ஞாயிறு, 28 நவம்பர், 2021

ஆட்டங்கள் தொடங்கட்டும்...

 இணையத்தின் இலக்கியப் பொழில், சந்தவசந்தம் மன்றப் பாவரங்கில், "ஆட்டங்கள் தொடங்கட்டும்" என்கிற தலைப்பில், நான் வாசித்தளித்தப் பாடலிது.

=====================









=====================
அவை வணக்கம்:
=================
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுத் தேன்பாகாய்ப்
பின்னலாம் நல்லெதுகை, பேரெழிலாம் மோனையுடன்,
நன்னூ லுரைக்கின்ற நற்றமிழின் பாக்களையே,
மின்னல் சொடுக்குகளாய் வீசுகின்ற சந்தமவை!

எத்திக்கும் பண்ணார்க்கும் எம்தமிழின் தித்திப்பை,
முத்தமிழின் சத்தான மூன்றுதமிழ்ச் சொல்லெடுத்துச்
சித்திரிக்கும் மோவியமாய்ச் சில்லென்னுஞ் சீதளமாய்,
முத்தாரங் கட்டுகின்ற முத்தமிழின் சந்தமவை! 

கொடிமுல்லைச் சிந்துங் குளிர்மணத்தைக் கூட்டி,
அடிவானந் தீட்டு மழகதனைச் சேர்த்துப்
படிக்கின்ற செம்மரபுப் பாட்டினிசை மன்றம்,
விடிவெள்ளி போல்மிளிர்க வே!
=========================================
ஆட்டங்கள் தொடங்கட்டும்....
============================
தூண்டிவிடும் சொத்தைகளுந் துன்மார்க்கச் சழக்குகளும்,
வேண்டிவிழும் அரசியலை வேரறுக்க மாட்டாமல்,
காண்பதெலாம் கொள்ளுகின்ற, கண்போக்கிற் களிக்கின்ற,
ஆண்மையிலா ஆசறவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

தன்னெறியாய்த் தருக்கர்கள் தணிவின்றித் தாரணியில்,
இன்னெறியாய் மயங்குகின்ற ஏற்றமிலாக் கொடும்பாவப்
புன்னெறியாம் புரையோடு புறம்போக்(கு) அரசியலில்,
அன்னியராம் எத்தரழ ஆட்டங்கள் தொடங்கட்டும்!

சங்கிலியாய்ப் பின்னலிடும் சருகனைய வாழ்வினிலே,
வஞ்சகங்செய் அரசியலில் மந்தையெனப் பிறழ்மதியோர்
முங்குவதைத் தானொறுக்க, முன்னோரின் அறம்வாழ்வில்
அங்கமெனப் பொலிந்திடவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

உள்ளத்தி லுருவாகும் உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதொன்றே இன்பமென்ற,
அள்ளுமனல் அடங்கிடவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

ஏக்கமதே வாழ்வியலாய், ஏதுவழி அறியாமல், 
சாக்கடையின் புழுக்களெனச் சலிப்புடனே எந்நாளும்,
ஓக்கமிலா தூழ்த்துநிதம் ஊத்தையிலே ஊறுகின்ற,
ஆக்கமிலோர் மாறிடவே ஆட்டங்கள் தொடங்கட்டும்!

எடுத்தபணி யதன்மீதே எண்ணங்க ளாழ்ந்தூன்றி,
முடிப்பதற்கு முன்னின்று முனைப்புடனே களமிறங்கி,
நெடுமரத்துக் கயமைகளை நீக்கிவிடச் சூளுரைதே,
அடுக்களையின் அம்மணிஉம் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

பணிவில்லாப் பகட்டென்றும், பாழ்வெளியாம் வன்மமென்றும்,
தணிவில்லா தெரிகின்ற சாதிமதச் சழக்கென்றும்,
துணிவுடனே சாய்கடையைச் சுகமென்னும் அரசியலின்
அணியடங்க ஆடவரின் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

எளிதாக இந்நாட்டில் இலவசங்கள் பெறுகையிலே,
சுளுவாக நம்கழுத்தில் சுருக்குகளும் வீழ்வதனால்,
தெளிவாக எல்லாரும் சிந்தித்தே தம்வாக்கை,
அளித்திடவே அதிவிரைவில் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

உடலுழைப்பி லுருவாகு முயர்வான ஒற்றுமையே,
உடமையென உலகிலுள்ள உயிர்களெலா முணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறக் கண்ணிமைப்பில் நாடுயர்த்தும்,
அடக்கநெறி அரசியலின் ஆட்டங்கள் தொடங்கட்டும்!

தளர்வின்றித் தயக்கமறச் சலிப்பில்லாத் தவிப்புடனே,
களமீதிற் கருத்தூன்றி, கானல்நீர்க் கனவகலத்
தெளிவாக உழைப்பவர்தம் திறன்மிகுந்தத் தாய்நாட்டின்
அளப்பரிய உயர்வுக்காய் ஆட்டங்கள் தொடங்கட்டும்! 
======================================================
இராச.தியாகராசன்.

மணக்கின்ற நினைவுகள்...

நினைவுகள் மனத்தில் என்றும் மணக்கின்றன.....
==============================================





 



=============================================
மணக்கின்ற நினைவுகள்.....
==========================
எரித்துச் சுடுகின்ற இரவினிலே,
சிரித்துப் பொழிகின்ற நிலவினிலே,
விரிந்து படர்கின்ற உறவினிலே,
பரந்தே உறைகின்ற உணர்விதுவோ?

தெறித்துப் பிரிகின்ற தனிமையிலே,
புறுத்தே எரிகின்ற அழகினிலே,
மறைந்து விரிகின்ற வழியினிலே,
அறுந்தே சரிகின்ற கனவிதுவோ?

புலர்ந்து மலர்கின்ற பொழுதினிலே
மலர்ந்து மணக்கின்ற மலர்களிலே,
கலைந்து கிடக்கின்ற இனிமையிலே,
நிறைந்தே வழிகின்ற நினைவிதுவோ?
===========================
இராச. தியாகராசன்.