ஞாயிறு, 31 ஜனவரி, 2021

பொடியேதும் உண்டோ?

வாழ்வியல், உலகியல், நிகழ்வுகள் ஒரு படைப்பாளியின் நெஞ்சகத்தையோர் வாளியாய் உட்போந்து உறுத்துவதால், அவனின் எண்ணங்கள் கடையப்பட்டு, கவிதையென்றும், கதையென்றும் எதையோ வனைகிறான். கவிஞர்க்கு வேறு வேலையே இல்லை!  சாவுக்கும் எழுதுவார்;  வாழ்வுக்கும் எழுதுவார்; என்பார்க்கு என்னுடைய விடை.....  

பொடியேதும் உண்டோ.....
(கட்டளைக் கலித்துறை)
=========================










======================================================
கனவை விதைக்குங் குயில்களைத் தீய்க்கும் கயமைகளே!
சினத்தில் மனிதம் சிதைத்தே சிரிக்கும் சழக்குகளே!
மனத்தில் உறவும் உணர்வும் இலையோ மனிதருக்கு?
மனிதம் மறைந்தால் மதமும் உயர்ந்து வளர்ந்திடுமோ?

எளிதில் கிடைக்கும் பொருளே எவர்க்கு மினிப்பதில்லை;
சுளுவி லமையும் பெருமை யதுவே சுவைப்பதில்லை;
தெளிந்த வெளுப்பி னுடையா லுளமே தெரிவதில்லை;
நெளிந்த நினைவே உரைக்கும் நிழல்கள் நிலைப்பதில்லை;

கரிக்கும் கசடும், கருப்பும் கழுவக் கரைந்துவிடும்;
எரிக்கு மழலி னனலும் அவிந்தே அணைந்துவிடும்;
மரிக்கும் நிசத்தை மறந்தே அலையும் மனிதரிடை 
சிரித்தே மலரைச் சிதைக்கும் சழக்கர் திருந்தவிலை!

அணியு முடைகள் கருப்பென வாகி யழுக்கடைந்தால்;
துணிகள் வெளுக்கும் பொடியது கொண்டே துவைத்திடலாம்!
பிணியென நெஞ்சம் கறுப்பென வாகிப் பிழைநிறைந்தால்
புனிதப் படுத்தப் பொடியே துமுண்டோ புவியினிலே?
=========================================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக