புதன், 19 மே, 2021

செருக்கோட வந்தாளே....

பல நேரங்களில், நள்ளிரவில் திடுமென ஏதோ கனவுகண்டு வேர்க்க, விறுவிருக்க விழித்துக் கொள்வேன்.  இந்தக் கவிதைக் காதலி இப்படித்தான் என் கனவுகளில் வந்து காட்சிகளைக் காட்டி, கரகாட்டம் ஆடுவாள்; கத்தியே கூப்பாடு போடுவாள்; திரிசூலம் ஏந்தியே கூத்தாடுவாள்!  விழித்தவுடன் பெரும்பாலும் கனவுகள் கலைந்து தான் போகும். ஆனால் சிலநேரம் நினைவுகளில் பதிந்து போகும்.  அப்படிப் பதிந்ததை வரிகளில் வனைந்தேன்.

==========================================











===========================================
செருக்கோட வந்தாளே.....
==========================
திக்கில்லா தலையும் செக்காடு முயிரின்
சக்கார எண்ணம் சங்காரஞ் செய்ய,
எக்காலங் கடந்தே, எக்காள மொலிக்க,
முக்கால மில்லா, முக்காரி வந்தாளே!

நிழலாக வந்தாள்; நினைவாகி வந்தாள்;
அழலாக வந்தாள் அரனோடு வந்தாள்;
தழலாக வந்தாள்; சதிராடி வந்தாள்;
கழலாட வந்தாள்; கனவோடு வந்தாளே!

கருத்தாகி வந்தாள்; கருவாகி வந்தாள்;
விரித்தாடி வந்தாள் விரைந்தோடி வந்தாள்;
நெருப்பான செம்மை நிறமாகி வந்தாள்;
சிரித்தாடி வந்தாள்; செருக்கோட வந்தாளே!

காடதிர வந்தாள்; கருக்காக வந்தாள்;
மேடதிர வந்தாள்: மெலுக்காக வந்தாள்;
நாடதிர வந்தாள்; நலத்தோடு வந்தாள்;
வீடதிர வந்தாள்; மிடுக்கோடு வந்தாளே!

மலராக வந்தாள்;  மடலாக வந்தாள்;
நிலமாக வந்தாள்;  நீராக வந்தாள்;
கலமாக வந்தாள்: கடலாக வந்தாள்;
தலமாக வந்தாள்; சழக்கோட வந்தாளே!

சுழலாக வந்தாள்; துடுப்பாக வந்தாள்;
மழுவாக வந்தாள்; மணமாக வந்தாள்;
பொழிவாக வந்தாள்; புதிதாக வந்தாள்;
அழிவாக வந்தாள்; அன்பாக வந்தாளே!
===========================================
இராச. தியாகராசன்

பிகு: சக்காரம்- சருக்கரம்/ சக்கரை
           முக்காரி - முக்காலமுணர்ந்தவள்