வெள்ளி, 2 ஏப்ரல், 2021

பூக்கள் முட்களானால்....

 பூக்கள் பூக்களாகவே இல்லாமல், முட்களாகும் நிகழ்வும் நடப்பதுண்டு....
=========================================













=========================================
பூக்களின் நியதி பூவாய் மலர்ந்து,
ஊக்க மளித்திட உறுமணந் தருவதே!
முட்களின் கடமையோ முகிழ்ந்த மலர்களைக்
கட்டிக் காக்கும் காவல் வேலை!
தமிழின் தொன்மை; செம்மொழி வளமை;
அமிழ்தாம் இனிமை; எல்லாம் சரிதான்!

காக்க வேண்டியக் கன்னற் றமிழர்,
சாக்குப் போக்காய் சில்லரைத் தனமாய்,
செந்தமிழ் மொழியில் சிறந்த அறிவியல்,
விந்தைகள் சொல்லும் மின்னியல் நூல்கள்
இல்லையதனால் அயல்மொழி படிக்கச்
சொல்லும் கூற்றைத் தகர்த்திட வேண்டியே,

பாரதி வழியில் பன்னாட் டியலையும்,
வீரத் தமிழில் விளங்கப் பெயர்ப்போம்;
இறவாப் புகழுடை எளிய கணினிச்
சிறப்பைச் செந்தமிழ் மொழியிற் சொல்வோம்;
நமக்கு நாமே நற்றமிழ் மேன்மைச்
சுமக்கச் சுமக்கச் சொல்வதை விட்டு,

உலக மொழிகளில் அழகுறப் பெயர்த்து,
பலநாட் டறிஞரும் விரும்பிப் படிக்கக்
களித்தமிழ் நூல்களை ஒளித்தக டாக்கி,
உலக மெங்கும் ஊர்வலம் விடுவோம்;
மலர்ந்த தமிழை வாகாய் நாளுமே,
வலம்வருந் தமிழரும் வளர்க்க மறந்தால், 

முகிழ்ந்த தமிழும் முள்ளாய் மாறும்;
மகிழ்வாம் வாழ்வும் மண்ணில் புதையும்;
இருப்பைக் காட்டும் என்றமிழ் அழிந்தால்,
இருக்க இடமும் இன்றியே வீழ்வோம்;
காக்கும் முள்ளும் கடமை மறந்தால்,
பூக்கள் முள்ளாய்ப் போவதும் சரியே!
==========================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக