"என்னையா ஒரே சிவன் பாட்டாப் பாடியறுக்கிறாயே, உனக்கு இராமனையும்/ விஷ்ணுவையும் பாடவே தெரியாதா," என்று வலதுசாரி அன்பரொருவர் "அன்பாகவும் அறிவாகவும்" எனைப்பாடி வறுத்ததால், "அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு," என்று சொல்லி, இப்பாட்டை எழுதினேன். இனி வரும்நாளில், அந்தப் பாலாழி ஶ்ரீபத்மநாபனே நம்மையும், நம்மக்களையும், நம்நாட்டையும் காத்திடவே வேண்டுகிறேன்.
=========================================
=========================================
பாலாழி பத்மநாபா...
====================
சூதனும் பொற்கதிர்த் தூரிகை ஏந்தியே
சோதியாய்க் காட்டிடுஞ் சுந்தர நந்தனே;
நாதமாய் வேணுவும் நளினமாய் ஒலித்திடக்
கோதுளம் காக்குமெம் குழலிசை விந்தனே!
கமலினி பற்றிடும் கனிந்தகார் வண்ணனே;
எமதுளம் உற்றிடும் எழிமிகு கண்ணனே;
திமிரிலே உழல்நிலை தீய்க்குநர சிம்மனே;
சமரிலே வென்றயெம் கோகுல மன்னனே!
யாதவர் ஏத்திடும் இன்முகத் தூயனே;
பூதலம் போற்றிடும் பூமகள் நேயனே;
சீதளத் திருமகள் சீந்திடும் மாலனே;
மேதினி காக்குமெம் வேய்குழற் கோலனே!
===============================
இராச தியாகராசன்
பிகு:
====
சூதன் - சூரியன், கோதுளம் - வெற்றுப்பதரான உளம், கார்வண்னன் - நீல மேக சியாமளன், சீந்திடும் - போற்றிடும்/ ஏற்றிடும், வேய்குழல் - மூங்கிற் புல்லாங்குழல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக