செவ்வாய், 29 நவம்பர், 2022

கயல்விழியும் கூருகிரோ.....

காதலெனும் கடல்............

இரைகின்ற பெருந்நாகமோ இல்லை பின்னலெனும் வெறுங்கூந்தலோ? சீறிவரும் கூருகிரோ இல்லை சீராரும் கயல்விழியோ?

=========================================








========================================= 
அவனுக்கோ...
===========
சேர்த்துக் கட்டி வரிந்தாலும், 
பார்த்தால் உளம்கொய்திட,
ஆர்ப்ப ரித்தே இரையுமொரு, 
பெருந்நாகம் என்றானால்:

அவளுக்கோ...
===========
நீள்விரலால் வாகொதுக்கத்
தோள்சரிந்தே காதோரங்
காற்றலைவிற் கதைபேசும், 
பின்னலெனும் வெறுங்கூந்தல்...

அவனுக்கோ...
===========
உளங்கிழிக்கச் சட்டென்றே, 
மின்னலதன் வடிவதுவாய், 
உயிர்குடிக்கச் சீறிவருங்  
கூருகிர்கள் என்றானால்;

அவளுக்கோ...
===========
அவனெழிலை அமிழ்தெனவே 
அன்பதனால் அன்றாடம்
தான்குடிக்க ஏங்குகின்ற, 
சீராருங் கயல்விழியோ?
====================
இராச. தியாகராசன்

பிகு:
கூருகிர் = கூரிய நகம்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாயக் குதிரை......

என்னுடைய மைந்தர் வைகறைச்செல்வன், 2015ஆம் ஆண்டென்னை ஒரு குதிரைப் பாட்டு எழுது என்று பணித்ததால், வந்த வரிகளிவை!  பாயுங்குதிரை,  மாயக்குதிரை, பாட்டுக் குதிரை, வேட்டுக் குதிரை, காட்டுக் குதிரை, நெருப்புக் குதிரை, நேசக்குதிரை, மந்திரக்குதிரை;  இஃதொரு தந்திரக் குதிரை.

==========================================













===========================================|
மாயக்குதிரை....
===================
சிட்டாப் பறக்குது சின்னக் குதிரை;
.....சீறிப் பறக்குது செல்லக் குதிரை;
பட்டாப் பறக்குது பஞ்சுக் குதிரை;
....பரிவாப் பறக்குது பருவக் குதிரை;

கருக்காப் பறக்குது காட்டுக் குதிரை;
....காத்தாப் பறக்குது கருப்புக் குதிரை;
செருக்காப் பறக்குது சீலக் குதிரை;
....தெறிக்கப் பறக்குது சீமைக் குதிரை;

காராப் பறக்குது கர்வக் குதிரை;
....கழுகாப் பறக்குது கனவுக் குதிரை;
சோராப் பறக்குது சூரக் குதிரை;
....சோக்காப் பறக்குது துப்புக் குதிரை;

பாடிப் பறக்குது பாசக் குதிரை;
....பழகிப் பறக்குது பாலக் குதிரை;
ஆடிப் பறக்குது ஆசைக் குதிரை;
....அழகாப் பறக்குது ஆக்கக் குதிரை

விண்ணில் பறக்குது மின்னல் குதிரை:
....விரைந்தே பறக்குது வெள்ளைக் குதிரை;
மண்ணில் பறக்குது மட்டக் குதிரை;
....மயக்கப் பறக்குது மாயக் குதிரை;

பாய்ந்தே பறக்குது பழுப்புக் குதிரை;
....பதுங்கிப் பறக்குது பருந்துக் குதிரை;
மாய்ந்தே பறக்குது மஞ்சுக் குதிரை;
....வசமாப் பறக்குது வண்ணக் குதிரை;

தழலாப் பறக்குது சந்தக் குதிரை;
....தணலாப் பறக்குது தங்கக் குதிரை;
அழலாப் பறக்குது அன்புக் குதிரை;
....அறிவாப் பறக்குது அருமைக் குதிரை;

செழிவாப் பறக்குது செவத்தக் குதிரை; 
....தீயாப் பறக்குது செருவக் குதிரை
நிழலாப் பறக்குது நேசக் குதிரை;
....நெருப்பாப் பறக்குது நெஞ்சக் குதிரை;

பொறியாப் பறக்குது பொள்ளுக் குதிரை;
....பூவாப் பறக்குத்து பொங்கு குதிரை;
அறமாப் பறக்குது ஆவல் குதிரை;
....அழிக்கப் பறக்குது ஆட்டக் குதிரை;

இடியா பறக்குது இரும்புக் குதிரை;
....எடுப்பாப் பறக்குது எரியுங் குதிரை;
முடுக்காப் பறக்குது மோக குதிரை;
....முறுக்காப் பறக்குது மோனக் குதிரை!

எழிலாப் பறக்குது இன்பக் குதிரை;
....எமனாப் பறக்குது எண்ணக் குதிரை;
பொழிவாப் பறக்குது போட்டிக் குதிரை;
....பொலிவாப் பறக்குது போத்துக் குதிரை!

பாட்டாப் பறக்குது பளிங்குக் குதிரை;
....பதமாப் பறக்குது பண்ணுக் குதிரை;
வேட்டாப் பறக்குது வெளிச்சக் குதிரை;
....விரசாப் பறக்குது விந்தைக் குதிரை!
==================================
இராச. தியாகராசன்

பிகு:
====
துப்பு = வலிய
செருவம் = போர்
மட்டக்குதிரை = உயர்ந்த இனக்குதிரை
மஞ்சு = முகில்
பொள்ளுதல் = தீச்சூடு
அழல் = நெருப்பு, தீச்சுவாலை
முடுக்கு = மிடுக்கு
போத்து = சிற்றகவை

புதன், 23 நவம்பர், 2022

இல்லத்தரசியின் கதை...

இயல்பு வாழ்வியலில் அன்பு செய்வதன்றி, துணைவர் துணைவியை அடிப்பதோ, துணைவி துணைவரை அடிப்பதோ என்றும் சரியில்லை;  எந்தக் கருத்து வேற்றுமையையும், ஆர, அமர்ந்தே, ஆழ்ந்து, விவாதித்துத் தீர்வு காண்பதுதான் முறையான வழி. 

இது நகைச்சுவை இழையோடுமொரு கவிதை அவ்வளவே!  படியுங்கள்;  சுவையுங்கள்;  சிரியுங்கள்! 

(நான்கைந்து தமிழ்ச் சொற்களையும் பெய்திருக்கிறேன்: பொருள்களின் பெயரை மாற்றுவது கொலைக் குற்றம் என்போர், தயைகூர்ந்து கடந்து போகவும்.  விவாதத்திற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை/ நேரமும் இல்லை!) 
============================================


============================================
ஒர் இல்லத்தரசியின் கதை....
==========================
நான்செய்யும் நாவூறும் நற்புழுக்குத் தட்டம் பிடிக்கவில்லை;
தேன்போன் றினிக்குமென் சுவையார் கடினி பிடிக்கவில்லை;
வான்வாழுந் தேவர் மயங்குமாச் சில்லும் பிடிக்கவில்லை;
கோன்மக்கள், குவலயம் கொண்டாடுங் குளம்பி பிடிக்கவில்லை;

தேன்சுவை ஊறவே நான்கலக்கித் தருகும் தேநீரும் பிடிக்கவில்லை;
ஊன்சுவை யார்க்குமென் மாட்டூன் வறுவல் பிடிக்கவில்லை;
நான்தோய்த் தடுக்கும் காலுறை, துணிகளும் பிடிக்கவில்லை;
என்றும்நான் செய்கின்ற இல்லப்பணி எதுவுமே பிடிக்கவில்லை;

என்தவறே தென்றுநான் இடிந்தமர்ந்து நினைத்தே நைந்தபோது,
என்னுளத்தில் பளிச்சென்ற மின்னலாய் வெட்டிய எண்ணமொன்று;
அன்றவனின் அன்னைபோல் கன்னத்தில் விட்டேன் ஓரறை;
இன்றவனுக்கு என்செயல் எல்லாமும் இயல்பாய்ப் பிடிக்கிறது!
======================================
இராச. தியாகராசன்.

பிகு:
======
புழுக்குத் தட்டம் = கேசரோல் (Casserole)
கடினி = கேக்கு (Cake) 
மாச்சில்லு = பிசுக்கோத்து (Biscuit) 
குளம்பி = காப்பி (Coffee)
தேநீர் = சாயா (Tea -  என்ன செய்ய, இதையும் சொல்ல  வேண்டிய காலம்!)
மாட்டூன் வறுவல் = மாட்டிறைச்சி வறுவல் (Beef Stew)
காலுறை = சாக்சு (Socks)

ஞாயிறு, 6 நவம்பர், 2022

கவியெனச் சாற்றினனே.....

தளிர்த்தே அழிந்த கனவுக் கவிதை, 
பொலிந்தே அழிந்த கவிதைக் கனவு......

==================================











==================================
கவியெனச் சாற்றினனே.
(கட்டளைக் கலித்துறை)
=======================
வளமும் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே; 
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடும் தெண்டிரையே; 
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே; 
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!

மலர்ந்து மணந்தே மனத்தை கவர்ந்திடும் மல்லிகையே;
சிலிர்த்து நிதமும் சிந்தையை அள்ளிடுமச் செம்மலரே;
மலிந்த பரிவால் என்னை அணைத்திடும் மதிமுகமே; 
பொலிந்தே அழிந்த கனவைக் கவியெனப் போற்றினனே!
======================================================
இராச. தியாகராசன்.

எயிட்சு இல்லா இனிய உலகம்....

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி,  புதுவையரசில் எனக்கொரு பரிசிலும் பெற்றுத் தந்த எண்சீர் அகவல் விருத்தமிது.  "மாந்தரினமே முன்னெடுப்பீர் (LET COMMUNITIES LEAD)."  பன்னாட்டு ஆட்கொல்லி ஆட்கொல்லி நோய்க்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும், போதை ஊசிப் பழக்கத்தை வேரறுப்பீர்; ஓரினச் சேர்க்கையை புறந்தள்ளுவீர்;  பிறன்மனை வேண்டாத பேராண்மையே பேரறம் என்று வாழ்வீர்; சமூகத்தில் ஆண்/பெண் என்று பேதமில்லாமல்  கலந்துறையும் பணிகளில் இருக்கும் பேர்களும், நீண்ட தூரம் சரக்குந்து ஓட்டுகின்ற பேர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்/பெண் இரு சாராரும், மனவுறுதியுடன் வேற்றாளிடம்  உடலுறவில்லாமல் இருக்க உறுதி கொள்வீர்;  (அப்படி உறவில்லாமல் இருக்க ஏலாதென்னும் குறைந்த விழுக்காடு பேர்கள் உடலுறவின் போதாவது உறையைப் பயன்படுத்துவீர்!).

புதுவையில் இற்றைக்கு 100க்கு 95 விழுக்காடு பேர்கள் மணமுடித்ததும் மணவினையை முறையாகப் பதிவு செய்கிறார்கள்.  ஆகவே திருமணத்தைப் பதிவு செய்கையில், மணமக்கள் இருவர்க்கும் ஆட்கொல்லி நோயில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கக் கட்டாயமாக்கப் படுத்தப்பட  வேண்டும் என்று நான் பேசுமிடமெல்லாம்  வலியுறுத்துகிறேன்.  இன்னும் வேளைதான் வரவில்லை.
=============================================








============================================
எயிட்ஸ் இல்லா இனிய உலகம் 
============================================
(இதனை ஆதாஹ சந்துமா அல்லது உலகிலுள்ள 
பெரியோரே என்ற மெட்டில் பாடலாம்)
============================================
திருநிலவாய்ப் பூத்துநிற்கும் அமுதாம் பெண்ணே!
.....தித்திக்கும் வாழ்க்கையெனுங் கடலில் உன்னை, 
அருமையுடன் அனுப்பிடவே உன்றன் பெற்றோர்
.....அலைந்தலைந்து மணமகனைத் தேர்வுஞ் செய்தார்!
விருந்தின்று போட்டதுபோல் காணே னென்றே, 
.....விருந்துண்டு திருமணத்தை ஊரார் போற்ற, 
கரும்பினியாள் கழுத்தினிலே தாலி யிட்டு, 
.....கனவுகளும் நனவாக மாலை யிட்டான்!         (திருநிலவாய்)

மணமுடித்து திங்களைந்து போக வில்லை;
.....மயக்கமென மருமகனும் நாளுஞ் சொல்லித்
தணலெரிவாய்த் பெண்ணவளின் அன்புந் தீய,
....தளர்ந்துடலும் குறுகிநிதம் என்புந் தேய,
மணமகனி னுடலினுள்ளே உயிரைக் கொல்லும்,
....மாவரக்கன் புதுந்துவிட்ட சேதி கேட்டுக் 
கணக்கின்றிச் சீர்களெல்லாம் சேர்த்த தந்தை,
.....கட்டிவைத்த கோட்டைகளுஞ் சரிய நின்றார்! (திருநிலவாய்)

கோனோடு பெண்ணவளும் உறவில் சேர்ந்தே,
....குறைவில்லா இல்லறத்தின் இன்பம் தேர்ந்தே,
வானோடு வாழ்ந்திருக்கும் நிலவைப் போல, 
.....வன்சுடராய் வீசுஞ்செங் கதிரைப் போல, 
தேனோடு வானமிழ்தம் கலந்தாற் போல,
.....தேர்ந்தொருவ ரொருத்தியென வாழும் வாழ்வில், 
ஊனோடு கலந்திருக்கும் உயிரைக் கெல்லி, 
.....உறவறுக்கு முயிர்கொல்லிக் கிடமு மேது?    (திருநிலவாய்)

திருமணத்தின் முன்பேயே வீணில் தீய்ந்தே, 
.....சிதைந்தழியும் வழிகளிலே நடந்தே வீழ்ந்த, 
பெருந்துயரே கரணியமா யறிந்த போதில்,
.....பேர்துலங்கச் செய்திட்ட செலவில் சேர்த்தே,\
ஒருசெலவாய் மருத்துவரின் குருதிச் சான்றை, 
.....ஓர்ந்திடாத அறிவின்மை; உறுதி கொள்வோம்!
மருத்துவரின் சான்றதனை மணத்தின் முன்பே, 
.....மணமக்கள் இருவர்க்கும் கேட்போ மென்றே! (திருநிலவாய்)
==================================
இராச. தியாகராசன்.