வெள்ளி, 15 ஏப்ரல், 2022

கவிதை வேட்டு (கலிவெண்பா)...

 எது கவிதையென எவரே அறிவார்.....
========================












========================
கவிதை வேட்டு..
========================
குதப்பிக் குழப்புதல் கோதுகவி யென்றால்,
புதுநிறம் போர்த்தல் புதுமையென் றாமோ?
சிதைத்து மடக்கல் செறுகவிதை என்றால்,
செதுக்கிச் சிதைப்பதும் சிற்பமென் றாகுமோ?

யாப்பும் அணியும் இருப்பதே பாவென்றால்,
பாப்பாக்கை யேந்தும் பதுமையும் மெய்யுருவோ?
கோப்ப ழகாய்ச்சொல் குவிப்பதே பாவென்றால்,
தீப்பொறி வண்ணஞ் செறிந்ததும் ஓவியமோ?

விக்கி வெடித்திடும் வித்தார வித்தையெனச் 
சிக்கிப் பிடித்திடும் சித்திரப்பூப் பின்னலதாய், 
முக்கி முயன்றிடும் மோனக் கரகாட்டம்; 
சொக்கி மயக்கிடும் சொல்லின் சிலம்பாட்டம்! 

துஞ்சுதலைக் கண்கள் தொலைத்துக் குமுறுகின்ற, 
நெஞ்சவெளி தன்னில் நினைவே பயிராக, 
மஞ்சுதமிழ்ச் சொல்லாங்கு மங்கையெனச் சூழ்ந்தாடும் 
வெஞ்சினந் தான்கவிதை வேட்டு!
==================================
இராச. தியாகராசன். 

பிகு:
====
கோதுகவி - நேரான கவிதை (முடியை நேராக்கும் சீப்புக்கு மற்றொரு பெயர் கோதுகலம்), கோப்பழகு - கோத்திருக்கும் எழில், துஞ்சுதல் - துயிலுதல்,
மஞ்சுதமிழ் - முகிலைய தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக