திங்கள், 17 அக்டோபர், 2022

கவிபுனைந்தேன் காற்றினிலே...

காற்றலைத் தூதுவன் உன்றன் காதருகில் வீழ்ந்திழையும் கார்குழலை சற்றசைத்துத் தூது சொல்வதும் உனக்குக் கேட்கவில்லையோ???

====================================================













====================================================
கவிபுனைந்தேன் காற்றினிலே......
===============================
வழிநிறையும் வெறுந்தனிமை மனமெங்கும் கருநிழல்கள்;
சுழல்கின்ற காற்றினிலும் துயரவொலி கேட்கின்றேன்;
கழிந்துவிட்ட காலமெனுங் கனவுகளில் மூழ்கிநிதம்
பிழிந்துவிட்ட புதுத்துணியாய்ப் பேச்சின்றித் துவள்கின்றேன்!

பொழிலூடு மணந்தூவும் பூந்தென்றல் தழுவலென,
எழிலாரும் இன்பமகள் இழுத்தணைத்தே என்னிதழில்
முழவோசை ஆர்ப்பதுபோல் முத்தங்கள் பொழிந்ததையே 
நிழலாடுந் தனிமையிலே நினைந்துருகி எரிகின்றேன்;

எழுகின்ற தழலெனவே என்னவளும் இதயத்தில், 
நிழலென்றும் நிசியென்றும் நினைவென்றும் பாராமல், 
கழலொலிக்கக் கருத்தேறி, கவிமயிலாய் ஆடுகின்றாள்;
பொழிகின்ற மழைமுகிலாய்ப் பூஞ்சாரல் தூவுகின்றாள்!

இமயமலைக் குளிருறையும் இனியமகள் நினைவுகளால்
சிமிழுள்ளே அடையாத சிந்தனையைச் செதுக்கிநிதம் 
அமுதமென எம்மொழியில் அழகான சொல்லடுக்கிக்
கமழ்கின்றக் காதலுக்காய்க் கவிபுனைந்தேன் காற்றினிலே!
======================================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக