புதன், 27 ஏப்ரல், 2022

உண்மையின் ஒளி...

 நானே அவனா?  அவனே நானா? உள்ளத்தின் குரல்.
================================================












================================================
உண்மையின் ஒளி...
===================
நானென்ற அவனும் நேற்றென் 
கனவில் வம்புக்கிழுத்தான்;
அவனிடம் எனக்கென்ன பேச்சென்றே  
மோனத்திலாழ்து மல்லாந்தே,
விட்டத்து வாரைகளை
எண்ணத் தொடங்கினேன்; 
நானென்ற அவனுக்குக் பீறிடும்  
சிப்பாணி! அடக்க முடியாமல்
சிரித்தபடி கேட்டான்; அந்த 
நூலாம்படையை எண்ணி முடித்து.....

    அவசியக் கவிதையை விடுப்பாயா?- இல்லை
    அவசரக் கவிதையை முடிப்பாயா? - இல்லை
    அரசியல் கவிதையைத் தொடுப்பாயா?

விட்டத்தில் வெளிச்சம் தேடிய
நானும் அவனை அடித்துவிரட்ட 
வேறுவழியின்றி வாய் திறந்தேன்,
"இன்று நேற்றாகவும் இல்லை;
நேற்று இன்றாகவும் இல்லை;
நாளை என்றாக இருக்குமோ அறியேன்!
இதில் நீயும்வந்து கெக்கலிக்கிறாய்;
போடா! ஊரில் அத்தனைபேர்
இருக்கிறார்களே அவர்களின் 
கனவிற்போய் கருத்துமழை பொழி! 
எனக்குக் கவிதை நேரமாவது மிஞ்சும்!"
இன்னும் பெரிதாக, வயிற்றைப் 
பிடித்து, உருண்டு புரண்ட 
சிரிப்போ சிரிப்பு அவனுக்கு!  
நானான நீயே, உன்னைப் பெரிய 
பிரபலமென்று கற்பனையில்
கவிதை சொல்லி நாளுமிங்கே  
கருத்துக் கந்தசாமியாய் 
கோணங்கி செய்கிறாய்;
போகும் வயதாகிறது; உனக்கே
இது இன்னும் புரியவில்லை; 
உண்மையும் தெரியவில்லை
இதிலே ஊரார் கனவிலே
உபதேசமா? 
உன்னைத்தான்
எனக்குப் பிடிக்கிறது!
நான் தானே நீயானாய்!
நீதானே நானாவேன்! 
நீயாரென் றுன்னுள்ளே நீயாக
நினைத்தாலும் நீயில்லை;
நானாரென் றுன்னுள்ளே 
நானாக நினைத்தாலும் - அது
நானில்லை அறிவாயோ?
பெரிய டமடமா சத்தம்; 
இடியின் முழவோசை: 
மழையின் இன்னிசை!
கனவு கலைந்தெழுந்தேன்;
போய்விட்டான்! .....
போய்விட்டானா?
பார்க்கலாம் நாளையும் வருவான்;
நானிருக்கும் வரையிலும் 
வந்து கொண்டே இருப்பான்!
===============================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக