செவ்வாய், 28 நவம்பர், 2023

வளஞ்சொரியும் பாப்புனைய வாரீர்...

நந்தமிழரே!  வளஞ்சொரிகின்ற பாப்புனைய வாரீர்.
=================================================




=====================================
வளஞ்சொரியும் பாப்புனைய வா!
============================================
துள்ளிவருங் குற்றாலத் தூயமலைச் சாரலதாய், 
வெள்ளியிழைப் போல்மின்னும் விண்முகிலின் தூரலதாய், 
வெள்ளைநிறத் தெண்டிரையின் மீனிலங்கு வாரிதியாய், 
அள்ளியிட்ட நித்திலத்துப் பொன்வண்ணத் தாரகையாய், 

கொடிமுல்லை சிந்தும் குளிர்மணத்தை வார்த்தே, 
அடிவானஞ் சொட்டும் அடரழகைச் சேர்த்தே, 
விடிவெள்ளி போல்நித்தம் பொன்னெழிலும் பூக்க, 
முடிபுனைந்த மூவேந்தர் முத்தமிழைக் காத்ததுபோல்,

பொற்றமிழைக் காக்கவிங்கு பொற்பனைத்தும் பெற்றிலங்கி, 
வெற்றித் தமிழோங்க வேங்கையென முன்னெழுந்தே, 
வற்றாத சீரிளமை வாய்த்திருக்குந் தாய்மொழியாம், 
நற்றமிழை நந்தமிழர் நாளுமிங்கே போற்றி, 

நெளிவில்லா நேர்மையொடு நெஞ்சகத்தால் ஏந்தி,
தெளிவாகச் சிந்தித்தே செந்தமிழில் நீந்தி, 
அளிக்கின்ற அன்னையவள் அன்பினையே சீந்தி, 
வளஞ்சொரியும் பாப்புனைய வா.
============================================
இராச தியாகராசன்

பிகு:
=====
நித்திலம் - ஆணிமுத்து
தெண்டிரை - தெள்ளிந்த அலை
அடரழகு - நிறைந்த எழில்
பொற்றமிழ் - பொன்+தமிழ்
பொற்பு - சிறப்பு
சீந்தி - போற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக