செவ்வாய், 31 ஜூலை, 2012

புவனகிரி பூச்சரமே…..

நாட்டார் பாடல் வகையில், ஆவல் மீதூர,  ஆண் கேட்பதும்,  நாணம் மீதூர பெண் மறுதளிப்பதுமாக பாடலை வனைந்தேன்.  மேலூரு மச்சானே, கீழக்கரை சந்தனமே, கெழக்குவெளிச் சூரியனே, ஆசைக்கார மாமாவே, பாசக்கார மச்சானே, அத்த பெத்த இரத்தினமே, அழகுருவ அஞ்சுகமே, சிவகாசி சீலக்காரி, செந்தூரப் பொட்டுக்காரி, செவ்வெளநீர் இனிப்புக்காரி, சிரிக்கும் சின்னவளே, ஒலாந்தைப் பூக்காரி, எந்திருட்டு ராசாவே, என்னாசைக் களவாணி, நெஞ்சத்து நெலாமவளே, செவ்வரத்தைப் பூவாயி, புவனகிரிப் பூச்சரமே, புத்துருக்கு நெய்மணமே! 

அட அட அட என்னவொரு நாட்டுப்புற மொழிவழக்கு?  பாடல் என்னுடையதென்றாலும், பெரும்பான்மை சொல்லாட்சி நாட்டுப்புற பாடல்களில் வருபவையே!
=================================================================

=================================================================
புவனகிரிப் பூச்சரமே....
=======================
ஆண்:
ஆத்துமீனு அயிரமீனே!
அத்தபெத்த ரத்தினமே!
அணைக்கர ஓரத்துல,
அஞ்சுகமே வாயேண்டி!
அருச்சலா சேத்தணைக்க….

பெண்:
மேலூரு மச்சானே!
மேலாக்கு போட்டுபுட்டேன்;
வெண்ணாத்தங் கரையோரம்
விரசாத்தான் வருவேனோ?
மாராப்பொடு சேத்தணைக்க….

ஆண்:
சிவகாசி சீலகட்டி,
செவ்வெளநி காயாட்டம்,
சிங்கார கருக்கலிலே,
சின்னவளே வாயேண்டி!
செந்தூரஞ் சேத்தணைக்க….

பெண்:
கீழக்கரச் சந்தனமே!
கெழக்குவெளிச் சூரியனே!
கருக்கலிலே வருவேனோ?
கண்ணாளம் கட்டாமல்,
கருவமணி சேத்தணைக்க….

ஆண்:
செவ்வரத்த பூவோட,
தெம்மாங்கு பாடிக்கிட்டு,
சின்னமலை காட்டருகில்,
சீக்கிரமே வாயேண்டி!
தெனந்தெனமுஞ் சேத்தணைக்க....

பெண்:
ஆசக்கார மாமாவே;
பாசக்கார மச்சானே;
தனியாத்தான் வருவேனோ,
மஞ்சகயிறு கட்டிக்காம,
மயங்கியே சேத்தணைக்க....

ஆண்:
ஒலாந்தை பூச்சூடி,  
நெலாமவளே நிசிநேரம்   
ஏரிக்கரை ஓரமாத்தான் 
மணமணக்க வாயேண்டி!
வாரித்தான் சேத்தணைக்க....

பெண்:
என்னாசக் களவாணி, 
எந்திருட்டு ராசாவே,
ஊர்பாத்துச் சேராம, 
ராத்திரிக்கு வருவேனோ,
ரகசியமா சேத்தணைக்க.... 

ஆண்:
புவனகிரிப் பூச்சரமே!
புத்துருக்கு நெய்மணமே!
புதுசாத்தான் கேக்குறயே?
பொஞ்சாதி ஆக்கிருவேன்;
போதெல்லாஞ் சேத்தணைக்க….
=========================
இராச. தியாகராசன்.

பிகு:
====
அருச்சல் = அவசரம் (வட்டாரவழக்கு)
கருவமணி = கருகமணி (வட்டாரவழக்கு)
கண்ணாளம் = திருமணம் (வட்டாரவழக்கு)
செந்தூரம் = குங்குமம் (வட்டாரவழக்கு)

சில்லுக் கருப்பட்டியே......

கிராமிய மணம் வரிசையில் நானெழுதியப் பாட்டு.  கண்டும் காணாமல் கண் வீசிப் போகின்ற பெண்மகளை நோக்கி, அலைபாயும் காதலன் ஏங்கிப் பாடுவதாக வனைந்திருக்கிறேன்.  இதே வகையான சொல்லாட்சி கொண்ட பல பாடல்களை நாட்டுப்புறப் பாடல்களில் காண்கிறேன்.  அவற்றை எவரும் முயன்று அச்சிடவோ தொகுக்கவோ பெரும்பாலும் முயலவில்லை என்றே தோன்றுகிறது. அந்த வகையாக நாட்டார் பாடல்களைப் படித்தவுடன் ஏற்பட்ட தாக்கத்தால் நான் வனைந்த இரண்டாவது பாடலிது.
=====================================================================

=========================================================

சில்லுக் கருப்படியே!....
===================
கருப்பு மேலாக்கும்,
காதோரம் லோலாக்கும்,
காத்துலதான் அலபாய,
கஞ்சிச்சட்டி ஏந்திகிட்டு,
கரைமேலே போறவளே!
காக்கா அலம்புறது
காதுலதான் கேக்கலியோ?
செரவிக் கூட்டமெல்லாம்
சடசடன்னு போகயில
சஞ்சலத்தால் எம்மனசு
சருகாத்தான் ஆகலியோ?
சில்லுக் கருப்பட்டியே!
சிறுவந்தா டுடுத்தவளே!
சின்னமலை சிறுபழமே!
சரக்கொன்ன ராசாத்தி;
இருவாச்சிப் பூமணமே;
வரகரிசிப் பழஞ்சோறும், 
கருவாட்டு வெஞ்சனமும், 
கம்மங்கூழும் தாயேண்டி!
கொடிகால் வெத்தலையும்;
மாயவரம் நெய்ச்சீவல்;
விருதையின் சுண்ணாம்பு;
வரதம்பட்டி போயலையும்;
உன்கையால் மடிச்செனக்கு 
ஊட்டிவிட வாயேண்டி! 
தெனந்தெனம் ஒனக்காக
சீவன்நான் கிடக்குறனே
சிங்காரி ஒம்மனசு
சத்தே எறங்காதோ?
=====================
இராச. தியாகராசன்.

லோலாக்கு = காது சிமிக்கி (நாட்டார் வழக்கு)
அலம்புதல் = கத்துதல், கரைதல் (நாட்டார் வழக்கு)
செரவி = இரவில் சிறிதாக ஓசையெழுப்பி வயலில் 
நெல் திருடும் சிரவி என்கிற பறவைக் கூட்டம்.
கருவாட்டு வெஞ்சனம் = உப்புக்கண்ட வறுவல்
போயலை = புகையிலை
சத்தே = சற்றே
=====================

கண்ணம்மா……

நாட்டார் பாடல்களைச் சுவைப்பதும் சுகம்;  நாட்டார் பாடல்களின் சாயலில் பாட்டெழுதுவதும் சுகம்.  இந்தப் பாடலில், ஆவல் மீதூர,  ஆண் தன் உளங்கவர்ந்தவளைக் கேட்பதாகப் பாடலை வனைந்தேன்.  
================================================

================================================
ஆத்தூரு சாலையில
ஆத்தங்க ரையினிலே
அரசம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
ஆடிவர வேணுமடி பொன்னம்மா!         (ஆடிவர)

மானாம ருதையில
மாடுவிக்குஞ் சந்தையிலே
வாதம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
வஞ்சிவர வேணுமடி பொன்னம்மா!      (வஞ்சிவர)

பச்சவயக் காட்டினிலே
பயத்தங் கருதிருக்க
பாக்கம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
பாடிவர வேணுமடி பொன்னம்மா!          (பாடிவர)

ஏத்தமெ றைக்கயிலே
ஏரிக்கர மோட்டருகில்
எலந்தம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
இருட்டிவர வேணுமடி பொன்னம்மா!   (இருட்டிவர)

பூவரசங் காட்டருகில்
பூத்திருக்கும் கொளக்கரையில்
புங்கம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
பொழுதுவர வேணுமடி பொன்னம்மா!  (பொழுதுவர)

நாட்டரசங் கோட்டையில
நாகராசன் செலையருகே
நாவம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
நாடிவர வேணுமடி பொன்னம்மா!           (நாடிவர)

சிவகங்கச் சீமையில
சிலுசிலுக்குந் தோப்பருகே
தேக்கம ரத்தடியில் – கண்ணம்மா – நீ
தேடிவர வேணுமடி பொன்னம்மா!        (தேடிவர)

கரிசவயக் காட்டருகே
கடலூரு ரயிலடியில்
கருவம ரத்தடியில் - கண்ணம்மா - நீ
கருக்கில்வர வேணுமடி பொன்னம்மா!   (கருக்கில்வர)

எலவங்காட் டருகினிலே
இருவாச்சி பூக்கயிலே
இலுப்பம ரத்தடியில் - கண்ணம்மா - நீ
இழுத்தணைக்க வேணுமடி பொன்னம்மா!   (இழுத்தணைக்க)

உருவயாத்து மணக்கரையில்
ஓலப்பொட்டி பின்னயிலே
உசிலம ரத்தடியில் - கண்ணம்மா - நீ
ஒதுங்கிவர வேணுமடி பொன்னம்மா!        (ஒதுங்கிவர)
==============================================
இராச. தியாகராசன்   

தேடித் தேடி.........

தேடித் தேடி என்ற தலைப்பில் கவி பாட வேண்டுமென்றார் சந்தமவை முன்னவர் - நானும் பாடினேன் பாட்டென்று ஏதோவொன்றை! தமிழ் வணக்க/ அவை வணக்கப் பாடல்களை எப்போதும் போல மரபுப் பாட்டியல் வடிவிலேயே எழுதினேன். ஆனால் “தேடித் தேடி” என்ற தலைப்பு என்னை நிறைய யோசிக்க வைத்துவிட்டது. ஆகவே அந்தத் தலைப்பிலான பாடலை இந்தவிதமான கட்டமைப்பு என்றெண்ணி எழுதாமல், உள்ளத்தில் பொங்கிய எண்ணத்தை எழுத்தில் வடித்தேன். ஆனால் எனை அறியாமலேயே தரவு கொச்சகமாய் அமைந்துவிட்டதென்று பாவரங்கத் தலைவர் கவிமாமணி இலந்தையார் அவர்கள் சொன்னார்கள். இதோ அந்தப் பாடல்:-
=================================================================

=================================================================
தமிழ் வணக்கம் (கட்டளைக் கலித்துறை)
அன்பைப் பொழிந்திடும் அன்னை யுருவெனும் அற்புதமாய்,
கன்னல் சிரிப்புடன் பிள்ளை யுருவெனும் கற்பகமாய்
பொன்னின் நிறத்துடன் நித்த முதித்திடும் பொற்கதிராய்
என்னி லுறைந்தெனை யென்றும் வளர்த்திடும் என்தமிழே!

கண்கள் மலர்ந்திடப் பின்னல் சுழற்றிடும் பெண்ணழகாய்,
விண்ணி லுலவிடுந் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்,
கண்ணில் புகுந்திடும் மின்னல் வடிவெனுங் கற்பனையாய்,
எண்ணம் நிறைந்தெனை என்றும் வளர்த்திடும் என்தமிழே!

தேடித் தேடி  (கொச்சகக் கலிப்பா)
செந்தழலைத் தளிரென்றும் செம்பனியைத் தீயென்றுந் 
தேய்ந்தலைந்தே தேடும்நான் தேய்ந்தோய்து  செல்வதெங்கே?  
வெந்தெரிய வாழ்வினிலே வேதனையைத் தேடும்நான்; 
கந்தனருள் தேடாமல் கருநிழலில் வெல்வதென்ன?              (கருநிழலில்)

தினந்தினமும் தீக்குளியல்; தீராத மூச்சடைப்பால், 
இனம்புரியா நெஞ்செரிச்சல்; ஏனிந்த விளையாட்டு? 
உத்தமியின் விதிவழியே உயிராடுங் கயிற்றாட்டம்; 
அத்தனையும் ஆசைகளால், ஆவலெனும் பூசைகளால்!     (ஆவலெனும்)

வந்ததுவும் தவறில்லை, வளர்ந்ததுவும் தவறில்லை; 
வெந்தரண வேல்வலியில் வெறுங்கூடாய் வாழ்வெதற்கு? 
வீசுகின்ற காற்றலையில் வெருண்டோடுஞ் சருகெனவே 
பாசவலை வாழ்வொருநாள் பட்டெனவே விட்டுவிடும்!       (பட்டெனவே)

சங்கிலியாய்ப் பின்னலிட்ட சிக்கெடுக்கா நூற்கண்டை 
என்கரத்தில் ஏந்திங்கே இழைநுனியைத் தேடுகையில்; 
அறுந்தநூல் கையில்வர வெறுங்கனவே வாழ்வென்னும்
முடிவுதனை காண்கின்றேன்; விடியும்வ ரையிதுதான்!      (விடியும்வரை)

இறங்கிவிட்ட நாள்முதலா யிருக்கின்ற நாள்வரையில் 
இறக்காத பேருண்மை; இருப்பிற்கோர் காவலெனும் 
நெறிமுறையை மறந்துவிட்டு நிழலான வாழ்வினிலே
அறியாம லாடுகிறேன்; ஆட்டங்கள் போடுகிறேன்!             (ஆட்டங்கள்)

சிங்காரந் தேடுமுடல் சில்லென்றும் ஆகயிலே, 
தங்கத்தை நாடுமுடல் தழல்தின்னப் போகயிலே, 
பாவங்கள் படிந்திலங்கும் பாழான மெய்ப்பையால், 
சீவனெனும் சிவலிங்கச் சிரிப்பதனைத் தேடுவனோ?   (சிரிப்பதனை)

ஆட்டத்தை விழைந்திங்கே ஆர்ப்பரிக்கத் தேடும்நான்;
அத்தனவ னளிக்கின்ற அமைதியைத் தேடுவனோ?
அருகிருக்கும் அழகறியா(து) ஆசுகளைத் தேடும்நான்;
அன்பொன்றே மேலாமென் றகிலவனைத் தேடுவனோ?(அகிலவனை)

இருக்கின்ற தைவிட்டே எங்கெங்கோ தேடும்நான்;
இருளில்லா இறப்பொன்றே இயல்பென்று தேடுவனோ?
உருவாகு முவர்கடலி லுல்லாசந் தேடும்நான்;
அரன்வழியே மேலென்ற அறத்தைத்தான் தேடுவனோ?  (உண்மைதான்)
==================================================
இராச தியாகராசன்

பிகு:
====
ஆசுகளை = குற்றங்களை/ பிழைகளை
உருவாகும் உவர்கடல் = ஆண்/பெண் முயங்குதலில் உருவாகும் உப்புவேர்வை.

திங்கள், 30 ஜூலை, 2012

பெண்ணே நீயும் புறப்படு....

கவிதை வானில் பாவரங்கில், புலவரேறு, தமிழ்மாமணி,  காலஞ்சென்ற அரிமதி தென்னகனார்  தலைமையில்,  நான் வாசித்தளித்த சந்தப் பாடலிது!  இன்று (13.10.2019), பாவேந்தரின் பெயரன், கலைமாமணி,பாவலர் திரு கோ.பாரதி அவர்களின் தலைமையில், மேலும் மெருகேற்றி, சில பத்திகள் சேர்ந்து, பெண்மகள் நாளுக்காய்ப் பாடினேன்.
=======================================

 =======================================


எடுப்பு:
=======
மங்கை நீயும் ஓங்கலிடை,
கங்கை போன்று பொங்கியிங்கே,
தங்கத் தம்ழாய்த் தாரணியில்,
எங்கு(ம்) உயர்வாய் மண்மேலே!

தொடுப்பு:
==========
புறப்படு..... புறப்படு.....
புத்தம் புதிய விதியாகப்,
பொலிந்தே ஒளிரப் புறப்படு! புறப்படு!

முடிப்பு:
========

மண்ணில் மலரும் பூப்போலே,
மலர்ந்து மணக்கும் பெண்மகளே!
மென்மை மட்டும் வாழ்வினிலே
மேன்மை யாமோ புறப்படு!               (புறப்படு)

பேதை என்றே இருப்பதால்
பேரும் புகழும் வந்திடுமோ?
சூது நிறைந்த கயவரையே
சுட்டெ ரிக்கப் புறப்படு!                        (புறப்படு)

உள்ள துறைகள் அனைத்திலுமே
உலகப் பெண்கள் இருக்கையிலே
கிள்ளுக் கீரை  இந்தியரோ?
கிளம்பிக் கலக்கப் புறப்படு!               (புறப்படு)

நாதம் ஒலிக்கும் மணியாக
நங்காய் நீயும் புறப்படு!
பாதம் மிதிக்கும் மண்ணதனை
பாதை ஆக்கப் புறப்படு!                      (புறப்படு)

வீழ்ந்தே கிடக்கும் கல்லாநீ?
வெற்றித் திருவின் உருவம்நீ!
சூழுஞ் சழக்கைக் கொளுத்திடவே
சுழன்றிங் கெழுந்தே புறப்படு!         (புறப்படு)

தாயாய், மகளாய், அன்பிழியுந்
தார(ம்) எனவே பல்லுருவ
மாயாவடிவம் நீயென்றே
வாய்மை யுணர்த்தப் புறப்படு!       (புறப்படு)
==========================================
இராச. தியாகராசன்.