திங்கள், 13 நவம்பர், 2023

தூந்திரத்தில் வாழ்குவரோ...

அனைத்தையும் அழித்துவிட்டு, மக்களையும் மாய்த்துவிட்டு, தூந்திர வெளியில் வாழ்வாரோ..
================================

================================
தூந்திரத்தில் வாழ்குவரோ?
==========================
நாடுகின்ற நியாயங்கள் நான்காயிரம் இருக்கலாம்;
தேடுகின்ற நீதியுனைத் தீயெனவே தகிக்கலாம்;
மூடிவைத்த கேள்விகளும் முன்னெழுந்தே எரிக்கலாம்;
ஆடுகின்ற ஆசதுவும் அனலெனவே அரிக்கலாம்!

அடுத்தவரின் உயிரழித்தே அழவைக்கும் அதிகாரம்
கொடுத்தவர் யாருனக்கு? கூற்றுவனா நீயிங்கு?
காடுகளில் வாழ்கின்ற கானுயிரும் கணக்குடனே
கூடிநிதம் தன்பசிக்குக் கொல்லுகையில் ஐயகோ!

காழ்ப்பதனால் நாடழித்தே காடாக்கி அழிப்போரும், 
பாழ்குணத்தால் பாலையெனப் பாரழித்தே பார்ப்போரும், 
வாழ்கின்ற மக்களையே வஞ்சினத்தால் மாய்ப்போரும், 
ஊழ்த்துவிட்ட உலகினிலே ஒற்றுமைக்கும் வழியேது?

வேந்தனென மற்றவரை வீழ்த்தியிங்கே மார்த்தட்டி,
மாந்தரின மத்தியிலே வாழ்கின்ற பேர்மட்டும்
சாந்தியதும் சத்தியமும் செத்துவிட எவருடனே
தூந்திரத்தில் வாழ்குவரோ சொல்லிடுவீர் மானிடரே!
==================================
இராச தியாகராசன்

பிகு:
தூந்திரவெளி = ஆளில்லாப் பனிவெளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக