செவ்வாய், 18 அக்டோபர், 2022

அரைக காசும் உன்னுடன் வருமோ???

வாழ்வது சிலநாள், சிலரை விரும்புவதேன்?  சிலரை வெறுப்பதுமேன்?  அனைவரையும் நேசியுங்கள்;  தாழ்வுற்றவர்க்காய் உதவுங்கள்.  வரும்போது எதையும் கொண்டுவரவில்லை: போகும் போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை.  இறங்கி, இருந்து, இறக்கும் வரையில் இருப்பிற்கொரு காவல் நாம் என்றுணர்ந்து வாழுங்கள்;  அடுத்தவர்க்காய் வாழுங்கள்; அடுத்தவரின் அவலநிலையில் அடுப்பெரிக்காமல் வாழுங்கள்!  

என்காலம் முடியும் போது, 100 (அ) 200 பேர் இரங்கற் சேதி தெரிவித்துவிட்டு, ஓரிரு வாரம் கழித்து, அவரவர் பணியைப்  பார்க்கப்  போகிறார்கள்; நெருங்கிய சொந்தங்கள் இன்னும் கூடுதலாய் ஓராண்டோ/ ஈராண்டோ நினைந்துருகப் போகிறார்கள்;  இதுதான் வாழ்வியல் நீதி.  நானிங்கு சொன்னவற்றில் இருக்கும் அறமென்பது என்றும் மாறாதது.  அறத்தின்பாற்பட்டு வாழ்வோரின் வாழ்வும்;  அவர்கள் சுற்றத்தின் சுகமும்;  பிள்ளைகளின் நலமும் என்றென்றைக்கும் உயர்ந்தே தானிருக்கும்.
===============================================








===============================================
அரை காசும் உன்னுடன் வருமோ.....
===============================================
பெற்றவரை அன்பதனால் தாங்குகின்ற, 
பிள்ளைகளோ பெருமைகளைச் சேர்த்துவிடும்;
கற்றவரின் உள்ளத்திலே ஓங்குகின்ற,
கல்வியெனும் செல்வமதை வாங்கிவிடும்!

தன்னாட்டின் மக்களையே மாக்களெனத்
தானெண்ணித் தருக்குடனே ஆண்டவரின்,
முன்நிகழ்ந்த வரலாறு சொல்லுகின்ற,
முகவரியை அறியாமல் தினந்தோறும்,

கைந்நிறைய காசென்றும் மணிக்கணக்கிற் 
காத்திருந்து கூவுகின்ற மக்களென்றும்,
வையகத்தின் புகழ்போதை தலைக்கேற
வசதியொடு மன்னரென வாழ்வோரும், 

மொத்தசுகம் பெரிதென்றே அலைந்தாலும்,
முற்றியிங்கு சருகிலையாய் உதிர்கையிலே
அத்தனவன் கயிற்றாட்டம் நிற்கையிலே,
அரைகாசும் அவருடனே வருமாமோ?
================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக