வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாரதியோர் அறிவியற் கவிஞன்...

கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் "பாரதியில் அறிவியல்" என்ற நூலில், அவர் மகாகவி பாரதியின் அற்புத அறிவியல் எண்ணங்கள் பற்றிய கருத்துகளை கூறி இருக்கிறார். அவ்வெண்ணங்களின் தாக்கத்தால் நானியற்றி, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில், பாவேந்தரின் மைந்தர் மன்னர் மன்னன் முன்னர் வாசித்தளித்த பாடலிது! (11.12.2012 பாரதியின் பிறந்த நாளுக்காக)

=======================================================


=======================================================
பாரதியோர் அறிவியற் கவிஞன் (எண்சீர் அகவல் விருத்தம்)
=======================================================


இருந்தொருநாள் மனையாட்டி யவளுங் கேட்டாள்;

.....இன்றிருக்கு(ம்) அறிவியலை யழகாய்ப் பாட்டில்,
கரும்பினிய தமிழ்மொழியில் வடித்தா ருண்டோ;
.....கவின்மொழியில் கவியாலே கழல்வீ ரென்றே!
அரியதொரு அண்டவெளி மண்ட லத்தை
.....அணுவணுவாய்ப் பிளந்துவரும் யோச னையே
பிரிந்தியங்கு(ம்) அண்டவெளித் தூர மென்னும்
.....பெருநினைவைப் பாரதியில் காண்பாய் என்றேன்!

சுறுசுறுப்பாய்ப் பலகோடி கோள்க(ள்) எங்கும்

.....சோர்வின்றிச் சுழலுவதை உரைத்த விந்தை;
அறைகின்ற ஆணிகளை இங்கே செய்யும்
.....அமைப்புகளைக் காட்டுகின்ற தொழிலின் மேன்மை;
பறப்புமுணர் வண்டிகளும் பறந்த வானை;
.....படர்ந்தொளிரும் அண்டமிதில் கோடி யென்று,
முறைப்படியே இயங்குகின்ற விண்மீன் காட்டை,
.....முகிழ்த்திட்ட பாரதிப்பா உணர்வாய் என்றேன்!

மேலிருக்குங் காசிநகர் புலவோர்ப் பேச்சை,

....வீரமிகு நந்தமிழில் உடனே கேட்க,
சீலமொழி பெயர்த்திடுமோர் கருவி தன்னை,
.....சித்திரப்பா வடிவினிலே உரைத்த நேர்த்தி;
நீலவந்தி, விண்ணந்தி, கடலிற் றோன்றும்
.....நீரந்தி யத்தனையு(ம்) ஒன்றாய்க் கொண்ட,
கோலமதை சக்தியென உருவ கித்துக்,
.....கூறிடுமே பாரதிப்பா தெரிவாய் என்றேன்!

எண்ணறியா அளவினையே பரப்பாய்க் கொண்டு,

....எழுந்திடுமவ் வால்மீனின் வாலைக் கூட
நுண்ணியமாய்ப் படித்திருந்த தாலே பாட்டில்
.....நுவன்றிற்டா னதுவெற்றுக் காற்றே என்றே!
உண்மைகளை உரைத்திடுமவ் வானின் கல்வி,
.....ஓர்ந்துநம் மிளையோரும் கற்கச் சொன்னான்;
கண்ணெதிரில் அன்றிருந்து ஒளிரும் பொய்யைக்
.....கானலெனும் பாரதிப்பா புரிவாய் என்றேன்!

அயல்மொழியின் நல்லறிவு நூல்கள் எல்லாம்,

.....பெயர்த்திடுவோம் தீந்தமிழில் என்றே கூறி, 
பயமின்றி எண்டிசையும் பயணப் பட்டே,
.....பலகலையின் செல்வமெலாம் சேர்க்கச் சொன்னான்;
வியந்துனக்குச் சொல்கின்றேன்; கடலில் காணும்
.....வெந்நீரி(ன்) ஓட்டமதை, நிலவுந் தண்மை,

நயங்களையும் பாட்டினிலே செறிவாய்ச் சொல்லி,
.....நறுங்கவிதை நாட்டினுக்கே புனைந்தான் என்றேன்!

தெருக்களுள்ள நகரமைப்பின் முறைமைக் கல்வி,

.....செம்மையுறச் சாத்திரமாய்ப் பழகு என்றான்;
திரவுபதிச் சபதமெனும் அழகுப் பாட்டில்,
.....தடம்புரண்டு பயனின்றிக் கடலில் பாயும்
திருமகளாம் கங்கையவள்  கதையைச் சொல்லிச்
.....சிந்தையதே உருகிமனங் கனிந்த தாலே,
இருக்கின்ற நதிகளையே இணைத்து நாளும் 
.....இலகுபயிர் செய்யப்பாட் டிசைத்தா(ன்) என்றேன்!

வாணுதலின் நங்கையரும் இந்நா(டு) ஓங்க,

.....மனங்குவிந்து கடல்கடந்தே உழைக்கச் சொன்னான்;
காணுமொன்றை வேறொன்றா(ய்) ஆக்கும் வித்தை;
.....கல்லதனை மணியெனவே மாற்றும் சித்தை;
வீணானக் கற்பனையாய் நமக்குத் தோன்ற,
.....மிளிர்ந்திடுமோர் அழகுப்பா; ஆழ்ந்து பார்த்தால், 
நீணிலத்தில் இன்றைய அறிவி யல்தான்
.....நிகழ்த்திவிட்ட குளோனிங்காம்  அறிவாய் என்றேன்!


கணிப்பொறியும் மெல்லியமும் மேலை நாட்டுக்

.....கருவிகளென் றிருப்பதனால், ஆங்கி லத்தில்
பணிசிறக்கப் படித்திடலாம் என்போர் தம்மை,
.....பாரதிரப் புடைக்குவன் கட்டு ரையில்;
பிணிபிடித்த கண்களிலே மருந்து(ம்) இட்டு,
.....பிணிதீர்க்க முயலாமல் பிரான்சுக் கண்கள்,
கொணர்ந்திங்கு வைத்திடவே வேண்டு மென்ற
.....கோணலறி வாளரெனத் தூற்று கின்றான்!

தேமதுரச் செழுந்தமிழில் கணினிச் சொற்கள்,

.....தேடுகின்ற நிலையறவே முயன்றி ளையோர், 
நாமினிமேல் புதுப்புனைவாய்ப் பலவும் சேர்த்து,
.....நந்தமிழைப் பள்ளிகளில் உயர்த்தச் செய்வோம்!
தாமதித்தால் தமிழ்மொழியை அறிந்தி டாத,
.....தமிழர்கள் வாழுகின்ற நாடீ தென்ற,
நாமமதை நாமடைந்தே நாடோர் தூற்ற,
.....நரம்பறுந்த வீணையென வாழ்வோ(ம்) அன்றோ!
====================================================== 
இராச. தியாகராசன்

திங்கள், 25 நவம்பர், 2019

ஏது......

ஏது, ஏது, ஏதென்று வெடிக்கும் வினாக்கள் ஆயிரமாய் எழுந்தென்னில் குளத்தின் மீதூரும் நீரலை வட்டங்களாய், சிறார் ஊதி மகிழ்கின்ற வழலைக் குமிழ்களாய் அலைபாயும் கணங்கள்....
=================================


=================================

தூக்க மில்லாமல் கனவு மேது?
ஏக்க மில்லாமல் நினைவு மேது?
ஊக்க மில்லாமல் உயர்வு மேது?
வாக்கு மில்லாமல் வரியு மேது?

முகிலு மில்லாமல் விசும்பு மேது?
சிகர மில்லாமல் மலையு மேது?
பகலு மில்லாம லிரவு மேது?
நகுத லில்லாமல் மகிழ்வு மேது?

தென்ற லில்லாமல் காவு மேது?
அன்பு மில்லாமல் தாயு மேது?
உணர்வு மில்லாமல் கவிதை யேது?
உணவு மில்லாம லுலக மேது?

கூட லில்லாம லூட லேது?
ஊட லில்லாமல் காத லேது?
தேட லில்லாமல் தேச மேது?
வாட லில்லாமல் வாச மேது?

தூசு மில்லாமல் மண்ணு மேது?
ஆசை யில்லாம லெண்ண மேது?
பண்ணு மில்லாமல் பாட்டு மேது?
வண்ண மில்லாமல் காட்சி யேது?

ஆவ லில்லாம லவனி யேது?
கூவ லில்லாமல் குயிலு மேது?
சாவு மில்லாமல் வாழ்வு மேது?
தூவ லில்லாமல் தூர லேது?

தறியு மில்லாமல் நெசவு மேது?
சிறகு மில்லாமல் குருகு மேது?
நறவு மில்லாமல் மலரு மேது?
உறவு மில்லாமல் பருவ மேது?

கர்வ மில்லாமல் கவியு மேது?
தர்ம மில்லாமல் புவியு மேது?
சர்வ மில்லாமல் சக்தி யேது?
மர்ம மில்லாமல் புத்தி யேது?

கற்ற லில்லாமல் கல்வி யேது?
பற்று மில்லாமல் பாச மேது?
இறையு மில்லாம லறித லேது?
அறித லில்லாம லகில மேது?
==============================
இராச. தியாகராசன்.

வியாழன், 21 நவம்பர், 2019

வேதனை போகும்... தெளிவாகும்...

20.11.2015 அன்று, புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறையில் கலைமாமணி, தமிழ்மாமணி, திரு கல்லாடனார், கலைமாமணி, தமிழ்மாமணி திரு இலக்கியனார் ஆகியோர் முன்பாகப் படிக்க வேண்டுமென நினைத்து வனைந்த காவடிச் சிந்து வரிகள் இவை. என்னவோ தெரியவில்லை; எனக்கு நிறைவில்லை என்பதால், வேறு ஒரு பாடலைப் படித்தேன் அன்றைக்கு.
=============================










================================
வேதனை போகும், தெளிவாகும்...
================================
உள்ள மெழுந்திடுஞ் சந்தம் - அறந்
துள்ளு மழல்வரி பந்தம் - உளம்
.....படர்ந்தேகவி புனைந்தேதர பொழிந்தேவரு தமிழ்மீதொரு
..........பாசம்
..........அதன்
..........நேசம்.

வெள்ளை யணிந்துரு கொள்ளுங் - கறுங்
கள்ளை யருந்துயிர் துள்ளும் - பிழை
.....யழிந்திக்கண மெழுந்தப்பழி விழுந்திப்புவி யமிழ்தச்சுவை
..........யாகும்
..........சினம்
..........போகும்.

துள்ளும் பெருங்கடல் மேவி - கரும்
புள்ளுந் தருந்துயர் தாவி - வருஞ்
.....சுழலென்னுளக் கருவில்முளைத் தெழுகுஞ்சுடர்ப் பெருகும்வெளித்
...........தோற்றம்
...........அவள்
...........சீற்றம்.

வண்ணத் தமிழ்தருஞ் சிந்தை - தின
மெண்ணப் பிறந்திடும் விந்தை - வள
.....மிழிந்தேயுளங் கவர்ந்தேவளர் நறவேநிகர் தமிழ்தானொரு
..........யின்னல்
..........தகர்
..........மின்னல்.

கொள்ளத் தருமொரு மோகம் - கர
மள்ளப் புகுமொரு தாகம் - துளி
.....திறந்தேவரு மறிவேயதி லறிந்தேயுரு கலதேகிடுஞ்
..........சித்தம்
..........பெரும்
..........பித்தம்.

குற்றங் குறையது தேய - நிதஞ்
சுற்றுங் கறையது சாய - பெரும்
.....புவிமீதினில் சுழலாயெனை யெழுவாதுயிர் தருவேதனை
..........போகும்
..........தெளி
...........வாகும்.
==============================================
இராச. தியாகராசன்.


வியாழன், 14 நவம்பர், 2019

ஜவகருன்னைப் போற்றுவனே.....

2019ஆம் ஆண்டு மழலையர் நாளுக்கென்றன் வரிகள்...

===========================================



===========================================

விந்தைமிகு தாய்நாட்டின் உயர்வே நாளும்
.....மேன்மையுறு உழவர்தம் வாழ்வே என்று,
சிந்தையிலே உணர்ந்ததனால் தானே அன்று
.....தெளிவான விதியதற்கே வகுத்து யர்ந்தாய்;
முந்தியிங்கு வேளாண்மை செய்வோர் வாழ்ந்தால்
.....முறைசார்ந்த தொழில்துறையும் உயரும் என்றாய்;
அந்திமத்துத் துயர்களையும் விரட்டு தற்கே
....அகவைசென்ற முதியோர்க்கும் சட்டந் தந்தாய்!

மாட்சிமையாய் வையகத்தில் வாழ்வ தற்கே
.....வாழ்வியலின் ஐந்தென்னும் அறத்தை யிங்கே
ஆட்சிமுறைத் தத்துவமாய் புவிக்க ளித்தே
.....ஆளுகின்ற போதவனி போற்ற வாழ்ந்தாய்;
கூட்டுறவும் கல்வியதும் கொள்கை யென்றே
.....குறைவில்லா ஐந்தாண்டுத் திட்டந் தீட்டி,
நாட்டுயர்வே உனதுளத்து நாத மென்னும்
.....நல்லறத்தால் நல்லவரின் உள்ளம் வென்றாய்!

உள்ளாரும் ஒண்டமிழில் உள்ளம் தோய்ந்தே,
.....உயர்தழகாய் மின்னுகின்ற உணர்வை ஆய்ந்தே,
துள்ளாட்டம் போடுகின்ற எண்ணம் மீட்டி,
.....சுகந்தமலர் சிந்துகின்ற வண்ணங் கூட்டி,
தெள்ளுதமிழ்க் கன்னலதன் வரிகள் பெய்து,
.....சித்திரம்போல் அலங்கலெனக் கவிதை நெய்து,
கள்ளாரும் செம்மலரை விரும்பி யேற்ற,
.....கனியுளத்து சவகருன்னைப் போற்று வேனே!
=========================================
இராச. தியாகராசன். 

புதன், 30 அக்டோபர், 2019

சங்கரியோ வாராயோ......

பாவலர், தமிழார்வலர் திரு மகுடேசுவரன் கோவிந்தராஜன் அவர்களின் காலம் பற்றிய முகநூல் நிலைச்சேதியில் பின்னூட்டமாக ஒரு பாடலும்,  கவிப்பெருஞ்சுடர் திரு ஹரிகிருஷ்ணனின் எந்நிரற் குழுவில் "வாவெழுந்து வாகண் மலர்ந்து"  என்கிற ஈற்றடிக்கு ஒரு வெண்பாவும் எழுதினேன். இரண்டுமே அந்த ஶ்ரீதேவி உமையாளை என்னுளமறிய எனக்குத் தோன்றியவை என்பதால், இன்னோரு பத்தி சேர்த்து, கலிவெண்பாட்டாக என்னுடைய வலைப்பூவில் பகிர்கிறேன் இப்போது.

==================================


==================================
சங்கரியே வாராயோ....
==================================
சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமுன்றன்
கோலத்தைக் கண்டிடவே கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானந்தான் வாய்த்திடுமோ?       (ஞாலத்தின்)

வித்தகியுன் பின்னலெனும் வல்லூழாம் ஆழியிலே
நித்தமுமே நான்விழுந்து நீந்திடும் வேளையிலே
சித்தமதை மத்தெனவே சீய்த்தே சிலுப்புகின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறெனக்கு வாய்த்திடுமோ?      (பித்தமதை)

நாவெழவே நாதியின்றி நாளெல்லாம் போகயிலே
சாவெழுதி வாழ்வெழுதும் சங்கரியிப் பூவுலகில்
பாவெழுதும் பாவலனென் பாமலரை ஏற்றிங்கே
வாவெழுந்து வாகண் மலர்ந்து.
===================================
இராச. தியாகராசன்.

சனி, 26 அக்டோபர், 2019

வெங்கதிராய் ஒளிவீசும்......

அனைவரையும் அருந்தமிழால் உயர்வு செய்வோம்; 
அன்புடனே அரவணைப்போம்.
================================


================================

தழலெனவே எரிந்துள்ளந் தளர்ந்துவிட்ட தோழியரின், 
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் தோழர்களின்,
விழலெனவே விளைந்திங்கு வீணான பித்தத்தால், 
சுழலெனவே சுற்றிநிதம் சுக்கான சுற்றங்கள்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறிவிட்ட நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்,
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் தான்துளைத்தே,
உதயமாகு முணர்வுகளை உருக்கிநித முறவாடும்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி,
அலைந்தலைந்தே அதன்மீதி லடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்,
உலைநெருப்பி லுழல்வதுபோல் உலகாய உணர்வுமின்றி,
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் வாழ்வாகும்!

துளித்துளியா(ய்) உள்ளத்தில் துயர்சேர்க்குஞ் சூதுகளைத்,
தளிர்க்கின்ற சழக்குகளைச் சடுதியிலே விலக்கிவிட்டுக்,
களிபொங்கக் கைப்பினையே கருக்கிவிடும் நெஞ்சகத்தில்,
வெளிச்சத்தின் வைகறையே வெங்கதிரா(ய்) ஒளிவீசும்!

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு
சந்தமணச் சொல்லுரைக்குஞ் சடங்கினிலோ இல்லையெனுஞ்
சிந்தனையின் வளஞ்செறிந்த தெளிவான மனங்களிலே
வந்துதுதிக்கும் பேரன்பே மகத்தான சிவமாகும்!

========================================================
இராச. தியாகராசன்.


திங்கள், 21 அக்டோபர், 2019

எது கவிதை........

எது கவிதையென்று எங்கெல்லாமோ தேடுகிறேன்;  எது கவிதையென்று எதையெல்லாமோ கிறுக்குகிறேன்...

=====================================



=====================================
கவிதை என்னும் அழகுப்பூ.....
============================
துள்ளிவரும் வண்ணத்துப் பூச்சி போலே
.....தோன்றியுள்ளே ஆடுமென்றன் எண்ணச் சீரோ?
வெள்ளிமலை மேல்விளைந்தே வீழு மந்த,
.....விண்ணருவிச் சாரல்தான் தமிழாம் தேரோ?
அள்ளிமனங் கொள்ளையிடப் பொழியும் இன்ப
.....அமுதமழை வெள்ளந்தான் பாட்டாம் ஆறோ?
புள்ளியிட வந்தொளிரும் கோலம் போலே
.....பொலிந்தாடும் ஓவியந்தான் கவிதைச் சாறோ?

காதலிதன் கடைக்கண்ணைக் காட்டும் போதில்,
.....கார்முகிலும் கனவெழிலை ஊட்டும் போதில்,
சோதனையாய்க் காதலதும் கருகும் போதில்,
.....துயர்நீங்க மீண்டுமது தளிர்க்கும் போதில்,
ஆதவனும் தூரிகையாம் கதிரைக் கொண்டு,
.....அடிவான சீலையிலே எழுதும் போதில்,
சீதளமாய்ச் சிதறிவிடும் சொல்ல டுக்குச்
.....சித்திரந்தான் கவிதையெனும் கனவுக் கூறோ!

வானகத்தி(ல்) இடியிடிக்க விரித்தே யாடும்,
.....வண்ணமயில் போலிங்கே எண்ண வானில்,
தானிடிக்கப் பூத்துவிடும் நறும்பூக் காடாய்,
.....தாரணியி(ல்) எத்தனைபே(ர்) இடித்திட் டாலும்,
நானிலத்தி(ல்) அயராமல் தினமு(ம்) என்றன்,
.....நன்னெஞ்சத் தறிநெய்யும் பட்டுச் சீலை;
கானகத்துக் கருங்குயிலின் கனவுக் கூவல்;
.....கவிதையெனு(ம்) அற்புதமா(ம்) அழகுப் பூவோ!
====================================
இராச. தியாகராசன்.

கொடுமைகளும் வந்ததேனோ?....

அறமில்லா அறிவிலிகள் நிறைந்த உலகமோயிது?  😩

===================================













===================================

கருத்தமனக் கொடியவர்கள் சின்னப் பூவைக்
.....கசக்கிநுகர் கயமைகளும் வளர்ந்த தேனோ?
குருத்துநிகர் மழலைதன்னைச் சிதைப்போர் கூட
....கொழுந்தினிலே அன்னைமடி யிருந்தோர் தாமே?
அரக்கரென அடுக்கடுக்காய்ப் பிழைகள் தம்மை
....அனுதினமும் அளவின்றிச் செய்வோர் கூட
சிரித்தபடி தாயவளும் அன்பாய் ஊட்டும்
....சிறப்பமுதை அருந்திநிதம் வளர்ந்தோர் தாமே?

ஊழ்த்துவரும் உயிர்கட்கே உலகின் தாய்மை
.....உதிரத்தால் வழங்குகின்ற சின்ன மிங்கே
ஆழ்ந்துருகித் தாயவளே வழங்கும் அன்பின்
.....அகண்டவெளித் தத்துவமாம் உண்மை யிங்கே
தாழ்த்தலிலா தாய்மையுள்ளம் மொழிகள் தாண்டி,
.....தனதுதிரம் கடைந்தருளும் அமுத மிங்கே,
வாழ்க்கையிலே தலைமுறையை வளர்த்தே என்றும்
.....மங்கைநலம் காத்திடவே வேண்டு மம்மே!
=====================================
இராச. தியாகராசன்.

 

சனி, 19 அக்டோபர், 2019

என்னையே தந்தேன்.....

ஒரு சந்தப் பாடல் மாறுதலுக்காய்....

(கீழிருக்கும் ஓவியம் ஓவியர் திரு இளையராஜா அவர்களின் அற்புதக் கைவண்ணம்.)

================================














================================
என்னையே தந்தேனடி.....
========================

எடுப்பு:
=======
கண்ணாலே உனைக்கண் ட துமே! - பெண்ணே
எண்ணாம லென்னையே தந்தேன்!

தொடுப்பு:
==========
கண்ணிலே கண்டேனக் கயலென்னும் குமுதம்;
நெஞ்சிலே உண்டேனவ் வெழிலென்னும் அமுதம்!

முடிப்பு:
=======
வானத்து மாமழை யாலே - தோகை
மயிலிங்கே ஆடுதல் போலே
கானத்தைத் தேன்குர லாலே - கூவிக்
களித்திடுங் கருங்குயில் போலே;  (கூவிக்) (கண்ணாலே)

பேசிடுங் கண்ணொ ளியாலே - என்றன்
சித்தமுங் கலங்கிட நாளும் 
ஆசையைத் தூண்டுகின் றாயே! - உன்றன்
அசைந்தா டுமிடை யதனாலே!   (உன்றன்) (கண்ணாலே)

நீரெல்லைத் தொடுவது போலே - கண
நேரத்தில் மறைவது மேனோ?
வேரிலா மரமது போலே - மனம்
வீழ்வதைப் புரியாத தேனோ?   (மனம்) (கண்ணாலே)

கார்பொழி பின்னலை நீயும் - சுற்றிக்
கடந்திடும் வேளையில் நானோ;
பார்வையின் வீச்சதா லேயே - வெற்றுப்
பதுமைபோல் ஆவது மேனோ?  (வெற்று) (கண்ணாலே)

விண்ணிலே லூர்ந்திடு நிலவாய் - நீயும்
மென்மையாய்ச் சிரித்திடு வேளை,
கண்ணெனும் வலையிலே மீனாய் - நானும்
கருக்கிலே ஆழ்வது மேனோ? (நானும்) (கண்ணாலே)
===================================
இராச. தியாகராசன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

மல்கோவா மாம்பழமே........

மல்கோவா மாம்பழமே, நீகொடுத்த உப்புமுத்த நெனப்புகூட நெருப்பள்ளிக் கொட்டுதடி.... 
(கீழிருப்பது ஓவிய இளையராஜா அவர்களைன் கைவண்ணம்.

==============================













==============================
மல்கோவா மாம்பழமே;
மருதம ருக்கொழுந்தே!
காதோரம் ஓஞ்சிமிக்கி,
காத்துலதான் கண்சிமிட்ட,
நீளசடைப் பின்னலிலே
நிலாமல்லிச் சரமாட
செஞ்சாந்துச் சந்தனமாய்த்
தெம்மாங்குத் தேவதயாய்ச் 
சீனத்துச் சிலுக்கெனவே
சிலுசிலுக்க நிக்கியேடி!

வெண்டக்காப் பிஞ்சுபோல,
மருதாணி வெச்சவெரல்
செந்தூரப் பொட்டெனவே,
செவப்பாத்தான் சொலிக்குதடி!
தங்கநெறத் தாவணியும், 
பளபளக்கும் பவுனோட
கண்ணாடி வளகூட, 
கலகலன்னு கதபேசச் 
சஞ்சலத்தால் எம்மனசும்
சருகாத்தான் எரியுதடி!

கட்டிவெச்ச மல்லிபோலப் 
பொங்கிவெச்சச் சோறுபோல,
வரிசயிலே பல்லுமின்னச் 
செதறவிட்ட சோழியாட்டம்,
ஜலுஜலுன்னு சிரிச்சுகிட்டே,
முன்னாடி வந்துநின்னு,
இறுக்கியென்ன ஒதட்டோட
நீகொடுத்த உப்புமுத்த
நெனப்புகூட நெஞ்சத்திலே,
நெருப்பள்ளிக் கொட்டுதடி!

கருப்பஞ்சா றினிப்பாட்டம்,
கண்ணே ஒங்கண்ணுகூட
கல்கண்டா யினிக்குதடி!
வாக்கெடுத்த ஒம்பின்னல்
பாம்பாத்தாங் கொத்துதடி!
தெனந்தெனமும் சீவன்நான்
செத்துத்தான் பொழக்கெறண்டி!
ஒருசொல்லு சொன்னாலே
ஓனக்காக ஓலகத்தை
ஓம்மடியில் வைக்கறண்டி!
===============================
இராச. தியாகராசன்.

வியாழன், 3 அக்டோபர், 2019

பாதகத்தைக் காணீரோ!!!

எத்தனையெத்தனையோ காணுகின்றோம் இப்புவியில்.  ஆனால் சில நியதி மாறாட்டங்கள் மாறவே மாறாதா என்றேங்குகிறது உள்ளம்....

=============================================



=============================================

மதமேற்றும் மதுவென்னும் மயக்கத்தைத் தருவோரும்,
நிதமிங்கே நிறைவான நிதியதனில் புரண்டிருக்கப்
புதிதெனவே பேசிகளைப் புதுப்புனைவாய்ச் செய்வோரும்,
சதமெனமே செல்வத்தில் தடையின்றி உருண்டிருக்க;

வெண்சுருட்டாம் வேதனையை விற்கின்ற பேர்களுமே
எண்ணரிய பணத்தினிலே எந்நாளும் இழைந்திருக்க,
வண்ணமயக் குளிர்ச்சாற்றை வழங்குகின்ற நிறுவனமும்,
கொண்டலெனக் கொட்டுகின்ற கோடியிலே உழன்றிருக்க;

அடுக்கிவிட்ட அருந்தமிழில் அம்புலியைப் பிடிப்பதுபோல்,
மிடுக்குடனே வெள்ளுடையில் மெருகாகப் பேசுவோரும்,
சொடுக்கினிலே ஏவலர்கள்; சொகுசான வண்டியென,
முடியணியாக் கொற்றவராய், முழுச்சுகத்தில் நுளைந்திருக்க;

அணிவதற்கே உடையின்றி அடுக்களையி நெருப்புமின்றி,
பிணிபிடித்தே நைந்தவர்போல் பெருந்துயரில் வாடுகின்ற,
உணவணிக்கும் உழவர்களோ ஒருவேளைச் சோற்றுக்காய்ப்
பணமின்றி பதைபதைக்கும் பாதகத்தைக் காணீரோ!

எண்ணுமுளக் கருத்தாக இயம்புகிறேன் இன்றிங்கே;
வெண்சுருட்டு, கைபேசி, வீரமொழி, குளிர்ச்சாறு,
தண்மதுவோ ஏதுமின்றி தரணியிலே வாழ்ந்திடலாம்;
உண்பதற்கு உணவின்றி உய்ந்திடத்தான் ஆவதுண்டோ?

======================================================
இராச. தியாகராசன்

நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல்.  பரதவர் என்பவர் மீனவரென்றால்,
நுளையர் = முத்துக் குளிப்பவர்.

திங்கள், 30 செப்டம்பர், 2019

எதை நீயிங்கே பார்க்கின்றாய்??

எங்கேயோ பார்வை,  எதையோ தேடுதல்
======================================


=====================================
எதனை நீயிங்கே பார்க்கின்றாய்?
=======================
எதனை நானிங்கே இவ்வாறாய் வியப்பினிலே
சதமாய்த் தானெண்ணி சத்தியமாய்ப் பார்க்கின்றேன்?
புதுமையெனப் புகழ்போதை புந்தியிலே புகுந்தாடச்
சிதைமேவும் பொய்யுடலை திண்ணமெனக் கொண்டிங்கு,

சுதைபூசு மாயவலை சுகந்தன்னில் அகம்மயங்கி,
நிதமாடும் நாடகத்து நடிப்பதனைத் கண்டுருகி,
மதியின்றி மதபோதை மண்டையிலே குடைவதனால், 
புதுமைதா னீதென்று பொய்யாகப் புரிந்தங்கே,

அதிசயம் போலுணர்ந்தா அப்படிநான் பார்க்கின்றேன்?
சதிராடும் பொய்முகத்துத் தருக்கழலைச் சேர்க்கின்றேன்?
இதிலிங்கே எண்ணமெது? இதயவெளி இன்பமெது?
பதியுமென்றன் தடங்காட்டும் பாதவலித் துன்பமெது?

நேற்றவர், இன்றிவர்; நிசமில்லா நாளையெவர்?
போற்றுகின்ற பதவிதரும் பொய்யான வாழ்வினிலே,
கூற்றுவன்தன் பாசத்தைச் சுழற்றிவிடும் வேளைவரை,
சோற்றுடலால் சேர்க்கின்ற செல்வத்தின் காவலன்நான்!

நான்நானென் றாடுகின்ற நாற்றமிழிச் சடலங்கள்;
தான்தானென் றோடுகின்ற சாய்க்கடை உடலங்கள்;
கோன்நானென் றகந்தையிலே கொக்கரிக்கும் மடமைகள்;
வான்முட்டும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகள்!

சாண்வயிற்றுப் பாட்டுக்காய் தவிக்கின்ற வாழ்வியலில்,
காண்கின்ற எழிலுமெது? கற்றுவைத்த கல்வியெது?
பூண்கின்ற அணியுமெது? புன்மையெனும் பொய்ம்மையெது?
மூண்டெரிக்கும் மயக்கவலை மோகமுள்ளி னுறுத்தலெது?
=========================
இராச தியாகராசன்

பிகு:
====
புந்தியிலே = உள்ளத்தில், தருக்கழலை = தருக்கு+அழல் (இறுமாப்பெனும் அழல்), பாசத்தை = பாசக் கயிற்றை, நாற்றாமிழி = நாற்றம் + இழி (கெட்ட மணம் வழிகின்ற), சாய்க்கடை = சாக்கடை, மூண்டெரிக்கும் = மூண்டு+எரிக்கும் (பற்றியெரிக்கின்ற), 
மோகமுள் = மோகம்+முள் (முள்ளாய் உறுத்தும் ஆசை)

வியாழன், 26 செப்டம்பர், 2019

மாயமென மாற்றுவளோ?.....

(பிகு: கீழிருக்கும் ஓவியம், தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜாவின் கை வண்ணம்)

=======================================

=======================================
மாயமென மாற்றுவளோ....
=======================================
மதமதக்கும் மனச்சோர்வை மாற்றிவிடும் மந்திரக்காரி;
சுதியேற்றிச் சுழலவைக்கும் சுகந்தமணச் சுந்தரக்காரி;
சதமாயென் நெஞ்சகத்தில் தகதகக்கும் தந்திரக்காரி;
இதந்தருகும்  இன்பமதை ஏற்றிவிடும் இங்கிதக்காரி;

கதகதக்கும் கங்கனையக் கனல்மொழியின் கந்தகக்காரி;
விதவிதமாய் அணைத்தென்னை விழுங்குகின்ற வித்தகக்காரி;
செதில்செதிலாய் என்னுளத்தைச் செதுக்கின்ற சித்திரக்காரி;
புதுமையெனும் புத்தமிழ்தாய்ப் பொலிகின்ற புன்னகைக்காரி;

உதயத்தின் ஒண்மையென உணர்வூட்டும் ஓவியக்காரி;
கதலியதன் தேன்நிகர்த்த கனிச்சுவையின் காவியக்காரி;
வதம்செய்யும் வார்த்தைகளால் வாட்டுகின்ற வாக்கியக்காரி;
நுதலென்னும் பெருமீனால் நுழுகின்ற  நூதனக்காரி!

அன்பின்றி எதற்கிந்த அவலமென்றே அழுகையிலே,
என்வாழ்வில் நான்தளர்ந்(து) இடிந்தோய்ந்து விழுகையிலே,
உன்மத்தம் பிடித்தவன்போ(ல்) ஓடித்தேய்ந்(து) எரிகையிலே,
பின்னல்க(ள்) என்வாழ்வில் பேதமையாய்ச் சிரிக்கையிலே,

அவலத்தில் நானிங்கே அடுக்களையி(ல்) எரிவதுபோல்,
கவலைக(ள்) அடுக்கடுக்காய்க் கவிந்தெரிக்க என்னிதயம்,
சவலையெனச் சத்தில்லாச் சருகெனவே பறக்கையிலே,
இவளிங்கே ஏந்தியெனை இன்பத்தேன் ஊற்றுவளோ?

பொள்ளுகின்ற வாழ்வியலில் போக்கற்ற தருணத்தில்,
கள்ளமற இயல்பெழிலாய்க் கைக்கோத்து வருகுவளோ?
வெள்ளமென வெறுப்புநிலை வெளிப்போந்து வெடிக்கின்ற,
உள்ளமதே உடையாம(ல்) உடனிருந்தே ஆற்றுவளோ?

ககனத்தின் கடுவிசையாய்க் காற்றுவெளிக் காட்சியென,
சிகரத்தின் சீதளமாய்ச் சில்லித்த நெஞ்சகத்தில்,
தகவின்றி அலைகின்ற தத்தாரிச் சிந்தனையை,
அகமலர்ந் தன்புடனே அருகிருந்து தேற்றுவளோ?

தனிமையெரி வேளையிலுந் தன்மடியி(ல்) எனையிருத்தி,
பனித்துகளின் சாரலெனப் பற்றியெனைக் காதலுடன்,
கனிச்சுவையா(ய்) இனிக்கின்ற கற்கண்டுக் களிப்பூட்டி,
மனச்சோர்வைக் கணப்போதில் மாயமென மாற்றுவளோ?

======================================
இராச. தியாகராசன்.

பிகு:  நுதல் = புருவம் / நெற்றி
            நுழுதல் = விழுங்குதல்

முகநூல் வெண்பாக்கள்....

நந்தமிழை வளர்ப்பதனால், சமூக வலைதளத்தையும் இலக்கியமென்பேன் நான்.

==============================


==============================

குற்றமிலாச் செந்தமிழைக் கோதில்லாத் தோழமையைப்
பெற்றுதரு(ம்) இவ்விணையம் பேறென்றால் - சுற்றும்
முகநூலில் நாமிணைவோம் முத்தமிழால் என்று
பகர்தலே பைந்தமிழர் பண்பு.

தேடியுள(ம்) ஆய்ந்தழகாய்ச் சேர்ந்திடவே நம்மிளையோர்
நாடுவதோ நல்லிணைய நட்பன்றோ!  - வாடலில்லா
முத்தமிழும் அன்பும் முகநூற்(கு) அழகென்றே
சித்தமதில் கொள்வார் சிலிர்ப்பு.

அன்பு(ம்) அணிகலனாய் நட்பும் இருப்பதனா(ல்),
என்றும் முகநூல் இனிப்பென்றால் - இன்றிங்கே
சிந்தை சிலிர்க்கச்செய் செப்படி வித்தையென,
விந்தை முகநூல் வியப்பு.

தகவோர் தமையே சளைக்கா(து) இணைக்கும்
முகநூல் உலகின் மொழியென்றால் - அகவாழ்வில்
சூழ்மனிதர் பண்பினைச் சொல்லிடும் இந்நூலும்
ஆழ்ந்துணர்த்தும் ஆசான் அறி.

சிந்திக்க ஏலாத சிந்தனைச் சிற்பிகளும்,
முந்திவந்து மேயும் முகநூலில் - வந்தனைசெய்
நேர்மையொடு நீதிவழி நிற்பவர்க்கே எந்நாளும்
சீர்த்திகளும் சேர்தல் சிறப்பு.

================================================

இராச. தியாகராசன்

கள்ளமாய்ப் பறையுமோ?

2010இல் எழுதிய வரிகளிவை.  பறையும் என்னும் சொல் தூயதமிழ்ச் சொல்.  பறைதல் என்றால் மறைபொருளை ஊரறிய முழவொலித்துக் கூறுதல் என்று பொருள்.
======================================
======================================
கள்ளமாய்ப் பறையுமோ...
======================================
சேற்றிலே மலர்ந்தநற் செந்தா மரையெனத் 
தோற்ற மளித்திடுஞ் சொப்பனத் தோகையே!
பாற்குட வெண்மையாய்ப் பாங்கெழில் மேனியில்,
ஊற்றெனப் பொங்கிடு மோவிய மங்கையே!
போற்றுமிவ் வேழையின் பூமனக் காதலை,
ஏற்றிட வேண்டியே ஏங்குமென் வேதனை
நாற்றிசை மேவியே நங்கையுன் காதினில்,
சாற்றியே சிந்தையிற் சந்தமாய் பதிந்திடக்
காற்றலைத் தூதுவன் கள்ளமாய்ப்  பறையுமோ?
=======================================
இராச. தியாகராசன்.

பிகு:
====
கள்ளமாய்ப் பறைதல் - கிசுகிசுப்பாக காதருகில் சொல்லுதல்.

கண்ணுறங்காய்....

இளையோருக்காய் ஒரு தாலாட்டு.  2002இல் எழுதி 2015இல் முகநூலில் பகிர்ந்ததாய் நினைவு.  இன்று இன்னொரு பத்தி சேர்த்து இங்கு பகிர்கிறேன்.  ஒரு தமிழ்த்தாய் தன் மகவிடம் கடமையைச் செய்யக் காலம் வருமெனச் சொல்லி, கண்ணுறங்கத் தாலாட்டிசைக்கிறாள்.
========================================
========================================
கண்ணே நீ கண்ணுறங்கு...
========================================
நேர்மைச் சீயெமெனத் தீதகற்றச் சீறுவைநீ - இன்று
.....நித்திலமே நறுந்தேனே கண்ணுறங்காய்;
சோர்வி லாதுவருஞ் சூழ்துயரம் மீறுவைநீ - இன்று
.....துங்கமணிப் பெட்டகமே கண்ணுறங்காய்;
கூர்மை நெடுவேலாய்ப் புன்னெறியைச் சாடுவைநீ - இன்று
.....கோதிழையே குஞ்சரமே கண்ணுறங்காய்;
ஆர்க்குந் தேன்சிட்டாய் நன்னெறியை நாடுவைநீ - இன்று
....ஆரமுதே அம்புலியே கண்ணுறங்காய்!

ஓர்மைப் பூங்குயிலாய்ப் பைந்தமிழைப் பாடுவைநீ - இன்று
....ஓங்கலனை ஒண்டமிழே கண்ணுறங்காய்;
சீர்மைத் தென்றலென மணம்பரப்பி யாடுவைநீ - இன்று
.....சித்திரமே செழுங்கனியே கண்ணுறங்காய்;
கார்போல் நந்தமிழைக் கையணைத்துத் தாங்குவைநீ - இன்று
.....கற்கண்டே கனியமுதே கண்ணுறங்காய்;
வேர்போல் நம்மொழியைக் காத்துநிதம் ஏந்துவைநீ - இன்று
....வெள்ளிநிலா வித்தகமே கண்ணுறங்காய்!
==========================================
இராச. தியாகராசன்.

பிகு:
====
சீயம் = சிங்கம், நித்திலம் = ஆணிமுத்து, துங்கமணி = ஒளிவீசும் மணி,
புன்னெறி = தீயநெறி, கோதிழை = நேர்த்தியான இழை, குஞ்சரம் = ஆனை,
ஓர்மை = தனிமை, ஒண்டமிழ் = ஒளிர்கின்ற தமிழ்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

வாழ்வியல் விதி....

உங்களின் உன்னதமான மன்னிக்கும் பண்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.  ஏனென்றால் உங்களின் உள்ளத்தைத் துன்புறுத்தும் நினைவுகளுக்குரியவர், இன்னமும் இடைவிடாதுங்களை உளமார நேசித்துக் கொண்டிருக்கலாம். (இப்பண்பைத் தொலைத்ததனாற்றான், பிரிவென்று வரும் போதில், ஆண்களும்/ பெண்களும், தாம் நேசித்தவர்/ தமை நேசித்தவர் மீதில் வன்மமும், வெறுப்புமுற்று, வேண்டத்தகாதனவற்றை மேற்கொள்கின்றனர்!)

====================================



====================================

விரைந்தும் போகலாம் - உனை
வெறுத்தும் போகலாம்;
விளம்பியும் போகலாம் - தனை
விளக்கியும் போகலாம்!

மரத்தும் போகலாம் - மெய்
மறந்தும் போகலாம்;
தெரிந்தும் போகலாம் - பொய்
சொரிந்தும் போகலாம்!

வருந்தியும் போகலாம் - வளம்
விரும்பியும் போகலாம்;
அறிந்தும் போகலாம் - உளம்
அழுதும் போகலாம்!

கரித்தும் போகலாம் - மனம்
கலங்கியும் போகலாம்;
பறந்தும் போகலாம் - தினம்
பழகியும் போகலாம்!

புரிந்தும் போகலாம் - பழி
புனைந்தும் போகலாம்;
சிரித்தும் போகலாம் - வழி
சிதைத்தும் போகலாம்!

அறிந்தும் போகலாம் - நினை(வு)
அழித்தும் போகலாம்;
கடிந்தும் போகலாம் - கரை
கடந்தும் போகலாம்!

===================================
இராச. தியாகராசன்.

என்னிலுறைபவளே....

கீழிருக்கும் ஓவியத்தை வரைந்தவர், தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்கள் (இசையமைப்பாளர் அல்லர்).

=============================================



=============================================

எண்ணக் கடலது என்று மிரைந்திட,
வண்ணக் கலையினில் மல்லைச் சிலையினில்,
கண்ணன் குழலினில், கன்னற் சுவையினில்
விண்ணுங் கிறுக்கிடும் மின்னற் கொடியினில்,
கண்கள் தொடுவதைக் கைகள் சடுதியில்,
பண்ணாய்ப் புனைந்திட, பாட்டின் "இசையென",
முன்னம் எழுதிய முத்த வரிகளை,
கன்னம் வருடிய காதற் சுவையினை,
இன்பக் கவிதையை, இன்றும் வனைந்திட,
மண்ணில் கவியென என்னைச் செதுக்கியே
என்னி லுறைபவ ளே!

=============================================
இராச. தியாகராசன்.

கவிதை செதுக்குகிறேன்..

கீழிருக்கும் படம் தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜா அவர்களின் கைவண்ணம் (இசையமைப்பாளர் அல்லர்)

காதலின் இயல்பே கலையாக உருவெடுக்கிறது; 
கல்லாக இருந்தது சிலையாக உருவெடுக்கிறது!
சொல்லாக நின்றது சுவையாக உருவெடுக்கிறது.
=====================================
=====================================
கவிதைச் செதுக்கிறேன்...
=====================================
என்னி(ல்) உணர்ந்த எழிலாம் திருவெனவே,
தன்னை யறிந்த தகவோர் நடுவினிலே,
முன்னு(ம்) உணர்வில் முகிழ்ந்த உறவெனவே,
என்னில் கவிதை எழுதிட வைப்பவளே!

கனவில் உனதுருவே காண்பது போலவிங்கு
நினைவில் நெருஞ்சியாய் நின்றே உறுத்தல்போல்
மனத்தில் வஞ்சியுன் வடிவான தீயெழிலில்
தினந்தினம் தீராத தீக்குளியல் செய்கின்றேன்

அல்லியின் செவ்வாய் அமிழ்தச் சொல்லழகோ
புல்லிதழ் மீதானப் பூம்பனியாய்ப் போனதால்,
கல்லிலும் காட்சியாய்க் கன்னியுன் தோற்றமே
சில்லித்த வாளியாய் சிந்தையிலே குத்துதடி!

பொன்னி(ன்) ஒளியாய் பொலிந்த கருவெனவே,
எண்ண முழுதும் எழுகுமுன் நினைவினிலே,
மின்னு(ம்) அழகாய் விரிந்த ஒளியெனவே,
சின்னக் கவிதை செதுக்கி யுரைக்கின்றேன்.
=========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
திரு = செல்வம், 

தோற்பேனோ காதலிலே......

நீர்க்குமிழி போன்ற கவிஞனை நீர் வெல்லலாகுமோ?

=================================================



=================================================

அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேச(ம்)உறை நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றும்,
சிலையழகே! செம்புலத்துச் செந்நீராய் என்றிணைவோம்?

வானகத்தி(ல்) உலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனைகள் பலதந்து,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்கின்றாய்!

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகாதே!
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன் நான்; தோற்பேனோ காதலிலே?
=================================================
இராச. தியாகராசன்

சனி, 21 செப்டம்பர், 2019

வேண்டுதல்கள்.....

என்னுளத்தின் வேண்டுதல்கள்.....
==========================
==========================
ஆவி விட வேண்டுமடி...
==========================
இற்றைக்கு ஒருகனவாய்,  இனம்புரியா உணர்வாய், 
முற்றுபெற நெஞ்சகத்தில் முளைத்தெழுகும் நினைவு; 
சுற்றமும் இங்கில்லை; குற்றமும் இங்கில்லை;
உற்றவர் எவருமில்லை? கற்றவரும் எவருமில்லை!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தென்றன்
இயல்பினையே பறித்தழிக்கும் எண்ணமதை எரித்தழிக்க
வியனுலகைக் காக்குமந்த வித்தகியைத் தானிறைஞ்சி
நயந்தொழுகும் நறுங்கவிதை நவில்கின்றேன் நானிங்கு!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள் 
கோலத்தைக் கண்டுமனக் கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானத்தை வேண்டுகிறேன்!

அத்தனவன் பின்னலெனும் அகன்றபெரு மாழியிலே, 
நித்தமும்நான் விழுந்தே நீந்திடும் வேளையிலே, 
சித்தமதைச் சிலந்தியெனச் செரித்தே அரிக்கின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறதனை வேண்டுகிறேன்!

கண்களிலே வைத்தென்றும் காக்கின்ற இறையுணர்வும்,
எண்ணமதை என்றென்றும் இயக்குகின்ற எந்தமிழும்,
உண்மையொளிர் உயிர்நட்பாம் உன்னதமும்;  ஆழ்துயிலில்
விண்ணகரப் பேரின்ப விடுதலையும் வேண்டுகிறேன்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்கையிலே,
நாவினிக்கும் பாரதியாய் நற்றமிழில் பாவெழுதி,
தேவியவள் சேவடியைச் சீந்துகின்ற நினைவுடனே
பூவிதழ்கள் அவிழ்வதுபோல் ஆவிவிட வேண்டுகிறேன்!
===============================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புந்தி - புத்தி, நவிலுதல் - உரைத்தல், சூக்குமம் - சூட்சுமம், அத்தன் - ஆதியோகி, 
ஆழி - கடல், விண்ணகரம் - வீடுபேறு, சேவடி - சேவிக்கும் திருவடி, 
சீந்தும் - போற்றும்,  

என்னைக் கவர்ந்த தமிழேறு...

பாவேந்தரின் புதல்வர், தமிழ்மாமணி, திரு மன்னர்மன்னன் அவர்கட்காக, அவருடைய 75 ஆண்டு கால தமிழ்த் தொண்டைப் போற்றி,  நான் வனைந்த பாடலிது.

=======================================





=======================================

மென்மைச் சிரிப்பினில் வென்றிடு மன்னவ!
கன்னற் றமிழில் கவிமொழி - மின்னிடும்

மன்னு(ம்) உரைகளால் வண்டமிழ்ச் சொற்களால்
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

பாவேந்த(ர்) உள்ளமே பாட்டுப் பறவையாய்,

மூவேந்தர் முத்தமிழ் முன்னெடுத்தாய்! - நாவேந்து(ம்)
அன்னைத் தமிழில் அரசர்க்(கு) அரசநீ
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

நெஞ்சக் கதவில், நிமிரும் நினைவுகள்;
கொஞ்சு தமிழிற் கொடுத்தவான் - மஞ்சு!

பனியா(ய்) இலக்கியப் பாங்கின் படைப்பா(ல்),
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

கறுப்புக் குயிலின் குரலாம் நெருப்பைச்

சிறக்கச் செதுக்கிய சிற்பி! - தெறிக்குந்
தனித்தமிழ்க் கொண்டலுன் சங்கத் தமிழால்
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

இயற்கையைப் பாடி, இயற்றமிழ்ப் பாடி,

நயத்தகு பெண்கல்வி நாடி - உயர்ந்தாய்!
வனையும் வரியால், வளர்தமிழ் பொங்க,
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

முரசாய் ஒலிக்கும் முதுபெரு(ம்) அறிஞ,

தரிசாய் விரிந்த சழக்கே - எரிய
முனைந்தே எழுப்பிய முத்தமிழ்ச் சுவர்கள்*
உனைநிதம் போற்றுமே ஓர்ந்து.
=======================================
இராச. தியாகராசன்
=======================================
கீழ் வரும் சொல்லாட்சிகள் பெரியவரின் படைப்புகளில் சில.

கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்

நெஞ்சக் கதவுகள்
நிமிரும் நினைவுகள்
பாவேந்தர் உள்ளம்
பாட்டுப் பறவைகள்
பாவேந்தர் இலக்கியப் பாங்கு.
*இவர் தலைவராய் இருக்கும் போதில், புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் கட்டடம் எழுந்தது.

மைந்தனுக்கொரு வாழ்த்து...

மைந்தன் வைகறைச்செல்வனின் 15ஆம் பிறந்தநாளில் அவனுக்களித்த வாழ்த்துரை.......
=====================================



=====================================

ஆர்ப்பரிக்கும் அலைகடலின் முழக்கம் போல,
....அடுக்கடுக்காய்த் தரைமோதும் முயற்சி போல,
சீர்பரப்பும் செந்தமிழின் செழுமை போல,
....தேர்ந்திலங்கு சந்தனத்தின் மணத்தைப் போல,
கூர்ந்தறியும் குறைவில்லா அறிவும் பெற்று,
....கொடுஞ்செயலை வேரறுக்கும் உணர்வு முற்று,
சார்தலில்லாத் தனித்துவமாய் செல்வா நீயும்,
....சழக்குகளும் தான்விலக வாழ்வாய் நன்றே!

=====================================

இராச.தியாகராசன்.

எழுவின் மழவரே! எழுமின் எழுமின்...

ஒரு ழகரக் கவிதை வாழ்த்து....

=============================



=============================

அழுகுங் கழிவின் குழியைத் தொழுது,
நழுவி யுழல விழுந்து, பழியைத்
தழுவ விழையும் எழுவின் மழவரே!
அழிவின் சுழலில் நுழைந்து பழகி,
அழலி(ல்) ஒழுகி யழிந்து விழுமுன்
வழமை மொழியும் செழித்து தழைக்க,
உழவுத் தொழிலு(ம்) எழுந்து கொழிக்க,
மழலை கழறும் குழலின் பிழிவாய்,
அழகு(ம்) இழியும் பொழிலின் நிழலாய்,
விழிகள் தழுவ விழையு(ம்) எழிலாய்,
செழிவு வழிய வழங்கு பொழிவாய்,
பழைய சழக்கு முழுது(ம்) அழிய,
மழுவைத் தொழுகு(ம்) உழவுஞ் செழிக்க,
உழவின் மொழியா(ய்) எழுகும் மழையாய்,
பழியும் கழிய எழுமி(ன்) எழுமி(ன்)
பழன விழுவின் முழவும் முழங்கவே!

==============================
இராச. தியாகராசன்
==============================
பிகு:
கழறுதல் = கிள்ளை மொழி
சழக்கு = கயமை
மழு = கலப்பையின் கொழு
எழுவின் மழவர் = தூணொத்த இளையோர்
அழலில் ஒழுகி = நெருப்பொடு இணைந்து
பழன விழு = வயலின் சிறப்பு
முழவு = முரசம்.

அருந்தமிழே வாழி நீயே......

தமிழை வாழ்த்துவதில் என்ன சிக்கனம்.   தினம் ஒரு பாட்டெழுதிப் பதிந்தாலும் போதாதுதான்....

தமிழே வாழி...
========================================



========================================

மனந்தனிலே மலர்கின்ற கவிதை போல,
....வானுலவுங் குளிர்நிலவின் ஒளியைப் போல,
பனிபடர்ந்த வயல்வெளியின் பசுமை போல,
....பல்லுயிரை வளர்க்கின்ற கதிரைப் போல,
வனமடர்ந்த வழிநிறையும் தனிமை போல,
....வசந்தமன நினைவென்னும் இனிமை போல,
எனதுயிரில் கலந்துறையும் "இசை"யைப் போல,
....எனையாளும் எந்தமிழே வாழி நீயே!

தென்னையதன் ஆடுகின்ற கீற்றைப் போல,
....தேன்கசியுஞ் செங்கனியின் சாற்றைப் போல,
தென்முகத்துத் தென்றலெனுங் காற்றைப் போல,
....தேர்ந்தநறுஞ் செங்கழனி நாற்றைப் போல,
பொன்வண்ணச் செங்கதிரின் ஆற்றல் போல,
....புத்தமிழ்தப் பைந்தமிழின் மாற்றம் போல,
அன்னையெனும் அன்புருவின் தோற்றம் போல,
....அன்றலர்ந்த அருந்தமிழே வாழி நீயே!

============================================
இராச. தியாகராசன் 

விடியலே வாராதோ?.....

சில நேரங்களில் சந்தோஷம், சில நேரங்களில் சிந்தனை, சில நேரங்களில் உன்மத்தம், இன்னும் சில நேரங்களிலோ அறமென்னும் சீற்றம்;  வெறுங்கனவே வாழ்வாமோ;  விடியல்களே வாராதோ?
============================================
============================================
விடியலே வாராதோ...
============================================
ஆர்ப்பரிக்கும் ஆசையென அடித்தளத்தின் ஓசைகள்;
சேர்க்கின்ற சிக்கலெனச் சீற்றமுணர் சிந்தனையால்,
பார்க்கின்ற காட்சியெனும் பாலைவன வெக்கையிலே
நீர்க்கின்ற நியாயங்கள்; நிலையில்லா நினைவுகள்;

கேட்கின்ற கேள்விகளால் கிளர்ந்தெழுகும் கோணலதை,
ஆட்கொள்ளும் அவலநிலை; ஆரிங்கே நீதிசொல்வார்?
சிறகுகளும் சிதைந்தபின்னே சிகரங்களைத் தொடுவேனா?
செவியழிந்து போனபின்னே சங்கீதம் படிப்பேனோ?

கால்மடங்கி உடைந்தபின்னே கனசோராய் நடப்பேனா?
சால்பழிந்த சாய்க்கடையில் சான்றின்றி மறைவேனா?
கண்களின்றி கலைகளையே கருக்காக வளர்ப்பேனா?
விண்ணரகப் பேரின்ப விடுதலையைப் பெறுவேனா?

இத்தனைப் பேரிருந்தும் வழிநிறையுந் தனிமையிலே
சத்தில்லாச் சருகெனவே செரித்துவிழும் நினைவலைகள்;
சுழன்றாடும் இதயத்தில் சூழிருளாம் கருக்கலிலே
கழன்றோடும் காலங்கள்; கானல்நீர்க் கோலங்கள்!

நிழலெனவே நிதமலையும் நெஞ்சகமும் நினைவின்றி
கழன்றொருநாள் ககனத்தில் காற்றாகக் கலந்துவிடும்;
பழகுசுகம் படித்திடவே பறக்கின்ற பாழ்மனமும்,
உழலுகின்ற உலகமிதை உதறிவிடும் நாள்வருகும்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில்
மனத்துள்ளே மங்கையவள் மாயங்கள் மருகிநிதம்,
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காரிருளில்
கனவுகளே கார்காலக் கவிதையென கருவுறுமோ?

தினந்தினமும் தீக்குளியல்; தீராத மூச்சடைப்பு;
இனம்புரியா நெஞ்செரிச்சல்;  ஏனிந்த விளையாட்டு?
அறுந்தநூல் கையிலெனும் முடிவுகளே வாழ்வாமோ?
வெறுங்கனவாய் வாழ்விருக்க, விடியல்களே வாராதோ?
===========================================
இராச. தியாகராசன்.

எனக்கான ஆசைகள்...

ஆசையிலா மாந்தரெவர்?  ஆசையின்றி வாடுதலில்லை; வாடுதலின்றித் தேடுதலில்லை; தேடுதலின்றி நாடுதலில்லை; நாடுதலின்றிக் கூடுதலில்லை; கூடுதலின்றிக் குவலயமே இல்லை!
===================================


==================================
எனக்கான ஆசைகள்....
===================================
எந்நாளும் எழிற்கவிதை நானும் யாத்தே
....எத்திக்கும் எந்தமிழை வளர்க்க வேண்டும்;
கந்தமெனக் கமழும்பா வெழுதி நாளும்
....கயமைகளைக் கவித்தீயில் பொசுக்க வேண்டும்;
நொந்தலையும் நாதியிலாப் பேர்க ளிங்கே,
....நோதலற வாழப்பாப் புனைய வேண்டும்;
புந்தியிலே புகுந்தென்னைக் காக்கும் வாணி
....புகழ்நானும் பைந்தமிழில் வனைய வேண்டும்!

எழிலாரும் இயற்கவிதை பாட வேண்டும்;
....இனிமைதரு(ம்) ஏழிசையும் கூட வேண்டும்;
அழகாரும் அருங்கவிதை பாட வேண்டும்;
....அன்பென்னும் அற்புதத்தைத் தேட வேண்டும்;
பழகுதமிழ் சொல்லெடுத்தே பாட வேண்டும்;
....பன்னூறாய்ப் பண்ணலங்கல் சூட வேண்டும்;
விழைகின்ற காதலையும் பாட வேண்டும்;
....மேதினியோர் என்கவிதை நாட வேண்டும்!
=========================================
இராச. தியாகராசன்.

வைகறை...

வைகறை போதென்னும் மங்கையவள் என்னெஞ்சில் ஏற்றி வைத்த நினைவுகள் என்றென்றும் மாறுவதில்லை....

=============================================


=============================================
வைகறை...
===========
முழுநிலவும் விண்ணில் தூங்க,
....முத்தனைய மீன்கள் ஏங்க,
எழிலரும்பும் பூக்கள் மேவி,
....இன்பமெனும் வாசம் தூவ,
வழிந்தலையு(ம்) ஆற்றி லோடி,
....மாருதமாம் மங்கை யாட,
எழுந்திழையும் வண்டும் பாட,
....என்னுளமும் கொள்ளை யாக;

தேனடையின் தித்திப் பாகச்,
....செந்தமிழில் பாட்டுங் கேட்க,
வானிடையே மேகங் கண்டு,
....மாமயிலு(ம்) ஆட்டம் போட,
தானணிந்த காரின் வண்ணச்
....சட்டைகழன் றோடிப் போக,
வானகமே செம்மை யாக,
....வந்தனளே வைக றைதான்!
===============================
இராச. தியாகராசன்.

சூழ்பகையும் தூள்....

நங்கையர் நாளுக்காய் நானெழுதிய வரிகளிவை...
================================================
================================================
சூழ்பகையும் தூள்....
================================================
வெங்கரத்தால் செம்பரிதி வெள்ளிமலை பற்றுதல்போல்,
செங்கமலக் கன்னியரே சீறுகின்றச் - சிங்கமென,
ஞாலத்தின் நீதிக்கிஞ் ஞாட்பென்றே கூவிநின்றால்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

ஆலறுகாய் வாழ்ந்திங்கே ஆற்றலுடன் ஆட்சிசெய்து,
காலனென நம்மினத்தைக் காத்துநின்றே  - வேல்கொண்ட
வேலம்மை நாச்சியென வேல்விழியர் வீறுகொண்டால்,
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.

செம்புலத்தின் சீர்மையெனத் தீச்சுடரா(ய்) ஆர்க்கின்ற
எம்மினத்து நங்கையெனும் இன்முகமே! - அம்பலத்தில்
வாலெழிலார் மங்கைநீ வாளெடுத்தால் காமுகத்தின்
சூலுறுஞ் சூழ்பகையுந் தூள்.
=================================================
இராச. தியாகராசன்.

பிகு:  ஞாட்பு = போர்க்களம்

இன்பங் கொள்ளல் ஏனடா?.....

வாழ்க்கையே ஒரு நிழற்படமோ?....
==================================
==================================
இன்பங் கொள்ளல் ஏனடா...
==================================
முட்டி மோது(ம்) உள்ளமே
....மோக(ம்) என்ன போதையா?
வெட்டிப் பேச்சுக் கள்ளமே
....வெற்று மோசப் பாதையா?
கட்டித் தங்கம் காட்டிலே
....காய்ப்ப துண்டோ பாரடா?
எட்டிக் காயி(ல்) என்றுமே
....இன்பங் கொள்ள(ல்) ஏனடா?

விட்டுச் சென்ற நாளையே
....வேண்டி வேண்டித் தேடியும்,
துட்டு மட்டும் வாழ்வெனச்
....சொக்கி யிங்கே ஆடியும்,
அட்டி யின்றித் தீமையை,
....ஆசை யோடு கூடியும்,
முட்டி மோதும் வாழ்விலே
....மோகங் கொள்ள(ல்) ஏனடா?
==============================
இராச. தியாகராசன்

பிகு: அட்டியின்றி - தடங்கலின்றி

வியாழன், 19 செப்டம்பர், 2019

மழலையெனும் மலர்....

ஆம்... வடிவெழில் வாகை மலர், மடியில் முகிழ்ந்த ரோசா, இன்னமிழ்த ஊற்று, பொக்கையிதழ்க் கவிதை,  நம் கவலைகளையெல்லாம் எரிக்கும் மருந்து.
===================================
======================
மழலையெனும் மலர்....
======================
அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற நன்மழலைக்
கொஞ்சுமொழிக் கோலம்! கொடுமை யறியாத
பிஞ்சுமலர் பொக்கையிதழ் புன்சிரிப்பா லென்நெஞ்சில்
வஞ்சமிலா இன்னமிழ்தா(ம்) ஊற்று!

கொடியிற் சிரித்திடும் கொன்றையின் பூவாய்,
மடியில் முகிழ்ந்த மலரின் மணமாய்,
நொடியில் நமையே நுகர்ந்திட வைக்கும்
வடிவெழில் வாகை மலர்.

அன்னையர் தீட்டும் அழகொளிர் ஓவியமாய்க் 
கன்னற் சுவைசேர் கனிமொழிக் காவியமாய், 
விண்முகிற் கூட்டுநல் வேய்குழற் பாவெனக் 
கண்ணையே கட்டுங் கனவு.
==========================================
இராச. தியாகராசன்

பிகு:  வேய்குழல் = மூங்கிற் புல்லாங்குழல்

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே!...

முகநூலில் முதன்முதலாக நான் பகிர்ந்த பாடலிது. ஒருபஃது வெண்பா அந்தாதி மாலை....
=======================================


=======================================

அந்தியழகே பால்நிலாப் பெண்ணே... =====================================
இனிக்கின்ற பாட்டா மிழிகின்ற தேனாம்,
தனிந்தநறு முக்கனியின் சாறாம்! - பனித்துகளைப்
பெய்திடுமுன் பால்நிலவுப் பேச்சினிலே அன்றாடம்
பைங்கிளியே நான்பட்டேன் பாடு! (1)

பாடுகின்ற பாட்டினிலும் பச்சைமரக் காட்டினிலும்
தேடுகின்ற என்மனமுந் தேய்கிறதே! - ஆடும்
மயிலழகே! கூவுகின்ற மாங்குயிலே! சொல்வீர்
துயிலின்றி தேடுந் துடிப்பு! (2)

துடிக்கின்ற உள்ளத்தில் தோகையுனை யெண்ணி
அடிவானத் தீக்கனலா யாசை! - வடிக்கின்ற
கண்ணீர்த் துயரமெனுங் காட்டி லெனைப்புதைக்கும்
வெண்மணலாம் காதல் வெளி! (3)

வெளிர்நீல வான்முகிலும் வெந்தெரியப் பற்றும்
ஒளிரந்திப் போதே உரைப்பாய்! - கிளியவளின்
நேச மெனுந்தீயால் நீறாகிப் போனவென்
ஆசை மனத்தேடு தல்! (4)

அல்லியுன்றன் செவ்வாயின் அற்புதமாம் சொல்லமிழ்தோ
புல்லினிதழ்ப் பூம்பனியாய்ப் போனதடி! - சொல்வேன்நான்
காணுகின்ற காட்சிகளில் காலமெல்லாம் நீயென்னை
வாணுதலால் வாட்டும் வனப்பு! (5)

வனப்பென்னும் வாளால்நான் மாய்ந்த கதையை
வனைந்தேனே பாட்டின் வடிவில்! - மனமே
இரும்பாய் இருந்தாலே இன்பம் இசைவாய்
வருமோ இயம்பிடு வாய்? (6)

வாயா லொருசொல் வழங்கிடு வாயெனக்
காயாக் கனிக்கென காத்திருந்தேன்! - தீயால்
எனையே எரித்திட ஏனோ துடிக்கும்
உனையே விரும்பு முளம்! (7)

உளமயக்கப் பூச்சூடு மொண்டொடியே! என்னைத்
துளைக்கின்ற மோனமெனுஞ் சொல்லே! - பளிக்குச்
சிலையுனது கண்கள் சிலிர்த்தநொடி யுண்டேன்
நிலைவாழ்வுத் தேனமுத நீர்! (8)

நீரெல்லைத் தோற்றமாம் நீரந்திப் போன்றொளிரும்
வார்குழ லோவிய மங்கையே! - பேரெழில்
கொஞ்சிடும் கோதையுன் கோலமிவ் வேழையின்
நெஞ்சிலே பற்றும் நெருப்பு! (9)

நெருப்பிலே நெய்திட்ட நேரிழையுன் சொல்லில்
விருப்புடனே தீய்ந்தேனே விட்டில்! - சிரித்தெனையே
கொன்றுகுளிர் காய்ந்திடுங் கோதிழையே! என்வாழ்க்கை
இன்பமிலாத் தீயோ இனி? (10)
================================================== வேறு:
===== வளங்கள் விளங்க நிலத்தை நனைத்திடும் வான்மழையே!
தெளிந்த நிலவில் நினைவை மயக்கிடுந் தெண்டிரையே!
ஒளியா லுலகி னுயிர்கள் வளர்த்திடும் வெங்கதிரே!
தளிர்த்தே அழிந்த கனவைக் கவியெனச் சாற்றினனே!
இராச தியாகராசன்.