சனி, 26 அக்டோபர், 2019

வெங்கதிராய் ஒளிவீசும்......

அனைவரையும் அருந்தமிழால் உயர்வு செய்வோம்; 
அன்புடனே அரவணைப்போம்.
================================


================================

தழலெனவே எரிந்துள்ளந் தளர்ந்துவிட்ட தோழியரின், 
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் தோழர்களின்,
விழலெனவே விளைந்திங்கு வீணான பித்தத்தால், 
சுழலெனவே சுற்றிநிதம் சுக்கான சுற்றங்கள்!

சிதிலமான செங்கல்லாய்ச் சிதறிவிட்ட நினைவுகளில்
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்,
ஏதுமற்ற இருள்வெளியாய் இதயத்தைத் தான்துளைத்தே,
உதயமாகு முணர்வுகளை உருக்கிநித முறவாடும்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி,
அலைந்தலைந்தே அதன்மீதி லடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்,
உலைநெருப்பி லுழல்வதுபோல் உலகாய உணர்வுமின்றி,
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் வாழ்வாகும்!

துளித்துளியா(ய்) உள்ளத்தில் துயர்சேர்க்குஞ் சூதுகளைத்,
தளிர்க்கின்ற சழக்குகளைச் சடுதியிலே விலக்கிவிட்டுக்,
களிபொங்கக் கைப்பினையே கருக்கிவிடும் நெஞ்சகத்தில்,
வெளிச்சத்தின் வைகறையே வெங்கதிரா(ய்) ஒளிவீசும்!

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு
சந்தமணச் சொல்லுரைக்குஞ் சடங்கினிலோ இல்லையெனுஞ்
சிந்தனையின் வளஞ்செறிந்த தெளிவான மனங்களிலே
வந்துதுதிக்கும் பேரன்பே மகத்தான சிவமாகும்!

========================================================
இராச. தியாகராசன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக