வியாழன், 3 அக்டோபர், 2019

பாதகத்தைக் காணீரோ!!!

எத்தனையெத்தனையோ காணுகின்றோம் இப்புவியில்.  ஆனால் சில நியதி மாறாட்டங்கள் மாறவே மாறாதா என்றேங்குகிறது உள்ளம்....

=============================================



=============================================

மதமேற்றும் மதுவென்னும் மயக்கத்தைத் தருவோரும்,
நிதமிங்கே நிறைவான நிதியதனில் புரண்டிருக்கப்
புதிதெனவே பேசிகளைப் புதுப்புனைவாய்ச் செய்வோரும்,
சதமெனமே செல்வத்தில் தடையின்றி உருண்டிருக்க;

வெண்சுருட்டாம் வேதனையை விற்கின்ற பேர்களுமே
எண்ணரிய பணத்தினிலே எந்நாளும் இழைந்திருக்க,
வண்ணமயக் குளிர்ச்சாற்றை வழங்குகின்ற நிறுவனமும்,
கொண்டலெனக் கொட்டுகின்ற கோடியிலே உழன்றிருக்க;

அடுக்கிவிட்ட அருந்தமிழில் அம்புலியைப் பிடிப்பதுபோல்,
மிடுக்குடனே வெள்ளுடையில் மெருகாகப் பேசுவோரும்,
சொடுக்கினிலே ஏவலர்கள்; சொகுசான வண்டியென,
முடியணியாக் கொற்றவராய், முழுச்சுகத்தில் நுளைந்திருக்க;

அணிவதற்கே உடையின்றி அடுக்களையி நெருப்புமின்றி,
பிணிபிடித்தே நைந்தவர்போல் பெருந்துயரில் வாடுகின்ற,
உணவணிக்கும் உழவர்களோ ஒருவேளைச் சோற்றுக்காய்ப்
பணமின்றி பதைபதைக்கும் பாதகத்தைக் காணீரோ!

எண்ணுமுளக் கருத்தாக இயம்புகிறேன் இன்றிங்கே;
வெண்சுருட்டு, கைபேசி, வீரமொழி, குளிர்ச்சாறு,
தண்மதுவோ ஏதுமின்றி தரணியிலே வாழ்ந்திடலாம்;
உண்பதற்கு உணவின்றி உய்ந்திடத்தான் ஆவதுண்டோ?

======================================================
இராச. தியாகராசன்

நுளைதல் = நீரில் அமிழ்ந்து விளையாடல்.  பரதவர் என்பவர் மீனவரென்றால்,
நுளையர் = முத்துக் குளிப்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக