============================================
=============================================
வாழ்வென வாழுவீர்!
(நிலைமண்டில அகவற்பா)
============================
வாழ்வென வாழுவீர்!
(நிலைமண்டில அகவற்பா)
============================
மலைதனில் தோன்றியே மடுவினிற் சேரவே,
அலைந்திடும் புனலென இளமையின் கணங்களும்,
நேற்றென, இன்றென நாட்களும் கரையுமவ்
வாற்றின் பாலமும் ஒருவழிப் பாதையே!
தவறெதும் செய்யாது தண்டனை தருவதும்,
அவதிக(ள்) அவனியில் அத்தனை யுறுவதும்,
தவிப்பினில் மூழ்கியே சலிப்பினைப் பெறுவதும்,
புவியினில் புழங்கிடும் புதுமையின் சாரமோ?
இருப்பினை இளமையை இன்பமாய்த் துய்த்திடும்
கருக்கிலேக் கடக்குமக் காலமாம் காட்சியை
விரும்பியே மனத்தினில் மீளவும் காணலாம்;
திரும்பவும் அடைவது செகத்தினின் நடக்குமோ?
நடந்திடும் இளமையும் நிழற்படக் காட்சியே!
கடந்திடும் காலமும் கானலின் நீர்மையே!
கடுகியே விரைந்திடும் கனவிலே தவழ்ந்திட,
முடிவினைக் கொண்டவர் முயல்வதும் முடியுமோ?
இயற்கையை மாற்றிட ஏந்தலாய்த் தோன்றியே,
வயதினை வென்றினி வாழ்வினில் நிலைப்பரோ?
அழைப்பிலா விருந்தென அந்தகன் பரிசென,
நுழைந்திடும் வாழ்விலே நிச்சயம் முதுமையே!
பயத்தினால் பதவியால் பார்புகழ வாழலாம்;
முயற்சியால் மூடரை முடங்கிவிழச் செய்யலாம்;
அறிவினால் அகந்தையால் அடக்கியே ஆளலாம்;
இறப்பினை எரித்தே ஏய்க்கவும் முடியுமோ?
மாய்ந்திடப் பிறந்திடும் மானிட தேகமும்,
தேய்ந்திடத் தேடிடும் செல்வமும் மெய்ம்மையோ?
சூழ்ந்திடும் ஏனையர் சுகமுடன் வாழ்ந்திட,
வாழ்ந்திடும் வாழ்வதே வாழ்வென வாழ்வமே!
=====================================
இராச தியாகராசன்
பிகு:
====
மடு = பள்ளம் (அ) ஆழ்கடல், புனல் = ஆறு,
அவனி = பூமி, செகம் = உலகம்,
அவனி = பூமி, செகம் = உலகம்,
ஏந்தல் = உயர்ந்தவர், அந்தகன் = நமன்.