வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உழைப்போர் உயர்வு.

உழைப்போர் நாளுக்காய் என்றன் வரிகள். (அதிகரிணி வகையிலான கலிவிருத்தம் - அமைப்பு: புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி புளிமா)

================================================

================================================
உழைப்போர் உயர்வு...
(அதிகரிணி வகையிலான கலிவிருத்தம்.  அமைப்பு: புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமா.)

===============================================================
மலையும்பசுஞ் செடியும்நறு மலரும்கனி மரமும்,
சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்ப்பல கலையும்,
உலகிற்பெரு முயர்வும்விட உயர்வேயது நெருப்பின்,
உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே!

உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே,
பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;
வயிற்றுக்கரை யுணவுக்கிவர் மயக்கத்துடன் பணிந்தே,
வியர்த்தேயுடல் நனையத்தினம் வெயிலில்கிடந் தெரிவார்!

சமமாய்ப்பல ரருந்துங்கடை தனிலேயிவர் நுழைந்தால்,
குமுகத்தினி குறைவேயென  குரங்காயவர் குதிப்பார்;
இமையாவிழி யலைபோன்றினி எழவேயிவர் முனைந்தால்,
அமைதிக்கினி யழிவேயென அலறிக்குரல் கொடுப்பார்!

மரமேயுதிர் சருகாயிவர் வழியின்றனு தினமும்,
உரமேறிய உடலுந்தளர்ந் துழைத்தேயுளஞ் சலித்தால்,
புரட்சிப்புயர் குமுறப்பெரும் பொறியாய்வெடித் தெழுந்தால்,
சரிகைத்துகி லணிந்தப்புவி சழக்கர்செறுக் கழிவார்!

சடமாயினித் துயிலோமென தழைந்தோரவ ரெழுந்தால்,
இடக்காயினி வயற்சேற்றினி லிறங்கோமென நிமிர்ந்தால்,
அடுக்கில்நகர் வசிக்குந்நம தருமைச்சக மனிதர்,
படகும்நிகர் மகிழுந்திலே பவனித்தலும் நிலையோ?

கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம தெதிரில்,
தினமும்நமை யழிக்குங்கடுஞ் சினமாய்நம துணர்வில்,
அனலாய்க்கலந் துறையும்நினை விதுவேயென அறிவோம்;
மனிதம்வளர் நலமேதரும் வழிகள்தனில் வளர்வோம்!
===================================================\
இராச. தியாகராசன். 

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

பூக்கள் முட்களானால்....

 பூக்கள் பூக்களாகவே இல்லாமல், முட்களாகும் நிகழ்வும் நடப்பதுண்டு....
=========================================













=========================================
பூக்களின் நியதி பூவாய் மலர்ந்து,
ஊக்க மளித்திட உறுமணந் தருவதே!
முட்களின் கடமையோ முகிழ்ந்த மலர்களைக்
கட்டிக் காக்கும் காவல் வேலை!
தமிழின் தொன்மை; செம்மொழி வளமை;
அமிழ்தாம் இனிமை; எல்லாம் சரிதான்!

காக்க வேண்டியக் கன்னற் றமிழர்,
சாக்குப் போக்காய் சில்லரைத் தனமாய்,
செந்தமிழ் மொழியில் சிறந்த அறிவியல்,
விந்தைகள் சொல்லும் மின்னியல் நூல்கள்
இல்லையதனால் அயல்மொழி படிக்கச்
சொல்லும் கூற்றைத் தகர்த்திட வேண்டியே,

பாரதி வழியில் பன்னாட் டியலையும்,
வீரத் தமிழில் விளங்கப் பெயர்ப்போம்;
இறவாப் புகழுடை எளிய கணினிச்
சிறப்பைச் செந்தமிழ் மொழியிற் சொல்வோம்;
நமக்கு நாமே நற்றமிழ் மேன்மைச்
சுமக்கச் சுமக்கச் சொல்வதை விட்டு,

உலக மொழிகளில் அழகுறப் பெயர்த்து,
பலநாட் டறிஞரும் விரும்பிப் படிக்கக்
களித்தமிழ் நூல்களை ஒளித்தக டாக்கி,
உலக மெங்கும் ஊர்வலம் விடுவோம்;
மலர்ந்த தமிழை வாகாய் நாளுமே,
வலம்வருந் தமிழரும் வளர்க்க மறந்தால், 

முகிழ்ந்த தமிழும் முள்ளாய் மாறும்;
மகிழ்வாம் வாழ்வும் மண்ணில் புதையும்;
இருப்பைக் காட்டும் என்றமிழ் அழிந்தால்,
இருக்க இடமும் இன்றியே வீழ்வோம்;
காக்கும் முள்ளும் கடமை மறந்தால்,
பூக்கள் முள்ளாய்ப் போவதும் சரியே!
==========================================
இராச. தியாகராசன்

கதை கேளு, கதை கேளு....

கதை கேளு,  கதை கேளு,  மங்கையின் வாழ்வியற் கதை கேளு.  

============================================








============================================
வானக மெழுந்தே வையகம் எங்கும்
மோனத் தீயென முடிவிலா தியங்கும்
கூனற் பிறையின் கோதறு சோதியாம்
வாணுதல் நங்கையின் வாழ்வியற் கதையிது!

சொந்தமும் நட்பும் சேர்ந்தே நாற்புறம்
பந்தமாய் அலசியே நாளும் கோளும்
குறைவறப் பார்த்து, குவலயம் போற்ற,
நிறைவாய்ச் செய்த நல்லதோர்த் திருமணம்!

மணமகன் என்னவோ மயக்கும் அழகனே;
குணமகள்  அவளும் குறைவிலா அழகியே!
கணத்திலே கரைந்தது காலச் செல்வமும்;
குணவதி ஈன்றாள் கொஞ்சுங் குழந்தை!

ஆணுக் கியற்கை ஆழமாய்ப் பொதித்த,
கோணல் மரபணு குரங்கெனக் குதிக்க,
வண்டென வேறோர் வளையல் தேடினான்;
சண்டைகள் நாளுமே சட்டமாய் ஆனது!

உடுத்தும் உடையென ஒவ்வொரு நாளும்,
குடும்ப மென்பதில் கூடலும் ஊடலும்
மாறியே வருவது வழக்கமே எனினும்
வேறோர் மங்கையும் விதியை எண்ணியே,

தேறா திதுவென தயங்கியே கிடப்பார்;
ஆறா தடங்கா ஆண்மகன் அடத்தினை
பாரதி சொன்னவென் பாட்டுத் தலைவியோ
தேரா திதுவெனச் சீறியே எழுந்தாள்!

சூழ்ந்திடு மிருளாந் துயரெண் ணாது,
வாழ்வியல் மன்றிலே வழக்குந் தொடர்ந்தாள்;
கைவிரல் நெறித்துக் காலங் கடக்க,
மைவிழி மங்கை வாடும் நிலைபோய்,

கூர்மை வாணுதல் கொஞ்சும் பூவையர்,
ஆர்க்கும் புலியென அனலென எழுகையில்,
புரண்டிப் புவியகம் பொலிவுடன் பொய்த்துயில்
விரட்டிப் பூக்களை விரிக்குமே அவர்வழி!
==============================================
இராச. தியாகராசன்.

பிகு: கோணல் மரபணு என்று நான் குறித்ததன் கரணியம்.  உலகம் தொடங்கி இன்றுவரை தனக்கோர் வாரிசு வேண்டுமென்ற இயல்பூக்கமே ஆண் உயிரினம் பெண்ணைத் தேடச் சொல்கிறது.  அதுவே அந்த மரபணுதான், தக்கது வாழும் (survival of the fittest)  என்கிற டார்வினின் கோட்பாட்டுக்கு அடிப்படை.