திங்கள், 21 அக்டோபர், 2019

எது கவிதை........

எது கவிதையென்று எங்கெல்லாமோ தேடுகிறேன்;  எது கவிதையென்று எதையெல்லாமோ கிறுக்குகிறேன்...

=====================================



=====================================
கவிதை என்னும் அழகுப்பூ.....
============================
துள்ளிவரும் வண்ணத்துப் பூச்சி போலே
.....தோன்றியுள்ளே ஆடுமென்றன் எண்ணச் சீரோ?
வெள்ளிமலை மேல்விளைந்தே வீழு மந்த,
.....விண்ணருவிச் சாரல்தான் தமிழாம் தேரோ?
அள்ளிமனங் கொள்ளையிடப் பொழியும் இன்ப
.....அமுதமழை வெள்ளந்தான் பாட்டாம் ஆறோ?
புள்ளியிட வந்தொளிரும் கோலம் போலே
.....பொலிந்தாடும் ஓவியந்தான் கவிதைச் சாறோ?

காதலிதன் கடைக்கண்ணைக் காட்டும் போதில்,
.....கார்முகிலும் கனவெழிலை ஊட்டும் போதில்,
சோதனையாய்க் காதலதும் கருகும் போதில்,
.....துயர்நீங்க மீண்டுமது தளிர்க்கும் போதில்,
ஆதவனும் தூரிகையாம் கதிரைக் கொண்டு,
.....அடிவான சீலையிலே எழுதும் போதில்,
சீதளமாய்ச் சிதறிவிடும் சொல்ல டுக்குச்
.....சித்திரந்தான் கவிதையெனும் கனவுக் கூறோ!

வானகத்தி(ல்) இடியிடிக்க விரித்தே யாடும்,
.....வண்ணமயில் போலிங்கே எண்ண வானில்,
தானிடிக்கப் பூத்துவிடும் நறும்பூக் காடாய்,
.....தாரணியி(ல்) எத்தனைபே(ர்) இடித்திட் டாலும்,
நானிலத்தி(ல்) அயராமல் தினமு(ம்) என்றன்,
.....நன்னெஞ்சத் தறிநெய்யும் பட்டுச் சீலை;
கானகத்துக் கருங்குயிலின் கனவுக் கூவல்;
.....கவிதையெனு(ம்) அற்புதமா(ம்) அழகுப் பூவோ!
====================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக