திங்கள், 29 மார்ச், 2021

ஓங்கலும் உன் வசந்தான்....

ஓங்கலும் உன் வசமே...
===============================================================





===============================================================

பார்முழுதும் பட்டுபோல் பருத்தியில்லை; ஆனாலும்
வேர்க்கின்ற வேக்காட்டு வேனலுக்குச் சுகமதுவே!
ஆர்க்கின்ற காகமது அவனியிலே மயிலாமோ?
தேர்வாய்நீ தோகைக்காய் தொல்லைகள் மயிலுக்கே!

தங்கமும் தகரமும் சரிசமமாய் ஆவதில்லை;
அங்கத்தில் தங்கத்தை அன்புடனே அணிந்தாலும்
இங்கின்று தகரத்தின் எத்தனையோ பணிகளுக்கு
தங்கந்தான் ஆகுமோ? சரியாக அறிவாயே!

பொதிசுமக்கும் கழுதையும் போர்க்கலிமா ஆவதில்லை;
நதியருகில் சலவைக்கு நன்றாக உதவுகின்ற
எதிர்ப்பில்லா கழுதையது எந்நாளும் செய்வதையே
அதிவீரக் கலிமாவும் அன்றாடம் செய்வதில்லை!

இல்லமெங்கும் குடிக்கின்ற இன்னீர் யாங்ஙணுமே
துல்லியமாய்த்  தூய்மையுடன் சொரிந்தே வழிந்தாலும்
எல்லீரும் அடுக்களையில் இருக்கின்ற குழாயில்தான்
நல்லதென்று பிடித்திங்கு நாடோறும் குடிக்கின்றார்.

அதற்காக குளியலறை அமைந்திருக்கும் குழாய்களையே
மதியின்றி அகற்றிவிடும் வன்செயலைச் செய்யாமல்
இதந்தரும் அந்நீரை  இன்றுலகில்  தினந்தோறும்  
விதவிதமாய் பயன்படுத்த மேதினியோர் மறுப்பாரோ!

நேற்றுபோல் இன்றில்லை; நிகழின்று நாளையில்லை;
சேற்றிலே மலர்ந்தாலும் செம்மலர்க்கும் புகழுண்டு!
ஆற்றல்தான் அவனியிலே அணியென்று வாழ்பவர்க்கே
கூற்றுவனும் தலைவணங்கி கொடிபிடிப்பான் காண்பாய்நீ!

எவரென்ன சொன்னாலும், இன்றிங்கே குட்டைமதிற்
சுவரென்று வைதுநிதம் துரத்தியுனை யடித்தாலும்
அவனியிலே உனக்குநிகர் ஆருண்டு? உணர்ந்துநீ
உவகையுடன் பணிசெய்தால் ஓங்கலும் உன்வசந்தான்!
===================================================
போர்க்கலிமா = போர்க்குதிரை
ஓங்கல் = குன்று

இராச. தியாகராசன்


சனி, 20 மார்ச், 2021

என்னுள்ளே ஏகன் எழில்....

ஏகம்பனின் உருவந்தான் என்னுள்ளே சுழன்றாட,  என்றென்றும் என்னுள்ளே ஏகன் எழில்......
=========================

========================
என்னுள்ளே ஏகன் எழில்...
========================
கன்றிவிட்ட உள்ளத்தில் காராழிப் பேரலைபோல்,
பின்னல்களின் சிக்கலெனப் பீடிக்கும் ஆசைகள்
இன்றிங்கே தானடங்க என்றிங்கே  நானறிவேன்
என்னுள்ளே ஏகன் எழில்?

புன்மையெனுந் தீயதனில் புத்தழகுப் பொய்யதனில்,
நன்மையென நான்மயங்கி நாடோறும் வீழ்ந்தெரிய,
முன்னவரின் நற்செயலால், முன்வினைகள் பற்றறவோ 
என்னுள்ளே ஏகன் எழில்?

இன்னல்கள் ஆர்ப்பரிக்கும் இக்கடலில் நானுந்தான்
அன்றாடந் தீர்வின்றி ஆடுகிறேன் நாவாயாய்,
உன்மத்த வெறும்பிறப்பை உய்விக்க வந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?

என்னென்றும் ஏதென்றும் எங்கெங்கோ கூர்ந்தாய்ந்தே,
அன்னவனை ஆண்டவனை அங்கெங்கோ தேடுகையில்,
தன்னறிவாய் சாந்தமனச் சத்தியத்தைத் தந்திடுமோ
என்னுள்ளே ஏகன் எழில்?
=============================================
இராச. தியாகராசன்