புதன், 18 அக்டோபர், 2023

பெண்டிரின் உண்மை உயர்வு...

எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்!  எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்?  வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்! 

காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும்  கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி;  இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை.  இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள்.  கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள்.  வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.

===========================================

===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென, 
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத் 
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக் 
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!

மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்; 
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும் 
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்

சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில், 
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும், 
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!

கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து; 
விற்பனைக் கல்லவ் விளைந்திடும் முத்து! 
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை 
மூழ்கித் தேடி முனையும் போதிலே,

சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில், 
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்! 
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில், 
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!

நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க் 
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப் 
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில், 
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்! 
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர் 
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!

பல்சுவை யுணவால், பல்வகை யணியால், 
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ? 
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும் 
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.

பிகு:
=====
நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல், முத்துக் குளித்தல் (பரதவர் மீனவர் எனில், நுளையர் முத்துக் குளிப்பவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக