திங்கள், 15 ஜனவரி, 2024

விளைகின்ற மாறா வினை....

நெருங்கிய ஒருவரின் ஈருந்து விபத்தினைப் பற்றி அறிந்த தாக்கத்தால் வனைந்த வரிகளிவை.  எவ்வளவு சொன்னால் என்ன? எவ்வளவு செய்தால் என்ன? மீண்டும் மீண்டும், தலைக்காப்பணிய இளையோர் தவறுகின்றனரே! 
======================================











======================================
விளைகின்ற மாறா வினை...
(கலிவெண்பா)
======================================
வாழ்வென்ப தார்வமொடு வாகாகத் தானமர்ந்தே
சூழ்நிலையைச் சுற்றமதைச் சோர்வகலத் தான்மறந்தே
மூழ்கியெழத் தித்திக்கும் மோகவலை காட்சியன்று: 
வாழ்ந்திருக்க வந்தவொரு மாண்புமிகு வாய்ப்பன்றோ?

சென்றதையே நீரெண்ணிச் சிந்தித்தே மீள்பதிவாய்
இன்றுளத்தில் கண்டிடலாம்! எந்நாளும் உண்மையிது!
அன்றங்கே சென்றிடவே ஆராலும் ஆகாதே
என்றவொரு மெய்யதனை எல்லீரும் தானுணர்வீர்!

மன்பதையில் வந்துவிட்ட மாந்தர்கள் வாழ்வினிலே
சென்றதெலாம் மீளாமல் சீக்கிரமே சென்றதுவே!
தன்கணினி மீட்டிரும்பத் தட்டுவிசை என்றிங்கே,
உன்வாழ்வில் ஏதுமிங்கே உண்டோமோ சொல்வீர்!

களிப்புடனே இன்றுதலைக் காப்பின்றிச் செல்லும் 
இளையோரே; எல்லா மெனக்கென்னு மிந்த  
வளையாத ஆணவத்தால் மாயந்தழித லென்றும்
விளைகின்ற மாறா வினை.
=====================================
இராச தியாகராசன்

பிகு:
====
மோகவலைக் காட்சி =  இனிய இணையக் காட்சி
எல்லீரும் = எல்லாரும்
மீட்டிரும்பு விசை = மீள்திரும்பு விசை (back space)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக