வியாழன், 2 நவம்பர், 2023

கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி...

இயற்கையெழிலால் நாவினில் பண்ணும் துள்ளும்; நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளும்; காதலதை அள்ளியிட்டு என்னுளத்தை அள்ளும்; உள்ளமதும் எத்தனையோ உள்ளும்; அஞ்சுகமுன் நினைவோ உள்ளத்தை பொள்ளும்; பொழிந்திட்ட முத்தங்கள் முள்ளெனவே நுள்ளும்; தேவதையாள் தேன்குரலோ நாவினிக்கும் நாதத்தை விள்ளும்!
========================================












========================================
கயலெனவே உள்ளந்தான் துள்ளுதடி.....
==================================
பாவினத்தைப் பாட்டியலைப் பாவையரைப் 
பூவினத்தைப் பூம்பொழிலைப் புள்ளினத்தை 
ஆவினத்தை, ஆதவனைக் காண்கையிலே, 
நாவினிலே பள்ளுந்தான் துள்ளுதடி! 

வித்தகியின் விளையாட்டு வித்தையென, 
முத்தமிழும் நிறைந்திட்ட சித்தமதில், 
சித்திரத்துக் கயல்போலே பளிச்சென்று 
நித்திலத்தின் நிறம்பூத்துக் கொள்ளுதடி! 

புள்ளியிடத் தோன்றுமெழிற் கோலமதாய், 
வெள்ளிநிறப் பொன்நிலவோ பூமியிலே, 
கள்ளதனின் போதைநிகர் காதலதை 
அள்ளியிட்டே என்னினைவை அள்ளுதடி!  

சித்தமதில் தான்பதிந்தே சிந்தாமல், 
பித்தன்புத் தூரிகையாய்த் தீட்டுகின்றப் 
புத்தமுதக் காரிகையே உன்னெழிலால், 
எத்தனையோ உள்ளமதும் உள்ளுதடி! 

கொஞ்சியவள் விஞ்சியதால் காதலது 
மிஞ்சியநான் கெஞ்சியதும் எண்ணமெலாம்,
தஞ்சமென அந்நினைவுத் துயரமதும், 
அஞ்சுகமே என்னுளத்தைப் பொள்ளுதடி! 

பித்தனென நான்மயங்கிக் காய்கையிலே, 
நித்தமுமென் நெஞ்சகமே நெக்குவிட, 
சித்தினிநீ அன்றுதந்த செவ்விதழின் 
முத்தமெனை முள்ளெனவே நுள்ளுதடி! 

பாவனமாய்ப் பூத்தொளிரும் பாவையெனுந் 
தேவதையாள் தேன்குரலில் பாட்டிசைத்தப் 
பூவிதழே என்னுளத்தில் நாள்முழுதும்
நாவினிக்கும் நாதமதை விள்ளுதடி!  
===================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புள்ளினம் = பறவையினம் 
நித்திலம்= ஆணிமுத்து
நுள்ளுதல் = கிள்ளுதல்
உள்ளுதல் = என்றும் நினைந்துருகல்
அஞ்சுகம் = தத்தை
நெக்குவிடல் = விரிசலேற்படல்
பொள்ளுதல் = தழலாய்ப் பொசுக்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக