ஞாயிறு, 6 நவம்பர், 2022

எயிட்சு இல்லா இனிய உலகம்....

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி,  புதுவையரசில் எனக்கொரு பரிசிலும் பெற்றுத் தந்த எண்சீர் அகவல் விருத்தமிது.  "மாந்தரினமே முன்னெடுப்பீர் (LET COMMUNITIES LEAD)."  பன்னாட்டு ஆட்கொல்லி ஆட்கொல்லி நோய்க்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும், போதை ஊசிப் பழக்கத்தை வேரறுப்பீர்; ஓரினச் சேர்க்கையை புறந்தள்ளுவீர்;  பிறன்மனை வேண்டாத பேராண்மையே பேரறம் என்று வாழ்வீர்; சமூகத்தில் ஆண்/பெண் என்று பேதமில்லாமல்  கலந்துறையும் பணிகளில் இருக்கும் பேர்களும், நீண்ட தூரம் சரக்குந்து ஓட்டுகின்ற பேர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்/பெண் இரு சாராரும், மனவுறுதியுடன் வேற்றாளிடம்  உடலுறவில்லாமல் இருக்க உறுதி கொள்வீர்;  (அப்படி உறவில்லாமல் இருக்க ஏலாதென்னும் குறைந்த விழுக்காடு பேர்கள் உடலுறவின் போதாவது உறையைப் பயன்படுத்துவீர்!).

புதுவையில் இற்றைக்கு 100க்கு 95 விழுக்காடு பேர்கள் மணமுடித்ததும் மணவினையை முறையாகப் பதிவு செய்கிறார்கள்.  ஆகவே திருமணத்தைப் பதிவு செய்கையில், மணமக்கள் இருவர்க்கும் ஆட்கொல்லி நோயில்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கக் கட்டாயமாக்கப் படுத்தப்பட  வேண்டும் என்று நான் பேசுமிடமெல்லாம்  வலியுறுத்துகிறேன்.  இன்னும் வேளைதான் வரவில்லை.
=============================================








============================================
எயிட்ஸ் இல்லா இனிய உலகம் 
============================================
(இதனை ஆதாஹ சந்துமா அல்லது உலகிலுள்ள 
பெரியோரே என்ற மெட்டில் பாடலாம்)
============================================
திருநிலவாய்ப் பூத்துநிற்கும் அமுதாம் பெண்ணே!
.....தித்திக்கும் வாழ்க்கையெனுங் கடலில் உன்னை, 
அருமையுடன் அனுப்பிடவே உன்றன் பெற்றோர்
.....அலைந்தலைந்து மணமகனைத் தேர்வுஞ் செய்தார்!
விருந்தின்று போட்டதுபோல் காணே னென்றே, 
.....விருந்துண்டு திருமணத்தை ஊரார் போற்ற, 
கரும்பினியாள் கழுத்தினிலே தாலி யிட்டு, 
.....கனவுகளும் நனவாக மாலை யிட்டான்!         (திருநிலவாய்)

மணமுடித்து திங்களைந்து போக வில்லை;
.....மயக்கமென மருமகனும் நாளுஞ் சொல்லித்
தணலெரிவாய்த் பெண்ணவளின் அன்புந் தீய,
....தளர்ந்துடலும் குறுகிநிதம் என்புந் தேய,
மணமகனி னுடலினுள்ளே உயிரைக் கொல்லும்,
....மாவரக்கன் புதுந்துவிட்ட சேதி கேட்டுக் 
கணக்கின்றிச் சீர்களெல்லாம் சேர்த்த தந்தை,
.....கட்டிவைத்த கோட்டைகளுஞ் சரிய நின்றார்! (திருநிலவாய்)

கோனோடு பெண்ணவளும் உறவில் சேர்ந்தே,
....குறைவில்லா இல்லறத்தின் இன்பம் தேர்ந்தே,
வானோடு வாழ்ந்திருக்கும் நிலவைப் போல, 
.....வன்சுடராய் வீசுஞ்செங் கதிரைப் போல, 
தேனோடு வானமிழ்தம் கலந்தாற் போல,
.....தேர்ந்தொருவ ரொருத்தியென வாழும் வாழ்வில், 
ஊனோடு கலந்திருக்கும் உயிரைக் கெல்லி, 
.....உறவறுக்கு முயிர்கொல்லிக் கிடமு மேது?    (திருநிலவாய்)

திருமணத்தின் முன்பேயே வீணில் தீய்ந்தே, 
.....சிதைந்தழியும் வழிகளிலே நடந்தே வீழ்ந்த, 
பெருந்துயரே கரணியமா யறிந்த போதில்,
.....பேர்துலங்கச் செய்திட்ட செலவில் சேர்த்தே,\
ஒருசெலவாய் மருத்துவரின் குருதிச் சான்றை, 
.....ஓர்ந்திடாத அறிவின்மை; உறுதி கொள்வோம்!
மருத்துவரின் சான்றதனை மணத்தின் முன்பே, 
.....மணமக்கள் இருவர்க்கும் கேட்போ மென்றே! (திருநிலவாய்)
==================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக