண்டும், தலைக்காப்பணிய இளையோர் தவறுகின்றனரே! 
======================================











======================================
விளைகின்ற மாறா வினை...
(கலிவெண்பா)
======================================
வாழ்வென்ப தார்வமொடு வாகாகத் தானமர்ந்தே
சூழ்நிலையைச் சுற்றமதைச் சோர்வகலத் தான்மறந்தே
மூழ்கியெழத் தித்திக்கும் மோகவலை காட்சியன்று: 
வாழ்ந்திருக்க வந்தவொரு மாண்புமிகு வாய்ப்பன்றோ?

சென்றதையே நீரெண்ணிச் சிந்தித்தே மீள்பதிவாய்
இன்றுளத்தில் கண்டிடலாம்! எந்நாளும் உண்மையிது!
அன்றங்கே சென்றிடவே ஆராலும் ஆகாதே
என்றவொரு மெய்யதனை எல்லீரும் தானுணர்வீர்!

மன்பதையில் வந்துவிட்ட மாந்தர்கள் வாழ்வினிலே
சென்றதெலாம் மீளாமல் சீக்கிரமே சென்றதுவே!
தன்கணினி மீட்டிரும்பத் தட்டுவிசை என்றிங்கே,
உன்வாழ்வில் ஏதுமிங்கே உண்டோமோ சொல்வீர்!

களிப்புடனே இன்றுதலைக் காப்பின்றிச் செல்லும் 
இளையோரே; எல்லா மெனக்கென்னு மிந்த  
வளையாத ஆணவத்தால் மாயந்தழித லென்றும்
விளைகின்ற மாறா வினை.
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மோகவலைக் காட்சி =  இனிய இணையக் காட்சி
எல்லீரும் = எல்லாரும்
மீட்டிரும்பு விசை = மீள்திரும்பு விசை (back space)

வாழ்த்து தரும் நாளிதுவே...

அனைவர்க்கும் இனிய உழவர்த் திருநாள், தமிழர்த் திருநாள், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் வாழ்த்துரைக்கிறேன்.  வாழிய வளத்துடன் பல்லாண்டு.
=========================================













=========================================
வாழ்த்துதரும் நாளிதுவே....
==================================================
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
கள்ளமிலா தன்புமிளிர் கனித்தமிழின் நாளிதுவே; 
பள்ளுடனே பாடிமகிழ் பைந்தமிழின் நாளிதுவே; 
தெள்ளுறுதித் தூயமனத் தென்தமிழின் நாளிதுவே! 

கண்மயங்கக் காதலரும் களிக்கின்ற நாளிதுவே; 
வெண்ணிலவு நங்கையரும் விழைகின்ற நாளிதுவே; 
பண்ணிலங்கக் காளையரும் பாடுகின்ற நாளிதுவே; 
எண்ணமுறை தீந்தமிழில் இசைக்கின்ற நாளிதுவே! 

மண்ணுலகின் மருவில்லா வண்டமிழின் நாளிதுவே; 
தண்ணிலவாய் ஒளிவீசும் தண்டமிழின் நாளிதுவே; 
நண்ணுகின்ற நல்லறத்து நற்றமிழின் நாளிதுவே; 
உண்மையொளிர் ஆற்றலுறை ஒண்டமிழின் நாளிதுவே! 

துள்ளிவருங் காளையுடந் தூதுவிடும் நாளிதுவே: 
அள்ளிவளர் அன்னைமகிழ் ஆர்தமிழின் நாளிதுவே; 
புள்ளியிடுங் கோலமெழிற் பொங்கலிடும் நாளிதுவே; 
வள்ளையொடு கும்மியுடன் வாழ்த்துதரும் நாளிதுவே! 
====================================================
இராச. தியாகராசன்

பிகு:
====
பள்ளு - ஆனந்தப் பாட்டு, பைந்தமிழ் - பசுமை+தமிழ், வண்டமிழ் - வளமை+தமிழ், தண்டமிழ் - தண்மை+தமிழ், நற்றமிழ் - நல்ல+தமிழ், 
ஒண்டமிழ் - ஓண்மை+தமிழ், தெள்ளுறுதி - தெளிந்த உறுதி, நண்ணுகின்ற - பொருந்துகின்ற, (வள்ளை/பள்ளு/கும்மி/தெம்மாங்கு - சிந்துப்பா வகையின).