திங்கள், 12 பிப்ரவரி, 2024

கவிதையெனக் கோக்கின்றாய்...

என்றன் நெஞ்சகத்தின் தவிசமர்ந்து, காலமெலாம், கருவுதித்தச் சிந்தனையின் கனவுகளைச் சொல்லடுக்கிக்  கவிதையென எழுதியிறைக்கின்ற.....

மந்திரமாய் வித்தகியின் வினோதங்கள்; 
தந்திரமாய்ச் சித்திரத்துச் சாலக்குகள்;  
ஓவியமாய் உத்திரத்து நூல்வலைகள்; 
காவியமாய் கதலிச்சுவை கயல்விழிகள்;   எத்தனையெத்தனையோ.....
==============================
==============================
கவிதையெனக் கோக்கின்றாய்..
==============================
சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல் சிதையாமல்,
பித்தன்புத் தூரிகையாற் றீட்டுகின்ற ஓவியம்போல்,
புத்தமுதப் பொன்னணங்கே புதுமையெனப் புந்தியில்நீ,
எத்தனையோ கவிதைகளை எழுதிவைத்துப்  பார்க்கின்றாய்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறுகின்ற நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள், 
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் துளைக்கையிலே,
உதயமான உணர்வுகளை உருக்கிவரிச் சேர்க்கின்றாய்!

அள்ளிமனங் கொள்ளையிடும் அமுதமழை சாற்றைப்போல்,
வெள்ளிமலை மேல்விளைந்த விண்ணருவி  ஆற்றைப்போல், 
துள்ளுகின்ற பூச்சியென தோன்றியுள்ளே ஆடுகின்ற,
புள்ளியெழிற் கோலமனை பொங்கும்பா  வார்க்கின்றாய்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில் 
மனத்துள்ளே மானுடத்தின் மயக்கங்கள் மருகிநிதம்
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காருளத்தில் 
கனவுகளைக் கார்காலக் கவிதையெனக் கோக்கின்றாய்!
  
வையகமும் மானுடமும் வாழ்நாளில் உய்த்துமனம்
துய்த்துணர வேண்டியதைத் துல்லியமாய்த் தூய்மையெனும்
மெய்யான மெய்யதனை மிளிர்கின்றப் பாவடிவில்,
செய்யவைத்தே கவிஞனெனைச் சீர்த்தியுடன் காக்கின்றாய்!
=====================================
இராச. தியாகராசன்

பிகு:
====
தவிசு = மணைப்பலகை, பொன்னணங்கு = தங்கம் போன்ற பெண், புந்தி = அறிவு, சீர்த்தி = கீர்த்தி/புகழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக