சனி, 28 அக்டோபர், 2023

அரவமில்லா இரவுப் பொழுது..

இப்போது நகரத்தில், அரவமில்லா இரவுப் பொழுது எங்கே இருக்கிறது?  நாள் முடிவதோ நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்கு.  மீளவும் அதிகாலை 3 அல்லது 3.30 மணிக்கு.  இருந்தாலும் கவிதையென்பது நகர நரகத்துக்கு மட்டுமல்லவே!
=======================================











=======================================
அரவமில்லா இரவுப் பொழுது...
=======================================
அரவமில்லா இரவினிலும், 
இருள்வெளியின் கனவுதிக்கக் 
கனவினிலே மூழ்கியவர்,
நினைவுகளில் மாய்கின்றார்!

இளவயதின் எண்ணத்தில்
துளித்துளியாய்த் தளிர்க்கின்ற,
துயரோடும் சிந்தனையில், 
அயர்ந்தாடிச் சாய்கின்றார்!

நிழலெனவே நிதமலையும் 
பழகுசுகப் பார்வையதால்,
காதலெனும் கற்பனையாம் 
வேதனையில் வேகின்றார்! 

கடலெனவே ஓங்கியழும்,
உடலுருவ வேதனையால்,
காலமதே அரித்தழிக்குங் 
கோலமெனச் சோர்கின்றார்!

உணவின்றி உறக்கமின்றி,
பணமின்றி பண்புமின்றி,
உலகாய உணர்வுமின்றி, 
சீலமிலா தாடுகின்றார்!

தலைச்சுமையைப் பாராமல்,
அலைந்தலைந் ததன்மேலே
மலைபோலச் சேர்ப்பதுடன்,
உலைநெருப்பில் வீழ்கின்றார்!

களிபொங்கச் சினத்தீயில்,
அளைகின்ற மாந்தரிவர்,
முனைப்பின்றி முகப்பின்றி,
தனைமறந்தே போகின்றார்!

தயவுதிரும் போதினிலே
சுயமழியும் நேரமதில்
செயலிழந்து போகையிலே
அயலவரும் வருவாரோ?
==========================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக