செவ்வாய், 15 அக்டோபர், 2019

மல்கோவா மாம்பழமே........

மல்கோவா மாம்பழமே, நீகொடுத்த உப்புமுத்த நெனப்புகூட நெருப்பள்ளிக் கொட்டுதடி.... 
(கீழிருப்பது ஓவிய இளையராஜா அவர்களைன் கைவண்ணம்.

==============================













==============================
மல்கோவா மாம்பழமே;
மருதம ருக்கொழுந்தே!
காதோரம் ஓஞ்சிமிக்கி,
காத்துலதான் கண்சிமிட்ட,
நீளசடைப் பின்னலிலே
நிலாமல்லிச் சரமாட
செஞ்சாந்துச் சந்தனமாய்த்
தெம்மாங்குத் தேவதயாய்ச் 
சீனத்துச் சிலுக்கெனவே
சிலுசிலுக்க நிக்கியேடி!

வெண்டக்காப் பிஞ்சுபோல,
மருதாணி வெச்சவெரல்
செந்தூரப் பொட்டெனவே,
செவப்பாத்தான் சொலிக்குதடி!
தங்கநெறத் தாவணியும், 
பளபளக்கும் பவுனோட
கண்ணாடி வளகூட, 
கலகலன்னு கதபேசச் 
சஞ்சலத்தால் எம்மனசும்
சருகாத்தான் எரியுதடி!

கட்டிவெச்ச மல்லிபோலப் 
பொங்கிவெச்சச் சோறுபோல,
வரிசயிலே பல்லுமின்னச் 
செதறவிட்ட சோழியாட்டம்,
ஜலுஜலுன்னு சிரிச்சுகிட்டே,
முன்னாடி வந்துநின்னு,
இறுக்கியென்ன ஒதட்டோட
நீகொடுத்த உப்புமுத்த
நெனப்புகூட நெஞ்சத்திலே,
நெருப்பள்ளிக் கொட்டுதடி!

கருப்பஞ்சா றினிப்பாட்டம்,
கண்ணே ஒங்கண்ணுகூட
கல்கண்டா யினிக்குதடி!
வாக்கெடுத்த ஒம்பின்னல்
பாம்பாத்தாங் கொத்துதடி!
தெனந்தெனமும் சீவன்நான்
செத்துத்தான் பொழக்கெறண்டி!
ஒருசொல்லு சொன்னாலே
ஓனக்காக ஓலகத்தை
ஓம்மடியில் வைக்கறண்டி!
===============================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக