வியாழன், 14 நவம்பர், 2019

ஜவகருன்னைப் போற்றுவனே.....

2019ஆம் ஆண்டு மழலையர் நாளுக்கென்றன் வரிகள்...

===========================================



===========================================

விந்தைமிகு தாய்நாட்டின் உயர்வே நாளும்
.....மேன்மையுறு உழவர்தம் வாழ்வே என்று,
சிந்தையிலே உணர்ந்ததனால் தானே அன்று
.....தெளிவான விதியதற்கே வகுத்து யர்ந்தாய்;
முந்தியிங்கு வேளாண்மை செய்வோர் வாழ்ந்தால்
.....முறைசார்ந்த தொழில்துறையும் உயரும் என்றாய்;
அந்திமத்துத் துயர்களையும் விரட்டு தற்கே
....அகவைசென்ற முதியோர்க்கும் சட்டந் தந்தாய்!

மாட்சிமையாய் வையகத்தில் வாழ்வ தற்கே
.....வாழ்வியலின் ஐந்தென்னும் அறத்தை யிங்கே
ஆட்சிமுறைத் தத்துவமாய் புவிக்க ளித்தே
.....ஆளுகின்ற போதவனி போற்ற வாழ்ந்தாய்;
கூட்டுறவும் கல்வியதும் கொள்கை யென்றே
.....குறைவில்லா ஐந்தாண்டுத் திட்டந் தீட்டி,
நாட்டுயர்வே உனதுளத்து நாத மென்னும்
.....நல்லறத்தால் நல்லவரின் உள்ளம் வென்றாய்!

உள்ளாரும் ஒண்டமிழில் உள்ளம் தோய்ந்தே,
.....உயர்தழகாய் மின்னுகின்ற உணர்வை ஆய்ந்தே,
துள்ளாட்டம் போடுகின்ற எண்ணம் மீட்டி,
.....சுகந்தமலர் சிந்துகின்ற வண்ணங் கூட்டி,
தெள்ளுதமிழ்க் கன்னலதன் வரிகள் பெய்து,
.....சித்திரம்போல் அலங்கலெனக் கவிதை நெய்து,
கள்ளாரும் செம்மலரை விரும்பி யேற்ற,
.....கனியுளத்து சவகருன்னைப் போற்று வேனே!
=========================================
இராச. தியாகராசன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக