சனி, 1 ஏப்ரல், 2023

நூற்கடல் திரு தி.வே.கோபாலய்யர்...

காவிரிக்கரையில் திரு வேங்கட்டராமன், திருமதி இலக்குமியம்மாள் ஆகியோர்க்கு நல்மகனாய் பிறந்தவர், மாந்தக்கணினி, நூற்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட திரு தி.வே.கோபாலய்யர்.  அவர் வாழ்ந்த காலத்தில், அவருடன் அளவளாவி, என்றன் இலக்கண ஐயம் பலவற்றை அகற்றி, நான் தெளிவு பெற்றிருக்கிறேன்.  அவருடைய 26 ஆண்டுகால உழைப்பில் உருவான18 தொகுப்புகள் கொண்ட, "பேரிலக்கண அகராதி," தானெனக்கு இற்றைக்கும் என் இலக்கண ஐயங்களைக் களைய உதவுகிறது.

==================================

==================================
நூற்கடல் தி.வே.கோ.
====================
நல்வேங்க டத்தவனின்* நற்றிருவின்* நெஞ்சினிக்கச்
செல்வச்சீ ரென்றேதி வேகோபா லய்யரவர்,
பல்கலையின் நூற்கடலாய்ப் பன்னாடு மேத்திடவே
நெல்மணக்குங் காவிரியின் நீர்க்கரையிற் றான்பிறந்தார்!
 
** சீவகப்பெ ருங்கதையுஞ் சேனாவ ரைய்யமுடன்,
     தேவாரம், கம்பரசம் தேந்தமிழி லக்கணங்கள், 
     நாவார நாம்படிக்க நாலாயி ரத்தின்நற்
     பாவுரையும் பைந்தமிழில் பாங்காகத் தான்தந்தார்!

நேயப்பா வாணரவர் நீணிலத்திற் றந்துவிட்ட
தூயதமிழ்ப் பேரகரா திக்கிணையாய் நம்மவரும்
ஆய்ந்தறிந்தி லக்கணத்திற் கற்புதத்தொ குப்பதனை
தோய்ந்தறிந்து தந்ததமிழ்த் தொண்டு!
=======================================
இராச தியாகராசன்

பிகு: 
===
*வேங்கடத்தவன்:     தந்தை பெயர்: வேங்கட்டராமன்.
*நற்றிரு                   :     தாயின் பெயர்: இலக்குமி அம்மாள்.
**நூற்கடல் தி.வே. கோபாலய்யர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு    
    கொடுத்துள்ளேன் பாடலில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக