வெள்ளி, 2 ஏப்ரல், 2021

கதை கேளு, கதை கேளு....

கதை கேளு,  கதை கேளு,  மங்கையின் வாழ்வியற் கதை கேளு.  

============================================








============================================
வானக மெழுந்தே வையகம் எங்கும்
மோனத் தீயென முடிவிலா தியங்கும்
கூனற் பிறையின் கோதறு சோதியாம்
வாணுதல் நங்கையின் வாழ்வியற் கதையிது!

சொந்தமும் நட்பும் சேர்ந்தே நாற்புறம்
பந்தமாய் அலசியே நாளும் கோளும்
குறைவறப் பார்த்து, குவலயம் போற்ற,
நிறைவாய்ச் செய்த நல்லதோர்த் திருமணம்!

மணமகன் என்னவோ மயக்கும் அழகனே;
குணமகள்  அவளும் குறைவிலா அழகியே!
கணத்திலே கரைந்தது காலச் செல்வமும்;
குணவதி ஈன்றாள் கொஞ்சுங் குழந்தை!

ஆணுக் கியற்கை ஆழமாய்ப் பொதித்த,
கோணல் மரபணு குரங்கெனக் குதிக்க,
வண்டென வேறோர் வளையல் தேடினான்;
சண்டைகள் நாளுமே சட்டமாய் ஆனது!

உடுத்தும் உடையென ஒவ்வொரு நாளும்,
குடும்ப மென்பதில் கூடலும் ஊடலும்
மாறியே வருவது வழக்கமே எனினும்
வேறோர் மங்கையும் விதியை எண்ணியே,

தேறா திதுவென தயங்கியே கிடப்பார்;
ஆறா தடங்கா ஆண்மகன் அடத்தினை
பாரதி சொன்னவென் பாட்டுத் தலைவியோ
தேரா திதுவெனச் சீறியே எழுந்தாள்!

சூழ்ந்திடு மிருளாந் துயரெண் ணாது,
வாழ்வியல் மன்றிலே வழக்குந் தொடர்ந்தாள்;
கைவிரல் நெறித்துக் காலங் கடக்க,
மைவிழி மங்கை வாடும் நிலைபோய்,

கூர்மை வாணுதல் கொஞ்சும் பூவையர்,
ஆர்க்கும் புலியென அனலென எழுகையில்,
புரண்டிப் புவியகம் பொலிவுடன் பொய்த்துயில்
விரட்டிப் பூக்களை விரிக்குமே அவர்வழி!
==============================================
இராச. தியாகராசன்.

பிகு: கோணல் மரபணு என்று நான் குறித்ததன் கரணியம்.  உலகம் தொடங்கி இன்றுவரை தனக்கோர் வாரிசு வேண்டுமென்ற இயல்பூக்கமே ஆண் உயிரினம் பெண்ணைத் தேடச் சொல்கிறது.  அதுவே அந்த மரபணுதான், தக்கது வாழும் (survival of the fittest)  என்கிற டார்வினின் கோட்பாட்டுக்கு அடிப்படை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக