செவ்வாய், 21 நவம்பர், 2023

தீக்கவியோ இவன்....

சிந்துவேந்தனின் நினைவு நாள் (செப்தெம்பர் 11ஆம் நாள்). 
====================================













====================================
தீக்கவியோ இவன்
(கட்டளைக் கலித்துறை)
=======================
வேந்தர் களின்புகழ் வீச்செ னவேதமிழ் மேகமென,
பூந்த ளிரும்நிறை பூம்பொ ழிலாய்ப்பாப் பொழிந்திடவே 
தீந்த மிழுந்தருந் தேன முதாய்ப்பலர் சீந்துகின்ற 
ஏந்த லெனுமுயர் ஏழு லகப்புகழ் ஏந்திவிட்டாய்! 

ஆத வனாயொளி வீசும் அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் போற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவி சாற்றிவிட்டாய்!

மாத வமாய்வளர் ஆற்ற லுடந்தமிழ் மாந்தியதால்
காத லனாயுயர் கண்ண னிடம்மையல் காட்டியதால்,
வீதி யுலாவரும் தேர தனைநிகர் வேந்தனென, 
மேதி னியேபுகழ் கோகி லமாயிசை மீட்டிவிட்டாய்!

சூது களையனற் சூரி யனாய்நிதஞ் வேட்டெடுத்தே, 
பூத லமுமுனை போற்றி டவேதமிழ் பெய்துநிதம், 
ஏதி லியாயழு மேழை களின்பகை சுட்டெரிக்க, 
நீதி யதைச்சொலும் நேர்மை யெனுங்கவி நெய்துவிட்டாய்!

தேய முயர்ந்திடச் சீர்க ளியற்றிய தேன்கவியே!
தூய மனம்பெறச் சோர்வை யகற்றிடுந் தூண்கவியே!
சீய மெனமதச் சீக்கை எரித்திடுந் தீக்கவியே! 
நீயி னிதுஞ்சிட நேர மிலையெனும் நேர்க்கவியே!

தீமை யெரிந்திடத் தீர்வு மெழுதியத் தேர்க்கவியே! 
பூமி யதன்கொடுங் கோல முரைத்திடும் போர்க்கவியே!
சீமைய ளந்திட வேண்டிய நூதனச் சீர்க்கவியே! 
ஆமினி வெஞ்சினக் கால மிதுவென ஆர்க்கவியே!
======================================
இராச தியாகராசன்.

பிகு: 
சீந்துகின்ற = போற்றுகின்ற, கோகிலம் = குயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக