திங்கள், 25 நவம்பர், 2019

ஏது......

ஏது, ஏது, ஏதென்று வெடிக்கும் வினாக்கள் ஆயிரமாய் எழுந்தென்னில் குளத்தின் மீதூரும் நீரலை வட்டங்களாய், சிறார் ஊதி மகிழ்கின்ற வழலைக் குமிழ்களாய் அலைபாயும் கணங்கள்....
=================================


=================================

தூக்க மில்லாமல் கனவு மேது?
ஏக்க மில்லாமல் நினைவு மேது?
ஊக்க மில்லாமல் உயர்வு மேது?
வாக்கு மில்லாமல் வரியு மேது?

முகிலு மில்லாமல் விசும்பு மேது?
சிகர மில்லாமல் மலையு மேது?
பகலு மில்லாம லிரவு மேது?
நகுத லில்லாமல் மகிழ்வு மேது?

தென்ற லில்லாமல் காவு மேது?
அன்பு மில்லாமல் தாயு மேது?
உணர்வு மில்லாமல் கவிதை யேது?
உணவு மில்லாம லுலக மேது?

கூட லில்லாம லூட லேது?
ஊட லில்லாமல் காத லேது?
தேட லில்லாமல் தேச மேது?
வாட லில்லாமல் வாச மேது?

தூசு மில்லாமல் மண்ணு மேது?
ஆசை யில்லாம லெண்ண மேது?
பண்ணு மில்லாமல் பாட்டு மேது?
வண்ண மில்லாமல் காட்சி யேது?

ஆவ லில்லாம லவனி யேது?
கூவ லில்லாமல் குயிலு மேது?
சாவு மில்லாமல் வாழ்வு மேது?
தூவ லில்லாமல் தூர லேது?

தறியு மில்லாமல் நெசவு மேது?
சிறகு மில்லாமல் குருகு மேது?
நறவு மில்லாமல் மலரு மேது?
உறவு மில்லாமல் பருவ மேது?

கர்வ மில்லாமல் கவியு மேது?
தர்ம மில்லாமல் புவியு மேது?
சர்வ மில்லாமல் சக்தி யேது?
மர்ம மில்லாமல் புத்தி யேது?

கற்ற லில்லாமல் கல்வி யேது?
பற்று மில்லாமல் பாச மேது?
இறையு மில்லாம லறித லேது?
அறித லில்லாம லகில மேது?
==============================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக