ஞாயிறு, 31 ஜனவரி, 2021

பொடியேதும் உண்டோ?

வாழ்வியல், உலகியல், நிகழ்வுகள் ஒரு படைப்பாளியின் நெஞ்சகத்தையோர் வாளியாய் உட்போந்து உறுத்துவதால், அவனின் எண்ணங்கள் கடையப்பட்டு, கவிதையென்றும், கதையென்றும் எதையோ வனைகிறான். கவிஞர்க்கு வேறு வேலையே இல்லை!  சாவுக்கும் எழுதுவார்;  வாழ்வுக்கும் எழுதுவார்; என்பார்க்கு என்னுடைய விடை.....  

பொடியேதும் உண்டோ.....
(கட்டளைக் கலித்துறை)
=========================










======================================================
கனவை விதைக்குங் குயில்களைத் தீய்க்கும் கயமைகளே!
சினத்தில் மனிதம் சிதைத்தே சிரிக்கும் சழக்குகளே!
மனத்தில் உறவும் உணர்வும் இலையோ மனிதருக்கு?
மனிதம் மறைந்தால் மதமும் உயர்ந்து வளர்ந்திடுமோ?

எளிதில் கிடைக்கும் பொருளே எவர்க்கு மினிப்பதில்லை;
சுளுவி லமையும் பெருமை யதுவே சுவைப்பதில்லை;
தெளிந்த வெளுப்பி னுடையா லுளமே தெரிவதில்லை;
நெளிந்த நினைவே உரைக்கும் நிழல்கள் நிலைப்பதில்லை;

கரிக்கும் கசடும், கருப்பும் கழுவக் கரைந்துவிடும்;
எரிக்கு மழலி னனலும் அவிந்தே அணைந்துவிடும்;
மரிக்கும் நிசத்தை மறந்தே அலையும் மனிதரிடை 
சிரித்தே மலரைச் சிதைக்கும் சழக்கர் திருந்தவிலை!

அணியு முடைகள் கருப்பென வாகி யழுக்கடைந்தால்;
துணிகள் வெளுக்கும் பொடியது கொண்டே துவைத்திடலாம்!
பிணியென நெஞ்சம் கறுப்பென வாகிப் பிழைநிறைந்தால்
புனிதப் படுத்தப் பொடியே துமுண்டோ புவியினிலே?
=========================================================
இராச. தியாகராசன்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

அறம்வளர்ந் தார்க்குமே அன்பு

திருவாதிரைத் திருநாளில், அச்சீர்காழி அத்தன் மீதில் நான் வனைந்த ஒரு பஃது வெண்பா அந்தாதி
============================== 

          











=============================
அறம்வளர்ந் தார்க்குமே அன்பு
=============================
வீணர்தம் வெற்றுச்சொல் வீச்சறவே வல்லவரும்
நீணிலத்தில் நாடோறும் நேர்மையினை! - தூணிற்
பிறந்தவெம் சீயமால் போன்றிங்கே காக்க,
அறம்வளர்ந் தார்க்குமே யன்பு.1

அன்பெனும் அற்புத ஆடகம் நாடாது
வன்மமும் தேடுதல் வாழ்வாமோ? - கன்னலாய்
வாக்குரைக்க வைக்குமென் வாதவூர் ஈசனே
ஆக்கும் அருளுருவில் ஆள்.2

ஆளும் சிலபேர்க் கடுத்தவரின் வாழ்வினையே 
மாளத் தீய்த்தல் மகிழ்வென்றால் -  நாளும்
தடுத்தவரை காக்குமெங்கள் சாம்பசிவா; தீயவரின்
இடிப்பொடியச் செய்வாய் இனி!3

இனிக்குஞ் சுவையிருக்க இல்லா இலவங்
கனியை விழைவதுவோ காதல்? - மனிதருக்
கிந்நாளில் ஆறறி வேய்க்கு மினக்கவர்ச்சி
எந்நாளும் வீணென் றியம்பு.4

இயம்புகிறார் இல்லையென்(று) எத்தனையோ ஏட்டில்:
மயங்குமுளம் நிச்சயமாய் மாறிச் -  சுயம்புவென
அன்னவனை காணும் அற்புதத்தைப் பெற்றவர்கள்  
புன்மைகளை மாய்ப்பார் பொருது.5

பொருதல் பிழைத்தல் பொறுத்தல் பெறுதல்
உரைத்தல் உறுத்தல் உறைதல் - உறங்கல்
பழித்தலிவை தாண்டி, பனிச்சிவமே நம்மை
எழுச்சியுறத் தூண்டும் இசை.6

இசையை, ஏழிலார் இயற்கை வனப்பை,
புசியும் அற்புதப் பொருளாய் - புசிக்கும்
உள்ளமே ஊத்தையை, ஊழ்க்கும் ஊழலை
விள்ளுதல் என்னே வியப்பு.7

வியக்கப் பழகி, விரும்பி வெறுத்து,
மயக்கம் தெளிந்த மனத்தில் - தயக்கம்
அகழ்ந்து தன்னை அறியும் உணர்வில்
மகிழ்தல் இறைநிலை மாண்பு.8

மாண்புகள் ஈதென மாந்தர்கள் நாளுமே
பூண்டவை நூறாம் புந்தியில் - ஆண்டவன்
உண்டென  உன்னில் உணர்தலே மெய்யெனும்
எண்ணக் கருத்தில் இரு. 9

இருந்திறக்கு முன்றன்  இலையுதிர் வாழ்வில்
மருந்தென மாந்தர்க்கு மகிழ்ச்சி - தருவதன்றி
கூடிப்போ தழிக்கவே கூட்டமாய்ச் சுற்றிடும்
வேடிக்கை யாவுமே வீண்.10
============================================
இராச. தியாகராசன்

வேறு:
======
எந்தை யின்றிங் களிக்குந் தெளிவா 
....லென்னி லுறைந்தாடும்
பந்த மென்னும் வலையு மறுந்து 
....பக்தி யெழுந்தோங்க,
புந்தி யாளும் பிழைகள் யாவும் 
....பொள்ளிப் பொசுங்காதோ,
சிந்தை மேவும் முக்கண் ணவனின் 
....செங்கண் ணருளாலே!

ஆரடிச்சா அஞ்சனமே.........

நாட்டுப்புறத் தாலாட்டின்பம்....









ஆரடிச்சா அஞ்சனமே? 

======================
ஆரடிச்சா அஞ்சனமே? 
அழலாமோ ஆரமுதே?
===================
அலரிப்பூ ராசாத்தி;
அரும்புன ரோசாப்பூ;
அப்பாவும் வருவாரு;
அச்சுப்பூப் பொட்டோட!                          (ஆரடிச்சா)

சங்குப்பூ ராசாத்தி;
தங்கரளிப் பூவாயி;  
தாத்தனும் வருவாரு;
தாமரைப்பூ மொட்டோட!                       (ஆரடிச்சா)

பவளமல்லி ராசாத்தி; 
பளபளங்கும் பவுனாயி; 
பாட்டியும் வந்திருவா;
பைநெறைய துட்டோட!                          (ஆரடிச்சா)

சரக்கொன்ன ராசாத்தி; 
சலிக்காத சந்தனமே; 
சின்னம்மா வந்திருவா; 
செங்கரும்புக் கட்டோட!                         (ஆரடிச்சா)

பிச்சிப்பூ ராசாத்தி; 
பேரழகுச் சீமாட்டி; 
பெரியம்மா வந்திருவா; 
பெருமேளக் கொட்டோட!                        (ஆரடிச்சா)

அடுக்குப்பூ ராசாத்தி; 
அரமண அஞ்சுகமே; 
அத்தையும் வந்திருவா; 
அதிரச வட்டோட!                                       (ஆரடிச்சா)

மருக்கொழுந்து ராசாத்தி; 
மருதாணிச் செம்பூவே; 
மாமியும் வந்திருவா; 
மரப்பாச்சிச் செட்டோட!                           (ஆரடிச்சா)

மஞ்சப்பூ ராசாத்தி; 
மருதமல மாமயிலே; 
மாமனும் வருவாரு; 
மலையாளப் புட்டோட!                             (ஆரடிச்சா)

செவ்வரத்த ராசாத்தி; 
சேலத்து மாம்பழமே; 
சின்னக்கா வந்திருவா; 
சீனிமுட்டாய் லட்டோட!                           (ஆரடிச்சா)

மல்லிகப்பூ ராசாத்தி; 
மாந்தோப்பு மைனாவே; 
மச்சானும் வருவாரு; 
வரிசப்பைத் தட்டோட!                             (ஆரடிச்சா)

செங்கமல ராசாத்தி; 
சிரிச்சாடுஞ் சிங்காரி; 
சின்னண்ணா வந்திருவான்; 
சிங்கப்பூர் பட்டோட!                                 (ஆரடிச்சா)
===========================================
இராச. தியாகராசன்

பிகு:
====
அஞ்சனம் - கண்-மை, அச்சுப்பூ பொட்டு - பொட்டச்சு, 
பைநிறைய துட்டு - சுருக்குப்பை துட்டு, வட்டு - தட்டு, 
மரப்பாச்சிச் செட்டு - மரப்பதுமை செட்டு,