வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உழைப்போர் உயர்வு.

உழைப்போர் நாளுக்காய் என்றன் வரிகள். (அதிகரிணி வகையிலான கலிவிருத்தம் - அமைப்பு: புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி புளிமா)

================================================

================================================
உழைப்போர் உயர்வு...
(அதிகரிணி வகையிலான கலிவிருத்தம்.  அமைப்பு: புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமா.)

===============================================================
மலையும்பசுஞ் செடியும்நறு மலரும்கனி மரமும்,
சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்ப்பல கலையும்,
உலகிற்பெரு முயர்வும்விட உயர்வேயது நெருப்பின்,
உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே!

உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே,
பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;
வயிற்றுக்கரை யுணவுக்கிவர் மயக்கத்துடன் பணிந்தே,
வியர்த்தேயுடல் நனையத்தினம் வெயிலில்கிடந் தெரிவார்!

சமமாய்ப்பல ரருந்துங்கடை தனிலேயிவர் நுழைந்தால்,
குமுகத்தினி குறைவேயென  குரங்காயவர் குதிப்பார்;
இமையாவிழி யலைபோன்றினி எழவேயிவர் முனைந்தால்,
அமைதிக்கினி யழிவேயென அலறிக்குரல் கொடுப்பார்!

மரமேயுதிர் சருகாயிவர் வழியின்றனு தினமும்,
உரமேறிய உடலுந்தளர்ந் துழைத்தேயுளஞ் சலித்தால்,
புரட்சிப்புயர் குமுறப்பெரும் பொறியாய்வெடித் தெழுந்தால்,
சரிகைத்துகி லணிந்தப்புவி சழக்கர்செறுக் கழிவார்!

சடமாயினித் துயிலோமென தழைந்தோரவ ரெழுந்தால்,
இடக்காயினி வயற்சேற்றினி லிறங்கோமென நிமிர்ந்தால்,
அடுக்கில்நகர் வசிக்குந்நம தருமைச்சக மனிதர்,
படகும்நிகர் மகிழுந்திலே பவனித்தலும் நிலையோ?

கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம தெதிரில்,
தினமும்நமை யழிக்குங்கடுஞ் சினமாய்நம துணர்வில்,
அனலாய்க்கலந் துறையும்நினை விதுவேயென அறிவோம்;
மனிதம்வளர் நலமேதரும் வழிகள்தனில் வளர்வோம்!
===================================================\
இராச. தியாகராசன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக