திங்கள், 3 நவம்பர், 2014

வீரத்தாயின் வித்துகளே.....

16.05.2012 அன்று இரவு உள்ளத்தில் பொங்கிய எண்ணவலைகளை எழுத்தில் கொணர முயன்றிருக்கிறேன். முழுவதும் இயலவில்லை என்றே உணர்கிறேன்.

=========================================
வீரத்தாயின் வித்துகளே (கொச்சகக் கலிப்பா)
=========================================











=========================================

இன்றெதிரே காணுகின்ற ஈனத்தைக் கருக்கிவிட
என்னினமே எழுச்சியுடன் எந்நாளும் இருக்கட்டும்;
துன்பத்தைத் துயரத்தைச் சோர்வின்றித் துடிப்புடனே
முன்னின்று முடிப்பதற்கு முனைப்புடனே முழங்கட்டும்!
 
அழிக்கின்றார்; அறுக்கின்றார்; அடியோடு அருந்தமிழைக்
குழிபறித்துக் கொல்கின்றார் கொடியவரின் கூட்டத்தார்!
செழிப்புடனே செந்தமிழும் செகத்தினிலே சிறந்திருக்க
விழிப்புடனே வெல்லுங்கள் வீரத்தாய் வித்துகளே!
 
மரிக்கின்ற எம்மினத்தின் மகத்தான பிடிசாம்பல்
இருக்கின்ற எந்தமிழை எருவாகித் தாங்கட்டும்;
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிக்கின்ற எரிதழலை எம்மிளையர் ஏந்தட்டும்!
 
வாளெடுக்கும் மன்னனில்லை; வேலெடுக்கும் வேந்தனில்லை;
தாளெடுத்துத் தீந்தாவால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு,
நாளுனக்கு குறிக்கின்ற நரிக்கூட்டம் தானோட,
தோளெடுத்துத் துடிப்புடனே துவளாமல் எழுகவென்றே!

=========================================

தீந்தா = எழுதுமசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக