புதன், 23 நவம்பர், 2022

இல்லத்தரசியின் கதை...

இயல்பு வாழ்வியலில் அன்பு செய்வதன்றி, துணைவர் துணைவியை அடிப்பதோ, துணைவி துணைவரை அடிப்பதோ என்றும் சரியில்லை;  எந்தக் கருத்து வேற்றுமையையும், ஆர, அமர்ந்தே, ஆழ்ந்து, விவாதித்துத் தீர்வு காண்பதுதான் முறையான வழி. 

இது நகைச்சுவை இழையோடுமொரு கவிதை அவ்வளவே!  படியுங்கள்;  சுவையுங்கள்;  சிரியுங்கள்! 

(நான்கைந்து தமிழ்ச் சொற்களையும் பெய்திருக்கிறேன்: பொருள்களின் பெயரை மாற்றுவது கொலைக் குற்றம் என்போர், தயைகூர்ந்து கடந்து போகவும்.  விவாதத்திற்கெல்லாம் எனக்கு விருப்பமில்லை/ நேரமும் இல்லை!) 
============================================


============================================
ஒர் இல்லத்தரசியின் கதை....
==========================
நான்செய்யும் நாவூறும் நற்புழுக்குத் தட்டம் பிடிக்கவில்லை;
தேன்போன் றினிக்குமென் சுவையார் கடினி பிடிக்கவில்லை;
வான்வாழுந் தேவர் மயங்குமாச் சில்லும் பிடிக்கவில்லை;
கோன்மக்கள், குவலயம் கொண்டாடுங் குளம்பி பிடிக்கவில்லை;

தேன்சுவை ஊறவே நான்கலக்கித் தருகும் தேநீரும் பிடிக்கவில்லை;
ஊன்சுவை யார்க்குமென் மாட்டூன் வறுவல் பிடிக்கவில்லை;
நான்தோய்த் தடுக்கும் காலுறை, துணிகளும் பிடிக்கவில்லை;
என்றும்நான் செய்கின்ற இல்லப்பணி எதுவுமே பிடிக்கவில்லை;

என்தவறே தென்றுநான் இடிந்தமர்ந்து நினைத்தே நைந்தபோது,
என்னுளத்தில் பளிச்சென்ற மின்னலாய் வெட்டிய எண்ணமொன்று;
அன்றவனின் அன்னைபோல் கன்னத்தில் விட்டேன் ஓரறை;
இன்றவனுக்கு என்செயல் எல்லாமும் இயல்பாய்ப் பிடிக்கிறது!
======================================
இராச. தியாகராசன்.

பிகு:
======
புழுக்குத் தட்டம் = கேசரோல் (Casserole)
கடினி = கேக்கு (Cake) 
மாச்சில்லு = பிசுக்கோத்து (Biscuit) 
குளம்பி = காப்பி (Coffee)
தேநீர் = சாயா (Tea -  என்ன செய்ய, இதையும் சொல்ல  வேண்டிய காலம்!)
மாட்டூன் வறுவல் = மாட்டிறைச்சி வறுவல் (Beef Stew)
காலுறை = சாக்சு (Socks)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக