திங்கள், 22 ஜனவரி, 2024

மகத்தான மானிடரே பாருங்கள்...

 தோன்றியதை எழுதுகின்ற இறைவனை நம்புகின்ற  பாவலன் நான்.  கள்ளங் கசடறவே, ஊதுவுலைத் தீயிலிட்டு, கவிநெய்யும் தூயமனப் பாவலன் நான். நட்பிலிருக்க வேண்டுமென்போர் இருந்து சுவையுங்கள்;  தேவையில்லை என்போர் போய்க்கொண்டே இருங்கள்!  என்னுடைய உடலில் உயிரிருக்கும் வரை, எவரென்னைத் ஏற்றினாலும், தூற்றினாலும் நிற்காதென் கவிமுரசம்;  என்றென்றும் அறத்தையும், மனித நேயத்தையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னுடைய சுற்றத்தவரே எனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; என்கவிதைகளைப் படிப்பதுமில்லை. என்றென்றும் அந்தச் சீர்காசியத்தன் ஒருவனின் அருளெனக்கு போதும்.
======================================
======================================
மகத்தான மானிடரே பாருங்கள்...
================================
செழிப்புடனே நம்மக்கள் சிறந்துலகில் எழுச்சியுற,
அழலெடுக்கும் கொடியோரின் அறமழிக்கும் ஆணவத்தை, 
குழிபறிக்கும் கோணலையே கூத்துவல்யன் சீரருளால், 
விழிப்புடனே வீரபத்ரன் மிதிதொறுப்பான் பாருங்கள்!

எம்மகளிர் எரிநெருப்பில் எக்கலிக்கும் எத்தரவர், 
வெம்பிவிழ வெறுங்கனவில் விம்முகின்ற ஏதிலியோர்
செம்மையுறச் செங்கோலும் சிறந்தோங்க சீறிச்சினந்தே
அம்பலத்தில் ஆடரசன் அனலெடுப்பான் பாருங்கள்!

மரித்துவிட்ட மாதரவர் மகத்தான பிடிசாம்பல், 
இருக்கின்ற மங்கையரை எருவாகித் தாங்கிடவே,
சிரித்தபடி சீரழிக்கும் சிந்தனையைத் தான்பொசுக்க
எரிதழலை ஈசான்யன் ஏந்திடுவான் பாருங்கள்!

வாளெடுத்தே வீசுகின்ற மன்னவனோ நானில்லை;
தாளெடுத்துத் தூவலினால் தந்துவிட்டேன் ஓர்பாட்டு;
ஊளையிடும் நரிக்கூட்டம் ஒடுங்கிவிழ வேயுறு 
தோளிபங்கன் சூலத்தால் துளைத்தெடுப்பான் பாருங்கள்!

தங்கமலர்த் தங்கையரை சதிசெய்தே அழித்தோரை,
மங்கையரின் மானத்தை மாய்தெரித்தே சிரித்தோரை, 
நங்கையரை துய்த்தழித்தே நாசமும் செய்தோரை, 
சங்கரியின் சிவநேசன் சங்கறுப்பான் பாருங்கள்!
=====================================
இராச தியாகராசன்.

பிகு:
====
கூத்துவல்யன் - கூத்தன், எக்கலித்தல் - கெக்கலித்தல், 
ஈசானியன் - ஈசான மூலையின் தலைவன்(ஈசன்), தூவல் - மசி பேனா, 
வேயுறு தோளிபங்கன் - மூங்கிலொத்த தோளுடை மாதொரு பாகன்.
சங்கறுப்பான் - அழித்தொழிப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக