திங்கள், 30 செப்டம்பர், 2019

எதை நீயிங்கே பார்க்கின்றாய்??

எங்கேயோ பார்வை,  எதையோ தேடுதல்
======================================


=====================================
எதனை நீயிங்கே பார்க்கின்றாய்?
=======================
எதனை நானிங்கே இவ்வாறாய் வியப்பினிலே
சதமாய்த் தானெண்ணி சத்தியமாய்ப் பார்க்கின்றேன்?
புதுமையெனப் புகழ்போதை புந்தியிலே புகுந்தாடச்
சிதைமேவும் பொய்யுடலை திண்ணமெனக் கொண்டிங்கு,

சுதைபூசு மாயவலை சுகந்தன்னில் அகம்மயங்கி,
நிதமாடும் நாடகத்து நடிப்பதனைத் கண்டுருகி,
மதியின்றி மதபோதை மண்டையிலே குடைவதனால், 
புதுமைதா னீதென்று பொய்யாகப் புரிந்தங்கே,

அதிசயம் போலுணர்ந்தா அப்படிநான் பார்க்கின்றேன்?
சதிராடும் பொய்முகத்துத் தருக்கழலைச் சேர்க்கின்றேன்?
இதிலிங்கே எண்ணமெது? இதயவெளி இன்பமெது?
பதியுமென்றன் தடங்காட்டும் பாதவலித் துன்பமெது?

நேற்றவர், இன்றிவர்; நிசமில்லா நாளையெவர்?
போற்றுகின்ற பதவிதரும் பொய்யான வாழ்வினிலே,
கூற்றுவன்தன் பாசத்தைச் சுழற்றிவிடும் வேளைவரை,
சோற்றுடலால் சேர்க்கின்ற செல்வத்தின் காவலன்நான்!

நான்நானென் றாடுகின்ற நாற்றமிழிச் சடலங்கள்;
தான்தானென் றோடுகின்ற சாய்க்கடை உடலங்கள்;
கோன்நானென் றகந்தையிலே கொக்கரிக்கும் மடமைகள்;
வான்முட்டும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகள்!

சாண்வயிற்றுப் பாட்டுக்காய் தவிக்கின்ற வாழ்வியலில்,
காண்கின்ற எழிலுமெது? கற்றுவைத்த கல்வியெது?
பூண்கின்ற அணியுமெது? புன்மையெனும் பொய்ம்மையெது?
மூண்டெரிக்கும் மயக்கவலை மோகமுள்ளி னுறுத்தலெது?
=========================
இராச தியாகராசன்

பிகு:
====
புந்தியிலே = உள்ளத்தில், தருக்கழலை = தருக்கு+அழல் (இறுமாப்பெனும் அழல்), பாசத்தை = பாசக் கயிற்றை, நாற்றாமிழி = நாற்றம் + இழி (கெட்ட மணம் வழிகின்ற), சாய்க்கடை = சாக்கடை, மூண்டெரிக்கும் = மூண்டு+எரிக்கும் (பற்றியெரிக்கின்ற), 
மோகமுள் = மோகம்+முள் (முள்ளாய் உறுத்தும் ஆசை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக