இன்றைக்கு, ஏழைகளின் ஏந்தல், பொதுமையார்வலர், அன்பின் திரு இரா. நல்லக்கண்ணு புவியில் உதித்த நாள். சொத்து/ பதவி/ பட்டம்/ எதற்கும் மயங்காமல், காந்தியண்ணலைப் போலவே எளிமையுடன் வாழ்த்திருக்கும் அந்நல்லவரின் பிறந்தநாளில், இந்தச் சிறிய பாவலன் வாழ்த்துரைக்கிறேன்.
=====================================
=====================================
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...
=====================================
குன்றிலிட்ட விளக்கெனவே கொள்கைக்காய் எந்நாளும்,
இன்றுலகில் வாழுமெங்கள் ஏந்தலே! - என்றும்உம்
பண்பதுவால் நீவிரிங்கு பாரதத்தை ஆள்கவென,
ஒண்மைமிகு வண்ணஞ்சேர் ஒண்டமிழில் வாழ்த்துகிறேன்.
பற்றில்லா(து) இன்றேழை பாழைகட்காய் முன்நிற்கும்
பொற்பின் பொதுவுடமைப் போர்வேந்தே! - வற்றா
வளங்களுடன் என்று முயர்கவென இற்றைக்(கு)
இளமையொடு நின்றிலங்கும் எந்தமிழில் வாழ்த்துகிறேன்.
செந்தமிழிற் சொல்லெடுத்துச் சீரசையைச் சேர்த்தடுக்கிச்
சிந்துகவி நான்செய்தல் சீரெனினும் - நொந்தவர்க்காய்ச்
சுற்றிச் சுழன்றிங்கே தொண்டாற்றுந் தூயவரே;
குற்றமிலா நும்பொதுமைக் கொள்கைக்காய் வாழ்த்துகிறேன்.
பீடுறையும் கொள்கையின் பேரிலங்கும் ஆர்வலரே;
பாடுறும் ஏழைகட்காய் பங்கெடுத்தோய்! - நீடுபுகழ்
யாவையுமே உம்மிடத்தில் ஈண்டுலகில் சேர்ந்திடத்தான்
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்.
===========================================
இராச தியாகராசன்
பிகு:
===
ஏந்தல் - புகழுக்குரியோர், ஒண்மை - ஒளிர்வு,
ஏழைபாழை - ஏழ்மையிலுழலும் தாழ்வுற்றோர்,
பொற்பு - சிறப்பு, இலங்குதல் - தனிப்பட நிற்றல்,
பீடு - புகழ், பாடுறும் - துன்பமுறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக